Tuesday, June 12, 2018

உலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு பிறேஸில்



உலகக்கிண்ண சம்பியனாகும் எனக் கருதப்படும் பிறேஸில், சுவிட்ஸர்லாந்து, கொஸ்ரரிகா, சேபியா ஆகியன  ஈ பிரிவில் இடம்பிடித்துள்ளன. இந்தப்பிரிவுல் இருந்து பிறேஸில் இலகுவாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகிவிடும். அடுத்த சுற்றுக்குத் செல்வதற்கு சுவிட்ஸார்லாந்துக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. தரவரிசையில் 2 ஆவது இடத்தில் இருக்கும் பிறேஸில் 1930 ஆம் ஆண்டு  முதல் 2014 ஆம் ஆண்டுவரை 20 முறை உலகக்கிண்னப் போட்டியில் விளையாடியுள்ளது. 1930 ஆம் ஆண்டு முதல் அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே நாடு பிறேஸில் மட்டும்தான். 1950 ஆம் ஆண்டு பிறேஸிலில் நடைபெற்ற் உலகக்கிண்ணப் போட்டியில் பிறேஸில், சுவிட்ஸர்லாந்து,யூகஸ்லோவியா ஆகியன ஒரே பிரிவில் விளையாடின. யூகஸ்லோவியாவில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றுதான் சேர்பியா.

உகலக்கிண்ணத்தில்  7 இறுதிப்போட்டிகளில் விளையாடி  5 முறை உலகக்கிண்ணத்தைப் பெற்றது பிறேஸில். 11 அரை இறுதிப்போட்டிகளில் விளையாடியது. 1958,1962,1970,1994, 2002 ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியது. அதிக முறை சம்பியனான பெருமையுடன் இருக்கும் பிறேஸில்  இம்முறையும் சம்பியனாகி புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. 

தென் அமெரிக்காவில் ஏ பிரிவில் விளையாடிய பிறேஸில் 12 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. பிறேஸில் 41 கோல்கள் அடித்தது. எதிராக 11 கோல்கள் அடிக்கப்பட்டன. 22 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று முதல் நாடாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு   பிறேஸில் தகுதி பெற்றது.

2014  ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியின் பின்னர் பிறேஸில் பின்னடைவைச் சந்தித்தது. 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில்  முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. அதன் பின்னரும் பிறேஸிலிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில்  6 ஆவது இடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் துங்கா ராஜினாமாச் செய்தார். 2016 ஆம் ஆண்டு டைட் பயிற்சியாளரானார். டைட் என அழைக்கப்படும் அடேனோர் லி யோனார்டோ  பாச்சி பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் அசைக்க முடியாத அணியாக பிறேஸில் உருவெடுத்தது.  18 மாதங்களில் பயிற்சியாளர் டைட் செய்த மாற்றத்தால் உலகக்கிண்ணத்தை வெல்லும் நம்பிக்கையுடன் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளது பிறேஸில்.

மெஸ்ஸி,ரொனால்டோ ,ஆகியோருக்கு அடுத்தபடியாக உதைபந்தாட்ட ரசிகர்களால் போற்றாப்படுபவர். நெய்மர். பிறேஸில் அணியின் கப்டன் மீது அனைவரின் கண்களும் பதிந்துள்ளன. தாய் நாட்டுக்காக தேசிய அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து வீரர்களிடமும் குடிகொண்டிருக்கும். தான் விளையாடும் அணி சம்பியனாக வேண்டும் என்ற ஆர்வம் மேலிடும். கப்டனின் பொறுப்பு அதைவிட மேலானதாகும்.  தனது தலமையிலான அணி  சம்பியனாக வேண்டும் என்ற கனவு கப்டன்களிடம் இருக்கும். அந்தக் கனவை நிறைவேற்றக் கூடிய வீரர்கள் இருப்பது கூடுதல் பலமாகும். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் பிறேஸில் அணியின் கப்டன் நெய்மரும் இருக்கிறார்.

நெய்மர் என அழைக்கப்படும் நெய்மர் டீ சில்வா சந்தோஸ் ஜூனியர், குறி வைக்கப்படும் வீரராக இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் நெய்மர் அறிமுகமானார். அப்போது கால் இறுதியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்து பிறேஸில் வெளியேறியது.

2014 ஆம் ஆண்டு பிறேஸிலில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் கொலம்பியாவுக்கு எதிரான் போட்டியில் நெய்மர்  காயமடைந்ததால் ஜேர்மனிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. 7-1 என்ற கோல் கணக்கில்  அந்தப் போட்டியில் பிறேஸில் தோல்வியடைந்ததால் அதனுடைய உலகக்கிண்ணக் கனவு சிதைந்தது. இரண்டு முறையும் கால் இறுதியைத் தாண்டாததால் இந்த முறை அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்கு இடமளிக்ககூடாது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ஜேர்மனிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் பிறேஸில் மிக மோசமாகத் தோல்வியடைந்ததற்கு நெய்மர் இல்லாததே காரனம் என்ற கருத்து  உள்ளது. அப்படி ஒரு நிலை வரக்கூடாது என முன் எச்சரிக்கையுடன் பயிற்சியாளர் டைட், நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் காயடமைந்த நெய்மர், ஆறு மாதங்களாக விளையாடவில்லை. நெய்மர் பயிற்சி பெறாததால் அவர்  முன்புபோல விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கடந்த வாரம் பயிற்சிப் போட்டியில் விளையாடிய நெய்மர்  ஒரு கோல் அடித்தார். துடிப்பான அவரது விளையாட்டால் ரசிகர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.  

 மெஸ்ஸி,சுவாரெஸ்,  நெர்மர்  கூட்டணி பர்சிலோனாகிளப் அணிக்கு வலுச்சேர்த்தது. 2017 ஆம்  ஆண்டு பெரும்தொகைக்கு பாரிஸ்ஸென்  ஜேர்மனி அதிக தொகைக்கு நெய்மரை வாங்கியது. உலகக்கிண்ண தகுதிச் செற்றில் 6 கோல்கள் அடித்த நெய்மர் 8 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார். 

பிரெஞ் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியபோது  காயமடைந்த பின்கள வீரர் டானி அல்வேஸ் பிறேஸில் அணியில் இடம் பெறவில்லை. 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக பிறேஸில் அணியில்  அறிமுகனான அல்வேஸ் 107  போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பிறேஸில் அணியில் அலிசன், எடர்சன், கசியோ டானிலோ,பக்னர்,மார்சலோ, பிலிப்பே லூயிஸ்,தியாகோ சில்வா,மார்கின்ஹோஸ், மிரண்டா,ஜெரோமல்,  பெனார்டின்ஹோ, போலின்ஹோ, பிரெட் அகஸ்டோ, பிலிப்பே கொடின்ஹோ,கொஸ்டா, நெய்மர்,டய்சோன்,கப்ரியல் ஜேசுஸ்,ரொபர்டோ, பெர்மினோ ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்

பின்கள வீர டானி அல்வேஸுக்குப் பதிலாக டனிலோ,பக்னர் ஆகியோர்  இணைக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் ஷக்டர் டினெட்ஸ் கழகத்துக்காக விளையாடும் மத்தியகள வீரர்  பிரெட்டும் முன்கள வீரர் டைசனும் இடம் பெற்றுள்ளனர். . புது முகங்களான காஸ்மிரோ,கபேரியல் ஆல்வ்ஸ்,பிலிப் கவுடின்ஹோ,வில்லியன் ஆகியோரும் பிறேஸில் அணியில் உள்ளனர். பலம் வாய்ந்த வீரர்களைக்கொண்ட பிறேஸில் உலகக்கிண்ணத்துடன் நாட்டுக்குத் திரும்பும் என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.

No comments: