Monday, October 28, 2019

விருப்பமில்லாதவருக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் உள்ள மக்கள்


தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு. அவர்தம் பாட்டனும் முப்பாட்டனும் கோலோச்சிய நாடு. ஒல்லாந்தரும் போத்துக்கேயரும் அழிக்க முயன்ற நாடு,  பிரிடிஸ்காரன்  பிரித்து வைத்தநாடு உலகில் உள்ள நாடுகளைப்போல் ஜனநாயகக்கடமை எம் நாட்டிலும் நடைபெறுகிறது. ஆனால், தம் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் உரிமை இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இல்லை. இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு என்பது அந்தப் பாட்டுடனே கடந்துபோய்விட்டது.

ஒருநாடு இரண்டு பெயர்கள். இலங்கை என்கின்றனர் தமிழர்கள்.சிங்களவர்கள்  ஸ்ரீலங்கா எனக் கூறுகின்றனர்.  இலங்கை சுதந்திரமடைந்து  71 ஆண்டுகளாகின்றன. 47 வருடங்களாகத் தாம் விரும்பிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைக்கவில்லை.  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவளித்து சிங்களக் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழர்கள் எடுத்தனர். அதனைக் கண்டு சிங்களத் தலைவர்கள் யாரும் வருந்தவில்லை. அதனையே தமது வாக்கு வங்கிக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள்.

இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வை  சிங்களம் மட்டும்,தரப்படுத்தல்,விகிதாசாரம்  போன்றவை முட்டுக்கட்டைகளாக முடக்கின. சிங்களம்  பெளத்தம் என்பனவற்றுக்கு அரசியலமைப்பு முன்னிலை கொடுத்ததால் தமிழ் மக்களின் வாழ்வு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கை  சுதந்திரமடைந்தபோது சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலவர்களும்  ஒற்றுமையகச் செயற்பட்டனர். ஆட்சி அதிகாரப்போதை தலைக்கேறியதால் சிங்களத் தலமைகள் தமிழர்களை உதாசீனம் செய்யத்தொடங்கியது.  தமக்குரிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் கேட்டுப்போராடி வெறுப்படைந்த தமிழ்த்தலைமைகள் தனிநாட்டுக்கோஷத்தை முன்வைத்தன. அதனை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்கள்  47 வருடங்களாகத் தமக்குரிய அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்தபோதும்  வடக்கு, கிழக்கில் அவற்றால் ஆழமாகக்கால் ஊன்ற முடியவில்லை. ஆனாலும், விகிதாசாரத் தேர்தல் முறையால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்களத்தலைமைத்துவக் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுகின்றன. பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி  தமிழீழம் என்ற  கோரிக்கையுடம் தேர்தலில் போட்டியிட்ட போது  வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் கட்சியாக அங்கீகாரம்  பெற்றது.

எந்தச் சூழ்நிலையிலும் சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆட்சி மாற்ற அரசியலில் சிக்குண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசைக் காப்பாற்றியது. அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியமுடியாத நிலை என்பனவற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள்   வெறுப்படைந்துள்ளனர். அடுத்துவரும் தேர்தலில் கூட்டமைப்பின் பலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாதுள்ளது. சம்பந்தன்,மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளும் வெறுப்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தகுதியான ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கை அரசியல்  களம்   சுறுசுறுப்படைந்துள்ளது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளன. சுயேச்சைகளும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். தமக்கு விருப்பமான ஒருவரைத் தேர்வு செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரக்கூடாது என்பதைத் தீமானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மை சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு தெரியும்.

சமாதானம் என்ற கோஷத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க முதலில்   போட்டியிட்டபோது சமாதானத்தை விரும்பிய தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். சமாதானப்பறவையை வல்லூறு விரட்டியது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் மீதான ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் போனது. சரத் பொன்சேகாவும், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மஹிந்தவுக்கு எதிராக அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.  புலிகளை அழித்த  போரின் வெற்றி அவரை ஜனாதிபதியாக்கியது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியும் மஹிந்தவும் முட்டி மோதியபோது மீண்டும் மஹிந்தவுக்கு எதிராகவே தமிழர்கள் வாக்களித்தனர்.

மைத்திரியின் அரசியல் பின்புலம் அவருடைய கொள்கை என்பனவற்றின்மீது  தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். நல்லிணக்கம் எனும் சொல் மயங்கவைத்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரியின் மீதான நம்பிக்கை சிதறியது.  அரசியல் எதிரிகளின் சவால்களை முறியடிப்பதிலேயே  தனது ஆட்சிக்காலத்தை முடிக்கிறார் ஜனாதிபதி மைத்திரி. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள். இப்போது மஹிந்த வின் இடத்தில் அவரது சகோதரர் கோதபாய. சகோதரரை ஜனாதிபதியாக்கி தான் பிரதமராவதே அவரது இலக்கு. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிராக ஜனாதிபதி களத்தில் நிற்பவர் சஜித்  பிரேமதாச.

பண்டாரநாயக்க குடும்பத்தின் கைகளில் இருந்த இலங்கை அரசியல் இப்போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் கைகளுக்குச் சென்று விட்டது. அவர்களை எதிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி  பிரேமதாசவின் வாரிசான சஜித் தயாராகிவிட்டார். இலங்கையின் ஜனாதிபதியாக யார்வெற்றி பெற்றாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்பட மாட்டாது என்பது  உண்மை.

Monday, October 14, 2019

கடவுளின் குழந்தைகள்


அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது"
என்பது ஒளவையார் பாடல்
இதன் பொருள் யாதெனில், உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன்,குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது.
எதைய்யா குறை அங்கத்தில் இருக்கும் குறையா இல்லவே இல்லை. பல நிலைகெட்ட மனிதர்களின் நெஞ்சத்துக் கண் இருக்கும் கறையே உலகின் மிகப்பெரும் குறை. அந்தக் குறையை உள ரீதியாக  சிந்திக்க வைத்தவர்கள் வாய் பேசமறுத்த, காது கேட்க மறுத்த மாற்றுத் திறனாளிகள்.
ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றின் சீரிய இயக்கம் மறுக்கப்படும் போதே குறைகள் ஏற்படும். அது உடலியல் ரீதியான குறை. இறைவன் முழுமையானவன் அந்த முழுமையிலிருந்தே மானுடர்களாகிய நாம் தோன்றியுள்ளோம். இருப்பினும் இத்தகைய மாற்றுத்திறனாளிகளினதும், விசேட தேவை உடையவர்களினதும் பிறப்பானது இறைவன் குறித்த எண்ணக்கருவில் முரண்பாட்டை ஏற்படுத்தும்..


ஆனால், இறைவன் ஒன்றை கொடுக்க மறுத்தால் நிச்சயம் நமது வாழ்க்கையை வளப்படுத்த இன்னொரு திறனை அள்ளி வழங்கியிருப்பான்.
இந்த வார இறுதி நாட்கள் வதிரி டைமன்  மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளான வாய் பேசமுடியாத காது கேட்க முடியாதவர்களின் கிரிக்கட்,உதைப்பந்தாட்ட போட்டிகள்  நடைபெற்றன.
. வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டுக் கழகத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் . வடமராச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்திருந்தனர். கிரிக்கெற்,உதைபந்தாட்டம் ஆகியவற்றின் விதிகள் அனைத்தும் அவர்களுக்குத் தெருந்திருந்தன. கிறிக்கெற்ரில் வடமராட்சி சம்பியனாகியது. உதைபந்தாட்டத்தில்  மட்டக்களப்பு சம்பியனாகியது. இருதிப்போட்டி முடிந்ததும் மைதானத்தில் தமது சீருடையைக் கழற்றி தலைக்கு மேலே சுழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.சிறந்த உதைபந்தாட்ட வீரன், சிறந்த கோல்காப்பாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் போன்ற விருதுகளும் வழங்கினார்கள்.
ஃபேஸ்புக், வட்ஸப், வைபர், வீடியோ   போன்றவை அவர்களுக்கு   கைகொடுக்கின்றன. தமது தொடர்பாடல்கள் அனைத்தையும் போனில் உள்ள வீடியோ மூலம்  மேற்கொள்கிறார்கள். நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்கள்.

இவர்களைக் கொண்டு எம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். காரணம் மைதானத்தில் என்ன நிகழ்வு நடந்தாலும் மைதானம் சுத்தமாகிறதோ இல்லையோ எமது வீட்டை பழைய நிலைக்கு கொண்டு வர இரண்டு நாட்களேனும் தேவை.
ஆனால், கடவுளின் குழந்தைகள் இவரகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்பாடும், மனிதத்துவமும் அளப்பரியது. அவர்களைப் பார்க்கும் போது அவர்களின் பழக்கவழக்கத்தைப் பார்க்கும் போது ஐந்து புலன்களும் சீராக இயங்கி அதைத் தீய வழியில் வழி நடத்துவதை விட இவர்களின் வாழ்க்கை இறைவனுக்கு மிக அருகில் இவர்களை இருத்தி வைத்துள்ளது போல உள்ளது.
மானுடராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மாஇல்லை இல்லை மனிதப்பண்புடன் பிறக்கவே மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். புலன் குறையாக இருப்பினும் அவர்கள் நிறைவானவர்கள், அவர்களது திறன்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவர்கள் வீட்டிற்கு  வரும் ஒவ்வொரு நேரமும் மெதுவாக கேட்டைத் திறந்து மெதுவாக பைப்பைத் திறந்து தண்ணி அருந்திவிட்டு கேட்டை பூட்டிவிட்டு சென்றார்கள்

 சுத்தத்தை அவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது. மைதானத்தில் தாம் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள். மைதானத்தில் பரிமாறிய உணவுப் பொருட்களின் தட்டுகள் வன் டே கப் அனைத்தையும் உடனுக்குடனேயே அப்புறப்படுத்தினார்கள்.
தாம் உண்ட உணவுப் பொதிகளைக் கூட காணி ஒன்றினுள் இட்டார்கள். இவ்வளவு ஏன் விளையாட்டு முடிந்ததும் சுத்தப்படுத்தி வந்த குப்பைகளை   அனுமதி கேட்ட பின்னரே   எரித்துவிட்டு சென்றார்கள்.
என்ன இல்லை அவர்களிடம் இறைவன் அவர்கள் கூடவே தான் இருக்கிறார். என்ன ஒரு பண்பாடு பழக்க வழக்கம். அவர்களை மெச்ச வார்த்தைகள் இல்லை.
 அவர்களிடமிருந்து என்னால் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விடயம் யாதெனில் எங்களால் ஏனையோருக்கு எந்தவொரு தீங்கும் வரக் கூடாது என்பதே.அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல. உண்மையில் திறமைசாலிகள், பண்பாட்டாளர்கள் அவர்களே. மனித்துவத்தை மறந்து இருக்கும் நாம் தான் மாற்றுத் திறனாளிகள்.
யார் யாருக்கோ எல்லாம் தட்டும் கைகளை இவர்களுக்காகவும் தட்டுங்கள். நீங்கள் கை தட்டியவர்கள் உங்களை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள். காரணம் இவர்களே மனித நேயப் பண்புடன் கூடிய மனிதர்கள்.

Tuesday, October 1, 2019

தமிழக கட்சிகளின் செல்வாக்கை நாடிபிடிக்கும் இடைத்தேர்தல்


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடைபெறும் இடைதேர்தலுக்கான வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் வேட்பாளரைக் களம் இறக்கி உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். விகிரவாண்டி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ராதாமணி மரணமானதாலும், நாங்குநேரி தொகுதியின்  காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினரான வசந்தகுமார் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இராஜினாமாச் செய்ததாலும் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையின் ஆட்சிக்காலம்  19 மாதங்கள் மட்டுமே இருப்பதனால் பலமான வேட்பாளர்களைப் பிரதான கட்சிகள் அனைத்தும் தவிர்த்துள்ளன. அதிகளவு  பணத்தைச் செலவு செய்வதற்கும்  பின்னடிக்கும் நிலை உள்ளது. ஆனாலும்,  வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மூன்று கட்சிகளும் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. தனது கூட்டணியின் பிரதான கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியை ஓரம் கட்டிவிட்டு இடைத் தேர்தலைச் சந்திக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.

 தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதனால் இடைத் தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியைக் கழற்றிவிட்டுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இடைத் தேதலில் பிரசாரம் செய்வதற்க்கு ராமதாஸ், விஜயகாந்த்,சரத்குமார் ஆகியோரிடம் உதவி கேட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சியின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு தமக்கு அழைப்பு வரவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னார் வருத்தப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மோதுகின்றன. இது ஸ்டாலினுக்கும்  எடப்பாடிக்கும் இடையேயான மோதலாக வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் பொன்முடிக்கும், சி.வி, சண்முகத்துக்கும் இடையேயான மோதலாகவே விக்கிரவாண்டியில் பார்க்கப்படுகிறது. பொன்முடிக்கு மிக நெருக்கமானவரான புகழேந்தியை விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. இவர்  விக்கிரவாண்டியைச்  சேர்ந்தவரல்லாததால் உள்ளூரில் கொஞ்சம் புகைச்சல் உள்ளது.

சி.வி.சண்முகத்தின்  சொற்படி  முத்தமிழ்ச்செல்வனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. வேலூரில் அடைந்த தோல்வியை சரிக்கட்ட சி.வி.சண்முகம் விக்கிரவாண்டியை கையில் எடுத்துள்ளார். விக்கிரவாண்டியின் வெற்றி பொன்முடிக்கும், சண்முகத்துக்கும் அத்தியாவசியமானதால் வெற்ரி பெறுவதற்காக இருவரும் கடும் முயற்சி செய்வார்கள். விக்கிரவாண்டியின் முன்னாள் உறுப்பினர் ராதாமணி, அந்தத் தொகுதிக்கு அதிகம் நன்மை   செய்யவில்லை என்றாலும் பொன்முடியின் உறுதிமொழிக்கு கொஞ்சம்  செல்வாக்குள்ளது.

நாங்குநேரியில் போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. காங்கிரஸ் அடம்பிடித்து தொகுதியை வாங்கியது. நாங்குநேரியின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வசந்தகுமாரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி ரூபி மனோகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரூபி மனோகரன் நாங்குநேரியைச் சேர்ந்தவரல்ல என்ற குற்றச்சாட்டை அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். உள்ளூர்காரரான நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கியுள்ளது.

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தனக்கு விசுவாசமானவர்களையே எடப்பாடி  வேட்பாளராகியுள்ளார். ஒரு தொகுதியில் தனக்கு வேண்டியவரை வேட்பாளராக்குவதற்கு பன்னீர்  முயற்சி செய்தார். எடப்பாடியின் சதுரங்க ஆட்டத்துக்குமுன் பன்னீர் தோற்றுப்போனார். சீமானின் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை நிருத்தியுள்ளது. இயக்குநர் கெளதமன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும், போட்டி பிரதான கட்சிகளுக்கிடையில்தான் எனபதில் சந்தேகமில்லை.