Saturday, October 7, 2023

எகிறிய எடப்பாடி அடங்கிய அண்ணாமலை

தமிழக  அரசியலில் யாருக்கும் அடங்காத காளையாகப் பவனி வந்த அண்ணாமலையை எடப்பாடியின்  முடிவு அடக்கி ஒடுக்கி  விட்டது. தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள்  தலையாட்டி பொம்மையாக இருப்பதே நடைமுறையில் உள்ளது. அதனை மாற்ரி அமைக்கப் போவதாக சபதம் எடுத்த அண்ணாமலை அடங்கி ஒடுங்கிவிட்டார்.

தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  மட்டும் எதிர்க்காது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்த்து அரசியல் செய்யத்  தொடங்கினார் அண்ணாமலை. டெல்லித் தலைவர்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த் தலைவர்கள் செய்த முறைப்பாடுகள் அனைத்தும் நீர்த்துப்போயின.

ஆட்சியைத் தக்க வைப்பதற்காக  பாரதீய ஜனதாவைத் தூகிச் சுமந்த எடப்பாடி ஆட்சியைப் பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவை தொப்பெனப் போட்டு விட்டார்.

பாரதீய ஜனதாவுடனான  கூட்டணி முறிவுக்கு  வந்து விட்டதென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்ததை  ஏனைய கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் நாடகம் என வர்ணித்தனர். பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி சேர்ந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை எடப்பாடி நன்கு  உணர்ந்துள்ளார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் தேர்தலில்  வெற்றி பெற முடியாது என்பதை காலம் தாழ்த்தி பாரதீய ஜனதாத் தலைவர்கள் தெரிந்து கொண்டனர்.

 பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதால்   உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் சரியில்லை. அண்ணாமலை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக   மறைந்த தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். அவரின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்,  பாரதீய ஜனதாக்  கூட்டணியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவால் டெல்லித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கூட்டணியைத் தொடருவதற்கான முயற்சிகளை டெல்லித் தலைமை மேற்கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம்  இருந்து சாதகமான  முடிவு கிடைக்கவில்லை. டெல்லிக்கு வருமாறு அண்ணாமலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.  டெல்லியில்   அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார்.

பின்னர்   தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்த அண்ணாமலை தனது  தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தினார்.    பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரின் இல்லத்தில் சந்தித்திருதார் அண்ணாமலை.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  முறிந்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை சொன்ன   பதில்களில் தேசியத் தலைமைக்கு திருப்தியில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

 தமிழ்நாடுட்டு  நிலைமை  குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகில இந்தியத் தலைமையிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி சேர்வதையே பாரதீய ஜனதாத் தலைவர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முடிவு பற்றி பாரதீய ஜனதா நிர்வகிகள் எவரும்  வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று தேசியத் தலைமை அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.  டெல்லித் தலைவர்கள்  முடிவு எதையும் எடுக்காத நிலையில், அண்ணாமலையிடம் வாயைத் திறக்கக் கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாரதீய ஜனதாத் தலைவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார். அந்த ஆலோசனையின் முடிவில் நிர்மலா சீதாராமனும் ஒரு ரிப்போர்டை தயார் செய்தார். தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா  எவ்வளவு வலுவாக இருக்கிறது. கட்சியின்  உண்மையான பலம் என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனியாக நிற்கும் பட்சத்தில் வாக்கு வங்கி எப்படி இருக்கும்? பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்தால் யாரெல்லாம் கூட்டணியில் இணைவார்கள் என்று ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்து உள்ளாராம். இதை டெல்லியிடமும் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் நடைபயணம் இன்னொரு பக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம்திக தி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலைக்கு  சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருக்கு சளி தொல்லை, அழற்சி இருப்பது சிடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை  ஒய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்கள்  அறிவுறுத்தியுள்ளனர்.  இந்த நிலையில்,பாரதீய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலையே தொடங்கியது, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதாவுகு பயங்கா அடி விழுந்துள்ளது.தமிழ்நாட்டில்   திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களைக் கைப்பற்றும்; அதிமுக 6 இடங்களில் வெல்லும் என   கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்த கட்சிகள் இரு அணிகளும் மாறி மாறி இடம் பிடிக்கும். திமுக கூட்டணியில் எந்த ஒரு பிளவுக்கும் சாத்தியமில்லாத நிலைமைதான் உள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியை முறித்ததால் அதிமுக, முஸ்லிம்கள் வாக்குகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India TV-CNX கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.

 தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் திமுக கூட்டணி 28 இடங்கள் திமுக 21 இடங்கள் காங்கிரஸ் 7 இடங்கள் அதிமுக 6 இடங்கள் பாமக -1 இதர கட்சிகள் 4 மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பு. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்: திமுக 31% அதிமுக 25% காங்கிரஸ்- 11 % பாஜக- 7% பாமக -6% இதர கட்சிகள்- 20% சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பில், திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கு 0 முதல் 1 எனவும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவித்திருந்தன. அதாவது திமுக தலைமையிலான "இந்தியா" கூட்டணிக்கு மொத்தம் 30 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என்பது டைம்ஸ் நவ் கருத்து கணிப்பாக இருந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி - 57.20%; (அதிமுக பிளஸ்) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 27.80% இதர கட்சிகள் 15.00%. வாக்குகளைப் பெறும் என்று Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி தொடர் வாய்ப்புகள்  மிகவும்  குறைவாகவே உள்ளன.

No comments: