Wednesday, May 29, 2019

மோடியை மூழ்கடித்த தமிழகம்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் தனது அடையாளத்தை இழந்துள்ளது. பாரதீய ஜனதாவின் தப்புத் தாளத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  தலை தெறித்து ஆடியது.  பாரதீய ஜனதாக் கட்சியுடன் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்  கூட்டணி சேரப்போகும் செய்திகளை மருத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இரகசியத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தனர். மறைந்திருந்த பொய்களை தேர்தல் கூட்டணி வெளிப்படுத்தியது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் மிகச்சரியான கூட்டணி அமைத்த ஸ்டாலின் மிகப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின்  கையில் இருந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இப்போது ஸ்டாலினின் வசம் வந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் தான் கிடைத்துள்ளது. அதுவும் பன்னீரின் மகன் என்பது முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்திருந்த பராதீய ஜனதாக் கட்சி இன்று அதனையும் இழந்துள்ளது.

இந்திய நாடாளு லுமன்றத் தேர்தலில் 303  எனும் பிரமாண்டமான உறுப்பினர்களை அறுவடை செய்த பாரதீய ஜனதாவால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற  முடியவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியுடன்  கூட்டணி சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 36 நாடாளுமன்ற  உறுப்பினர்களை இழந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முன்னேற்றக் திராவிட கழகம், புதிய தமிழகம்,  தமிழ் மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் படு தோல்வியடைந்தன. மாறாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ், மாக்சிஸ்ட்,கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் கட்சி,இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன வெற்றி பெற்றுள்ளன. ஈ.வி.கே இளங்கோவன் மட்டும் தோல்வியடைந்துள்ளார்.  பனப்பட்டுவாடா  புகாரினால் வேலூரில் தேர்தல் நடைபெறவில்லை.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரான தமிழைசை, முன்னாள் அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்,எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன் ஆகிய தமிழக பாரதீய ஜனதாவின் பிரபலங்கள் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ளனர். 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் விளங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் இன்று பலமிழந்துள்ளது.

கருணாநிதியின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ராகுல்,மம்தா,அகிலேஷ் யாதவ்,கெஜ்ரிவால் போன்ற   வடநாட்டு அரசியல்வாதிகளை வீழ்த்திய மோடி, தமிழகத்தில் ஸ்டாலினிடம் வீழ்ந்தது எப்படி என அனைவரும் வியப்புடன் நோக்குகின்றனர். மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி கடந்த ஐந்து வருட ஆட்சியில் இருந்தபோது மக்கள் அனுபவித்த துயரங்களைப் பட்டியலிட்டால் பாரதீய  ஜனதா வெற்றி பெறுவது முடியாத காரியம். அனால், தமிழகத்தையும் கேரளாவையும் தவிர இந்தியாவின் சகல மாநிலங்களிலும் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நீட்தேர்வு,காவேரி,தமிழ்க மீனவர்,ஹைட்ரோ காபன், ஸ்டேர்ட்லைற், எட்டு வழிச்சாலை, புயல் சேத புறக்கணிப்பு என்பன பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளாக மாறின. அந்த எதிர்ப்பு அலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அடிபட்டுப்போயின. திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளுக்கமைய வாக்குகளை அள்ளிப் போட்ட தமிழக மக்கள் இமாலய வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். மத்தியில் கங்கிரஸ் ஆளும் கட்சியாக காங்கிரஸ்  இல்லாமையால் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.

No comments: