Friday, April 19, 2013

சிறுகதைத் தொகுதி வெளீயீட்டு விழா


வடக்கே போகும் மெயில் திரட்டினைப்படித்துமுடிக்கும்வாசகர்கள் இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுது போக்கு அம்சங்களைக்கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரல்ல, என்பதையும் பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும் அக்கறையும் கொண்ட ஒரு மனித நேய படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தனது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கின்றார்.எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும்,அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி,மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.

"
திக்குத் தெரியாத" என்ற சிறுகதை இன முரண்பாட்டின் கோர முகத்தைக் காட்டும் இன்னொரு கதையாகும்.வன் செயல்களுடன் சம்பந்தப்படாத இளைஞர்கள் கூட, சில சமயங்களில் கைது செய்யப்பட்டு ,சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கபடும் சோகங்களை சொல்லும் கதை. அனைவரது முகங்களிலும் அச்சமும்,சந்தேகமும் அள்ளிப் பூசப்பட்ட பாதுகாப்பு வலயம் ஒன்றினுள் எடுக்கப்பட்ட திகில் திரைப்படம் போன்று நகர்த்திச் செல்லப்படும் கதை.

.நவம்
கனடா


இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்திலேயே எனக்கு இலங்கையில் வடமராட்சிப்பிரதேசத்துடன் நெருக்கமான உறவும் பாசமும் ஆரம்பமாகிவிட்டது. இன்று வரையில் நீடிக்கும் இந்தச்சொந்தம்எப்பொழுதும் முற்றுப்பெறாத தொடர்கதையாகத்தான் வளரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குண்டு.

கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வந்தபொழுது வடமராட்சிக்கும் பயணித்தேன். அப்பொழுது எனக்கு இரண்டு தகவல்கள் கிடைத்தன. ஒன்று சகோதரர் தெணியானின பிறந்த நாள்விழாவும் அவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வும். மற்றது ரவிவர்மாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு.
.
அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் குலதெய்வம் சூரனின் முதல் பேரன் என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியும். ராஜஸ்ரீகாந்தன் 2004 இல் பதிப்பித்து வெளியிட்ட சூரன் சுயசரிதை நூலின் மூல எழுத்துப்பிரதி ரவிவர்மாவிடமே இருந்திருக்கிறது என்ற தகவலை ராஜஸ்ரீகாந்தன் வாயிலாக தெரிந்துகொள்கின்றோம்.
வடமராட்சியில் அடிநிலைமக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடிய சூரனின் வாரிசு .
ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவிபுனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா சிறுகதைப்படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் இரண்டு தளங்களில் பயணிக்கின்றார் 
லெ.முருகபூபதி
அவுஸ்திரேலியா


இலங்கைப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப்படைத்த ஏகாம்பரம் ரவிவர்மா கவிதை,சிறுகதை என்பவற்றிலும் முத்திரை பதித்துள்ளார்.அரசியல்,இலக்கியம,விளையாட்டு,ஆன்மீகம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.தெளிவான இலகுவாகப்புரிந்து கொள்ளக்கூடிய இவரது எழுத்துநடை வாசகர்களின் மனதில் இலகுவாகப்பதிந்து விடும் தன்மை உள்ளது.

பத்திரிகைத்துறை சார்ந்த பத்தி எழுத்து,விளையாட்டு, விவரணக்கட்டுரை ஆகியவற்றில் விருதுகளைப்பெற்றுள்ளார்.ஆங்கில, சிங்கள மொழிப்பத்திரிகையாளர்களுடன் போட்டியிட்டு விவரணக்கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவரது சிறுகதைகள் யதார்த்தபூர்வமானவை மனிதவாழ்வின் அவலங்களையும் சோகங்களையும் மிக லாவகமாக மனதில் பதியும்படி சிறுகதைகளாக வடித்துள்ளார்.
மடுளுகிரியே விஜேரத்ன



  

No comments: