Tuesday, January 3, 2012

திரைகடல் ஓடியும்…

பகல் வேலை முடிந்தவர்கள் சிறுவர்களைப் போல் துள்ளி ஓடி பஸ்ஸினுள் ஏறினார்கள்.இரவு வேலைக்காக பஸ்ஸில் வந்தவர்கள் இறங்க மனமில்லாது இறங்கினார்கள்.
‘என்ன இன்பம் இறங்க மனமில்லையோ?
‘இந்தச் சவப்பெட்டி எப்பபோகப் போகுதோ? அடியைப்பாத்தாலே வயித்தைக் கலக்குது. தான் வேலை செய்யப்போகும் அந்தப் பிரமாண்டமான உருவத்தைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் இன்பம்.
‘உப்பிடி எத்தினையை அனுப்பிப் போட்டம். இன்னும் எத்தினை வருமோ தெரியாது. கடிதம் வந்ததே?’ சிவா.
‘ஓம் மகன் நாப்பது கடிதம் வந்தது. என்ரை பேருக்கு ஒண்டு கூட வரவில்லை.’
‘யாழ்ப்பாணக் கடிதம் தான் சுணக்கம் எண்டால் மட்டக்களப்புக் கடிதமும் வரேல்லையே?’
‘மட்டக்களப்பு கிடக்கட்டும் மகன். கொழும்புக் கடிதம் கூட எனக்கு வரவில்லை.
‘நைற் வேலைகாரர் எல்லாரும் பஸ்ஸாலை இறங்குங்கோ’ இரவுவேலைக்குப் பொறுப்பான ஜோன்சன் பஸ்ஸ{க்குள் ஏறிக் கூறினான்.
‘மகேந்திரண்ணை காலமை வெள்ளன வந்திடுங்கோ இரவு வேலைக்குப் போகிறவர்கள் பஸ் சாரதி மகேந்திரனிடம் கூறினார்கள்.
பஸ் பிரதான வாசலைக் கடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த இன்பம். தான் சவப்பெட்டி என வர்ணித்த அந்தப் பிரமாண்டமான கப்பலைப் பார்த்தான். சவ10தி அரேபியாவின் கிழக்கு நகரமான யுபேல் துறைமுகக் கடல் அமைதியாக இருந்தது. சீனாவில் இருந்து ய10ரியா ஏற்றுவதற்காக வந்த அந்தக் கப்பலை நோக்கிச் சென்றார்கள் பஸ்ஸில் வந்தவர்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தவர்கள் ஒருவருடம் கழிந்து விட்டது.
ய10ரியா ஏற்றும் வேலை மிகவும் சிரமமானது. பெல்ட்டின் மூலம் ய10ரியா பைகள் வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து அவற்றை துரிதமாக அடுக்கவேண்டும். ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டுபேர் வேலை செய்வார்கள். ஏனையோர் ஓய்வெடுப்பார்கள். ஒரு குழுவில் பத்துப் பேர் இருப்பார்கள் ஒரே நேரத்தில் அது நான்கு குழுக்கள் கப்பலில் வேலை செய்யும்.
ஒவ்வொரு மாதமும் ய10ரியா ஏற்றுவதற்காக நான்கு அல்லது ஐந்து கப்பல்கள் அந்தத் துறைமுகத்துக்கு வரும். ஒவ்வொரு கப்பலும் ஐந்து நாட்கள் தரித்து நிற்கும். ஐந்து நாட்களும் ஓய்வு இல்லாது வேலை. ஏனைய நாட்களில் எண்ணெய் ஏற்றுவதற்காக வரும் கப்பல்களைக் கட்டுவதும் அவற்றை அவிழ்த்து விடுவதும் தான் அவர்களின் வேலை.
இரவு எட்டுமணியாகிவிட்டது. வேலை செய்பவர்களைத் தவிர ஏனையோர் ஓய்வெடுத்தனர். ஸ்ரீயும், சிவபாலனும் அணியத்தில் நின்று தூண்டி போட்டனர். அவர்கள் மீன்பிடிப்பதை வேடிக்கைபார்த்தான் நாதன். இவர்களுக்கு சற்று தூரத்திலே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜலிங்கம். எப்பவும் கலகலப்பாக இருக்கும் ராஜலிங்கம் அமைதியாக இருப்பைத அவதானித்த நாதன் அவரை நோக்கிச் சென்றான்.
‘என்னலிங்கம் அமைதியாக இருக்கிறாய்? எனக் கேட்டபடி ராஜலிங்கத்தின் முதுகில் தட்டினான் நாதன்.
"ஒன்றுமில்லை" எனக் கூறி சிரிக்க முயன்றான் ராஜலிங்கம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
"உனக்கு எத்தினை மணிக்கு வேலை" நாகலிங்கம்
"எனது வேலை கிடக்கட்டும். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்." நாதனின் கேள்விக்கு பதிலளிக்காது கடலை வெறித்தபடி பார்த்தான் ராஜலிங்கம்.
"இந்த இரவிலையும் என்ன புளுக்கம்" என வியர்வையைத் துடைத்தபடி மீன்பிடிப்பவர்களை நோக்கிச் சென்றான் சுந்தரம்.
"எடே சுந்தரம் இங்கைவா", இவன் ராசலிங்கன் உன்ரை ரூம் தானே. உசார் இல்லாமல் இருக்கிறான் என்ன நடந்தது?" நாதன்.
"சுகமில்லை எண்டு பகலும் சாப்பிடேல்லை. வேலைக்கு வரும்வரை படுத்திருந்தவர் வேலைக்கு வரவேண்டாம் என்டனான். சம்பளம் வெட்டிப் போடுவாங்கள் எண்டு தான் வேலைக்கு வந்தவர்" என்று கூறினான் சுந்தரம்.
"லிங்கம் என்ன பிரச்சினை எண்டு சொல்லு. நீ சொன்னால் தான் எங்களாலை எதும் செய்ய முடியும். பிரச்சினையை மனசுக்கை வைச்சிராதை" என்றான் நாதன். நாதனின் வற்புறுத்தலின் பின்னர் கடிதம் ஒன்றைக் கொடுத்தான் ராஜலிங்கம்.
கொடிகாமம்
12.05.1990
என்றும் அன்புள்ளவருக்கு
இத்தனை நாளும் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நான் கண்ணை மூடமுன் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். எனது நோய்க்கு இங்கு வைத்தியம் பார்க்க முடியாது. கொழும்புக்குத் தான் போக வேண்டும். கொழும்புக்குப் போகவழி இல்லை.
இப்படிக்கு
என்றும் உங்கள் மனைவி
மீனாட்சி
கடிதத்தைப் பார்த்த நாதனின் கைகள் நடுங்கின. சிறிது நேரத்தினுள் கப்பல் முழுவதும் செய்தி பரவிவிட்டது. ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய கடிதம் சகலரையும் கலங்கவைத்தது. ராஜலிங்கத்தின் மனைவியின் நோய் சகலரையும் அதிர்ச்சியடை வைத்தது. ராஜலிங்கத்தை வேலை செய்யவிடவில்லை. ராஜலிங்கம் சாப்பிடவில்லை என்பதை அறிந்த நாதன் வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிடவைத்தான்.
"என்னை நெஞ்சளுத்தமடாப்பா உனக்கு. கான்சர் கார மனுசியை தனிச்சுவிட்டிட்டு வந்திருக்கிறாய். நீ ஒண்டுக்கும் யோசிக்காத கொஞ்சம் நித்திரை கொள்ளு விடிய காம்புக்குப் போய் நல்ல முடிவு எடுப்பம்" என்று ஆறுதல் கூறினான் நாதன்.
இரவு வேலை முடிந்து முகாமுக்குச் சென்றதும் நாதன், ஸ்ரீ, சிவபாலன், சுந்தரம் ஆகியோர் முகாம் பொறுப்பதிகாரியுடன் ராஜலிங்கத்தின் பிரச்சினையை பற்றிக் கதைத்தனர். பத்துமணிக்கு தலைமை அலுவலகம் சென்று உரியவர்களுடன் கதைப்போம் என்று கூறினார் பொறுப்பதிகாரி.
தலைமை அலுவலகத்துக்குச் சென்ற வாகனம் வந்ததும் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.
"என்னவாம்? என்ன சொன்னாங்கள்?" ஏக காலத்தில் பலர் ஒரே மாதிரிக் கேட்டனர்.
"எல்லாம் எதிர்பார்த்ததுதான் மூன்று வருடம் நிக்க வேணுமாம். என்ன பிரச்சினை எண்டாலும் போக முடியாதாம். நாங்கள் வாதாடினதாலை ராசலிங்கம் போறதுக்கு அனுமதித்திருக்கிறார்கள். ரிக்கெட் நாங்கள் போடவேணும். ராசலிங்கம் திரும்பி வர முடியாது. நாங்கள் எல்லாரும் காசு போட்டு ராசலிங்கத்தை அனுப்பி வைப்பம். கையிலை காசில்லாட்டிலும் பரவாயில்லை. எவ்வளவு போடப் போறியள் எண்டு சொல்லுங்கோ. நான் வட்டிக்கு வேண்டுறன். சம்பளம் எடுத்துப் போட்டு காசைத் தாங்கோ" என்ற நீண்ட ஒரு பிரசாரம் செய்தான் நாதன்.
சுறுசுறுப்பாக அலுவல்களைப் பார்த்து மூன்று நாட்களில் ராஜலிங்கத்தை அனுப்பி வைத்தார்கள். கைச் செலவுக்கு இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் கொடுத்தார்கள். மனைவிக்கு சத்துணவு, பிள்ளைகளுக்கு உடுப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று ராஜலிங்கத்தைக் குறைவின்றி அனுப்பி வைத்தார்கள். விமான நிலையத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறி விடைபெற்றான் ராஜலிங்கம்.
ராஜலிங்கம் சவ10தியிலிருந்து இலக்கைக்குச் சென்று ஒரு வாரத்தின் பின்னர் ராஜலிங்கத்தின் பெயருக்கு இலங்கையிலிருந்து கடிதம் வந்தது. கடிதத்தைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்றனர் சிலர். உடைத்துப் பார்த்தால் மனைவியின் நிலைமையை அறியலாம் என்றனர் சிலர். நீண்ட வாதப் பிரதிவாதத்தின் பின்னர் கடிதத்தை உடைத்துப் பார்த்தவர்கள். திகைத்து விட்டனர். இப்படியும் நடக்குமா என்று நாதன் அதிர்ச்சியில் உறைந்தான். கடிதத்தைப் பார்த்த மற்றவர்களும் கதி கலங்கிவிட்டனர்.
"என்ன உலகமடா இது அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?" என வாய்விட்டு அரற்றினான் சுந்தரம். ராஜலிங்கத்தின் மனைவி எழுதிய அந்தக் கடிதத்தின் சாராம் சம் சுந்தரத்தின் மனதைக் குடைந்தது.
சண்டை இப்போதைக்கு முடியாது. இந்த மாதம் காணி ஈடுமீளவில்லையெண்டால் அறுதியாகிவிடும். காசுக்கு ஏற்பாடு செய்யுங்கோ என்று கடிதத்தின் வரி;கள் சுந்தரத்தின் மனதில் முள்ளாய்க் குத்தின.
சூரன் ஏ.ரவிவர்மா
யாதும் 2010

No comments: