Showing posts with label சூரன். Show all posts
Showing posts with label சூரன். Show all posts

Sunday, August 25, 2024

தேடினேன் கிடைத்தது.

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் , அம்மன் கோயில் ஆகிய இரண்டு ஆலயங்களின் மீது எனது மாமி செல்வி சூரன் சிவபாக்கியம் ஊஞ்சல் பாட்டு  எழுதியதாக படிக்கும் காலத்தில் அறிந்தேன். அது ஒரு சம்பவம் என நினைத்து காலப் போக்கில் அதனை மறந்து விட்டேன்எனக்குத் தேவையான ஒரு சிலவற்றைப் பற்றித்தேடல் செய்தபோது அவை ஞாபக்த்துக்கு வந்தன.

அது சம்பவம் அல்ல, வரலாறு, ஆவணம் என்பதை உணர்ந்துகொண்டேன். இரண்டு கோயில்களுக்குமான ஊஞ்சல் பாடல்களைப் பற்றி பலரிடம் கேட்டேன்.  தெரியாது எனும் பதில்தான் கிடைத்தது.

புலோலி, துன்னாலை,வல்லிபுரக்குறிச்சி  ஆகிய ஊர்களில் உள்ள ஏதோ ஒரு அம்மன் கோயிலுக்கு மாமி ஊஞ்சல் பட்டு எழுதியதாக ஞாபகம் எந்த ஊர் என்பது சரியாக ஞாபகம்  இல்லை. அந்த அம்மன் கோயில் ஊஞ்சல் பாட்டு எழுதியதைப் பற்றிய சம்பவத்தை மாமி எனக்குச் சொன்னது  பசுமையாக மனதில் உள்ளது.

கோயிலுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. ஊஞ்சல் பாட்டு கட்டாயம் வேண்டும்என குருக்கள் சொன்னார். அப்போது  அங்கிருந்தவர்கள், அந்தக் காலத்தில்  பிரபலமாக இருந்த பண்டிதர், புலவர் போன்றோரின் பெயரை கூறி அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம் என்றார்கள்.

கோயிலைக் கும்பிடச்சென்ற மாமிநான் எழுதுகிறேன்என்றார்.

ரீச்சர் உங்களால் முடியாது. வேறை ஆக்களிடம் கொடுக்கலாம்என சிலர் சொன்னார்கள்

அங்கு நின்ற ஒரு சிறுவனிடம் காசைக் கொடுத்த மாமி கொப்பி வாங்கி வரும்படி கூறினார். கோயில் மண்டபதில் இருந்து ஒரு மணித்தியாலத்தில்  ஊஞ்சல் பாட்டை எழுதினார். அதனைப் பார்த்த குருக்கள் பாராட்டினார்.

பொன்னூஞ்சல் பாடல் எழுதியமைக்காக கோயில் கும்பாபிஷேகத்தின் போது  சூரன் புத்திரி சிவபாக்கியத்தைப் பாராட்டி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். எமது ஊரில் இருந்து திரு.கமலாகரன், திரு புவனேந்திரன் ஆகிய இருவரும் அந்த விழாவுக்கு சென்றனர். அந்த விழாவைப் பற்றி இருவரும் எனக்குப் பலமுறை சொன்னார்கள்.

அட்சரத்த்தின் ஏற்பாட்டில் புலவரின் பாடல்களை இறுவட்டாக வெளியிடுவதற்காக புலவரைப் பற்றிய  புத்தகங்களைத் தேடினேன். தன்னிடம் சில புத்தகங்கள் இருப்பதாக திரு குலசேகரம் அவர்கள் சொன்னார்கள். உடனே அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றேன்.  மாமி எழுதிய ஊஞ்சல் பாடல் பற்றி அவரிடம் வினவினேன். புலோலி மனோன்மணி அம்மனைப் பற்றியது எனச்சொல்லி தன்னிடம் புத்தகம் இருக்கிறது என்றார்.

புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. வீட்டுக்குள் போய் ஐந்தி நிமிடங்களில் வந்து காணவில்லை. கிடக்கும் தேடித்தருகிறேன் என்றார்.  சிறகடித்த பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து விழுந்தது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலின் பெயர் தெரிந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன்.

ஒருமாதத்தின் பின் இன்று கலையில் வீட்டுக்குவந்து  திருப்பொஞ்னூஞ்சல்புத்தகத்தைத் தந்தார். அம்மன் அருள் கிடைத்ததுபோல் மகிழ்சி ஏற்பட்டது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், போன்றவர்கள் பாடல் எழுதிய கதையைப் படித்து வியக்கும் எனக்கு  அன்று எனக்கு இந்த ஊஞ்சல் பாடலின்கதை வியப்பாகத் தெரியவில்லை.

திருவூஞ்சல் பா  அமைந்த கதை என  அம்பாள் அடியான் திரு . நடராசா அந்தப் புத்தகத்தில் குறுப்பிட்டுள்ளார்.

 

Monday, June 26, 2023

சூர தரிசனம்


 

யாழ்ப்பாணத்து இனிய நினைவுகள்  8


----------------------

இம்முறை யாழ்ப்பாணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை அதில் ஒன்று நான் கண்ட சூர தரிசனம் ஆகும்

சூர தரிசனமா?  என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

. ஆம் அது எனக்கு ஒரு  தரிசனமாகவே இருந்தது

கிழக்கு பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகத்துறையில் எம் பில் பட்டம் மேற்கொள்ளும்  வினோகா   எனும் மாணவி தேவரையாளி  இந்து கல்லூரியினை  நிறுவிய சூரன் எனும் பெரியாரையும். அவரின் கல்விப் பணிக ளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்

அவருக்கு நானும் ஒரு மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின கடமைகளுள்  ஒன்று  மாணவருக்கு உதவியாக களப்பணியில் ஈடுபடுவ தாகும். ( இதை அவர் செய்யாமலும் விடலாம்)  

 மாணவருடன் கள ஆய்வு வேலைகளில் ஈடுபட இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்

ஒரு நாளின் பெரும் பகுதியை அதற்கு ஒதுக்கினேன்

அதன்படி அன்று காலை அச்சுவேலி சென்று காரில் விவோகாவை ஏற்றிக் கொண்டுகொண்டு தேவரையாளி இந்துக் கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்றேன்

தேவரையாளி  இந்துக் கல்லூரியில் எம்மைக் காத்துக் கொண்டு நின்றார் சூரனின்  பேரனான ரவி வர்மா அவர்கள்

கல்லூரியின் முன்னால் சூரன் என்னும் பெரியாரின் உருவச்சிலை நீண்டு உயர்ந்து   மிகக்  கம்பீரமாக நின்று. கொண்டு இருந்தது

ஏனைய தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் போல சூரன் அமர்ந்து  கொண்டிராமல் நின்று கொண்டிருந்தமை எனக்கு ஒரு குறியீடாகக் காணப்பட்டது

யாழ்ப்பாணத்தில் அன்று நிலவிய கல்விச் சமத்துவமின்மைக்கு எதிராக போராடி

ஒரு நிறுவனத்தையே நிறுவிய அவரைப் பற்றி எனக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஏற்கனவே கூறி இருந்தார்

பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார்  கார்த்திகேசு அங்கே   ஒரு காலத்தில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தெரியும்

சிறிது நேரத்தில் அங்கு வன்னிய குலம்

ராஜேஷ் கண்ணா

 எஸ் கே லோகநாதன்

வதிரி ரவீந்திரன்

போன்ற புத்திஜீவிகள் வந்து விட்டார்கள்

சிலர் ஏற்கனவே நான் அறிந்தவர்கள்

உரையாடல் தொடங்கியது

கலந்துரையாடல் மெருகேற மெருகேற  அகழ்வாய்வில் அசாதாரணமான பொருட்கள் மேற்கிளம்புவது   போல பல புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கின

மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்வது போல மனிதர்களின் மனதை தோண்டியும் அகழ்வாய்வு செய்ய வேண்டும்

மண் தரும் உண்மைகள் போல மனமும் பல உண்மைகளைத் தரும்

ஆங்கிலம் கற்பிக்கும் சைவப் பாடசாலைகளை ஆறுமுகநாவலர் ஆரம்பித்த காலத்தில்  அப் பாடசாலைகளில் பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்படவி ல்லை 

படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு மறுக்கவும்  பட்டது

முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

அதனை ஓரளவு போக்கியவர்கள் கிறிஸ்தவர் மிஷனரிகளே

இந்த நேரத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை சைவ  அறிஞர்கள் புரவலர்கள்  துணையுடன் ஆரம்பித் தார்கள்

அத்தகைய. ஒரு  பாடசாலை ஏனைய ஆங்கிலப் பாடசாலைகளில் கற்கும் சந்தர்ப்பம் ஏற்படாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது

அந்தப் பாடசாலையின் முன்னோடியாகதா திகழ்ந்தது தேவரையாளி இந்து கல்லூரி என்பது புரிய வந்தது

தேவரையாளி இந்துக் கல்லூரி நிறுவிய சூரனின் கல்விப் பணிகளை  ஆறுமுகநாவலரின் பணிகளின் நீட்சி என்று கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

ஆறுமுக நாவலர் அன்று  யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்களாக  இருந்த

செல்வந்தரிடமிருந்து பணம் திரட்டியது போல

 சூரனும் அப் பிரதேசத்தில் மேல் எழுந்த வர்த்தகர்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது


இதற்கு சமாந்தரமாக சிங்களப் பகுதிகளில் பாடசாலைகளும் ஆரம்பித்துள்ளன

இலங்கை கல்வி வரலாற்றை  ஆராய்பவருக்கு   இவை  முக்கிய தகவல்கள் ஆகும்

 மர வேலையிலே தேர்ச்சி பெற்ற  தொழிலாளியாக இருந்த  சூரன் தன் சுய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்.

அது ஒரு காலத்தின் வரலாறு ஆகும்

 அதைப் பதிப்பித்திருக் கிறார்  இருக்கிறார் ராஜ ஸ்ரீகாந்தன்

அதற்கான ஒரு அழகான முன்னுரையும் எழுதி இருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

 அந்நூல் எமக்குப் பல பழைய தகவல்களைத் தருகின்றது

பாடசாலையின் வரலாறு

 அதனை உருவாக்க நடத்திய போராட்டங்கள்

 அதில் கல்வி கற்றோர்

 கற்பித்தோர்

அதன் மூலம் உயர்நிலை அடைந்தோர்

எனப்பல தகவல்களை அங்கு வந்தோர் உரையாடினர்

நீங்கள்  வராவிட்டால் இவ்வளவு பேர்களையும் ஒன்றாகச்சந்தித்திருக்க முடியாது சேர்

 என்று விவோவா கூறினாள்

நிறையத் தகவல்களை ஒருங்கே பெற்றுக் கொண்ட பெரு மகிழ்ச்சி அவளுக்கு

அங்கு வந்திருந்த ராஜேஷ் கண்ணா சமூகவியல் விரிவுயாளர்

அவர் பார்வை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

அவரது விளக்கங்கள் என்னை புதிய திசைகளில் சிந்திக்க வைத்தன

இன்றைய இளம் தலைமுறையின் பார்வை அது.

 அவரிடம் ஆலோசனைகள்  பெறுமாறுமாறு. நான் விவோகாவைக் கேட்டுக் கொண்டேன்.

 விவோகாவுக்கு உதவி புரியுமாறு அவரிடமும் கேட்டுக் கொண்டேன்

 அவர் தான் எழுதிய மூன்று நூல்களை எனக்குத் தந்தார்

மதிய உணவு உண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் விவேகா தன் வீட்டில் எனக்கான மதிய உணவுகளைச் செய்திருந்தாள்

நண்பர் கலாமணி அந்த ஊரவர். அவர் சுகயீனமுற்று இருப்பதாக அறிந்தேன்

அவரைச் சந்திக்க மனம் அவாவியது

நண்பர் ரவீந்திரனும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்

தேவரையாளி கல்விச் சமூகத்திடம் இருந்து விடைபெற்று கலாமணி வீடு நோக்கிச் சென்றேன்

பாடசாலைக்கு வெளியே வரும்போது மீண்டும் சூரன் சிலைக்கு முன்னால்  நின்றேன்

அப் பெரியார் இன்னும் பெரிதுயர்ந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் செய்தல்

அன்னயாவிவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறிவித்தல்

என் பாரதி பாடல் ஞாபகத்துக்கு வந்தது

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழை மக்களுக்காக ஒரு பாடசாலை நிறுவிய சூரன்

என் மனதை நினைத்து நின்றார்

மீண்டும் சூரன் சிலையை நோக்கினேன்

இன்னும் அது  நெடிதுயர்ந்து நின்றது

இப்போது சொல்லுங்கள்

அது

 சூர தரிசனம் தானே?

 

Friday, September 27, 2019

சைவப்பெரியார் சூரன் பெருமானார்


இலங்கை சைவநெறிக் கழகமும் யாழ்ப்பாண விழாவும்

கடந்த சனிக்கிழமை ( 21 -09 - 2019) யாழ்ப்பாணம்,இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் வெகுசிறப்பாக இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுகவிழா நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்களுடன் சைவஞானபானு ஆறு.திருமுருகன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். பல கல்விமான்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழா புதியதொரு அத்தியாயத்தினைத் தோற்றுவித்துள்ளதென்பது எம் நம்பிக்கை. இவ்விழா சிறப்புற மூவர் முதன்மைக்காரணர். எமது கழகத்தின் காப்பாளர்களாகிய விடைக்கொடிச்செல்வர்,சைவநெறிக் காவலர் சைவத்திரு.சி.தன்பாலா அவர்களும்,கொழும்பு கதிர்வேலாயுதசுவாமி கோயில் அறக்காவலர் சைவத்திரு.கரகரத்தினம் ரகுநாதன் அவர்களும் கழகத்தின் யாழ்.ஒருங்கிணைப்பாளர் சைவத்திரு.ஜீவா.ஷஜீவனும் அவ்முதன்மைக்காரணர்.

எமது கழகத்தினால் 2018ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் நாள் சைவம்போற்றுதும் விழா வெகுசிறப்பாக கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதுவே எமது அமைப்பின் முதலாவது விழாவாகும். இலக்கியத்தையும் பண்பாட்டையும் சைவசித்தாந்தத்தையும் இணைக்கும் கந்தபுராணப்பாரம்பரியத்தின் நீட்சியாக, சைவவிழாவாக இவ்விழா திகழ்ந்ததென்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்காதென்பது திண்ணம். அனைவராலும் பாராட்டப்பட்ட இவ்விழாவினைத் தொடர்ந்து, எமது இருநூல் வெளியீட்டுவிழா கொழும்பில் நடைபெற்றது. இவ்விழா, எமது ஒழுக்கமைப்பில் ஒரு சறுக்கலாகவே இருந்ததென்பது உண்மை. விழாவின்போது எமது கைகளில் வெறும் 20 புத்தகங்களே இருநூல்களிலும் கிடைத்திருந்தன. எனவே முதன்மை,சிறப்பு விருத்தினர்களுக்கு மாத்திரமே கையளிக்கக்கூடியதாகவிருந்தது.விழாவின்போது அச்சகத்தாரால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிடுமென்ற உத்தரவாதம், இறுதியில் பலிக்காமல்ப்போய்விட்டது.எனினும், விழாவில் கலந்துகொண்ட பேச்சாளர்களின் தரமான உரைகள், விழாவின் தரத்துக்கு மகுடமாய் விளங்கியதெனலாம்.
அதனைத்தொடர்ந்துஇ எமது கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழாவில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்களுடன் பலகல்விமான்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவும் சைவம்போற்றுதும்போல் ஓர்வெற்றிவிழாவாகவே அமைந்திற்று. அவையில் 110 பேர் குறைந்தபட்சம் கலந்துகொண்டதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அதிலும் விழாமுடியும்வரை அனைவரும் இருக்கையைவிட்டு எழும்பாது,இலயித்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கையின் மட்டக்களப்பு,மலையகம்,யாழ்ப்பாணம் என்னும் பலபிரதேசங்களின் சங்கமாக எமது அமைப்புத் திகழ்வதை முதன்மை,சிறப்பு விருந்தினர் கொண்டாடினர். சைவத்திற்கு நடந்துவரும் கேடுகளை பல்கலைக்கழகப் பெருந்தகையினர் உணர்ந்துகொண்டு,மாற்று உபாயகங்களைக் கைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்தினர். இன்றுவரை அதற்குரிய பணிகளை அவர்கள் முன்னெடுப்பதாக, நம்பிக்கையூட்டிவருகின்றனர்.

இவ்விழாவினைத் தொடந்து  யாழ்ப்பாணத்தில் இருநூல் அறிமுகவிழா கைக்கெட்டியது. யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 50 பேரே விழாவுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் வந்திருந்த அனைவரும் கனதியானவர்களென்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் குறைந்தபட்சம் 40 பேர்வரையே அவைகூடும் என்று அனுமானித்திருந்தமையால்  ஏற்கனவே இதுபோன்ற நூல்வெளியீட்டு விழாக்களுக்கு அன்புக்கட்டளைகளால் ஆட்களை இழுத்துவருகின்ற பழக்கமே தற்சமய யாழ்ப்பாண வழக்கமாக இருக்கின்றதென்ற அங்குள்ள பெரியவர்களின் விழாவுக்கு முன்னைய அனுபவப்பகிர்வுகளினால்  கூட்டத்திற்குரிய எண்ணிக்கை- திருப்திகரமானதேயாகும்.
ஸ்மார்த்தத்தின் பிடிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் சைவத்தினை மீட்டெடுத்து இளைஞர்களின் தோளில் ஏற்றவேண்டுமென்று கனவுகாணும் இளைஞர்கள் சிலரும் தாமே முகநூலினூடாக அறிந்து  அவைக்கு வந்திருந்தமை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஊட்டியது.

இவ்விழா இருநிகழ்வுகளை பிரதானமாகக் கொண்டிருந்தது.
1. நூல் அறிமுகம்
2. இந்துவெனும் பெயரில் சைவத்தை வீழ்த்தி  அசுர வளர்ச்சிகண்டுவரும் ஸ்மார்த்தம்.
நூல் அறிமுகத்தில். சிவப்பிரகாசககதவம் நூல் அறிமுகவுரையை ஆற்றுவதற்கு தயாராகவிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் உறவினர் தவறிவிட்டமையினால்  அவரால் கலந்துகொள்ளமுடியாத இயலாமைக்குள் உள்ளாயினார். எனினும் திருவருட்துணையால் விரிவுரையாளர் சைவத்திரு.ஜெயந்திரன் அவர்கள் முன்வந்து  வெறுமனே 15 நிமிடத்தயார்ப்படுத்தலில்  சிறப்புரையை வழங்கினார். உண்மையில் இவ்விழாவில் அவருக்கு பேசவேண்டுமென்று நான் அவரிடம் கடந்தவருடமே கதைத்திருந்தேன்.எனினும் அது நேரப்பிரச்சினைகளால் விழாத்திட்டமிடலில் சித்திக்கவில்லை.ஆனால்  கொடுத்த வாக்கைத் தவறிவிட்டோம் என்னும் மனவருத்தம் அடிநெஞ்சுக்குள் இருந்தவாறேயிருந்தது. ஈற்றில்  திருவருள் அவரையே சிவத்தைப் பிரகாசிக்க நியமித்தமை எம்மை வியப்புள் ஆழ்த்திற்று. திருவருள் நிச்சயம் உண்டு!!!!!!!
அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் அறிமுகவுரையும் அற்புதமாக நிகழ்த்தப்பட்டது. காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் கூடிய பொதுச்செயலாளரின் ஏற்புரை- ஒரு கந்தபுராண அரங்கேற்றத்தின் காட்சியை கண்முன்னே கொணர்திற்று.
ஸ்மார்த்த இந்துத்துவம்  சைவசமயத்தின் கொடிமுதல் கோயில்வரை செய்துள்ள சீரழிப்புக்களையும் ஸ்மார்த்தம்-சைவம் வேறுபாடுகளையும் பட்டியலிட்டு நாம் நடத்திய  கணினி அரங்களிக்கை நிகழ்ச்சி - அவையோரை விழிப்புக்குள்ளாக்கியதென்பதில் நம்பிக்கையுண்டாயிற்று. எமது அரங்க அளிக்கையை முடித்ததும்  அவையிலிருந்து ஒருவர் எழும்பினார். ஒருநிமிடம் கதைக்கலாமோ என்று வினாவினார். எதிர்ப்புக்குரலோவென்று யோசித்தவாறு அனுமதித்தோம். "இங்குள்ள பெருந்தகைகள் நினைத்தால் சைவத்தைக் காப்பாற்றலாம்" என்று கூறி  இப்படியொரு அரங்க அளிக்கையை நடத்தி உண்மைகளை இங்குள்ளவர்கள் உணருமாறு வழியேற்படுத்தியமைக்கு நன்றியென்று கூறினார். சைவத்தின் மகுடமென்று இணுவிலுக்கு ஒருபெயருண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால்  அவையே அவருக்குக்கொடுத்த கரகோசத்தில் அது உறுதியாயிற்று.கண்ணாரக்கண்டேன்.

எம் அரங்க அளிக்கையின் பின்னர்  சைவஞானபானு அவர்கள் சைவத்தினைக் காப்பதற்கு முதலில் செய்யவேண்டியவையென்று பல நடைமுறைச்செயற்திட்டங்களைக் கூறினார். அவற்றை இலங்கை சைவநெறிக் கழகம் ஏற்கனவே முன்னெடுத்துவருகின்றமையை சைவப்புலவர் சைவநெறிச்செம்மல் செல்லத்துரை ஐயா அவர்கள் அவைக்குத் தெளிவுபடுத்தியதோடு குழந்தைக்கு உயிர் இருந்தால்த்தான் அது தவழ நடக்கப்பழக்கமுடியுமென்பதையும்-உயிரில்லாத குழந்தைக்கு தவழ,நடக்கப்பழக்குவதில் பயனில்லையென்பதையும் உணருமாறு நல்லுரையொன்றை ஆற்றினார்கள். சைவத்தின் தத்துவம்,தனித்துவம் காத்தாலத்தான், சைவசமயத்தின் ஏனைய விழுமியங்களைக் கட்டமைக்கமுடியுமென்பதற்கு நாவலரின் பணிகளிலிருந்து நாம் தெளியலாம். சைவம் அழியாதென்று கொடுக்கும் நம்பிக்கைகளெல்லாம்  இலங்கையைத் தமிழர் ஆளலாமென்று சேர்.பொம்.அருணாசலம்கொடுத்த நம்பிக்கையை ஒத்ததேயென்பதை அவையோர் உணர்ந்திடவேண்டுமென்று எண்ணிய எமக்கு  சைவநெறிச்செம்மல் அவர்களின் உரை திருப்தியாக்கிற்று.
பல்கலைக்கழக சமஸ்கிருதப்பீடத்தலைவர் சிவத்திரு. பாலகைலாசநாத ஐயர் அவர்கள், "எம்மைச் சிந்திக்கத்தூண்டியுள்ளது" என்று உரையாற்றினார்கள். அவரது உரை திருவருள் சைவத்தைக் கைவிடாது என்பதன் வெளிபாடாகவிருந்தது. முதுநிலைப்பேராசிரியர் வேதநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய உரையும்  அவர் எம்முடன் தனிப்பட்டரீதியில் கதைத்தவிடயங்களும்- இலங்கை சைவநெறிக் கழகம் சரியான பாதையில் நடப்பதால்- தடைகளும் இடர்களும் ஏராளம் சந்திக்கவேண்டியிருக்கும் என்னும் அவர்தம் அனுபவத்தினை எம்முள் விளைக்கச்செய்திற்று.

இவ்விழாவில், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனத்தில் தங்கம்மா அப்பாக்குட்டியார் போன்ற பெருந்தகையினர் சேர்க்கப்படவில்லையென்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இங்கு சைவக்கற்புக்கு பங்கமில்லாது வாழ்ந்தார் மட்டுமே பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்தவிரும்புவதோடு பல சைவக்கற்புடை பெரியார்கள் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படாமைக்குக் காரணம் - அவர்களெல்லோரும் இப்பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டவர்களின் பணிகளைத் தொடர்ந்தோரேயொழிய-தொடக்கியவர் அல்லர் என்பது பொருட்டாகும். இவைபற்றி விரிவான உரையாடல்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் தயாரகவேயுள்ளது. ஏற்கனவே வேளாளர்களாலும் சிவப்பிராமணர்களும் மட்டுமே சைவப்பெரியார்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இலங்கைச்சைவ சமூகத்தில்  அவர்கள் மட்டுமே பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்  சைவப்பெரியார் சூரன் பெருமானாரைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமைபற்றி வருந்துவதற்குப்பதில்  சைவப்பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டுள்ள தங்கம்மா அப்பாக்குட்டியார்  இப்பிரகடனத்தில் இல்லையென்று வெளிவந்த வருத்தம்- எமக்குப் பெரும் ஏமாற்றமேயாகும்!!!! இணுவிலில் அனுபட்ச ஆஞ்சநேயர் தனிக்கோயிலுக்கு வித்திட்ட தங்கம்மா அப்பாக்குட்டியாருக்கும் அனுபட்சக்கோயிலில் நடந்துவந்த மிருகபலியை தம்முயிரைத் தியாகம்செய்யவெளிக்கிட்டுத் தடுத்துநிறுத்தி சம்புபட்சக்கோயிலாக மாற்றிய சைவப்பெரியார் சூரன் பெருமானாரும் ஒரேதாராசில் வைத்து அளக்கப்படக்கூடியவர்கள் அல்லர்!!!! ஆதலாலேயே பிரகடனத்தில் இல்லை!

விழா முடிந்ததும் எமது கழகத்தின் உறவுகள் "அண்ணா நீங்கள் பலருடைய எதிர்ப்பை சம்பாதிக்கின்றீர்களே.......எங்கள் கழகத்தினை வளரவிடுவார்களா???'' என்றனர். அதைத்தான் முதுநிலைப் பேராசிரியர் வேதநாதன் பெருமானாரும் எமக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று அவர்களிடம் கூறிவிட்டு எல்லாம் திருவருட்சம்மதம் என்றேன்!!!!!
மருத்துவர்.சைவத்திரு.கி.பிரதாபன்
தலைவர். இலங்கை சைவநெறிக் கழகம்