Friday, March 11, 2016

விளையாட்டை விபரீதமாக்கும் கிரிக்கெற் ரசிகர்கள்

கனவான் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெற்றின் தீவிர ரசிகர்கள் எதிரணியை மிக மோசமாக சித்திரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.  இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெறும் ஆஷஸ்  கிண்ணப் போட்டி இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போராக ரசிகர்களினால் பர்க்கப்படுகிறது. ஊடகங்களும் தமது பங்குக்கு இதனை பெரிதுபடுத்தி தோல்வியடையும் தமது நாட்டை அவமானப்படுத்துகின்றன. இந்திய பாகிஸ்தான் ரசிகர்களும் தோல்வியை ஜீரணிக்க முடியாது  தீவிர வெறியர்களாக மாறி தமது நம்பிக்கை நட்சத்திரத்தை பொசுக்குகின்றனர்.

சகல போட்டிகளிலும் தமது நாடு வெற்றி பெறும் என்று   அதீத நம்பிக்கையுடன் இருக்கும் ரசிகனால் தோல்வியை சகிக்க முடிவதில்லை. வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற மனப்பாங்கு சில ரசிகர்களிடம்  இல்லை. இதன் விளைவால் தாம் நம்பி இருந்த  விளையாட்டு வீரனின் வீட்டுக்கு கல் எறிவது,  அவரின் படத்தை எரிப்பது போன்றவற்றால் ரசிகன் திருப்தியடைகிறான். அடுத்த போட்டியில் தனது நாடு வெற்றி பெற்றதும் உற்சாகத்தில் மிதக்கிறான். தோல்வியினால் ஏற்பட்ட  கறை என்றைக்குமே மாறுவதில்லை என்பதை ரசிகர்கள் உணர்வதில்லை.
வெறிபிடித்த ரசிகர்களின் பட்டியலில் பங்களாதேஷ் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.  கிரிக்கெற் விளையாட ஆரம்பித்த காலத்தில் எல்லாப் போட்டிகளிலும் தோல்வியடைந்த  பங்களாதேஷ் ஒருசில போட்டிகளில் பலமான அணிகளை வென்று அதிர்ச்சியளித்தது. இன்று பலம் மிக்க அணியாக எதிரணிகளுக்கு சவால் விடும் அணியாக மிளிர்கிறது. பாகிஸ்தானை தமது    எதிர் நாடக கருதிய பங்களாதேஷ் ரசிகர்கள் இந்தியாவையும் விரோதியாக கருதத் தொடங்கி விட்டனர்.


 அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம்  தோல்வியடைந்ததை  பங்களைதேஷ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நடுவர் செய்த சதியால் இந்தியா வெற்றி பெற்றது என்பதே அவர்களின் நிலைப்பாடு. உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர் பங்களாதேஷுக்குச் சென்ற இந்தியா தோல்வியடைந்தது. இதனால் இந்தியாவைப் பழிவாங்கிவிட்டதாக  பங்களாதேஷ் ரசிகர்கள் திருப்பியடைந்தனர் .  பங்களாதேஷ்  பழிவாங்கிவிட்டதாகக்  கருதிய இந்திய ரசிகர்கள் தமக்கொரு சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தனர்.  ஆசியக் கிண்ணப்போட்டி ஒன்றுக்கு இரண்டு சந்தர்பங்களை இந்திய ரசிகர்களுக்குக் கொடுத்தது.  பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பங்களதேஸும்  ஒரே பிரிவில் இருந்தன. முதலாவது போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
 ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் உற்சாகப்படுத்தினர். இந்தியா துடுப்பெடுத்தாடும் போது மைதானத்தில் மரண அமைதி நிலவியது. தோல்வியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கிரிக்கெற்றில் பலம் மிக்க பாகிஸ்தான்,இலங்கை ஆகியவற்றை பங்களாதேஷ் வீழ்த்தியதால் இந்தியாவையும்  வென்று ஆசியக் கிண்ணத்தை பெறலாம் என்ற அதீத நம்பிக்கை பங்களாதேஷ் ரசிகர்களிடம் இருந்தது.  விபரீத எண்ணம் கொண்ட ரசிகர் ஒருவர் டோனியின் தலையை கையில் வைத்திருக்கும் பங்களாதேஷ் வீரரின் படத்தை உருமாற்றி வெளியிட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இந்திய ரசிகர்கள் இறுதிப் போட்டிவரை காத்திருந்தனர். ஆசியக் கிண்ணத்தை இந்தியா வென்றதும் மீம்ஸ்களால்   பங்களாதேஷை வறுத்தெடுத்தனர். வியாளையாட்டின் வெற்றி தோல்வியை  மைதானத்தில் விட்டு  விட வேண்டும் என்ற பண்பு ரசிகர்களிடம் இல்லை.

இலங்கை கிரிக்கெற்றில் பிரகாசிக்காத காலத்தில் அங்குள்ள ரசிகர்கள் தமக்கு விருப்பமான நாடுகளை ஆதரித்தனர். இலங்கை அணி சாதிக்கத் தொடங்கியதும் அங்குள்ள  ரசிகர்கள் பிரியத்தொடங்கினர். சிங்கள ரசிகர்கள் இலங்கை வீரர்களை  ஆதரித்தனர். தமிழர்களில் அதிகமானோர் இந்தியாவை நேசித்தனர். சிலர்  தாய்நாடு என்ற ரோசத்தில் இலங்கைக்கு அதரவு வழங்கினர். முஸ்லிம்கள் பாகிஸ்தானின் பக்கம் பார்வையை செலுத்தினர். இலங்கை, இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் மோதும் போது அங்குள்ள ரசிகர்கள் இரண்டு  பிரிவாகிவிடுவர்கள்.
  
 பழிவாங்கும் ரசிகர்களுக்கான இன்னொரு சந்தர்ப்பத்தை 20ரி  உலகக் கிண்ணப் போட்டி கொடுத்துள்ளது. இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒரே போரிவில் உள்ளன. தகுதிப் போட்டியில் விளையாடும் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.  பங்களாதேஷ் வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ள பிரிவில் விளையாட வேண்டும் .ரி 20 உலகக் கிண்ணப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய ரசிகர்களின் செல்வாக்கு அதிகமாக் இருக்கும்.

 விளையாட்டுப் போட்டி பற்றி செய்தியை வெளியிடும் ஊடகங்களும் தம் பங்குக்கு பழிவாங்கியது,பந்தாடியது, சுருட்டியது என மகுடமிட்டு குரோதத்தை ஊக்குவிக்கின்றன. வடக்கின்  போர் என மகுடமிடப்பட்ட கிரிக்கெற் போட்டி ஒரு கொலையுடன் முடங்கியது.

தோல்வியடைந்த அணி  வீரர்கள் தோல்வியை மறந்து அடுத்த போட்டிக்குத் தயாராகிவிடுவர்கள். தொல்வியைச் சகிக்க முடியாத ரசிகர்கள் பழிவாங்குவதற்காக அடுத்த போட்டியில் வெற்றி பெறும்வரை காத்திருப்பார்கள்.
வர்மா
துளியம்.கொம்
 11/03/16

No comments: