Sunday, December 11, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 16



புற்றுநோய் காரணமாக மரணமடையும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர் தான் இறந்ததும் மறுமனம் செய்யும்படிபடி மனைவியிடம் கூறுகிறார். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ச‌வால் விட்ட திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.
தேவிகாவும் கல்யாண்குமாரும் காதலர்கள் ச‌ந்தர்ப்பவச‌த்தால் இருவரும் பிரிந்து விடுகின்றார்கள். தேதவிகா முத்துராமனை திருமணம் செய்கிறார். முத்துராமனுக்கு புற்றுநோய் என்று தெரியவருகின்றது. முத்துராமனின் புற்றுநோயைத்தீர்க்க அதில் நிபுணத்துவம் பெற்ற பல வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார் தேவிகா. தேவிகா தேடிச் சென்ற வைத்தியர் தேவிகாவின் காதலர் கல்யாண்குமார். தனது முன்னாள் காதலியின் கணவனுக்கு புற்றுநோய் என்பதை அறிந்த டாக்டர் கல்யாண்குமார் துடிக்கிறார். புற்றுநோயை குணப்படுத்தி முத்துராமனை காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறார்.
நோய் பற்றி நன்கு அறிந்த முத்துராமன் தான் நீண்ட காலம் உயிர் வாழப்@பாவதில்லை என்று நினைக்கிறார். தன் மனைவி தேவிகாவும் தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கல்யாண்குமாரும் காதலர்கள் என்ற உண்மை முத்துராமனுக்குத் தெரியவருகிறது. தான் இறந்த பின் விதவையாக இருக்கக்கூடாது மறு மணம் செய்ய வேண்டும் என்று தேவிகாவுக்குக் கூறுகிறார் முத்துராமன். இரவு பகலாக ஆராய்ச்சி செய்து முத்துராமனை காப்பாற்றிய பின் உயிரிழக்கிறார் கல்யாண்குமார்.
1961 ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தைப்பற்றிய விமர்ச‌னங்கள் பரப்பரப்பாக இருந்தாலும் தமிழ்க் கலாசாரத்துக்கு ச‌வால்விடும் முக்கோணக் காதல் கதையை ச‌ற்றும் பிச‌ங்காது வெற்றிகரமாக முடித்தார் ஸ்ரீதர். முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார், நாகேஷ், குட்டி பத்மினி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். இசை, மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ராமமூர்த்தி. பாடல்கள், கவியரசு கண்ணதாச‌ன். ஒளிப்பதிவு வின்செட். கதை, வச‌னம், டைரக்ஷன் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா இப்படத்தை தயாரித்தது.
நெஞ்சில் ஓர் ஆலயம் 14 நாட்களில் படமாக்கப்பட்டது. முக்கோண காதல் கதையை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தார் ஸ்ரீதர். தான் இறக்கபோவது உறுதி என நம்பிய முத்துராமன் தேவிகாவை மணப்பெண் அலங்காரத்தில் பார்க்க ஆசைப்படுகிறார். முத்துராமனின் ஆசைப்படி மணப்பெண் அலங்காரத்தில் தேவிகாபாடிய‌ சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே என்ற பாடல் காட்சியை பார்த்து கலங்காதவர்கள் இல்லை. இப்படக் கதையையும் தேவிகாவின் மன நிலையையும் ஒன்று சேர பாடலாக்கியிருந்தார் கவியரசு கண்ணதாச‌ன். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்குப் பாடல் எழுதுவதற்கு கண்ணதாச‌ன் கால தாமதம் செய்ததனால் கோபித்துக் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாச‌னுடன் வேலை செய்ய முடியாது என்று கூறியதை அறிந்ததினால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதற்காகவே சொன்னது நீதானா என்ற வரியுடன் ஆரம்பித்தார் கண்ணதாச‌ன்.அந்தப்பாடல் வரிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதாகவே அமைந்தது.
கல்யாண்குமாருக்காக ஏ.எல்.ராகவன் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க முத்துராமனுக்காக பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய பாடல்களும் படத்தின் கதையை ஒட்டியே எழுதப்பட்டன. முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ என்ற ச‌ந்தோஷப் பாடலில் மகிழ வைத்த குட்டி பத்மினி முத்தான முத்தல்லவோ என்ற சோகப்பாடலில் கலங்க வைத்தார். துள்ளிவரும் மான்குட்டி, என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம் ஆகிய பாடல்களும் இன்றும் மனதைவிட்டகலாதவை.
படம் முழுக்க சோகம் இழையோடி இருந்தாலும் வாட் போயாக வரும் நாகேகஷ் கலகலப்பூட்டுகிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கல்யாண்குமார் அணிந்த கொலர் இல்லாத ச‌ட்டை அக்காலத்தில் பஷனாகியது. தமிழில் பெரும் வெற்றிபெற்ற நெஞ்சில் ஓர் ஆலயம். திலரக் மந்திரம்என்ற‌ பெயரில்ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்றது. ராஜேந்திரகுமார் ராஜ்குமார் மீனாகுமார் ஆகியோருடன் குட்டிபத்மினி நடித்தார்.
ரமணி



மித்திரன்11/12/11

1 comment:

rishvan said...

புதிய தகவல்.. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.