Wednesday, July 31, 2019

குமாரசாமி வெளியே எடியூரப்பா உள்ளே


கர்நாடக மாநில அரசியல் குழப்பத்துக்கு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் முடிவுரை எழுதப்பட்டது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் முதல்வர் கதிரையில் இருந்த குமாரசாமி வெளியேற்றப்பட்டு எடுயூரப்பா, முதலமைச்சராக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உதயமாகி 25 ஆவது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். இதுவரை மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்ற  எடியூரப்பா முழுமையாக ஐந்து வருடம் பதவியில் இருக்கவில்லை. நிஜலிங்கப்பா [62- 68] டி.தேவராஜா [72-77],  சித்தராமையா [13 -18] ஆகிய மூவர் மட்டுமே கர்நாடகத்தில் முழுமையாக ஐந்து வருடங்கள் பதவி வகித்தனர். அவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடக  சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 105 தொகுதிகளிலும், கங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை வேட்பாளரான எடியூரப்பா ஆட்சியமைக உரிமைகோரினார். ஆளுநர் இரண்டு வாரகால அவகாசம் கொடுத்தார். குதிர  பேரத்தைத் தடுப்பதற்காக காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தை நாடின. உச்ச நீதிமன்றம் இரண்டுநாள் அவகாசம் கொடுத்தது. கண்ணீருடன் இராஜினாமாச் செய்த எடியூரப்பா, ஒரு வருடத்தில் ஆட்சியை கவிழ்ப்பதாக சபதம் செய்தார். 14 மாதங்களில்  அரசியல்சதி காரணமாக குமாரசாமி வெளியேற்றபட்டு எடியூரப்பா முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

குமாரசாமியின் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், குமாரசாமிக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 சட்ட  உறுப்பினர்களும்  இராஜினாமாச் செய்ததால் குமாரசாமியின் முதலவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.  குமாரசாமிக்கு ஆதரவு வழங்கிய இரண்டு சுயேட்சைகளும் ஆதர்வை வாபஸ் பெற்றனர். குமாரசாமி, பெரும்பான்மையை இழந்ததால் அவர் பெரும்பானமையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இராஜினாமாச் செய்தவர்கள் அனைவரும் மஹாராஷ்டிராவில் பாரதீய ஜனதாக் கட்சியின் அமைச்சருக்குச் சொந்தமான சொகுசு விடுதியில் தங்கினர். மந்தையில் இருந்து பிரிந்து சென்றவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அனைத்தும்  தோல்வியில் முடிந்தன. பன்னிரண்டு நாட்கள் இழுபறிப்பட்டு குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

குமாரசாமியின் பதவியை பாரதீய ஜனதாக் கட்சி இரண்டாவது  முறையாகக்  கவிழ்த்துள்ளது. 2006 ஆம் ஆண்டு  பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சரானார். இரண்டரை வருடங்களில் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை குமாரசாமி மீறியதால்,  பாரதீய ஜனதா ஆதரவை விலக்கியதால்  அவர் பதவி இழந்தார். குமாரசாமியின் தகப்பன் தேவகவுடாவும் முழுமையாக ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்யவில்லை. 1994 ஆம் ஆண்டு தேவகவுடா, கர்நாடகத்தின் முதல்வரானார். 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் பிரதமராக தேவகவுடா தெரிவு செய்யப்பட்டதால் இராஜினாமா செய்தார். 11 மாதங்களில் தேவகவுடா பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

இராஜினாமாச் செய்த  15 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுருத்தப்பட்ட போதும் சபாநாயகர் ரமேஸ்குமார் அதற்கு மறுத்துவிட்டார். தமிழகத்தின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சபாநாயகர் தனபால் போல் கர்நாடக சபாநாயகர் நடந்துகொள்ளவில்லை. அதன் காரணமாக குமாரசாமி இராஜினாமாச் செய்யும் நிலைஏற்பட்டது. சபாநாயகர் ரமேஸ்குமாஎ. டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக சட்ட சபையின் மாண்பைக் காப்பாற்ற இறுதிவரை போராடினர்.

கர்நாடகத்தில் 11 மாதங்களில் நான்காவது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். நான்காவது முறையாக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். இதுவரை முழுமையாக ஐந்து வருடங்கள் எடியூரப்பா பதவி வகிக்கவில்லை. இம்முறையும் ஐந்து வருடங்கள் அவர் பதவி வகிக்க முடியாது. விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்ததால் கர்நாடகத்தில் எடியூரப்பாவின் செல்வாக்கு உயர்ந்தது. பின்னர் விவசாயிகளுக்கு எதிராக அவரது அரசியல் நகர்ந்தது. முதலில் வெரும் ஏழு நாட்கலில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி  விலகினார்.  2011 ஆம் ஆண்டு எடியூரப்பா முதலமைச்சராகப் பதவி வகித்தபோது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கு எறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்கலூரில் தமிழர்களுக்கு  எதிராக வன்செயல் நடந்தபோதெல்லாம் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தவர் எடியூரப்பா.

பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து 2012 ஆம் ஆண்டு விலகிய எடியூரப்பா, கர்நாடக ஜனதாக் கட்சிஎனும் பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார். 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒரு வாரத்தில் எடியூரப்பா இராஜினாமாச் செய்தார். எடியூரப்பா இல்லமல் கர்நாடகத்தில் கால் பதிக்க முடியாது என்பதை உணர்ந்த பாரதீய ஜனதாவின் தலைவர்கள், அவரை அனுசரித்துப் போக முடிவு எடுத்துள்ளனர்.

முத்த தலைவர்களுக்கு பாரதீய ஜனதா ஓய்வு கொடுத்துள்ளது. 75 வயதான அத்வானி, முரளி  மனோகர் ஜோசி போன்றவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். 76 வயதான எடப்பாடியை கர்நாடகத்தின் முதல்வராக்கியுள்ளது  பாரதீய ஜனதாக் கட்சி. அறுதிப் பெரும்பான்மை  இல்லாத மாநிலங்களில் இராஜினாமாச் செய்து ஆட்சியைக் கவிழ்க்கும் புதிய பாணியை பாரதீய ஜனதா ஆரம்பித்துள்ளது. இதனால் காங்கிரஸ் அச்சமடைந்துள்ளது. இராஜினாமாச் செய்தவர்களுக்குக்  கொடுப்பட்ட வாக்குறுதிபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை.

கர்நாடகத்தில்  இராஜினாமாச் செய்த 15 சட்ட மன்ற உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இல்லையேல் எடியூரப்பாவின் பதவி பறிபோகும். மக்கள் தீர்ப்புத்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகும்.

Sunday, July 28, 2019

பங்களாதேஷுக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை


கொழும்பு பிறேமதாஸ மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது. நாண்யச்சுழ்ற்சியில் வெற்ரி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 44.4 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து242 ஓட்டங்கள் அடித்த் ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் தடவையாக சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடர் ஒன்றில்  இலங்கை வெற்றி பெற்றது.

வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைனிற்கு பதிலாக தய்ஜூல் இஸ்லாம் பங்களாதேஷ் அணியில் இடம் பிடித்தார். மலிங்க, திசர பெரேரா ஆகியோருக்குப்  பதிலாக அகில தனன்ஜய,  இசுரு உதான ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டனர்.


  பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த சௌம்யா சர்க்கார்   11 ஓட்டங்களுடன் நுவன் பிரதீப்பின்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  பங்களாதேஷ் அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால்   19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  மொஹமட் மிதுன் 11, மஹமதுல்லா 6  சப்பீர் ரஹ்மான்  11  , மொசாதிக் ஹுசைனும் 13     ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், பங்களாதேஷ்   117 ஓட்டங்களுக்கு 6 விக்கெற்களை இழந்தது

  ஏழாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன் ஜோடி   84 ஓட்டங்களை எடுத்து ஆறுதலளித்தது.  மெஹிதி ஹஸன் 43 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெற்க்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.

 முஷ்பிகுர் ரஹீம்   ஆட்டமிழக்காமல்       110 பந்துகளில் 6 பௌண்டரிகள் , ஒரு சிக்ஸர் அடங்கலாக 98 ஓட்டங்களை  எடுத்தார்.    இரண்டு ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹீம் இந்த ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைச்சதத்தினை பதிவு  செய்தார். இலங்கை அணி வீரர்களான   அகில தனன்ஜய, இசுரு உதான ,நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

  இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அவிஷ்க பெர்னாந்து , திமுத் கருணாரத்ன ஆகியோர் களம் இறங்கினர். அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன  15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.   அதிரடியாக விளையாடிய   அவிஷ்க பெர்னாண்டோ   2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை  அடித்தார்.  குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

  குசல் மெண்டிஸ் , அஞ்செலோ மத்தியூஸ் ஜோடி     மூன்றாம் விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை  எடுத்தது.    44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 242 ஓட்டங்களுள் அடித்து இலங்கை வெற்றி பெற்றது.  அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் அடித்தனர். 
 .
போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க  பெர்னாண்டோதெரிவாகினார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி,  . இலங்கைபங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும்  31 ஆம் திகதி புதன்கிழமை    கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Saturday, July 27, 2019

வேகத்தால் மிரட்டிய மலிங்க


கிரிக்கெற் உலகின் தனது வேகமான பந்து வீச்சால் துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்த மலிங்க ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகியா வற்ரில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிய மைல்ங்க டெஸ்ட்  போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒருநாள், ரி20 ஆகியவற்றில் விளையாடினார். 26 ஆம் திகதியுடன் ஒரு நாள் போட்டிக்கு விடைகொடுத்துள்ளார். உச்சத்தில் இருந்த கிறிக்கெற் வீரர்களின் வாழ்க்கை இலகுவானதாக இருக்கவில்லை. அதற்கு மலிங்கவும் விதிவிலக்கல்ல.

இலங்கையின் பல வெற்றிகளுக்கு மலிங்க மிக முக்கியமானவராக விளங்கினார். பரபரப்பான ஒருநாள்,  ரி20 ஆகியவற்றின் முதல் ஓவரில் விக்கெற்களை வீழ்த்தி நம்பிக்கையளித்தார்.  கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களைக்  கொடுக்காது இலங்கையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். மலிங்க விக்கெற்களை வீழ்த்தும்போது ஆனந்தப்பட்டவர்கள், அவர் விக்கெற் வீழ்த்தாதபோது ஆத்திரப்பட்டார்கள். இலங்கையின் சில தோல்விகளுக்கு மலிங்கதான் காரணம் என கூசாது அவரைச் சுட்டிகாட்டி வருத்தப்பட வைத்தனர். இஅவை எல்லவற்றையும் சகித்துக்கொண்ட மலிங்க, தனது பந்து வீச்சால் பதிலளித்தார்.

இலங்கையின் அரசியலும் மலிங்கவை அலைக்களித்தது. மலிங்க ஓய்வுபெற விரும்பியபோது அதர்கு சரியான சந்தர்ப்பத்தை இலங்கை கிரிக்கெற் அவருக்கு வழங்கவில்லை. தொடர்ச்சியான பயிற்சியின் மூலம்   நிரூபித்து மீண்டும் அணியில் இடம்  பிடித்தார்.  2017 ஆம் ஆண்டு இலங்கை கிறிக்கெற் அணியில் இருந்து மலிங்க நீக்கப்பட்டார். அப்போது அவர் உடல்தகுதியுடன் இருந்தார். மலிங்க இல்லாமல் வெற்றி பெறலாம் என இலங்கை நிர்வாகம் கருதியது.  கடந்த வருடம் ஆசியக்கிண்ணப் போட்டியில் மலிங்க, அணியில் சேர்க்கப்பட்டார். பங்களாதாஷுக்கு எதிரான முதல் போட்டியில் 24 ஓட்டங்கலைக்கொடுத்து நான்கு விக்கெற்களை வீழ்த்தி தனது வருகையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் வெறிகொண்ட வீரனாக அனைட்துப் போட்டிகளிலும் தனது முத்திரையைப்  பதித்தார். மலிங்க ஓய்வு பெற்ற பிறேமதாஸ மைதானத்தில் மூன்று முறை ஹட்ரிக் சாதனை செய்தார். உலகக் கிண்ணத்தொடரில் தொடர்களில் இரு முறை ஹாட் டிரிக் சாதனை செய்த ஒரே வீரர்.. 
  
35 வயதான மலிங்க, இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெற்களும், 225 ஒருநாள் போட்டிகளில் 335 விக்கெற்களும்   73- ரி20 போட்டிகளில் 97 விக்கெட்ற்களும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், ரி 20, ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, அந்த அணியின் ஆஸ்தான வீரராக திகழ்கிறார்.

2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியின் பின்னர்  ஓய்வுபெற்றார். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான மலிங்க, இப்போது பங்களாதேஷுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வுபெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான மலிங்க, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரி-20  போட்டியுடன் ஓய்வுபெற விரும்புகிறார்.

  திறமையான துடுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளரும்  இல்லாமல் இலங்கை அணி தடுமாறுகிறது. இந்த இந்நிலையில் மலிங்கவின் ஓய்வு இலங்கைக்கு மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது.

Monday, July 22, 2019

கெளரவப் பிரச்சினையான வேலூர் தேர்தல்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திரவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். துரைமுருகனின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது கணக்கில் வராத பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியின் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் முடிந்துவிட்டது.

வாக்காளருக்குப் பணம் கொடுப்பதற்காக கதிர் ஆனந்த், பணத்தைப் பதுக்கி வைத்ததாகப் புகார் செய்யப்பட்டதால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது கதிர் ஆனந்தின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியாமல் அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்,கே.நகர் இடைத்தேர்தலின்போதும் இதேபோன்றுதான் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடைபெற்று தினகரன் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். கமலின் கட்சியும் தினகரனின் கட்சியும் வேலூரில் போட்டியிடவில்லை. வேலூரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அங்கு கதிர் ஆனந்துக்கும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையில்தான் போட்டி நடைபெறும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால் கதிர் ஆனந்த் வெற்ரி பெற்றிருப்பார். இடைத் தேர்தல் போன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதால், யார் வெற்றி பெறுவார் என்பதைக் கணிக்க முடியாதுள்ளது. தமிழக அரசு இயந்திரத்தின் பலம்  தேர்தலில் முக்கிய பங்கை வகிக்கப்போறது. தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்வார்கள். இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி  பெறுவதில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியின் பின்னால் உள்ள காரணம் பணம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த  ரகசியம்.

வேலூரில் துரைமுருகனின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. அவரது மகன் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.  துரைமுருகன் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை அவரைப் பிடிக்காத திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்தான் போட்டுக்கொடுத்தார் என்ற சந்தேகம் கதிர் ஆனந்தின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. துரைமுருகனின் அரசியல் பலம், பணபலம் என்பன கதிர் ஆனந்தின்  பின்னால் உள்ளன. அவருடைய அரசியல் பலத்தில் எந்த சந்தேகமும்  இல்லை. பணத்தை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது. துரைமுருகனின் மீதும் அவருக்கு வேண்டியவர்கள் மீதும்  கண்காணிப்பு அதிகரித்துள்ளது. கை நிறையப் பணம் இருந்தும் துரைமுருகனால் அதனை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தின் 37 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழ்கமும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெற்றதால் வேலூரிலும் வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். ஆளும் கட்சி செய்யும் தில்லுமுல்லுகளுக்கு தகுத பதிலடி கொடுக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் எதிர்பார்ப்பு. தமிழக சட்ட ம்ன்ற இடைத்தேர்தலில் திராவிட   முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாததற்கு உட்கட்சிக் கசப்புணர்வே காரணம். இந்த உண்மை ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகையினால், உட்கட்சிப் பிரச்சினை தலை தூக்கக்கூடாது என்பதே ஸ்டாலினின் விருப்பம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான வேலூரில் வெற்ரி பெறுவேன் என்ற நம்பிக்கையில் ஏ.சி.சண்முகம் களம் இறங்கியுள்ளார். துரைமுருகன் தரப்புக்கு இணையான பணபலம் உள்ளவர் சண்முகம். வேலூர் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். வேலூரில் அவருக்கு ஒரு கல்லூரி உள்ளது.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றால் அடிமட்ட மக்களின் மனதைக் கவர்ந்தவர்  சண்முகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி  இரண்டாவது இடத்தைப் பிடித்தவர். கதிர் ஆனந்துக்கு சரியான போட்டியாளர் ஏ.சி.சண்முகம்.

சமூக நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருப்பதனால்,  அவரின் செல்வாக்குக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வன்னியரான சண்முகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு வழங்கும். அன்புமணியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்பியாக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் விஜயகாந்தின் கட்சி இல்லை. அதனால் எந்த பாதிப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.  தமிழகத்தில் தமது கட்சி தோல்வியடைந்ததற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என பாரதீய ஜனதாக் கட்சியினர் கருதுகின்றனர். பாரதீய ஜனதாக் கட்சியைத் தவிர்த்து தேர்தல்  பரப்புரையை செய்வதற்கு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. தேர்தல் கூட்டத்தில்  மோடியை மேடையேற்றுவதற்கு ஏ.சி.சண்முகம் விரும்புகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்றபோது பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டது, ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்வது, தபால் துறையின் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது, நீட் தேர்வை அகற்ற முடியாது என அறிவித்தமை போன்றவை ஏ.சி.சண்முகத்துக்கு எதிராக உள்ளன. ஸ்டாலினுக்கும் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கும் வேலூர் தேர்தல் வெற்றி மிக முக்கியமானது.

Saturday, July 20, 2019

இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகும் வைகோவின் குரல்


கணீரென்றகுரல், கம்பீரமான உச்சரிப்பு, சவால்விடும் உடல் மொழி, ஆதாரங்களைப் புட்டு வைக்கும் லாவகம் ஆகியவற்றுடன் இந்திய நாடாளுமன்றத்தைக் கலக்கிய வைகோவின் குரல் இருபது வருடங்களுக்குப் பின்னர்  மீண்டும் ஓங்கி  ஒலிக்கப்போகிறது. கடந்த இருபது வருடங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்வியடைந்தபோது அவரின் மீது மதிப்பு வைத்திருந்த தமிழக மக்களும் இலங்கைத் தழிர்களும் வருந்தினார்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த வைகோவின் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஸ்டாலின் ஒதுக்கினார், கூடவே வைகோவை ராஜ்யசபா உறுப்பினராக்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்டாலின். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தின் 22 தொகுதிகளில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.தமிழகம்  முழுவதும் வைகோ,  பிரசாரம் செய்தார்.  ஸ்டாலினின் நாடாளுமன்றக்கணக்கு வெற்றி பெற்றது. தமிழக சட்டமன்றக் கணக்கு சறுக்கிவிட்டது.  திராவிட முன்னேற்றக் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தபோது நாடாளுமன்றம், அதிர்ந்தது. இவர்களுடன் வைகோவும் சேரும்போது நாடாளுமன்றத்தில் மேலும் பல அதிர்வலைகள் ஏற்படும்.

தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி முடிவடைகிறது. திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் கனிமொழி,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுன்,வி.மைத்திரேயன். ஆர்.லட்சுமணன், டி. ரத்னவேல் சிபிஐ  உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் பதவி இழக்கிறார்கள். புதிய  உறுப்பினர்களைத் தெரிவு செய்தற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துவிட்டது. ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு தேவை. இம்முறை திராவிட முன்னேற்றக் கழகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக சட்ட மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் உறுப்பினர்கள் அதிகமானதால்   இம்முறை இரண்டு உறுப்பினர்கள் அதிகரிக்கிறார்கள்.

ஸ்டாலின் வாக்குறுதியளித்ததுபோல வைகோவுக்கு ஒன்று ஒதுக்கப்பட்டது. தொழிற் சங்கப்பொதுச்செயலாளர் சண்முகம்,வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராகிறார்கள். திழிர்சங்கவாது சன்முகத்தை ராஜ்யசபா உறுப்பினராக்கப்போவதாக  கருணாநிதி உயிரோடு இருந்தபோது அறிவித்தார்.  ஸ்டாலினதனை செயற்படுத்தியுள்ளார். திராவிட முன்னேற்ரக் கழகத்தின் வழக்குகளை முன்னின்ரு நடத்துபவர் வில்சன். கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுத்தபோது ஒரே இரவில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொடுத்தவர் வில்சன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்று உறுப்பினர்களும் மூன்று துரையுல் வல்லுநர்கள். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மூவரும் குடைச்சல் கொடுப்பார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியையும் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்தது.  பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளிலும் படு தோல்வியடைந்ததால் ராஜ்யசபை உறுப்பினர் கொடுக்கப்படாது என்ற கருத்துநிலவியது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தாலும், வாக்கு வங்கியில் சரிவு ஏற்படவில்லை. அடுத்து வரும் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு தேவை என்பதன் அவசியம் கருதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.

தமிழகத்தின் அரூர்,சோளிங்கர்,பாப்பிரெட்டி ஆகிய தொகுதிகளில்  நடைபெற்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி  பெற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குதான்  காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புவதால் அன்புமணி  மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.  அடுத்து நடைபெறும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  என்பனவற்றில் வெற்றி பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகிய  இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து ஆறு பேர் ராஜ்யசபைக்குச் செல்கிறார்கள். அங்கு வைகோவின் குரல் மற்றையோரின் குரலைவிட சத்தமாக ஒலிக்கப்போகிறது. 1978,1984,1990 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டார். ஹைட்ரோ காபன், மீதேன், எட்டு வழிச்சாலை, ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்  இலங்கை கடற்படையால் கொல்லப்படுதல் போன்றவற்றில் வைகோ காத்திரமாகக்குரல் குடுப்பார். 

Tuesday, July 16, 2019

ஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.


கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த  இரண்டு வாரங்களாக  இலண்டனில் நடைபெற்றது. எட்டுமுறை விம்பிள்டன் சம்பியனான சுவிட்சர்லாந்து நாட்டின்  ரோஜர் பெடரர்,  நடப்புச் சம்பியனான சேர்பிய வீரர்  ஜோகோவிச் ஆகியோர் ஆண்கள்  ஒற்றையர்  பிரிவு இறுதிப்போட்டியில் மோதினர். பலம் வாய்ந்த  இரண்டு வீரர்கள்  மல்லுக்கட்டியதால் இருதிப் போட்டி பரபரப்பாக இருந்தது. ஐந்து மணி நேர போராட்டத்தின் பின் நடப்புச் சம்பியனான ஜோகோவிச் தனது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

சேவீஸ்களையே  புள்ளிகளா மாற்றுவதில்  இருவரும் கவனம் செலுத்தினர். இதனால் 6-6 என சமநிலையானது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் செற்றில்  ஜோகோவிச்  7[7]- 6[5] வெற்றி பெற்றார். இரண்டாவது செற்றை 6-1 என பெடரர் எளிதாகக் கைப்பற்றினார். மூன்றாவது செற்றும் டை பிரேக்கர் வரை சென்றது மிகுந்த போராட்டத்தின் பின்  7[7]- 6[4]   ஜோகோவிச் வெற்றி பெற்றார் நாக்வாது செற்றை 6-4 எனபெடரர் கைப்பற்றினார்.

சம்பியனைத் தீர்மானிக்கும் ஐந்தாவது  செற்றில் சளைக்காமல் இருவரும் மாறிமாறி  வெற்றி பெற்றதால், போட்டி விறுவிறுப்பானது. இறுதியில் 13-12 [ 7- 3 ] புள்ளியில் ஜோகோவிச் சம்பியனானார். ஜோகோவிச் கைப்பற்றிய 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.  

சம்பியனானது இங்கிலாந்து


லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிப் போட்டியில்  முதலில் துடுப்படுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது. உலகக்கிண்ண  இறுதிப்போட்டி  வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15 ஓட்டங்கள் அடித்தது. 16 ஓட்ட வெற்றி இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து 15 ஒட்டங்கள் எடுத்ததால் போட்டி சம நிலையில் முடிந்தது. 50 ஓவர்களில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து சம்பியனாகியது. இங்கிலாந்து 22  பவுண்டரிகளும் நியூஸிலாந்து 14 பவுண்டரிகளும் அடித்தன.

 சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 3,2 ,4,1,2,4 ஓட்டங்கள் அடித்தது.  இங்கிலாந்தின் முதல் பந்து வைடாக வீசப்பட்டதால் ஒரு ஓட்டம் கிடைத்தது நியூஸிலாந்து 2,6,2,2,4 ஓட்டங்கள் எடுத்தது. 

உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்  இறுதிப்போட்டியிலும் ஏமாற்றினார்கள். மாட்டின் கப்தில் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிக்கோலஸும் வில்லியம்ஸனும் பொறுமையாக விளையாடினார்கள். வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் முதல் 10 ஓவர்களில் 33 ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மார்க் வுட்,பிளங்கட், ரஷீட் ஆகியோரின்  ஓவர்களைக் குறிவைத்து  ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். அடுத்த 10 ஓவர்களில் விக்கெற் இழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தனர்.

நியூஸிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்த நேரத்தில் 30 ஓட்டங்கள் அடித்த வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.  இரண்டாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த வில்லியம்ஸன், நிக்கோலஸ் ஓடி அதிக பட்சமாக 74 ஓட்டங்கள் எடுத்தது.  இங்கிலாந்தின் பந்து வீச்சினால் நியூஸிலாந்து வீரர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர்களால் இரண்டு சிக்சர்களும் 14 பவுண்டரிகளும் மட்டுமே அடிக்க முடிந்தது.

 அதிரடியாக விளையாடிய நிகோலஸ் 55 ஓட்டங்களில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 15, ஜேம்ஸ் நீஷம் 19, கிராண்ட ஹோம் 16,  ஹென்றி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நியூஸிலாந்துன் துடுப்பாட்ட வரிசை சரிந்தது.  லாதம் மட்டும் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.  வோக்ஸ், பிங்கெட் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும் ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

242  எனும்  வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள்,  நியூஸிலாந்தின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறினர்.  ஹென்ரியின் பந்து வீச்சில் 17 ஓட்டங்கள் எடுத்த ராய். ஆட்டமிழந்தார். 9 ஆவது ,10 ஆவது, 11 ஆவது ஓவர்களில் ஓட்டம் எதுவும் எடுக்கப்படாமையால் இங்கிலாந்து வீரர்கள் பதற்றமடைந்தனர். இந்த நெருக்கடியில் 30 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்த ரூட், ரூட் ஆட்டமிழந்தார்.  மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பேர்ஸ்டோ 36 ஓட்டங்களிலும்,  மார்கன்  9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.


23.2 ஓவரில் நான்கு விக்கெற்களை இழந்த இங்கிலாந்து 86 ஓட்டங்கள் எடுத்தபோது ஜோடி சேர்ந்த பென் ஸ்டொக்ஸும், படலரும்  நியூஸிலாந்தின் பக்கம் இருந்த வெற்றியை தம் பக்கம் திருப்பினர்.இவர்கள் இருவரும்  இணைந்து அடித்த 110  ஓட்டங்களால் இங்கிலாந்து வீரர்கள் நம்பிகையடைந்தனர். 59 ஓட்டங்கள் அடித்த படலர் ஆட்டமிழந்ததும் வெற்றிக்காற்று நியூஸிலாந்தின் பக்கம் வீசத்தொடங்கியது. பென் ஸ்டொக்சின் அனுபவ ஆட்டத்தால் போட்டி சமனானது. பென்ஸ்டொக்ச் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் அடித்தார்.

பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்


விஜய் தொலைக்காட்சியில்  கமல்தொகுத்து வழங்கும் பொக்பொஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது தொடரில் வனிதாவின் பங்கு மிக முக்கியமானது. விஜயகுமாரின் மகளான வனிதாவைப் பார்வையாளர்கள் மிகவும் விரும்பினர். போட்டியாளர்களிடையே  பிரச்சினையை உருவாக்கி அவர்களைப் பிரித்துவைப்பதில் வனிதா கில்லாடி. மூன்று திருமனம், விஜயகுமாருக்கு எதிராக பொலிஸில் புகார் செய்தது போன்றவற்றால்  ஊடகங்ளின்  மூலம் மிகவும் பிரபலமானவர். அனைவரும் எதிர்பார்த்ததுபோல்வே வனிதா கச்சிதமாக காய் நகர்த்தினார்.

பொக்பொஸ் வீட்டினுள் வனிதா செய்யும் அடாவடியைப் பார்த்து ரசிகர்கள் அவர் மீது வெறுப்படைந்தனர். முதல் இரண்டு வாரங்கள் தலைவராக வனிதா தெரிவு செய்யப்பட்டதால் அவரை வெளியேற்ற முடியவில்லை. இரண்டு பேர் சும்மா கதைத்தால் அதனுள் புகுந்து இருவரையும் பிரித்து விடுவார். வனிதாவுக்குக்  கொலைகாரன் டாக்ஸ் கொடுக்கப்பட்டபோது  திறமையாகச் செய்தார். பொக்பொஸ்சின் விருப்பத்தை நிறைவேற்றியதால்  வனிதா இப்போதைக்கு வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத நேரத்தில்  பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

வனிதாவின் கொடுமையைத் தாங்கமுடியாத அபிராமி,  பிக்பொஸ்  வீட்டைவிட்டு வெளியேறப்போவதாக அழுதார். முன்னர் நடைபெற்ற பிக்பொஸ் நிகழ்ச்சியில் காயத்திரியும் ஜூலியும்  சேர்ந்த் செய்ததை வனிதா தனி ஒருவராகச் செய்தார். ரசிகர்கள் வனிதாவை வெறுத்தாலும், டிஆர்பியில் பிக்பொஸ் நிகழ்ச்சி முன்னிலையில் இருந்தது. ஆதலால், வனிதா பிக்பொஸ்  வீட்டினுள் இருப்பார் என்ற யூகட்தை பிக்பொஸ்  உடைத்தெறிந்துள்ளார். ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்ற பாத்திமா பாபுவை முதல் ஆளாக வெளியேற்றி அதிர்ச்சிதந்த பிக்பொஸ்  வனிதாவை வெளியேற்றி  ரசிகர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா  வெளியேற்றப்படுகிறார் என கமல் அறி வித்ததும், பிக்பொஸ் ஏமாற்ருகிறார்  சீக்கிரட் ரூமுக்கௌ தன்னை  அனுப்பபோவதாக வனிதா தெரிவித்தார். ரசிகர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.  ஆனால், வனிதா உண்மையிலேலே வெளியேற்றப்பட்டுவிட்டார். பிக்பொஸ்  வீட்டினுள் வனிதா இருக்கும் வரை திட்டியவர்கள், அவர்  வெளியேறியதும் ஆதங்கப்பட்டனர். வனிதா ஆமி என அவரைத் தூக்கிப் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி  பிக்பொஸ்  நிகழ்ச்சியைப் பார்க்கப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா, கமலுடன் உரையாடும்போது தனது பக்க  நியாயத்தை எடுத்துரைத்தார். ஒருசிலர்  வனிதாவுக்காக அனுதாபப்பட்டனர். வனிதா இல்லாத பிக்பொஸ் நிகழ்ச்சி களைகட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றனர்.

Saturday, July 13, 2019

உலகக்கிண்ணக்கு முதல் முத்தம் கொடுப்பது யார்?


உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்தும்  இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளும் இதுவரை சம்பியனானதில்லை. உலகக்கிண்ணத்துக்கு முதலில் முத்தமிடப்போவது இங்கிலாந்து கப்டன் இயன் மோர்கனா, நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்ஸனா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.  உலகக்கிண்ணத்தை  உயரே தூக்கிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்பது வீரர்களின் கனவு. அந்தக் கனவு இன்று  நிஜமாகப்போகிறது.

உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஆறு முறை தோல்வியடைந்த நியூஸிலாந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடியது. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூஸிலாந்து இம்முறை அரை இறுதியில் வெற்றி பெற்று  இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளது. கடந்த உலகக்கிண்ணத் தொடரில் நழுவவிட்ட சம்பியன் கிண்னத்தை இந்த வருடம் கைப்பற்று ஆவலுடன் நியூஸிலாந்து காத்திருக்கிறது.

மூன்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மூன்று முறையும் தோல்வியடைந்து சம்பியனாகும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது. 1979 ஆம் ஆண்டு மேற்கு, இந்தியத் தீவுகளிடமும், 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடமும், 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமும் தோல்வியடைந்த இங்கிலாந்து, கிறிக்கெற்றின் தாயகத்துக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். 27 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ன இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு  இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணப்  போட்டியை நடத்தும் நாடு சம்பியனாவதில்லை எனும் கருத்து நிலவியது. 1996 ஆம் ஆண்டு இந்தியா,பாகிஸ்தான், இலங்கை ஆகியன கூட்டாக உலகக்கிண்ணப் போட்டியை நடத்தின. பாகிஸ்தானில் நடைபெற்ற  இறுதிப் போட்டியில்  இலங்கை சம்பியனாகியது.  2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியை நடத்திய இந்தியா சம்பியனானது. 2015 ஆம் ஆண்டு  நியூஸிலாந்தும்அவுஸ்திரேலியாவும் உலகக்கிண்ணப்போட்டியை நடத்தி அவுஸ்திரேலியா சம்பியானாகியது. அந்த வரிசையில் இங்கிலாந்து சேருமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் லீக் போட்டியில் மோதியபோது 119 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1966 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் இங்கிலாந்து சம்பியனாகியது. அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் இங்கிலாந்து சம்பியனாகியதில்லை. பெக்கம், ரூனி போன்ற உதைபந்தாட்ட  ஜாம்பவான்களாலும் உதைபந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை முத்தமிட முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து உலக ரக்பி சம்பியனானது.

இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதால் அடுத்து  களம் இறங்கும்  வீரகள் பதற்றமின்ரி விளையாடுகிறார்கள்.  நியூஸிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மாட்டின் குப்தில்,ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் பலமான அத்திபாரத்தை இடவில்லை.  ஆகையால் அடுத்து துடுப்பெடுத்தாடும் வீரகள் பதற்றத்துடன் களமாடுகிறார்கள். இங்கிலாந்தின் மத்திய வரிசை வீரர்கள்  சிறப்பாகச் செயற்பட்கிறார்கள். இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்துவீச்சும் நியூஸிலாந்தை விட  மேலோங்கி இருக்கிறது.
ஒன்பது போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, ஆறு வெற்றி ஒரு தோல்வியுடன் 12  புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. எட்டு போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஐந்து வெற்றி,மூன்று தோல்விகளுடன் 11  புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. மழை காரணமாக இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டி கைவிடப்பட்டு  இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ராய், ஜானிபெர்ஸ்டோ, ஜோரூ ஆகியோர் துடுப்பாட்டத்திலும், ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.  நியூஸிலாந்தி வீரரான கேன் வில்லியன்சன் துடுப்பாட்டத்திலும், ஃபேர்கிசன், போல்ட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கின்றனர். கிறிக்கெற்றைப் பொறுத்தவரை நானயச்சுழற்சி  முக்கியமானது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை அடிக்க வேண்டும்.

Thursday, July 4, 2019

27 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதியில் இங்கிலாந்து.


உலகக்கிண்ணப் போட்டியின் ஆரம்பத்தில் எதிரணிகளை மிரட்டி வெற்றி பெற்ற இங்கிலாந்து   பின்னர் தோல்வியின் பக்கம் சென்றது. இந்தியாவை வென்றதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்தது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ஓட்டங்களால் வெற்றிபெற்று பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.  

  செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 305 ஓடங்கள் எடுத்தது  நியூஸிலாந்து அணியில் லாக்கி ஃபெர்குசன், ஐஸ் சோதி ஆகியோருக்குப் பதிலாக டிம் செளதி, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

 ஆரம்பத்துடுப்பாட்ட  வீரர்களான‌ ஜேசன் ராய்-ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி  முதல் விக்கெற்றூக்கு  123 ஓட்டங்கள் சேர்த்தது. 60 ஓட்டங்களில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜானி பொஸ்கோவுடன் ஜோஸ் பட்லர்  ஜோடி சேர்ந்தார். 106 ஓட்டங்கள் எடுத்த ஜானி பொஸ்டோவ் மூன்றாவது விக்கெற்றக வெளியேறினார்.அடுத்து வந்த  இயன் மார்கன் 42 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய பட்லர் 11, பென் ஸ்டோக்ஸ் 11, கிறிஸ் வோக்ஸ் 4, ஆதில் ரஷீத் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற்களை இழந்து  305 ஓட்டங்கள் எடுத்தது  லியாம் பிளங்கெட் 15 ஓட்டங்களுடனும் , ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி , போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெற்களையும், சேன்ட்னர், செளதி தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

  306ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 45 ஓவர்களில் 186  ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.அதிகபட்சமாக டாம் லதாம் மட்டும்  57 ஓட்டங்கள் அடித்தார்.   கப்டில் 8, நிகோலஸ் 0, கேப்டன் வில்லியம்சன் 27, டெய்லர் 28, நீஷம், 19, கிராண்ட்ஹோம் 3, சேன்ட்னர் 12, ஹென்றி 7, போல்ட் 4 ஓட்டங்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
அந்த அணி இதற்கு முன்பு 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைந்தது

  106 ஓட்டங்கள் அடித்த‌ இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆட்ட நாயகன் ஆனதுடன், உலகக் கிண்ண‌ கிறிக்கெட் போட்டியில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆட்டத்துக்கு முன்பாக, இந்தியாவுடனான ஆட்டத்திலும் பேர்ஸ்டோவ் 111 ஓட்டங்கள் அடித்தார்

உலகக் கிண்ணப் போட்டியில் 36 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரானக இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இங்கிலாந்துன்  நட்சத்திர வீரரான  ஜோ ரூட்  இந்தஉலகக் கிண்ணப் போட்டியில்  500 ஓட்டங்களை எட்டினார்.   இந்த உலகக்கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களைக் கடந்துள்ளனர். முதல் 4 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா,  , பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல்-ஹசன், அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உள்ளனர். உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக 3 வீரர்கள் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.

Tuesday, July 2, 2019

தினகரனைக் கைவிட்டு வெளியேறும் தளபதிகள்.


அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தையும், இரட்டை இலைச்சின்னத்தையும் கைப்பற்றப் போவதாகச் சபதம் எடுத்து புதிய கட்சியை ஆரம்பித்த தினகரனைக் கைவிட்டு அவரது தளபதிகள் வெளியேறுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட தினகரனை நம்பிப்போனவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசியலில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் தினகரனைக் கைவிட வேள்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினகரனின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மீண்டும் சட்ட சபை உறுப்பினரானார். அதிரடியாக கருத்துச் சொல்லும் தங்கதமிழ்ச்செல்வனும் காலம் பிந்தி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.  பசை உள்ள முக்கியஸ்தரான இசக்கி சுப்பையா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர முடிவு செய்துள்ளார். தினகரனுடைய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சசிரேகாவும் தாய்க் கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தினகரனின் கட்சியினுடைய மாவட்டச்செயலாளர்களும் நிர்வாகிகளும் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்கிறார்கள். இதனால் தினகரனின் கட்சியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

தினகரனுக்கும், தங்கதமிழ்ச்செல்வனுக்கும் இடையில் சுமுக நிலை இருக்கவில்லை. தினகரனின் செயற்பாடுகளால் தங்கதமிழ்ச்செல்வன் அதிருப்தியடைந்திருந்தார்.  பட்டென வெளிப்படையாகப் பேசும் தங்கதமிழ்ச்செல்வனின் அண்மைக்காலச் செயற்பாடுகள்அனைத்தும் தினகரனின்  நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருந்தன. தினகரனின் உதவியாளருடன் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய  ஒலிநாடா பகிரங்கப்படுத்தப்பட்டதால் தினகரனின் கட்சியில் இருந்து வெளியேற நிலை அவருக்கு ஏற்பட்டது. தினகரனின் மீது வெறுப்படைந்த தங்கதமிழ்ச்செல்வன், அவருடைய உதவியாளருடன் பேசியபோது கோபத்தின் உச்சிக்குச் சென்று மிக மோசமாகப் பேசினார். அந்த உரையாடலை  ஒலிப்பதிவு செய்தவர்கள் பகிரங்கப்படுத்தியதால் தினகரனின் மீது இருந்த நம்பகத்தன்மை இல்லாமல் போனது.

தாய்க்கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கதமிழ்ச்செல்வனுக்கு அழைப்பு விடுத்தது. தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு ஓ.பன்னீர்ச்செல்வம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். ஓ.பன்னீர்ச்செல்வம், தங்கதமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. தங்கதமிழ்ச்செல்வனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பற்றிக்கப்பட்டு தங்கதமிழ்ச்செல்வனிடம் கொடுக்கப்பட்டது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் வெளியேறி தினகரனுடன் சேர்ந்ததால் ஓ.பன்னீர்ச்செல்வத்துடனான பகைமை  முற்றியது. தங்கதமிழ்ச்செல்வனைக் கட்சியில் இணைத்து ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு செக் வைக்க எடப்பாடி விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.

தேனியின் திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களான ஐ.பெரியசாமி,கம்பம்கிருஸ்ணமூர்த்தி,கம்பம்செல்வேந்திரன்,மூக்கையா,லெட்சுமணன் போன்றவர்களின் கோஷ்டி மோதலால் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் கோஷ்டி மோதலைக் கைவிட வேண்டிய நிலை உள்ளது. தங்கதமிழ்ச்செல்வனின் வருகையால் தென்மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தினகரனுடன் சேர்ந்ததால் இழந்தவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததால் பெற்று விடலாம் என தங்கதமிழ்ச்செல்வன் நம்புகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறி  திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. சுப்புலச்சுமி ஜெகதீசன்,ஈரோடு முத்துசாமி,கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன், ..வேலு ஆகியோர்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தூண்களாக உள்ளனர். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் கட்சி மாறியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கட்டட ஒப்பந்தம்மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்த இசக்கி சுப்பையா  மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் இழந்தவற்றைத் திரும்பப்பெற்று விடுவார். தினகரனுடன் சேர்ந்ததால் அவருக்கு தமிழக அரசாங்க ஒப்பந்தங்கள் கொடுக்கப்படவில்லை. கோடிக்கணக்கான பழைய ஒப்பந்தப் பணம் பாக்கியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால், பாக்கிப் பணமும்  புதிய  ஒப்பந்தங்களும் கிடைக்கும் என இசக்கி சுப்பையா நம்புகிறார்.

தினகரனுடன் இரகசியப் பேச்சுவார்த்தை செய்ய முடியாது என்பதை  கடந்தகால சம்பவங்கள்  வெளிப்படுத்துகின்றன.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்னுடன் ரகசியமாகப் பேசினார். பன்னீர்ச்செல்வம் என்னை இரகசியமாகச்சந்தித்தார் என அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியதால் தின்கரனுடம் இரகசியப்பேச்சுவார்த்தை நடத்து எவரும் செல்லமாட்டார்கள். தமிழகத்தின் மிகப்பெரும்தலைவராக உருவகப்படுத்தப்பட்ட தினகரனின் பிம்பம் தேர்தலுடன் காணாமல் போய்விட்டது. தினகரனுடன்   இருந்தால் தமது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவராக அவரை விட்டு வெளியேறுகிறார்கள். அரசியல் அரங்கில் தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார்.