Wednesday, May 15, 2019

தமிழக அரசைத் துரத்தும் இடைத்தேர்தல்


எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் தலைமையிலான அரசுக்கு பரீட்சைக்களமாக அமையப்போகிறது சட்டமன்ற இடைத்தேர்தல். சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரம்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு எதிர் வரும் 19 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் இருந்த இந்த நான்கு தொகுதிகளையும் தக்க வைக்கவைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பெரும் பிரயத்தனம் செய்கிறார். நான்கு தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடிக்கு அதிர்ச்சிகொடுக்க வியூகம் அமைத்துள்ளார் ஸ்டாலின். அங்கு எடப்பாடியை வீழ்த்த சதுரங்கம் ஆடுகிறார் தினகரன்.

திருபரங்குன்றத்தில் போஸ் வெற்றி பெற்றதுசெல்லாது என நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்த டாக்டர் சரவணன்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஜெயலலிதா கையெழுத்திடாமல் விரல் ரேகை பதிவு செய்தார். அப்போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தாரா என்ற நீதிமன்றம் சந்தேகப்பட்டதால் போஸின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுபவரின் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்தும் உள்ளது.

அரவக்குறிச்சித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும், ஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜனும்  தினகரனுடன் கைகோர்த்ததால் பதவியைப் பறிகொடுத்தனர். செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், சுந்தர்ராஜன், தினகரனின் அமைப்பிலும் போட்டியிடுவதால் அத் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை சூலூர். அங்கும் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தினகரன் பெரும் தலையிடியாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் ஆதரவாக இருப்பவர்கள் தினகரனை ஆதரிப்பார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி எவ்வளவு என்பது இன்னமும்  தெரியவில்லை. ஜெயலலிதா தலைமை வகித்தபோது இருந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறதா? கூடியுள்ளதா? அல்லது குறைந்துவிட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது.

 நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திராவிட முன்னேற்றக் கழகம் முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது. ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலத்த இழுபறிகளின் பின்னர் வேட்பாளர்களை அறிவித்தது. சில அமைச்சர்கள் தமக்கு வேண்டியவர்களை வேட்பாளராக்குவதற்கு முயற்சி செய்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. ஜெயலலிதா இருக்கும் போது யாருமே சிபார்சு செய்வதில்லை. இப்போ எல்லாம் தலைகீழாகி விட்டது.

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினும், எடப்பாடியும் தமது வியூகத்தை மாற்றியுள்ளனர். பிரதான வீதி, சந்தை, பஸ்நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் நடந்து சென்று வாக்குச் சேகரிக்கிறார் ஸ்டாலின். திண்ணைப் பிரசாரம், கலந்துரையாடல், கைகுலுக்குதல், செல்பி எடுத்தல்  என மக்களுடன் மிக நெருக்கமாக ஸ்டாலின் வலம் வருகிறார். பொதுத் தேதலின் போது பாரதீய ஜனதாவையும் மோடியையும் தூக்கிப் பிடித்த எடப்பாடி பன்னீர்ச்செல்வம் இப்போது வசதியாக அவற்றை மறைத்துவிட்டார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை சூலூர்.  சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மரணமானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கனகராஜின் மனைவி வேட்பாளராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனகராஜின் சித்தப்பாவின் மகனான கந்தசாமி என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக அறிவித்துள்ளது. பலமான வாக்கு வங்கி உள்ள தொகுதி, அனுதாப அலை என்பவற்றின் மூலம் வெற்றி பெறலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.

கழகத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. அதிகாரம் கையில் இருந்தபோது அசைக்க முடியாத சக்தியாக இருந்த பொங்கலூர் பழனிச்சமிமீது ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. சட்டமன்றம் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்காக கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் பொங்கலூர் பழனிச்சாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் போது வாய்ப்பு மறுக்கப்பட்டது. சூலூரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருடன் போட்டிபோடுவதற்கு தகுதியான ஒருவர் பொங்கலூர் பழனிச்சாமி என கருதி ஸ்டாலின் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தினகரனின் தலைமையிலான கட்சியின் வேட்பாளராக சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தினகரனுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி  தினகரனுடன் இணைந்த பிரமுகர் ஆகியோர் சூலூரில்  போட்டியிட விரும்பியபோதும் அவர்களைப் புறம் தள்ளி சுகுமார் வேட்பாளராகியுள்ளார்.

மூன்று வேட்பாளர்களும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதியின் செல்வாக்கு தூக்கலாக உள்ளது. 25 சதவீத தேவர் சமுதாய வாக்குகள் சூலூரில் உள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட சூறாவளியால் தினகரனின் பக்கம் சாய்ந்ததால் பதவியைப் பறிகொடுத்தார். இடைத் தேர்தலில் தினகரனின் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. எடப்பாடி அரசின் பதவியைக் காப்பாற்ருவதற்காக பலிக்கடாவாக்கப்பட்டவர்களுல் சுந்த்ர்ராஜனும் ஒருவர். ஒட்டப்பிடார மக்கள் தன் பக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது வேட்புமனுவில் தவறான தகவலை   சுந்தர்ராஜ் குறிப்பிட்டதாக அவரிடம் தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி வழக்குத் தொடுத்தார். சுந்தர்ராஜ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துள்ளார். ஆகையால் தான் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றதால் தேர்தல் நடைபெறுகிறது.

அனைச்சர்களான கடம்பூர் ராஜு, வேலுமணி,தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான மோகன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2006, 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற  மோகனுக்கு எதிராக சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  இருக்கின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான சண்முகையா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலர் விணப்பித்த போதும் சண்முகையாவுக்கு செல்வாக்கு இருப்பதால் அவர் வேட்பாளரானார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கியுள்ளது. அண்ணா திராவிட முன்னெற்றக் கழக உறுப்பினர் போஸின் வெற்றி செல்லாது என நீதிமன்றத்தின் மூலம்  தீர்ப்புப் பெற்றவர் டாக்டர் சரவணன். திருப்பரங்குன்ற மக்களால் நன்கு அறியப்பட்டவர். அழகிரியின் ஆதர்வாளரான சரவணன், சிறிதுகாலம் பாரதீய ஜனதாவில் செயற்பட்டவர். பின்னர் வைகோவின் கட்சியில் இணைந்தார்.  அங்கிருந்து வெளியேறி மீண்டும் திராவிட முன்னேற்றக் கழ்கத்தில் ஐக்கியமானார். திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ அணியின் மூலம்  மக்களிடன் மிகவும் நெருக்கமானவர். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்க வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அமைச்சர்களின் சிபார்ச்சுகளைப் புறந்தள்ளிய எடப்பாடி, தனக்காகப் போராட்டம் நடத்தியவரை வேட்பாளராக்கி உள்ளார். தினகரனும் தனக்கு வேண்டப்பட்ட மகேந்திரனை வேட்பாளராக்கியிருக்கிறார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டில்  தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தினகரன் பிரிந்தபோது அவரின் பின்னால் சென்றவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்கத்தால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை இழந்தபின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். செந்தில் பாலாஜியின் சொல்லுக்கு அரவக்குறிச்சி தொகுதி கட்டுப்படும். சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார். தந்து எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

செந்தில்பாலாஜியின் சிஷ்யப்பிள்ளையான செந்தில் நாதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. செந்தில் பாலாஜியுடன் ஒரே கட்சியில் இருந்தபோது முரண்பட்ட  சாகுல் ஹாமீதை தினகரன் வேட்பாளராக்கியுள்ளார். அரவக்குறிச்சியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் தினகரன் அந்த வழியில் சென்றுள்ளார்.

இந்தியப் பொதுத்தேர்தலில் தமிழகம்,புதுவை உட்பட் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திராவிடமுன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சூழுரைத்தன. இதேவேளை 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் பொதுத் தேர்தலன்று நடைபெற்றது. பொதுத் தேர்தலைவிட சட்ட மன்ற இடைத்தேர்தலிலேயே திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதிக அக்கறை எடுத்தன. மத்தியில் மீண்டும்  பாரதீயஜனதா ஆட்சி அமைத்தால் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் பதவிக்கு ஆபத்தில்லை. மாறாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் எடப்பாடியின் முதலமைச்சர் கதிரை பறிக்கப்படும். ஆகையால்  தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக ஆட்சியைத் தீர்மனிக்கப்போகிறது.

No comments: