Monday, December 12, 2011

கொந்தளிக்கிறது தமிழகம் குழி பறிக்கிறது கேரளா

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்துள்ளது. அந்த அணை எந்த நேரத்திலும் உடைந்து கேரளாக் கிராமங்கள் நீரில் மூழ்கி விடலாம் என்ற கேரள அரசியல்வாதிகளின் பிரசாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. கேரள அரசு கூறுவதுபோல் பூகம்பம் வந்தாலும் அணைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழகம் அடித்துக் கூறி வருகிறது.
முல்லைப்பெரியாறு சம்பந்தமான பிரச்சினையில் தமிழகமும் கேரளாவும் நீதிமன்றத்தை நாடின. மேல் நீதிமன்றம்வரை சென்ற இந்த வழக்கில் தமிழகத்துக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்தது கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்த நடவடிக்கையையும் கேரள அரசு செய்யவில்லை. நீறுபூத்த நெருப்பாக இருந்த முல்லைப்பெரியாறு பிரச்சினை டாம் 999 என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அணை உடைந்து கிராமங்களுக்குள் நீர் செல்வதனால் ஏற்படும் பின் விளைவுகளைச் சித்தரிக்கும் இப்படம் முல்லைப்பெரியாறு அணை வலுவில்லாதது என்பதைக் கூறுவதாகத் தமிழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவில் அணை ஒன்று உடைந்தபோது நடைபெற்ற அவலங்களைத் தான் படமாக்கி இருக்கிறேன். தமிழகத்தைப் பற்றியோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ படத்தில் ஒரு கருத்தும் கூறவில்லை என்கிறார் இயக்குனர். தமிழகம் பற்றியும் முல்லைப் பெரியாறு பற்றியும் அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அவர் இயக்கிய படம் முல்லைப்பெரியாறு பற்றித்தான் என்பது வெளிப்படையானது.
தமிழக கர்நாடக எல்லைகளான தேனி, போடி ஆகியவற்றில் பதற்ற நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் விரட்டப்பட்டனர். கேரள பகுதிக்குக் கூலி வேலைக்குச் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கேரளாவில் இருந்து தமிழகம் சென்றவர்களும் லொறிகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மக்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் தமிழக எல்லையில் விடுக்கப்படவில்லை. தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் உள்ளனர். அதேபோன்று கேரளக் கட்சிகளும் ஒரு அணியாக உள்ளன. தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸாரும் இடது சாரிகளும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இரட்டை வேடமிடுகின்றன. தமிழக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தமிழக அரசுக்கும் கேரள காங்கிரஸாரும் இடதுசாரிகளும் கேரள அரசுக்கும் ஆதரவாகச் செயற்படுகின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு தன்னிச்சையாகச் செயற்படும் கேரள அரசைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் உள்ளது மத்திய அரசு. இந்த விவகõரத்திற்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் அதளபாதாளத்தில் வீழ்ந்துவிடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் முன்வராத நிலை ஏற்படும்.


ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானதும் கருணாநிதி, ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கு எதிராக ஏதாவது ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2001ஆம் ஆண்டு கருணாநிதியையும் ஸ்டாலினையும் ஊழல் புகாரில் கைது செய்து ஊழல் புகார் நிரூபிக்கப்படாமையினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆகையினால் வலுவான ஆதாரமின்றி அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஸ்டாலினைச் சீண்டிப் பார்க்க முனைந்த சிலர் ஸ்டாலின் மீது புகார் கொடுத்தனர்.
ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தனது வீட்டை மிரட்டி வாங்கியதாக சேஷாத்திரிகுமார் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். தமிழக அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த புகாரை பொலிஸார் ஏற்க மறுத்தனர். அவர் நீதிமன்றத்தை நாடினார். அமைச்சர் மீதான புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகையினால் ஸ்டாலின் மீதான புகாரை மேலிடத்து அனுமதி இன்றி பொலிஸார் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள். தனக்கு எதிரான குற்றச்சாட்டை தனக்குச் சாதகமாக்கியுள்ளார் ஸ்டாலின்.
அரசியல்வாதிகள் மீது பொலிஸில் புகார் செய்யப்பட்டால் முன் பிணை பெறுவது அல்லது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதே வழமையானதாகும். ஸ்டாலின் அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டுள்ளார். தன் மீது புகார் செய்ப்பட்டதும் பொலிஸ் உயர் அதிகாரியைச் சந்தித்து தன்னைக் கைது செய்யும்படி வலியுறுத்தினார். ஸ்டாலினின் வேண்டுகோளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்பிணை வாங்க மாட்டேன். நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவேன். வழக்கை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடமாட்டேன் என்ற ஸ்டாலினின் வார்த்தைகள் ஜெயலலிதாவுக்கு சாட்டை அடியாக விழுந்தன.
கொடநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை இன்னொருவரின் பெயரில் ஜெயலலிதா அபகரித்துள்ளார். இதற்கு சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பையே ஜெயலலிதா தட்டிக் கழித்தார் என்பதையும் ஸ்டாலின் நினைவூட்டினார். ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி அறிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு வைத்த பொறியில் தமிழக அரசு சிக்கியுள்ளது.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு11/12//11



1 comment:

rishvan said...

மக்களூக்கு விழிப்பணர்ச்சி வேண்டும்.... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.