தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 2,401 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, அமைச்சர் மகேஷ் குற்றம்சாட்டி உள்ளார். இது தமிழ்கத்தின் பேசு பொருளாக மாறியுள்ளது. கட்சி சார்பற்று அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், 2018ல் இருந்து செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு 60; மாநில அரசு, 40 சதவீத நிதியை பகிர்வு முறையில் விடுவிக்கின்றன. கடந்த 2023 -- 2024ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு, 3,533 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், இரண்டு தவணைகளை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது. மூன்றாம் தவணையை, பி.எம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தான் ஒதுக்க முடியும் என்று மிரட்டுகிறது.
அத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளது. அதை ஏற்றால், தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்ட போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் இல்லாத நிலையில், நிதியை நிறுத்தக்கூடாது என, கடிதம் எழுதிய நிலையில், கடந்தாண்டுக்கான நிதியையும், இந்தாண்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியையும், மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய அரசின் புள்ளி விபரப்படி, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், 17,632.41 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதனால், தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற, கடந்தாண்டுக்கு ஒதுக்கப்பட்ட, 249 கோடி ரூபாய் மற்றும் இந்தாண்டுக்கான, 2,152 கோடி ரூபாய் என மொத்தம், 2,401 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி சமக்ரசிக்ஷா என்ற திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 1ஆம் திகதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியது.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலினும் ஏனைய அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்மொழிகையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதனால் பலரும் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதே சமயத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் எனவும் திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதால் தான் தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்கு கொள்கைகளின் காரணமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றமடைந்துள்ளதாக கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 1 திகதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது.90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள் என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். .
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ,அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன் ,பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,தவெக தலைவர் விஜய், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கடுமையானதொனியில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகிய இருவரும் கட்சிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக மக்கள் ,மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்
ரமணி
23/2/25
No comments:
Post a Comment