Friday, May 20, 2022

மனதைத் தொட்ட மே 18


   முள்ளிவாய்க்காலில் 13  ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட  அப்பாவித் தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோல் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்திலும்  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதுவரைகாலமும் இல்லத மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

2009  ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களைராஜபக்ஷவின் அரசாங்கம் தடை செய்தது. புலிகளை அழித்த தினம் என்பதை  விட தமிழ் மக்களை  வென்ற தினமாகவே சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்களின் தூக்கதைக் கலைத்த  விடுதலைப் புலிகளை அழித்ததால் அரசியலில் தமக்கு வீழ்ச்சி இல்லை என ராஜபக்ஷ குடும்பம் நம்பியது.வடக்கு ,கிழக்கு தமிழ் மக்கள் கண்ணீர்கடலில் துவண்ட போது கொழும்பில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

ஆட்சி பீடத்தில் இடைஞ்சல் இன்றி வீற்றிருப்பதற்காக சிங்களமக்களையும், தமிழ் மக்களையும் பிரித்து வைக்கும் அரசியல் பெரு வெற்றி பெற்றது. தமிழ் மக்கள்  இந் நாடுக்குரியவர்கள் எனச் சொன்ன அரசியல்வாதிகள் சிலர் ஒரு காலத்தில் இருந்தனர். இன்று இனவாதம் பேசும் அரசியல்வாதிகள்தான் சிங்கள மக்களால் போற்றப்படுகிறார்கள்.

மைத்திரி  ரணில்  இரட்டைத் தலைமையிலான நல்லாட்சியில்  முள்ளைவாய்க்காலுக்குத் தடை விதிக்கப்படவில்லை.  அரச ஆட்சி மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தின்  கைகளுக்குச் சென்றபோது போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்து வதற்கு தடை விதிக்கப்பட்டது.


 கறுப்புஜூலை,ஆடிக்கலவரம், வெலிகடைப் படுகொலை,குமுதினிப் படகு படுகொலை போன்றவற்றை தமிழ் மக்கள் வருடாந்தம் நினைவு கூர்வார்கள்விடுதலைப் புலிகளின் கை ஓங்கியபோது மாவீரர் வாரம்,கரும் புலிகள் தினம் என்பன முன்னிறுத்தப்பட்டனஇலங்கை  அரச படைகள் வீதியில் குவிக்கப்படும் நாளாக அந்த நாட்கள் மாறின. பிரபாகரனின்  பிறந்த நாளன்ரு பிறந்த தமிழ் மக்கள் தமது பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடப் பயந்தனர். பிரபாகரன் என்ற பெயர்  உள்ளவர்கள்  கொழும்பில் நடமாடப் பயந்தார்கள்.

  2009-ம் ஆண்டு இறுதி கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில்தான் தமிழ் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் ஈவிரக்கமற்ற ஆட்சியாளர்கள் அத்தனை தமிழர்களையும் கொத்து கொத்தாக  படுகொலை செய்தது. இன்னமும் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13-வது நினைவேந்தல் நிகழ்வு  உலகம் முழுவதும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் ஈழத் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றதமிழர்கள் அங்கு நினைவு முற்றத்தில் ஈகைச் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்

  வேந்தல் பொதுக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2009-ம் ஆண்டு இறுதி காலத்தில் உயிரிழந்தோர் நினைவாக கஞ்சியும் வழங்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு மே 18‍ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியுடன் இனவாத அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையான தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக கொழும்பில் அஞ்சலி செலுத்தினர். தந்தை செல்வா தலமியிலான தமிழ்த் தலைவர்களின்  அஹிம்சைப் போராட்டத்தை இரத்தக் களறியாக்கிய கோல் பேஸில் யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்காக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது எனப் பிரகடனம் செய்த கோல் பேஸில்  சிங்கள மக்கள் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடினார்கள். எந்த ஒரு அரசியல்  தலைவரினதும் வழிகாட்டல் இல்லாமல் மக்களால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்  நல்லதொரு அறிகுறியாகும்.

மாவீர  நாளில்  முறுகும் யாழ்ப்பாண பல்கலைக் கழக சிங்கள மாணவர்கள்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள். மட்டக்களப்பு முஸ்லிம் மக்களும்  அங்கு நடந்த  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

மஹிந்த  பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனால், பாராளுமன்ற அதிகாரம் இன்னமும் அவரின் கையில் இருப்பதையே உபசபாநாயகர் தெரிவு  வெளிப்படுத்தி உள்ளது. எனவே ராஜபக்ஷ்சக்கள் விரும்பாமல் அரசியல் சட்டத் திருத்தம் சாத்தியமில்லை.  மக்கள் இப்போது முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் வெறுமனே பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு என்பவை மட்டுமல்ல. வேலையில்லாப் பிரச்னை, பொருள்களின் பல மடங்கு விலை உயர்வு, அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் மிகக்குறைந்துள்ளமை, உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி இல்லை எனப் பல பிரச்னைகள் உள்ளன

இவை எல்லாம் உடைத்தெறியப்படும்போதுதான்  இலங்கை சொர்க்கபுரியாகும்.

No comments: