Thursday, February 25, 2016

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது  சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு  இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. படையினரிடம் சரணடைந்தவர்கள் இப்பொழுது தடுப்புக்காவலில் இல்லை என  அன்றைய அரசு அறிவித்தது. புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் பொத்து மக்களும் படைகளிடம்  சரணடைந்தனர். அவர்கள் பற்றிய விபரம் அதுவும் வெளிவரவில்லை என அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்களை அவர்கள் நடத்தி உள்ளனர்.  எதற்கும் அசைந்து கொடுக்காத அரசு  சரணடைந்தவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர்   விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்கிறது. சரணடைந்தவர்களின் உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சரணடைந்தவர்கள் பற்றிய விவகாரம் பூதாகரமாக கிளம்பியதால் வெளிநாடுகள் இதில் அதிக அக்கறை காட்டின. ஐநாவும் சரணடைந்தவர்கள் பற்றிய விவகாரத்தை கையில் எடுத்தது. காணமல் போனவர்களை கண்டறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்க்ஷ அணைக்குழு ஒன்றை அமைத்தார். அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சட்சியமளித்தவர்கள் தமது உறவினர்களை படையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர். எத்தனையாவது படைப்பிரிவு அதனுடைய பொறுப்பாளர் யார் போன்ற விபரங்களையும் அவர்கள்  அணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்தனர். இரகசிய முகாம்கள் இருப்பதாகத் தெரிவித்தபோது அதனையும் அன்றைய அரசு மறுதலித்தது. பின்னர் இரகசிய முகாம்கள் பற்றிய விபரங்கள் வெளியாகின.

இறுதிக்கட்ட யுத்தம் கொடுரமாக நடந்தபோது சரணடியும் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் உத்தரவாதமளித்தது. அதனை நம்பிய பல புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். படையினரிடம் கையளிக்கப்பட்ட முக்கியமான புலி உறுப்பினர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என படையினர் அறிவிக்கவில்லை என அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன்  என அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட சிலர் முல்லைதீவில் உள்ள 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்தனர். அவர்களைப்பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என  சரணடைந்தவர்களின்  உறவினர்கள்  வவுனியா மேல் நீதிமன்றத்தில்  ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அதனை விசாரணைக்கு எடுத்த வவுனியா மேல்  நீதிமன்றம் அச்சம்பவம் முல்லைத்தீவில்  நடைபெற்றதால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க  உத்தரவிட்டது.

மிக முக்கியமான வழக்கு என்பதனால் பலரது கவனம் இந்த விசாரணையின் பக்கம் திரும்பியது. 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன இராணுவத்தரப்பில் சாட்சியமளித்தார்.  வழமை போன்றே  ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டவர்கள் 58ஆவது  படைப்பிரிவில் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தம்மிடம் இல்லை என்றார். மனுதாரர் சார்பில்  ஆஜரான  சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் குறுக்கு விசாரணை செய்தபோது 58 ஆவது  படைப்பிரிவில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் முகாமில் இருப்பதாகவும் ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர் அதில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 58 ஆவதுபடைப்பிரிவில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை  நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.  சரணடைந்தவர்கள் பற்றிய விபரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. படையினரிடம் சரணடைடிந்தவர்களும்  கையளிக்கப்பட்டவர்களும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்களைப்பரரிய விபரம் எதுவும் தெரியவில்லை. சரணடிந்தவர்களைப் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தபட்டு வந்தது. காணமல் போன எவரும் சரணடடையவில்லை என்பதே இராணுவத்தின் பதிலாக உள்ளது.

இறுதிக்கட்ட யத்தத்தின் போது சரணடைந்தவர்களைப் பற்றிய  விபரங்கள் வெளிவருவது சிறந்த ஆரம்பம்.  சரணடிந்தவர்கள் பற்றிய பூரணமான விபரம் எவையும் இதுவரை வெளிவரவில்லை. அரசாங்கம் அப்போது கூரிய எண்ணிக்கை மிகவும் குறைவானது என சரணடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

58வது படைத்தளத்தின் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவம் வசம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைக்கவேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன  தெரிவிக்கையில்

இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். குறிப்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் கால எல்லையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் மேலும் ஆதாரங்களை திரட்ட வாய்ப்புகள் உள்ளன. இராணுவம் வசமுள்ள ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் இந்த செயற்பாடு இன்னும் இலகுவாக்கப்படும்.

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம். ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். இவ்வாவணங்கள் விசாரணை செயற்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கியவர்கள் தேசத்துரோகிகள் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு பண உதவிகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.சரணடைந்தவர்களைப்பறிய விபரங்களை மறைக்காமல் வெளியிட்டால் உண்மை அவர்களைப்பற்றிய உண்மை வெளிவரும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது  கைது செய்யபட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் பற்றிய விபரங்கள் படைக்கட்டளைத் தலைமையகங்களில்  இருந்தால் அவற்றின் மூலம் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது
 ஊர்மிளா
 சுடர் ஒளி

பெப்ரவரி 24/மார்ச்02

No comments: