Tuesday, March 14, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி

வி.சி.கணேசன் எனும் நடிகரின் உண்மையான அடையாளத்தை மறைத்து சிவாஜி என உலகுக்கு அடையாளப்படுத்திய நாடகம் தான்  ’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ எனும் நாடகம். அந்த நாடகத்தில் நடித்ட வி.சி. கணேசன் வீர சிவாஜியாக வாழ்ந்ததால் சிவாஜி எனும் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது.

அறிஞர் அண்ணா எழுதிய’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ எனும் நாடகத்தில் நடிப்பதற்கு முதலில் தெரிவானவர் எ.ம்.ஜி.ஆர். அதன் பின்னர் பலருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் வி.சி.கணேசன் சிவாஜியாக நடிப்பதென  முடிவு செய்யப்பட்டது. 

11 வயதில் அரிதாரம்  பூசி நாடக  மேடையில் அரங்கேறியவர் சிவாஜி.  பரமக்குடியில் கதரின் வெற்றி என்ற நாடகம் நடந்தது. அப்போது கணேசனுக்கு 11 வயதுதான். அப்போது பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் இருந்த  கணேசன், கொஞ்சநாளில் அதிலிருந்து விலகி சரஸ்வதி கான சபாவில் சேர்ந்தார். அந்த நாடகக்குழுவை சில பங்குதாரர்களோடு சேர்ந்து எம்.ஆர்.ராதா நடந்திவந்தார். அந்த நாடகக் குழு சென்னைக்குச் சென்றபோது பங்குதாரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டு ராதா விலகிவிட்டார். அதன் பிறகு கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை அந்தக் குழுவை நடத்தும் பொறுப்பை ஏற்றார்.கணேசன்    மங்கள கான சபாவில் இணைந்தார். அதை விலைக்கு வாங்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அதற்கு என்.எஸ்.கே. நாடக சபா என்று பெயரிட்டார். சில நாட்களிலேயே கலைவாணர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. சகஸ்ரநாமத்திடம் பொறுப்பைத் தந்தார். அங்கிருந்த நடிகர் கே.ஆர்.ராமசாமிக்கு அது பிடிக்காமல் வெளியேறினார். அவருடன் டி.என்.நாராயணசாமியும் கணேசனும் வெளியேறி  மூவரும் நேராக அறிஞர் அண்ணா நடத்திவந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார்கள்.  அங்கே சின்னச் சின்ன வேலைகளை கணேசனும் மற்றவர்களும் செய்தார்கள்.

  திராவிடர் கழகத்தின்   ஏழாவது சுயமரியாதை மாநாட்டில்   அரங்கேற்றுவதற்காக  ’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’  எனும் நடகத்தை அண்ணா எழுதினார்.  அந்த நாடகத்தைத் தயாரிக்கும் பொறுப்பை  டி.வி.நாராயணசாமியிடம் ஒப்படைத்த அண்ணா அவரை சிவாஜியாக நடிக்கும்படி சொன்னார்.  ‘மாயா மச்சீந்திரா’ படம் அப்போது வெளியாகி இருந்தது.  அதில் எம்ஜிஆர் மிகவும் அருமையாகக் கத்திச்சண்டை போட்டு நடித்திருந்தார். அதைப் பார்த்திருந்த நாராயணசாமி, நாடகத்தில் சிவாஜி வேடத்திற்கு எம்ஜிஆர் தான் பொருத்தமாக இருப்பார் என்று  எம்ஜிஆரை  அண்ணாவுக்கு  அறிமுகம் செய்துவைத்தார். அன்றுதான்  எம்ஜிஆர்  முதன் முதலாக அண்ணாவைச் சந்தித்தார். பிற்காலத்தில் அரசியலில் அண்ணாவின்  பெயரிலான கட்சியை ஆரம்பிப்பேன் என எம்.ஜி.ஆர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.  இன்று நாங்கள் பார்க்கும் எம்.ஜி.ஆருக்கும் அன்றைய எம்.ஜி.ஆருக்கும் இடையில் நிறைய வித்தியாசம், வேறுமைகள்  இருந்தன. கதர் உடை,கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை என  சைவப்பழமாகக் காட்சியளித்தர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருன் கட்டுமஸ்தான உடல், முக கவர்ச்சி, சிவப்பு நிறம் எல்லாம் அண்ணாவைக் கவர்ந்தன. வீர சிவாஜி எம்.ஜி.ஆர் தான் என முடிவு செய்தார் அண்ணா. நாடக வசனங்கள் எம்.ஜி.ஆரிடம் கொடுக்கப்பட்டன. சத்திரபதி சிவாஜிக்கான உடைகள் தைக்கப்பட்டன.அப்போது   ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஒத்திகையின் போது   ஒருசில காட்சிகளை மாற்றியமைத்தால் நன்றாக இருக்குமே டி.வி. நாராயணசாமியிடம் சொன்னார் எம்ஜிஆர்.அண்ணாவுக்கு அதில் ஆட்சேபனை ஏதும் இருக்கவில்லை. அண்ணாவுக்கு நேரமில்லை என்றால், தான் அந்தத் திருத்தங்களைச் செய்துதருவதாக ‘ராஜகுமாரி’ பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னார். அண்ணா பெருந்தன்மையோடு அதற்கும் ஒப்புக்கொண்டார். அப்படியிருந்தும் சிவாஜி வேடத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

சாமியின் அறிவுரையின் பிரகாரம்  அறிவுரை கூற, அண்ணாவின் சிவாஜி நாடகத்தில் நடிக்க இயலாது என்று சொல்லி விலகினார் எம்ஜிஆர்.அதன் பிறகு நடிகர் எஸ்.வி.சுப்பையாவை சிவாஜி வேடத்தில் நடிக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது. சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பு பேசும் இயக்கம் என்று கூறி மறுத்துவிட்டார் சுப்பையா. ‘பராசக்தி’யில் பூசாரியாக நடித்த கே.பி.காமாட்சி அப்போது நாடகங்களில் முக்கிய நடிகராக இருந்தார். அவரையும் பரிசீலித்தார்கள்.  அவரும் சரிப்பட்டு வரவில்லை..


 மாநாடு நடக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.சிவாஜியாக நடிப்பதற்கு எவரும் பொருந்தவில்லை.   திராவிட நாடு அலுவலகத்தில் கே.ஆர்.ராமசாமி, கணேசன், சிவசூரியன், கிருஷ்ணன், சிதம்பரம் போன்ற நடிகர்களும் இருந்தார்கள். நம்ம கணேசனை சிவாஜி வேடத்தில் போட்டால் என்ன என்று  சிதம்பரம் கேட்டார். நாராயணசாமி அண்ணாவிடம் சொன்னார்.   "கணேசன் பெண் வேடங்களில் நடித்துப் பார்த்திருக்கிறேன்..." என்று அண்ணா, இழுத்தார். தயார் செய்துவிடலாம் என்று நம்பிக்கையளித்தார் நாராயணசாமி. கணேசனிடம் நாராயணசாமி கேட்டார்சிவாஜி எங்கே நான் எங்கே என கணேசன் மறுத்தார். நாராயணசாமி நம்பிக்கையூட்டினார். அந்த நம்பிக்கைதான் கணேசனை சிவாஜியாக மாற்றியது.

முயற்சித்துப்பார் கணேசா... உன்னால் முடியும்என்றார் அண்ணா.   தொண்ணூறு பக்க வசனங்களையும் கணேசனிடம் கொடுத்த அண்ணா  படித்துப்பார். நான் மாலை வருகிறேன் என்று சொல்லி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.  அப்போது காலை 6 மணி மாலை 6 மணிக்கு வந்து படித்தாயா என்று கணேசனிடம் கேட்டார். கணேசன் உற்சாகத்தோடு அண்ணாவை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அண்ணா எழுதித்தந்த அத்தனை வசனங்களையும் கணேசன் பேசி நடித்துக் காண்பித்தார். அக்கம்பக் த்தில் இருந்தவர்களெல்லாம் கணேசனின் கம்பீரக் குரல் கேட்டுக் கூடிவிட்டார்கள்


சிவாஜியின் வீர வசன உச்சரிப்பைக் கேட்ட அண்ணாவின் கண்ண்களில்  இருந்து  கண்ணீர் வெளியேறியது. கணேசனைக் கட்டித்தழுவிய  அண்ணா"இனி நீதான் சிவாஜி!" - என்றார். நாடகத்துக்கு நான்கு நாட்கள்தான் இருந்தன. எம்ஜிஆருக்காகத் தைக்கப்பட்ட உடைகள் கணேசன் அளவுக்குத் திருத்தித் தைக்கப்பட்டன. முடியாத இடங்களில் பஞ்சு வைத்து அடைக்கப்பட்டது.அப்போது கணேசனுக்கு எம்ஜிஆரைவிட மெலிந்த தேகம். ஏழாவது சுயமரியாதை மாநாடு சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்ப்புறம் நடந்தது. அங்கிருந்த பெரிய திரையரங்கில் அண்ணாவின்சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்நாடகம் அரங்கேறியது. நாடகம் மூன்று மணிநேரம் நடந்தது. நாடகத்தில் காகப்பட்டராக அண்ணாவே நடித்தார்.

நாடகத்தை முழுவதும் பார்த்து ரசித்த தந்தை பெரியார் மேடையேறிப் பேசினார்: "நான் பத்து மகாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்காளை ஒரே நாடகத்தில் கூறிவிட்டார் அண்ணா. சிவாஜி வேடத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டு, மிகச் சிறப்பாக நடித்த அந்தச் சின்னப்பையன் யார்?" - எனக் கேட்டர்.அவன்தான் கணேசன் என்று சொல்லி, பெரியார் முன்பு கணேசனை அழைத்துவந்து நிறுத்தினார்கள்.

  கணேசனைப் பார்த்த்த  பெரியார் : "நீதான் கணேசனா? இல்லை... இல்லை... இன்று முதல் நீ சிவாஜி!"  என்றார். அன்று முதல் அவர் உலகமே போற்றிய நடிப்பு மேதை சிவாஜி கணேசன் எனப் போற்றப்பட்டார். சிவாஜி கணேசன் என்ற பெயர் தந்தை பெரியார எனக்குப்போட்ட பிச்சை என்று பின்னாளில் தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்   நடிகர்திலகம்.

அண்ணா எழுதுவதர்கு முன்னர் வீர சிவாஜி நாடகம் பலரால் மேடையேற்றப் பட்டது. அண்ணாவின் வசனமும், கணேசனின் நடிப்பும் நாடக  உலகில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கியது.

No comments: