Thursday, May 24, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 33


கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலின் சதியால் தலைமறைவாக இருக்கும் கணவனைக் காப்பாற்றுவதற்கும் பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சபல புத்தி படைத்த மூன்று முதியவரை மயக்கி பணம் பறிக்கும் இளம் பெண்ணின் கதைதான் ஓடி விளையாடு தாத்தா. 1977ஆம் ஆண்டு வெளியான ஓடி விளையாடு தாத்தா என்ற படம் குலுங்கும் நகைச்சுவை காட்சிகளால் அதிக வருமானத்தை பெற்று தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இலாபத்தைக் கொடுத்தது.
வி.எஸ்.ராகவனின் ஸ்டூடியோவில் முகாமையாளராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் மனைவி ஸ்ரீப்பிரியா. சந்தோசமாக வாழ்ந்து வரும் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடும் ஜெய் கணேஷ். வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் போது பணம் குறைகிறது. ஸ்ரீகாந்த் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்து வருகிறார். அப்போது ஜெய் கணேஷ் பணப்பெட்டியை மாற்றி வைக்கிறார். ஜெய் கணேஷ் வைத்த பணப்பெட்டியில் கள்ள நோட்டு இருந்ததனால் ஸ்ரீகாந்த் மீது திருட்டுப் பழி விழுகிறது. பணத்தைக் கையாடி கள்ள நோட்டைப் புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் ஸ்ரீகாந்த்தைக் துரத்துகிறது.
வங்கியிலிருந்து எடுத்து வந்த பணத்தில் கள்ள நோட்டு எப்படி வந்ததெனத் தெரியாது கள்ள நோட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி தன்னைக் காப்பாற்றும் படி மனைவி ஸ்ரீப்பிரியாவிடம் கூறுகிறார் ஸ்ரீகாந்த். கணவன் மீது விழுந்த திருட்டுப் பழியைத் தீர்ப்பதற்கும் பணத் தேவையைப் பூர்த்தி செய்யவும் தன் மீது ஜொள்ளுவிடும் மூன்று முதியவர்களை வளைத்துப் போடத்திட்டமிடுகிறார் ஸ்ரீப்பிரியா. சபலபுத்தியுடன் அலையும் வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூன்று பணக்கார முதியவர்களையும் தன் வலையில் விழுத்துகிறார் ஸ்ரீப்பிரியா. மூவரையும் தனித்தனி இடங்களில் தங்க வைத்து அவர்களுடன் குடும்பம் நடத்துவது போல் நடிக்கிறார். மூன்று முதியவர்களும் தாராளமாக பணத்தை வாரி இறைக்கின்றனர். இரவிலே வீட்டுக்கு வந்து போகும் கணவன் ஸ்ரீகாந்த்துடன் எதிர்காலம் பற்றி திட்டமிடுகிறார் ஸ்ரீப்பிரியா.
ஸ்ரீப்பிரியா கர்ப்பமாகிறாள். ஸ்ரீப்பிரியாவின் கர்ப்பத்துக்கு நீங்கள்தான் காரணம் என்று வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரிடமும் கூறுகிறாள் ஸ்ரீப்பிரியா. குடும்பம் நடத்தாமலே அப்பாவானதை அறிந்த மூன்று முதியவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குழந்தையைக் காரணம் காட்டி அதிக பணத்தைப் பெற முயற்சி செய்கிறாள் ஸ்ரீப்பிரியா. இதற்கிடையில் கள்ள நோட்டுக் கும்பல் பிடிபடுகிறது. ஸ்ரீகாந்த் மீது விழுந்த திருட்டுப்பட்டம் துடைக்கப்படுகிறது. வி.கே.ராமசாமி , எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரையும் ஏமாற்றிய உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்கும் ஸ்ரீப்பிரியா அவர்கள் மூவரிடமும் மோசடியாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாள்.
ஸ்ரீகாந்த் ஸ்ரீப்பிரியா, வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் , காந்திமதி, மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், ஜெய்க@ணஷ், வி.எஸ்.ராகவன் ஆகியோர் நடித்தனர். இளையராஜாவும் @வதாவும் இணைந்து இசை அமைத்தனர். கதை வசனம் எழுதி இயக்கியவர் வேலு.
முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய ஸ்ரீப்பிரியாவின் வாழ்வில் மூன்றாண்டுகளின் பின் வெளிவந்த படம் ஓடி விளையாடு தாத்தா. பணக்கார முதியவர்களை மயக்கும் கவர்ச்சிகரமான வேடத்தில் துணிச்சலுடன் நடித்தார். ஸ்ரீப்பிரியாவின் கவர்ச்சியான நடிப்பைக்காண தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.
ஸ்ரீப்பிரியாவின் கவர்ச்சியில் மயங்கிய முதியவர்களாக நடித்த வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரும் தோன்றும் காட்சிகள் தியேட்டரைக் கலகலப்பாக்கின.
ரமணி
மித்திரன்20/05/12

No comments: