Friday, November 23, 2018

அதிமுகவின் அரசியலால் தலைகுனிந்த நீதி தேவதை


கோவை வேளாங்கண்ணி மாணவிகளை பஸ்ஸினுள் உயிருடன் எரித்த மூன்று குற்றவாளிகளைத் தமிழக அரசு விடுதலை செய்ததற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கொடைக்கானல் பிளஸண்ட் எஸ்டேட் ஹோட்டல் வழக்கில்  2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தமிழகம் எங்கும் வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அதேதினம் கோவை, வேளாங்கண்ணி மாணவர்கள் சுற்றுலாச் சென்றனர். தருமபுரியில் அவர்கள் சென்ற பஸ்ஸை வழிமறித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பெற்ரோல் ஊற்றி பஸ்ஸுக்குத் தீவைத்தனர். அந்த நெருப்பில் அகப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி எனும் மூன்று மாணவிகள் தீயில் கருகிப்  பலியாகினர். அந்தக்கொடூர சம்பவத்துக்கு அப்போது சகலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாணவிகளை உயிருடன் எரித்த குற்றச்சாட்டில்  30 பேர் கைது செய்யப்பட்டனர். நெடுஞ்செழியன்,முனியப்பன்,மாது ஆகிய மூவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி அவர்களுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மூவரும் மேன் முறையீடு செய்தார்கள். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி  மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்காக அந்தக்கொடூரத்தை அரங்கேற்றிய மூன்று பேரை  எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு  விடுதலை செய்துள்ளது.

 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1880 கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. 1600 கைதிகளின் விடுதலையை ஆளுநர்  உறுதி செய்தார். தருமபுரி பஸ் எரிப்புக் குற்வாளிகளின் கோவையை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அந்தக் கோவையை மீண்டும் ஆளுநரின் கவனத்துக்கு அனுப்பியது. இரண்டாவது முறையும் ஆளுநர் அதனைத் திருப்பி அனுப்பினார். கருமத்தில் கண்ணான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாவது முறையும் அந்தக் கோவையை ஆளுநருக்கு அனுப்பியது. தலைமைச்செயலர், உள்துறைச் செயலர், தலைமை வழகறிஞர் ஆகிய மூவரும் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் கொடுத்தபின்னர் மூவரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் கையழுத்திட்டார்.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தருமபுரியில் பஸ்ஸை எரித்தனர். இது திட்டமிட்டுச்  செய்யப்படவில்லை எனக்  காரணம் சொல்லப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழக அரசும், மத்திய அரசும்   நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன  என்பதை இச்செயல்  வெளிப்படுத்துகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, பாரதீய ஜனதாக் கட்சி ஆட்டுவிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதனை மறைப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாவும் இரகசிய உடன் படிக்கை செய்துள்ளன என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவரின் விடுதலையில் அதிக அக்கறை காட்டிய தமிழக அரசு, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் இருப்பவர்களின் விடுதலையில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மூவரும் கொலையில் நேரடியாகச்  சம்பந்தப்பட்டவர்கள்.  ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவிக்கும் அந்த ஏழு பேரும் நேரடியாகக் கொலையில் சம்பந்தப்படவில்லை. அவர்களை விசாரித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் தாம் தப்புச் செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர அனைத்துத் தரப்பினரும் மாணவிகளைக் கொலைசெய்த மூவரின் விடுதலையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்கள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்ற சரத்தின் அடிப்படையில் மூவரும் விடுதலை செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டத்திக் காரணம் காட்டி தமக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்சதற்கு எடப்படியின் தலமையிலான அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை செய்யபட்டபோது இறந்தவர்களின் உறவினர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஏழு பேரின் விடுதலையை எதிர்ப்பதால் அவர்களின் விடுதலை தாமதப்படுவதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தருமபுரியில் கொல்லப்பட்ட மூன்று மாணவிகளின் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதாவுக்காக் கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரியில்  பஸ்ஸுக்குள் எரிக்கப்பட்ட காயத்திரியின் பெற்றோர் இன்றும் உயிருடன் இருக்கின்றனர். மற்றைய இரண்டு மாணவிகளின் பெற்றோர் இறந்துவிட்டனர். தனது மகலைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது என இத்தனைநாள் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அரசியல் அதிகாரம் அவர்களின் கண் முன்னாலேயே நீதியைச் சாகடித்துவிட்டது. நீதிக்குத் தலை வணங்கு என முழக்கமிட்ட எம்.ஜி.ஆரின் பெயரால் நீதி அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் சிறையில் தண்டனையை அனுபவித்த தருமபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகள் மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தி கசிந்ததும் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சேலம் சிறையில்  இருந்து மூவரும் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களைப் பாதுகப்பாக பஸ்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் வீட்டில் தங்கி இருந்த அவர்கள் தமது ஊருக்குச் சென்றுள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் அந்த மூவரும் கட்சிப்பணியில் இணைவார்கள். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தயங்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்காக கருகிய அந்த மூன்று மலர்களின் நினைவுகளை யாராலும் மறக்க முடியாது.

Friday, November 9, 2018

சினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்


அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்யும். தமிழகத்ஹ்டில் அரசாங்கம் விஜய்க்கு எதிராகப் போராடுகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மலையாளம்,தெங்கு,கன்னடம் ஆகிய மொழி ரசிகர்களும் விஜயின் ரசிகர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளனர்.விஜயின் படங்களால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் இலாபத்தைப் பங்கு போடுகின்றனர். விஜயின் படம் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களுக்கு பண்டிகை தினம். சில அரசியல் கட்சிகள் விஜயைக் குறிவைப்பதால் பலதடைகளின் பின்னரேஅவரது படங்கள் வெளியாகின்றன.

சர்கார் படத்தின் வில்லியின் பெயர் கோமளவல்லி என்பதாலும், அரசு வழங்கிய இலவசப் பொருட்களைத்தூக்கி எறியும் காட்சி உள்ளதாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொதிப்படைந்துள்ளனர். கோமளவலி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர். ஜெயலலிதாவின் பெயரை வில்லிக்குச் சூட்டியதால் விஜய், ஜெயலலிதாவைக் கேலவப்படுத்திவிட்டார். இலவசங்களைத் தூக்கி எறியும் காட்சியால் ஜெயலலிதாவை அவமானப்படுத்திவிட்டார்கள் என அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்தின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்கார் படம் வன்முறையைத் தூண்டியுள்ளது எனத் தமிழக அமைச்சர்கள் குமுறினார்கள். அதனால் கோபப்பட்ட தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தமது தொண்டர்களைக் குண்டர்களாக மாற்றினார்கள். வீதிகளிலும் தியேட்டர்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பதாகைகளை அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிழித்தெறிந்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் வன்முறையைத் தடுக்க வேண்டிய பொலிஸார் வழமைபோல கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானபோது ஆரம்பமான பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. கத்தி படத்தில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியில் இருந்தமையால் பெரிதாக எதிர்ப்பு வெளியாகவில்லை. 2ஜி விவகாரத்தில் கனிமொழியும் ஆர்.ராசாவும் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தலைவா வெளியாவதில் சிக்கல் எழுந்ததால் விஜயும் அவரது தகப்பனும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். மெர்சலில் பாரதீய ஜனதாவின் பலவீன அரசியல் வெளிப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி, பணமதிப்பு என்பனவற்றை விமர்சித்தால் தமிழக பாரதீய ஜனதத் தலைவர்கள் எதிர்த்தார்கள்.இப்போ சர்காருக்கு எதிராக தமிழக ஆளும் கட்சி கிளர்ந்தெழுந்துள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அடங்கி இருந்த விஜய், அவர் இல்லாத நிலையில் தம்மை நேரடியாகத் தாக்குவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருதுகின்றனர். சர்காருக்கு எதிர்ராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு,  சட்டத்தைக் கையிலெடுத்து வன்முறையைத்  தூண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்காத தமிழக அரசு சர்கார் பிரச்சினையைக் கையில் எடுத்து தனது இருப்பை வெளிக்காட்டியுள்ளது. ஆனால், நடுநிலையாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் இருக்கின்றனர்.

விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பல நல்ல காரியங்களை விஜய் செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இரவில் தனி ஆளாகச் சென்று உதவிகள் செய்கிறார். அவரது நற்பணி மன்றங்கள் பலவகையான உதவிகளைச் செய்து வருகிறது. விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக அவரது தகப்பன் எஸ்.ஏ சந்திரசேகரன் பல மேடைகளில் சொல்லி வருகிறார். ஆனால், விஜய் அதைப்பற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை.  விஜய், அரசியலுக்கு வருவார் என அவரைச் சுற்றி இருப்பவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  விஜய்யை மையப்பொருளாக வைத்து நடக்கும் சம்பவங்கள் அரசியலை நோக்கி அவரை தள்ளுவதுபோலத் தெரிகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டமன்ற உறுபினர்களும் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது.தொகுதிக்குச் சென்ற பலரை அங்குள்ளவர்கள் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை அண்மையில் தொகுதிக்குச் சென்ற போது பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கமுடியாமல் தடுமாறினார்.

சர்கார் படதில்  இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கை செய்யப்பட்டு மீண்டும் தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம். ஆளும் கட்சியை விமர்சித்து திரைப்படங்கள் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்படவாய்ப்புள்ளது. தியேட்டர்களுக்குள் அத்துமீறி விளம்பரப்பலகைகளைச் சேதமாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி என்றால் சட்டத்தைக் கையில் எடுத்து  சொத்துக்களைச் சேதப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வரலாறு நூறு ஆண்டுகளைக்  கடந்து விட்டது. பல சினிமாக்கள் அரசியலைப்பேசின அப்போது இன்று போல கடும் நெருக்கடி தோன்றவில்லை. கல்கியின் “அலை ஓசை” படத்துக்கு அப்போது தடை விதிக்கப்படப் போவதாக செய்தி வெளியானது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் சவால் விட்டது. எல்லாத் தடைகளையும் மீறி உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. ரஜினியின் பாபா படம் வெளிவராமல் தடுக்கும் காரியத்தை பாட்டாளி மக்கள் கழகம் செய்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் ரஜினியின் ரசிகர்களும் மோதினார்கள்.
கமலின் சில திரைப்படங்களும் பல பிரச்சினைகளை முறியடித்துத்தான் வெளியாகின. ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாக விரக்தியுடன் தெரிவித்தார் கமல். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக கமல் தெரிவித்துள்ளார். தேவர் மகன் வெளியானபோது பல மாவட்டங்களில் சாதிச்சண்டை நடைபெற்றது. அதன் இரண்டாம் பாகம் வெளியானால் மீண்டும் அதே சாதிச்சண்டை உருவாகும் என டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு படம் வெளியாகும் முன்னரே அதற்கு எச்சரிக்கை விடுக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்க கமல், தயாராகிவிட்டார். கட்சிக்கான் ஆயத்தப்பணிகளை ரஜினி தொடங்கிவிட்டார். விஜய், அரசியலுகு வருவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். தமிழகத்தின் அடுத்த அரசியல் தலவர்கள் நடிகர்களா அல்லது பரம்பரை அரசியல் வாதிகளா என்பதை அடுத்துவரும் தேதல்தான் தீர்மானிக்கும்.

Monday, November 5, 2018

மினித்தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்


இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் கருவி. ஆட்சிபீடத்தில் இருக்கும் கட்சி   இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது எழுதப்படாத விதி. அபூர்வமாச் சில வேளைகளில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும். தமிழகத்தில் இருபது தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்தலை எதிர் நோக்கித் தமிழகம் காத்திருக்கிறது.   தமிழகத்தின் தலைவிதியைப் புரட்டிப்போடும்  இந்தத் தேர்தலை இந்தியாவே உன்னிப்பாக அவதானிக்க உள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகியவற்றின்  உறுப்பினர்களான போஸ், கருணாநிதி ஆகியோர் காலமானதால் அவை தேர்தலை எதிர் நோக்கி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து 19 அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக உறுப்பினர்கள் அன்றைய தமிழக ஆளுநரிடம் மனுக்கொடுத்தனர். அதன் காரணமாக அந்தப் 19 உறுப்பினர்களுக்கும் எதிராக தமிழக சட்டசபையின் சபாநாயகர் விளக்கம் கேட்டார். அவர்களில் ஜக்கையன் என்பவர் விளக்ககடிதம் கொடுத்ததால் அவர் மன்னிக்கப்பட்டார். ஏனைய 18 உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த அவர்கள் நீதிமன்றம் சென்றனர்.  இரண்டு நீதிபதிகள் எதிரும் புதிருமாகத் தீர்ப்பு வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட 18 பேரும் மேன் முறையீடு செய்தனர். சபநாயகரின் தீர்ப்பு சரியென தீப்பு வழங்கப்பட்டது.

சபாநாயகரின் தீர்ப்பு சரியென உறுதிசெய்யப்பட்டதால் அண்னா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்நோக்கியிருந்த ஆபத்து விலகியது. தினகரனை நம்பி இருந்தவர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். வழக்குகளைச் சந்தித்து அனுபவப்பட்ட தினகரன் உச்சநீதிமனறத்தில் பார்த்துக்கொள்ளலாம் என சவால் விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலைச் சந்திப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஒரு வருடமாக வருமானம் எதுவும் இல்லை. ஆளும் கட்சி என்ற பந்தா இல்லை. எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தாங்கள் செய்தது நியாயம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆதலால் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தினகரனின் முடிவுக்கு தங்கத்தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே மறுப்புத் தெரிவித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் சென்றால் இன்னும் இரண்டு வருடங்களாவது இழுபடும்.  வழக்குச் செலவுக்கும் பணமும்  இல்லை. நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வதை விட மக்களிடம் செல்வதே சரியென்பதில் அவர்கள் உறுதியாக  உள்ளனர். அவர்களின் முடிவுக்கு அடிபணிந்த தினகரன் உச்சநீதிமன்றம் செல்லப்போவதில்லை என அறிவித்தார்.


   இடைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தமிழக அரசியல் தலவர்கள் தயாராக இல்லை. தோற்று விடுவோம் என்றபயம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களிடம் இருக்கிறது. கஸ்ரப்பட்டு பனத்தைச் செலவு செய்து வெற்றி பெற்றாலும் மாற்றம் எதுவும் நடைபெறாது என்பதால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் இடைத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆர்.கே. நகர் வெற்றியால் பூரிப்படைந்திருக்கும் தினகரன், அதேபோன்ற ஒரு பிரமாண்டமான வெற்றி கிடக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார். திருமங்கலம் வெற்றியைக்  குழிதோண்டிப் புதைத்தது ஆர்.கே.நகர் வெற்றி.  இந்த  விளையாட்டை ஏனைய தொகுதிகளில் தினகரன் செய்யமாட்டார். ஆர்.கே. நகர் வெற்றி தனக்கானது ஆகையால் அங்கு தாராளாமாகச் செலவு செய்தார். அப்படிச் செலவு செய்து இன்னொருவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க அவர் விரும்பமாட்டார். ஆனால் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுக்கு தமிழக அரசைப் புரட்டிபோடும் சக்தி உள்ளது. ஆகையால் எதிர்க்கட்சிகள் இதில் ஆர்வமாக இருக்கின்றன.

தமிழக சட்ட சபையில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. திருவாவூர் கருணாநிதியின் தொகுதி. அங்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும். அழகிரி பூச்சாண்டி காட்டினாலும் கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் அவரை ஏற்க மாட்டார்கள். ஏனைய 19 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும். இன்றைய அரசியல் கள நிலவரத்தில் 19  குதிகளிலும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம் கடந்த சட்ட மன்றத் தேதலில் ஜெயலலிதா கைகாட்டியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலாவின் தயவால் வேட்பாளரானவர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் கோஷ்டிப்பூசல், லேடியின் சொற்படி நடதவர்கள் இப்போ மோடியின் சொற்படி நடக்கிறார்கள், பொதுமக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டப்படுவதில்லை போன்றவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கும் வாக்குகளைத் திசைதிருப்பும் காரணிகளாக உள்ளன.


தமிழக சட்ட சபையில் இப்போது சபாநாயகருடன் சேர்த்து 110 உறுப்பினர்கள் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தைக் காப்பாற்றலாம். இல்லையேல் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜெயலலிதா இருக்கும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பல கட்சிகள் தயாராக இருந்தன.  இன்று அதனுடன் சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எடப்பாடி தோற்பதையே பன்னீர்ச்செல்வம் விரும்புவார். பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

பதவி இழந்த 19 பேரும் மீண்டும் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம். கடந்த தேதலில் இவர்கள் வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா என்ற இரும்புப்பெண் காரணமாக இருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரட்டை இலை இல்லை. தொகுதியில்  செல்வாக்குள்ள இரண்டொருவர் வெற்றி பெறலாம். அதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும்  இல்லை. எம்.ஜி. ஆர், ஜெயலலிதா  ஆகியோர் வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டியில் தங்கத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியைத் தக்கவைக்கும் திறமை  அவரிடம் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட சுந்தரராஜ் 493 வாக்குகளாலும்,
 பெரம்பூரில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகளாலும் வெற்றி பெற்றனர்.  இடைத் தேர்தல் நடந்தால் இவர்கள் இருவரும் வெற்றி பெறுவது முடியாத காரியம். பனீருக்குச்  செல்வாகுள்ள தேனீத் தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதியில் தினகரன் தரப்பு வெற்றி பெறுவதென்பது சிரமமான  காரியம்.

 தமிழக சட்ட சபையில் 234  உறுப்பினர்கள் உள்ளனர். அறுதிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 88 உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளான காங்கிரஸ்ஸுக்கு 8 உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமீன் அன்சாரி ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர். இவர்கள் ஸ்டாலினை ஆதரிக்கலாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரம் எப்படி இருகும் எனத்தெரியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கிறதென்பது அனைவருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். மக்கள் நலனில் எதுவித அக்கறையும் இல்லாமல் பதவியைக் காப்பாற்றுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மத்திய அரசின் சொற்படி ஆடுகிறது. இந்த அரசின் மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு பிரசாரம் செய்யும். கடந்த சட்டமன்றத்  தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன  ஆதரவளிப்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடைந்துள்ளது.

கட்சிகளின் வாக்கு வங்கிகள் ஒரு புறம் இருந்தாலும் சாதி என்ற அடையாளம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. வெற்ரி வாய்ப்புள்ள சாதியைப் பார்த்தே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  தமிழகத்தின் மினித் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகிவிட்டன.  இடைத்  தேர்தல் உடனடியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து  தமிழக இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமாகௌள்ளது.