Friday, March 23, 2012

சச்சின் 100/100

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனை முறியடித்து புதிய சாதனைகளைச் செய்த சச்சின் டெண்டுல்கர் 100ஆவது சதத்தை அடித்து யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார். 99ஆவது சதத்தை டெண்டுல்கர் அடித்ததும் பரபரப்புத் தொடங்கியது. 100ஆவது சதத்தினை எப்போது அடிப்பார்? இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 100ஆவது சதத்தை அடிப்பாரா? போன்ற தலைப்புச் செய்திகள் ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டன. 100ஆவது சதம் இலக்கமே தவிர சாதனை அல்ல என்று டெண்டுல்கர் பலமுறை கூறியிருந்தார். 100ஆவது சதம் சாதனை அல்ல இலக்கம் தான் என்று அவர் வெளிப்படையாக கூறினாலும், மனதளவில் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டதை 100ஆவது சதத்தின் பின்னரான தொலைக்காட்சிப் பேட்டி உணர்த்தியது.
1988ஆம் ஆண்டு ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக மும்பை அணி சார்பில் முதன் முதலில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காது 100 ஓட்டங்களைக் குவித்தார். அறிமுகப் போட்டியில் சதமடித்த 15 வயதுச் சிறுவனை பார்த்து இந்தியக் கிரிக்கெட் வியந்தது. சச்சின் டெண்டுல்கர், வினோத் கம்ப்ளி ஆகிய இரண்டு மாணவர்கள் பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் 600 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் குவித்து புதிய சாதனை படைத்தார்கள். மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களான சச்சினும், கம்ப்ளியும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். காலப்போக்கில் கம்ப்ளியின் இடம் பறிபோனது. போராடும் குணம் உடைய டெண்டுல்கர் இன்று வரை நிலைத்து நின்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இடம்பிடித்தபோது இந்திய அணியின் நட்Œத்திரம் ஒன்று தோன்றியுள்ளது. இந்தியாவின் வெற்றி சச்சினிலேயே தங்கியுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நாயகனாகத் திகழ்வார். பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார் என்று யாருமே எதிர்வு கூறவில்லை. கிரிக்கெட் உலகில் முதல் சதமடித்த டெண்டுல்கர் இரண்டாவது சதம் அடிக்க 17 மாதங்கள் காத்திருந்தார். கிரிக்கெட் பிதாமகன் என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டொன் பிரட்மன் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் என்பதே விமர்சகர்களின் முடிவு.
மத்திய வரிசை வீரராக களம் இறங்கிய டெண்டுல்கர் அவுஸ்திரேலியாவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கினார். அதன் பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய சச்சின் பந்து வீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார். வேகப் பந்துக்கும் சுழல் பந்துக்கும் தனது துடுப்பினால் பதிலளித்தார்.

சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், சச்சினின் பல சாதனைகள் முறியடிக்க முடியாதவை. சச்சின் அடிக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சாதனைதான். சத்தமில்லாமல் நடத்திய பல சாதனைகளை எவராலும் முறியடிக்க முடியாது. 16 வயதுப் பாலகனாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்த சச்சின் 23 வருடங்களாகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். 99ஆவது சதத்துக்கும் 100ஆவது சதத்துக்கும் இடையில் அதிக காலம் எடுத்ததால் ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்தன. கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், நடுநிலையான விமர்சனங்களும் சச்சின் 100ஆவது சதத்தை அடிப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார் சச்சின்.
சச்சின், பொன்டிங், லாரா, கலிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது. ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் அதிக ஓட்டங்களை எடுப்பது யார் என்று. ஆரோக்கியமான போட்டியில் கிடைத்த சந்தர்ப்பங்களிலும் இவர்கள் தமது முத்திரையைப் பதித்தனர். அதிக சதம் அடிப்பது யார் என்ற போட்டியில் பொன்டிங் சச்சினை நெருங்கினார். பின்னர் சச்சினின் வேகமான ரன் மழையால் சதத்தில் பின்தங்கிவிட்டார் பொன்டிங். சச்சினுக்கு அடுத்த இடத்தில் பொன்டிங் 71 சதங்களும், கலிஸ் 59 சதங்களும் அடித்துள்ளனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற லாரா 48 சதங்களும், ட்ராவிட் 45 சதங்களும் அடித்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரை சச்சினின் விளையாட்டு உச்சம் பெற்றிருந்தது. டெஸ்ட் போட்டியில் 65.21 என்ற சராசரியிலும், ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் உட்பட 52.41 என்ற சராசரியிலும் ஓட்டங்களைக் குவித்தார். 104 இன்னிங்ஸ்களில் 21 சதம் அடித்து தனது முத்திரையைப் பதித்தார். பொண்டிங் 147 இன்னிங்ஸ்களில் 11 சதங்களும், கலிஸ் 113 இன்னிங்ஸ்களில் 13 சதங்களும் அடித்தனர். 31ஆவது சதத்தில் இருந்து 40 ஆவது சதத்தை மிக வேகமாக அடித்தார். 36 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்தார். 41ஆவது சதத்தில் இருந்து 50 ஆவது சதத்தை அடிக்க 67 இன்னிங்ஸ்கள் எடுத்தன. 91ஆவது சதத்தில் இருந்து 100 ஆவது சதத்தை அடிக்க 65 இன்னிங்ஸ்கள் விளையாடினார்.
கிரிக்கெட் வீரர்களில் சீரான முறையில் சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். ஏழு இன்னிங்ஸ்களுக்கு ஒரு முறை சதம் அடித்தார். லாரா, பொன்டிங், கலிஸ் ஆகியோர் சச்சினுக்கு கீழேதான் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் 2016 பவுண்டரிகள் அடித்து புதிய சாதனை செய்துள்ளார். 1500 பவுண்டரிகளுடன் ஜயசூர்யா இரண்டாவது இடத்தில் உள்ளார்




டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் முதல்வனாகத் திகழ்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்களை அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 17 சதங்கள், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 12 சதங்கள், இங்கிலாந்துக்கு, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக தலா எண்பது சதங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஏழு சதங்களும் அடித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் 23 வருடங்களாக டெண்டுல்கர் சந்தித்த பந்து வீச்சாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மக்ராத், ஷேன்வோன், மக்காயூன், வசீம் அக்ரம், அப்ரிடி, முரளி, ஜயசூர்யா, வாஸ் போன்ற அச்சுறுத்தும் வேகங்களுக்கும் சுழல்களுக்கும் தனது துடுப்பினால் பதிலளித்தார்.
சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோல்வியடையும் என்ற கருத்து ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது. சச்சின் அடித்த 100 சதங்களில் 53 சதங்கள் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. டெஸ்ட் போட்டியில் 20 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 33 சதங்களும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. சச்சினின் 24 சதங்கள் அடித்த போட்டிகளிலேயே இந்தியா தோல்வியடைந்தது. பொன்டிங் அடித்த 71 சதங்களில் 55 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சாதனை நாயகனின் வாழ்விலும் ஒரு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரானபோது அணித் தலைவர் சச்சினின் தலைமையில் பெரிய சாதனை எதுவும் பதியப்படவில்லை. 2011ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா போர்ட் எலிஸபெத் மைதானத்தில் பந்தை நகத்தால் சுரண்டியபோது பந்தைச் சேதப்படுத்தியதாக சச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நடுவர்களின் சில தவறான தீர்ப்புகளால் ரசிகர்கள் கொந்தளித்தபோது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
புதிய பந்து வீச்சாளர்களின் ஒரே ஒரு குறிக்கோள் சச்சினின் விக்கெட்டைக் கைப்பற்றுவதே. பல பந்து வீச்சாளர்கள் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்துள்ளார். அடுத்த சாதனை ஒரு நாள் போட்டியில் 50ஆவது சதம், ஒரு நாள் போட்டிகளில் 96 அரைச் சதம் அடித்துள்ளார். நான்கு அரைச் சதம் அடித்தால் ஒரு நாள் அரங்கில் 100 அரைச்சதம் அடித்த பெருமையைப் பெறுவார்.

ரமணி
மெட்ரோநியூஸ் 23/03/2012

No comments: