Sunday, May 20, 2012

அசுர பலத்துடன் ஜெயலலிதாஆதரிப்பாரின்றி விஜயகாந்த்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் ஒதுங்கி இருக்கும் நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துத் தனது கட்சி வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இரு முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வையால் தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்கும் விஜயகாந்த் இன்று ஜெயலலிதாவைத் தனித்து நின்று எதிர்க்க துணிந்துவிட்டார்.
இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைவதுண்டு. ஆட்சி அதிகாரம் அரச இயந்திரம் அனைத்தும் முடக்கி விடப்படுவதால் எதிர்க்கட்சி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது முயற்கொம்பாகவே அமையும். திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகமும் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெற்ற திருச்சி மேற்கு சங்கரன் கோயில் ஆகிய இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றி பெற்றது. கூட்டணி தர்மத்தின்படி  புதுக்கோட்டைத் தொகுதியை மாக்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
தமிழகத் தேர்தல் முடிந்ததும் கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவினால் ஓரம் கட்டப்பட்டனர். தமிழகத்தின் செல்வாக்கு இல்லாத கட்சித் தலைவர்களைத் தன் அருகில் வைத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அவமானப்படுத்துவதைப் பொறுக்க முடியாத விஜயகாந்தும் மாக்சிஸ்ட் கட்சி தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி முறிவடைந்த நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தனது வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறார் விஜயகாந்த்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் வேட்பாளரக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கும்.  ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்குவது சந்@தக@ம.  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததினால் பொது வேட்பாளர் என்பது பேச்சளவிலேயே நின்று விட்டது.
விஜயகாந்தும் கருணாநிதியும் மனம் விட்டுப் பேசி இருந்தால் புதுக்கோட்டையில் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்க முடியும். இருவருக்கும் இடையேயான கௌரவப் பிரச்சினையால் அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசினார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியாகச் செயல்பட்ட வடிவேல் விஜயகாந்தைத் தரக்குறைவாகப் பேசினார்.
இந்த நிலையில் யார் முதலில் இறங்கி வருவதென்ற போலி கௌரவத்தினால் பொது வேட்பாளர் அடிபட்டுப் போய்விட்டது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும்படி விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுத்தால் எதுவித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார் கருணாநிதி. ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் விஜயகாந்தின் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் பொது வேட்பாளர் போன்றே களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆதரவு வழங்குவதாக கருணாநிதி, வைகோ டாக்டர் ராமதாஸ் திருமாவளவன் போன்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சியின் பின்னர் நடைபெறப் போகும் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சர்ச்சை, முல்லை பெரியாறு விவகாரம், தமிழகத்தில் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளையும் தாண்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார் ஜெயலலிதா.
தமிழக எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னந்தனியாக புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தேர்தல் தோல்வி என்பது விஜயகாந்துக்குப் புதிதல்ல. தோல்வி உறுதி என்று தெரிந்து கொண்டே தேர்தலைச் சந்திப்பவர் விஜயகாந்த். புதுக்கோட்டையிலும் அப்படி ஒரு நிலை ஏற்படச் சந்தர்ப்பம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது புதுக்கோட்டையில் போட்டியிட்ட பெரியண்ணன் மூவாயிரம் வாக்குகளினால் தோல்வியடைந்தார். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறியிருந்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் போலிக் கௌரவத்தினால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா தயாராகி விட்டார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு20/05/12

No comments: