Saturday, April 25, 2026

தமிழகத் தேர்தலில் வ‌ரலாறு காணாத வாக்குப் பதிவு குழப்பமடையும் கருத்துக் கணிப்பு

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் அதிகரித்த வாக்குப்  பதிவு

5 பேர் மட்டுமே வாக்களித்த வாக்கு சாவடி... தேர்தலை புறக்கணித்த ஆற்றுப்படுகை கிராம மக்கள்

அசத்தும் அசாம் மம்தா பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி

 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவீதம் வரலாறு  காணாத வகையில் அதிகரித்ததால்  பெரும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. வாக்கு சத விகிதம் அதிகரித்தால் ஆளும் கட்சிக்கு ஆபத்து என்பதே பொதுவான கருத்தாகும். தமிழகத்தைப்போலவே அசாமில் நடந்த முதல் கட்ட சட்டசபைத்தேர்தலில் 92 சத விகித வாக்கு பதிவாகி உள்ளது.

 தமிழகத்தில் வாக்குப் பதுவு அதிகரிப்புக்கு விஜய் காரணம் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அசாமில் விஜய் போல் ஒருவர் தேர்தலில் களம் இறங்கவில்லை. வாகாளர் மறு சீரமைப்பே அதிகரித்த வாக்கும் பதிவுக்குக் காரணம் என சிலர் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்  சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் வேட்பாளர்களுக்காக  மக்கள் வாக்களித்தனர்.

காலை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி 84.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஸ்ஐஆர் செயல்பாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், பொதுமக்கள் தன்னெழுச்சியாக வாக்களிக்க படையாக திரண்டு சென்றதாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.


இந்த சூழலில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை நெருங்கியது.

  கரூர் - 92 சதவீதம்,சேலம் - 90 சதவீதம்,.தர்மபுரி - 90 சதவீதம்,.  ஈரோடு - 90 சதவீதம்,. நாமக்கல் - 89 சதவீதம்  .தொகுதி வாரியாக தமிழ்நாட்டிலே அதிகமாக வீரபாண்டி தொகுதியில் 93.43 சதவீதம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் தொகுதியில் 93.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 92 சதவீதமும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 92 சதவீதமும், குளித்தலை தொகுதியில் 92 சதவீதமும், பாலக்கோட்டில் 92 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொங்கு மண்டலமான நீலகிரிக்கும் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் போதிய  பஸ் வசதிகள் இல்லாததால் அவர்களால் தக்க சமயத்தில் வாக்களிக்கச் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகிறது.

6 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளாக குளச்சல், காரைக்குடி, மதுரை மத்திய தொகுதி, மதுரை வடக்கு, கிளியூர், பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகள் அமைந்துள்ளது.

6 மணி நிலவரப்படி முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு..ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 86 சதவீதமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 91 சதவீதமும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 73 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 89 சதவீதமும், திருச்சி கிழக்கு 81.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணிக்கு முன்பாக வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 6 மணியை கடந்தும் வாக்களித்தனர்.

"அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்திற்கு எதற்கு தேர்தல்?" என்ற கேள்வியோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர் பகுதி மக்கள்  சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். சாலை ,குடிநீர் வசதி கோரி தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி அவர்கள் நடத்திய போராட்டம் மாவட்ட நிர்வாகத்திடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் அமைந்துள்ள குக்கிராமம் முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர். இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 98 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் இயற்கைச் சூழலில் அமைந்திருந்தாலும், நவீன காலத்தின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவை இன்றும் இந்த கிராமத்திற்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

கடந்த பல பத்தாண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும் இப்பகுதி மக்கள் அரசியல் கட்சியினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஒரே கோரிக்கையைத்தான் முன்வைத்து வருகின்றனர். "மழைக்காலங்களில் ஊருக்குள் செல்ல முறையான சாலை இல்லை; அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை நீடிக்கிறது. ஆற்றுப்பகுதியில் வசித்தாலும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை" என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டு.

ஒவ்வொரு முறையும் "தேர்தல் முடிந்ததும் செய்து தருகிறோம்" என்று வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு இக்கிராமத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என மக்கள் குமுறுகின்றனர். இந்த முறை வெற்று வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லாத கிராம மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

 காலை தேர்தல் தொடங்கியபோது, முதலை மேடு திட்டு கிராமத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் , பாதுகாப்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தபோதிலும், வாக்களிக்க ஒருவர் கூட வரவில்லை. அதிகாரிகளின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளுக்குப் பலனாக 5 பேர் மட்டுமே வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அவர்களைத் தவிர மற்ற 93 வாக்காளர்களும் வாக்குச்சாவடி பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

தேர்தலை புறக்கணித்தது மட்டுமின்றி, அண்ணாமலை நகர் பகுதி மக்கள் தங்களது வீடுகளின் கூரைகளிலும், தெருக்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டித் தொங்கவிட்டனர். பின்னர், ஊரின் பொது இடத்தில் ஒன்று திரண்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கறுப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். "சாலை வசதி உடனே வேண்டும்", "குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்து" போன்ற வாசகங்கள் அடங்கிய பிளக்கார்டுகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், "நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களாக மதிக்கப்பட வேண்டுமென்றால், மற்ற ஊர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும். சாலை இல்லாததால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அரசு அதிகாரிகள் நேரில் வந்து எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என ஆவேசமாகத் தெரிவித்தனர்.

சீர்காழி தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், ஒரு குறிப்பிட்ட கிராமமே ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளது வேட்பாளர்கள் ,அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டிய மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காக இத்தகைய முடிவை எடுத்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை வாக்குப்பதிவு முடியும் வரை இக்கிராமத்தில் இருந்து மேலதிகமாக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால், முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர் பகுதியில் மிகக்குறைந்த அளவிலான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது. தேர்தல் நாளில் ஒரு குக்கிராமமே திரண்டு நின்று நடத்திய இந்தப் போராட்டம், ஆட்சியாளர்களுக்கு மக்கள் விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப் வ்வ்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மேற்கு வங்கம். ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த 2011ல் அந்த கோட்டையை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைத்தது. 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் 'ஹட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி 3 முறை தொடர்ந்து முதல்வராகி உள்ளார்.

 இப்போது 4வது முறையாக முதல்வராகும் முனைப்பில் தேர்தலை சந்திக்கிறார். 152 தொகுதிகளில்  தேர்தல் தமிழகத்தை போல்   மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

ஆட்சி அமைக்க‌ 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில்   முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் திகதி 142 தொகுதிகளில் நடைபெறுகிறது.

16 மாவட்டங்களில் 152 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.. இதில் 103 தொகுதிகள் பொதுத்தொகுதிகளாகும். 34 தொகுதிகளில் தலித் மக்களுக்கான தனித்தொகுதியாகும். 15 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கான தனித்தொகுதிகளாக உள்ளன. இந்த தொகுதிகளில்  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

இந்த முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள் ,465 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

 வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ்   பா... ஆகியவற்றுக்கு  இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற்றது.   முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் சட்டசபை தொகுதி, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹராம்பூர்தொகுதிகளி தேர்தல் நடைபெற்றது. இதில் நந்திகிராம் சட்டசபை தேர்தலில் கடந்த 2021 ம் ஆண்டில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி வீழ்த்தியிருந்தார். இந்த முறை சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி களமிறங்கவில்லை.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்கட்சியாக உள்ள பாஜக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பாரதியா கேர்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது. மாறாக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பார்வர்ட் பிளாக், புரட்சிகர இந்திய கம்யூனிஸ்ட், அனைத்திந்திய பார்வர்ட் பிளாக், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் உள்ளன. இவர்கள் தவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன.

இத்தனை கூட்டணிகள் இருந்தாலும் நேரடி போட்டி என்பது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காஙகிரஸ் - பாஜக இடையே தான் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. ஐஎஸ்எப் எனும் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் தோற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 ரமணி,

26/4/26 

 

 

 

 

No comments: