Tuesday, June 17, 2025

தமிழக அரசியலில் குழம்பிய கூட்டணிக் கணக்குகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்  சூடு பிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலினும், இழந்த ஆட்சியைப் பிடிக்க எடப்பாடியும் வியூகம் வகுக்கின்றனர்.

மெகா கூட்டணி என்ற கோஷம் மட்டுமே எடப்பாடியின் தரப்பில் இருந்து வெளிவருகிறது. ஆனால், எடப்பாடியுடன் கூட்டணி சேர இப்போதைக்கு யாரும் தயாராக இல்லை.

எடப்பாடியின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி என அமித்ஷா சொல்லியுள்ளார்.  ஆனால், அண்ணாமலையின் வாக்கு மூலம் வேறு வகையாக இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.பாஜக ஆட்சிதான் என அண்ணாமலை திருவாய் மலர்ந்தருளுகிறார். தமிழக முதல்வர் கனவில் எடப்பாடி மிதக்கிறார். எடப்பாடியை எப்படி அடக்குவது என அமித்ஷா கணக்குப் போடுகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் குடும்பச் சண்டை நடைபெறுகிறது. அப்பாவும், மகனும் எட்ட்டிக்குப் போட்டியாக  அறிக்கை விடுகிறார்கள். இருவரும்  ஒற்றூமையாக  இருந்த போதே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  குடும்பப் பிரச்சனையால் கட்சி  பிளவுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனபதுபோல்  பிரேமலதா ஒரு கணக்குச் சொல்கிறார். 36 தொகுதிகள்  வேண்டுமாம் ஒரு தொகுதி குறைந்தாலும்  ஒப்புக் கொள்ள மாட்டாராம். ஆனாலும்  கடந்தகாலத்தைப் போல இரண்டு பெரிய கட்சிகளுடனும்  பேரம் பேசுகிறார் பிரேமலதா.

எடப்பாடி   ஏமாற்றி விட்டார் என குற்றம் சுமத்திய  பிரேமலதா  இப்போதைக்கு இறங்கி வருவார் போலத் தெரியாது. எடபாடிக்கும் சுதீஷுக்கும் இடையிலான  பேச்சு வார்த்தையில்  சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு  ராஜ்யசபா  எம்பி பதவி தரப்படும் என எடப்பாடி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால் அவசரப்பட வேண்டாம் என சிலர் பிரேமலதாவுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எடப்பாடியுடன் இருந்த வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சென்றுவிட்டார்.ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரும் பாரதீய ஜனதாவின்  பக்கம் பலமாக  இருக்கின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு, தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு  இருக்கிறது. சசிகலாவின் நிலைதான் கேள்விக்குறியாக  இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கையில் விஜய் சுறுசுறுப்பாக   இயங்குகிறார்.

விஜயுடன் எந்தக் கட்சியும்  இணையவில்லை. ஆனால், மற்றைய  கட்சிகளின்  பிரமுகர்கள் விஜயுடன் கைகோர்த்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயின் கட்சியில்  இணைகிறார்கள்.

ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.ராஜலட்சுமி,   டாக்டர் ஏ.ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

 ராஜலட்சுமி, சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் அதிமுக.,வில் இருந்து விலகி பாஜக.,விற்கு சென்று, பிறகு மீண்டும் அதிமுக.,வில் இணைந்தவர். அதே போல் டேவிட் செல்வன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர்.

வழக்கமாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள், புதிதாக துவங்கப்பட்ட விஜய் கட்சியில் இருந்துள்ளதை  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜயுடன்  பிரேமலதா  இணையலாம் என்ற‌ ஊகங்கள் வெளியாகின்றன.

பிரேமலதாவிடம் ஊடகவியலாளர்கள்         கேட்ட போது, விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன்  கூட்டணி சேர பிரேமலதா விரும்புகிறார். தான் எதிர்பார்க்கு தொகுதிகளை  ஒதுக்க மறுத்தால் தனித்துப்  போட்டியிடப் போவதாகவும் பிரேமலதா சொல்லியுள்ளார்.

தனித்துப் போட்டியிட்டால்  பிரேமலதவால் வெற்றி பெற முடியாது. ஆனால், இன்னொரு கட்சியின் வெற்ரி வாய்ப்பைத் தவிடு பொடியாக்க முடியும்.

ஸ்டாலினுடன்  இருக்கும் திருமாவளவனும், கொம்யூனிஸ்ட்டுகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. காங்கிரஸும்  சில வேளை அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம்.

தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலரவைக்க பாரதீய ஜனதா முயற்சி   செய்கிறது. கடந்த வாரம் அமித்ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.

தேர்தலைக் குறிவைத்து முருகன் மாநாட்டை நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டுளது. முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து   மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேகதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் திக‌தி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

 கடைசியில்  முருகனிடன் சரணடைந்தது  பாரதீய ஜனதாக் கட்சி. 

ரமணி

15/6/25

 

No comments: