Monday, November 30, 2015

அரசியல் அரங்கில் உருவாகும் மோடிக்கு எதிரான அலை


இந்தியப் பொதுத்தேர்தலில் வீசிய மோடி அலையால் ஆட்சி பீடத்தில் இருந்த  காங்கிரஸ் கட்சி  தூக்கி  எறியப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன்  இணைந்த சில மாநிலக் கட்சிகளும் மோடி அலையில்  மூழ்கின. பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார்,லல்லு,சோனியா ஆகியோர் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியால் மோடிக்கு எதிரான அலை தோன்றும் சாத்தியம் உருவாகி உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் பீகார் முதல்வரின் பதவி ஏற்ப்பு விழாவில்   பங்குபற்றியது நம்பிக்கையை  ஏற்படுத்தி  உள்ளது.
. பீகார் சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று அணி அமைவதற்கான வலுவான அடித்தளத்தை பீகார் தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது.. இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிராக முன்னாள் பிரதமர், எட்டு முதலமைச்சர்கள் உட்பட 35  கட்சிகளின்  தலைவர்கள் பீகார் முதல்வராக நிதீ ஷ்குமார் பதவியேற்கும்   விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், சிக்கிம் முதல்வர் சாம்லிங், மணிப்பூர் முதல்வர் இபோபிசிங், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முதல்வர் சித்தராமையா
 ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் குலாம்நபி ஆசாத், தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா


 டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா, குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்,



 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா அமைச்சர் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரகாஷ் அம்பேத்கர், இந்திய தேசிய லோக்தளத்தின் அபய் சவுதாலா, ராம்ஜேத்மலானி, முன்னாள் எம்.பி.க்கள் எச்.கே. தூவா, ராஜ்பப்பர் ஆகியோர் நிதீஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த மூன்று தலைவர்களும் ஒண்றிணைந்ததைப்போல் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து  பாரதீய  ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்  என விரும்புகின்றனர்.  அதற்கு அச்சாரமாக பீகாரில் ஒன்று  கூடி  ஆலோசனை நடத்தினர்.
  பீகார்  மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார்  பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்  லல்லு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பீகார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்,  லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதீ ஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, கோலாகலமாக  நடைபெற்றது. இதில், நிதீஷ் குமார், ஐந்தாவது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு, கவர்னர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், தலா, 12 பேர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர் காங்கிரசார்.



பீகார் சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற,  லல்லு பிரசாத்தின் இரு மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரில், 26 வயதான தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதீஷ் அமைச்சரவையில், இம்முறை புதுமுகங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்; அத்துடன் நிதீஷ் மற்றும்  லல்லு கட்சிகளைச் சேர்ந்த இரு பெண்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


நிதீஷ்குமாரின் அமைச்சரவை ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இதே போன்ற செயற்திட்டத்தை ஏனைய மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்  என்பதே வடமாநிலத் தலைவர்களின் விருப்பம்.மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கை இல்லாமல் செய்தால் நாடாளுமன்றத்  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கலாம். பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்கு கொள்கைகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு   ஒன்றிணையும்  திட்டம் ஆரம்பமாகிவிட்டது. பாரதீய ஜனதாவின்  ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையத் தயாராகிவிட்டன. பாரதீய ஜனதாவின் தயவில் உள்ள மாநில ஆட்சியையும் அகற்றுவதற்கு வடமாநிலத் தலைவர்கள் தயாராகிவிட்டனர்.

தமிழகத்திலிருந்து சென்ற ஸ்டாலின்,டி.ஆர்.பாலு ஆகியோருடன் வடமாநிலத்தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வையிலேயே தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் தலைவர்களிடையே  உள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் மத்திய அமைச்சர் ஒருவர் அவரைச் சந்தித்ததையும், தமிழகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி  மரபை மீறி ஜெயலலிதாவை  அவரது வீட்டிலே சந்தித்ததையும் ஏனைய தலைவர்கள் ரசிக்கவில்லை. பாரதீய ஜனதாவை வீழ்த்தும் அதேவேளை அக்கட்சியின் ஆசிபெற்ற ஜெயலலிதாவையும் அகற்ற வேண்டும் என விரும்புகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக  ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர மோடி விரும்புகிறார்.  ஆனால் ஜெயலலிதா அதற்குத் தயாராக  இல்லை. தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவரது குறிக்கோள்.  நாடாளுமன்ற தேர்தலில்   தமிழகத்தில்  மோடியின் அலை  வீசவில்லை. ஜெயலலிதா இல்லை என்றால் தமிழகத்தில்  பாரதீய ஜனதா செல்லாக்  காசாகிவிடும்
 தமிழக அரசியல் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் உள்ளன. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ,நிதீஷ் குமாரை முன்மாதிரியாகக் கொண்டு திராவிட முன்னேற்றக்   கழகம்  இறங்கி வரவேண்டும் என  ஸ்டாலினுக்கு ஆலோசனை  கூறப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை  திராவிட முன்னேற்றக்   கழகம்  ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக எந்தக் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்   கூட்டணி சேர விரும்பவில்லை.

ராகுல்,விஜயகாந்த்,அன்புமணி ஆகியோர் ஸ்டாலினை பகைவனாக கருதுகிறார்கள் . இந்தப் பகை ஒழிந்தால் ஜெலயலிதாவை வீழ்த்துவது சுலபம். இதனை வடமாநிலத் தலைவர்கள் ஸ்டாலினுக்கு உணர்த்தி உள்ளனர்.

  தமிழகத்தில் தனித்து நிற்கும் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி   சேர்வதெனத்தெரியாது தடுமாறுகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு ராகுல் விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலையில் காங்கிரஸ் இருப்பதனால் வடமாநிலத் தலைவர்கள் ராகுலை வழிக்குக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் கனவில் இருக்கும் விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புகிறார். மோடிக்கு எதிரான அலையால் அவரின் கனவு தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியைக் காட்டி விஜயகாந்தை கூட்டனியில் சேர்க்கும் திட்டம் உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் வைகோ தலைமையிலான கூட்டணி உடைந்துவிடும்.மோடிக்கு எதிரான அலையில் ஜெயலலிதா அள்ளுப்படுவாரா அல்லது தப்பிப்பிழைப்பாரா என்பதை தேர்தல் நெருங்குகையில் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
29/11/15

 


Monday, November 23, 2015

தமிழகத்தைப் புரட்டிய வெள்ளம் மந்தகதியில் அரச உதவி


இயற்கை அன‌ர்த்தங்கள்  அவ்வப்போது தனது கொடுங்கரங்களை அகல‌ விரித்து உலகை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. இயற்கையின் கோரத்தாண்டவங்களினால் உலக வரைபடம் மாற்றமடையும் சம்பவங்களிம் அரங்கேறி உள்ளன.   தமிழகத்தில் பெய்த கடும் மழையால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளைக் களைவதற்கு தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்தச்சந்தர்ப்பத்திச் சாதகமாகப் பய படுத்திய எதிர்க்கட்சிகள களத்தில் இறங்கின. எதிர்க் கட்சிகளின் சுறுசுப்பைக் கண்ட தமிழக அரசு நிவாரனபணியை முடுக்கியது.

 தமிழகத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாகஇது வரை 204 பேர் இறந்துள்ளனர். . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது  .   மழை வெள்ளம் காரணமாக  சென்னை பெருநகரமே வெள்ளத்தில் மிதந்தது.  . காஞ்சிபுரம்திருவள்ளூர் மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரி நீர் அடையாறுகூவம்கொசஸ்தலை ஆறுகளில் திறந்துவிட சென்னையில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

 பலத்த மழையின் காரணமாகவும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் புதன்கிழமை வரை 204 பேர் மழைக்கு இறந்துள்ளனர்  . இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 55 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேரும்திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரும் இறந்துள்ளனர்.


 மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்க முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பதை மற்றைய அரசியல்தலைவர்கள் சாடியுள்ளனர்.வழமைபோன்றே உடனடியாக செவிமடுக்காத ஜெயலலிதா 29 நாட்களின் பின்னர் தலமைச்செயலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.மக்களுக்கு உதவும் அவசர முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் அங்கு அதிகமானோர் இறந்துள்ளனர். நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய சிதம்பரம் மாவட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பொலிஸார் விரட்டினர். 

2004 ஆம் ஆண்டு சுனாமி, 2005 ஆம் ஆண்டு நீலம் புயல், 2011 ஆம் ஆண்டு தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் இப்போது வெள்ளத்தால் சீரளிந்துள்ளது.,ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உடமைகளையும் உறவுகளையும் இழந்து இருக்க இடமின்றி தவிக்கின்றனர்.தமிழக நிர்வாகம் அசமந்தமாக இருப்பதால் மக்களின் உணர்வுகள் கொந்தளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இருந்தன.நிலமையை உன்னிப்பாக அவதானித்த ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.கருணாநிதி,விஜயகாந்த்,ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜன் ஆகியோரும் தமது கட்சிசார்பாக நிவாரண உதவிகளை  அறிவித்தனர்.

வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வேளையில் வீடியோ கொன்பிரன்சிங்மூலம் ஜெயலலிதா புதிய பாலங்களைத்திறந்தார். 2001ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நடந்து சென்று சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதா இன்றைய வெள்ளப்பாதிப்பை கண்டும் காணாதது போல் இருந்தார். இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்காக தமிழக அமைச்சரவையே ஆர்கே நகரில் குவிந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து ஆறுதல் கூற எந்த அமைச்சரும் முன்வரவில்லை.ஜெயலலிதாவின் உத்தரவு இன்றி சுயமாகச் செயற்படமுடியாத நிலையில் அமைச்சர்கள் உள்ளனர்.


மக்களின் வேதனையும் மற்றைய அரசியல் தலைவர்களின் கண்டனங்களும் ஜெயலலிதாவை கொஞ்சம் அசைய வைத்தன.டெம்போவானில் இருந்தபடியே நிலமைகளைப் பார்வையிட்டார். மக்களின் கையைபிடித்து ஆறுதல் கூறவில்லை.வெள்ள நிவாரணம் கொடுத்த அமைச்சர்கள் சிரித்தபடி போஸ்கொடுத்தனர். இதுவும் மக்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தால் தமிழகம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில்  திராவிட முன்னேற்றக்கழகமும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகமும் டிஜிற்றல் பிரசாரத்திகால் பதித்துள்ளன.

 மோடியை பிரதமராகவும், நிதீஷ்குமாரை முதல்வராகவும் பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கிஷோர் குமாரை திராவிட முன்னேற்றக் கழகம் தனது டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த ஒரு முக்கிய ஊடகத்தின்  துணையின்றி, சோஷியல் மீடியாக்கள் துணையோடு பிரதமரானவர்   நரேந்திர மோடி என்று  கூறப்படுவதுண்டு. அந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட குழுவின் தலைவர்  பிரசாந்த் கிஷோர். பீகாரை பிறப்பிடமாகக்கொண்ட . 37 வயதாகும், பிரசாந்த் கிஷோர் ஐ.நாவில் சுகாதார நிபுணராகப் பணியாற்றியவர். 2011ல் இளம் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து இந்திய மக்களின் ஆக்ஷன் கமிட்டி (IPAC – Indian People’s Action Committee என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்

 இவரது திறமையை அறிந்து 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும் 2014 மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடி இவரை தன்பக்கம் இழுத்து தேர்தல் வியூகங்களை வகுக்கச் செய்தார். அதற்கு கைமேல் பலன்களும் கிடைத்தன.

 தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுவரை எந்த அரசியல் கட்சியும் இப்படியொரு ஒரு பிரசாரத்தைச் செய்ததில்லை என்பதால் மோடியின் வெற்றி கிஷோர் மீதான மதிப்பை  பல மடங்கு அதிகரித்துவிட்டது
 இந்நிலையில்தான் மோடியிடமிருந்து திடீரென விலகிய கிஷோ,நிதீஷ்குமார் கூட்டணிக்காக திட்டமிடலை கொடுத்து வெற்றிபெறச் செய்துள்ளார். 145 தொகுதிகளில்  வென்று காட்டுவேன் என்று அவர் கூறி  . அதை செய்தும் காட்டியுள்ளார்.

 300 பேர் கொண்ட குழுவுடன்  பீகார் தேர்தல் உத்திகளை வகுத்து நிதிஷ்குமாரை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் நிதிஷ்குமார் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை கூட நிர்ணயித்துள்ளார் கிஷோர். 

 இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம்   அவசரஅவசரமாக கிஷோரை சந்தித்து தேர்தல் பிரச்சார உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம்  பொருளாளர் ஸ்டாலின் பிரசாரத்தின் பின்னால் இருந்து வடிவமைப்பவர் அவரது மருமகன் சபரீசன் என்று கூறப்படுகிறது. சபரீசனே நேரடியாக கிஷோரை சமீபத்தில் சந்தித்திருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

 இருதரப்பின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக பிரசாந்த்துடன் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான செலவு மற்றும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்திற்கான கட்டணமும் பெரிய அளவில் பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது. இவரின் திட்டம் ஸ்டாலினை முன்னிறுத்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 ஏற்கனவே விஷன் 234என அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம் டிஜிட்டல் களத்துக்குள் புகுந்துவிட்டது. ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்,தழைக்கட்டும் தமிழகம்! செழிக்கட்டும் தமிழர்கள்,தொடரட்டும் மேம்பாடு! ஜொலிக்கட்டும் தமிழ்நாடுஎன  பிரச்சாரங்களை தொடங்கிவிட்டது.

 தமிழகத்தில் தகவல் தொழிநுட்பப் பிரிவை முதலில் ஆரம்பித்தது அண்ணா . திராவிட முன்னேற்றக் கழகம். இந்தப் பிரசாரத்திற்கு பின்னால் இருப்பவர் ஐ.டி. பிரிவு செயலாளரும், தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான சுவாமிநாதன். இவர் துறைசார்ந்த வல்லுநர் என்பதோடு கட்சியின்  உறுப்பினரும் ஆவார். டிஜிட்டல் உலகில் ஜொலிக்க போவது பிரசாந்த் கிஷோரா அல்லது சுவாமிநாதனா என்ற கேள்விக்குதமிழக சட்டசபை தேர்தல் முடிவு பதில் சொல்லிவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
22/11/15

Friday, November 20, 2015

பீகாரின் பாதையில் செல்லுமா தமிழகம்?


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்பதை பீகார் தேர்தல் உணர்த்தி உள்ளது.பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக பரம எதிரிகளான லல்லு,நிதீஷ்குமார்,சோனியா ஆகிய மூவரும் கெளரவத்தைக் கைவிட்டு ஓரணியில் நின்று சாதித்துள்ளனர்.கருணாநிதி,வைகோ,திருமாவளவன்,ராமதாஸ்,வாசன்,இளங்கோவன்,சிதம்பரம்,நல்லகண்ணு,பி.மகேந்திரன்,விஜயகாந்த் ஆகியோர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.பீகாரில் மூன்று தலைவர்கள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாவை விரட்டினார்கள்.தமிழகத்தில் பத்துக்குமேற்பட்டதலைவர்கள் ஆளுக்கு ஒருதிக்கில் நிற்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

தமிழக அரசியல் தலைவர்களின் வரட்டுக்கெளரவம் ஜெயலலிதாவின் வெற்றிக்கு செங்கம்பள‌ம் விரித்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம்.அவரின் விருப்பத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் சிரமேற்கொண்டு செவ்வனே நிறைவேற்றிவருகின்றனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் பெருவெற்றி பெற்றார்.பாரதீய ஜனதாகூட்டணியில் வைகோ,விஜயகாந்த்,ராமதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளரும் ராமதாஸின் மகன் அன்புமணியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.தனித்தனியாகப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.அதே போன்ற ஒருநிலையே எதிர் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் நடைபெறும் நிலை உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைவிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி  ஆறு சதவீதம் குறைவாக உள்ளது. ஆறு சதவீத வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டிய நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம்.கூட்டணிக் கதவை அகலத்திறந்து வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏனைய கட்சிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வருடம் செப்டெம்பரில் நடைபெற்ற கட்சிமாநாட்டில் ஜெயலலிதாதான் பொது எதிரி என  பகிரங்கமாக அறிவித்த வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டினார். ஸ்டாலின்,கருணாநிதி ஆகியோரை வைகோ சந்தித்ததார். உயர்நிலைக் குழுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என வைகோ அறிவித்ததனால் இரண்டு கட்சித் தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.இந்த உற்சாகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.வைகோ தலைமையில் மக்கள் நல கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சி யடைந்துள்ளது.
மக்கள் நலக் கூட்ட‌ணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள்,கொம்யூனிஸ்ட்  கட்சி, மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கு 6 முதல் 8 சதவீதமே உள்ளது.இந்தக்கூட்டணியால் வாக்குகளைப்பிரிக்க முடியுமே தவிர ஆட்சியைப்பிடிக்க முடியாது.இந்தக்கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால்  ஜெயலலிதா ஆட்சியை இழப்பது நிச்சயம்.

விஜயகாந்தின்கட்சிக்கு 5 முதல் 8 சதவீத வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல்58 சதவீத வாக்கு வங்கி உள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் கருணாநிதி முதல்வராகி விடுவார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொக்கி நிற்பதனால் பிரதான எதிர்க் கட்சிகள் ஒரே பாதையில் செல்ல விரும்பவில்லை.

கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என திராவிட முன்னேற்றக் கழ்கத்தினர் நினைக்கின்றனர்.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆதரவாளர்களின் விருப்பம்.ஒரேகட்சியினுள் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும் விந்தையான அரசியல்த‌மிழகத்தில் நிலவுகிறது. முதல்வர் கனவில் இருக்கும்  விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேரத்துடிக்கிறார். பாரதீயஜனதாவின் வாக்கு வங்கி பரிதாபமாக  உள்ளது.தமிழகத்தில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. தமிழக கட்சிகளின் தயவை நம்பியே பார‌தீய ஜனதா உள்ளது. இவை எல்லாவற்றையும் தெளிவாகத்தெரிந்து கொண்ட விஜயகாந்த்,ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் கூட்டணி இல்லை என மேடைதோறும் பிரசாரம் செய்கின்றார்.அவரின் மனைவி ஒருபடிமேலேபோய் கருணாநிதியை மிக மோசமாகத் தாக்குகிறார்.

தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ராமதாஸ் திராவிட முன்னேற்றக்கழகத்தை மிக மோசமாக விமர்சிக்கின்றார். அவருடைய மகன் அன்புமணி, ஸ்டானினுடன் மல்லுக்கட்டுகிறார். ஆளும்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அதனை வழிநடத்தும் ஜெயலலிதாவையோ விமர்சிக்காக தகப்பனும் மகனும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் குறிவைப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவரான ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரான ராகுலுக்கும் பொருத்தம் சரியில்லை. இவர்களின் பிடிவாதத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணையவில்லை.அதன் பலனாக பொது எதிரியான ஜெயலலிதா வெற்றி பெற்றார்.இவர்கள் இருவரும் தமது வரட்டுகெளரவத்தைக் கைவிட்டால் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் இல்லையேல் மீண்டும் அவர் முதல்வராவதைத் தடுக்க முடியாது.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.மக்கள் நலக்கூட்டணியை உடைத்து  திருமாவளவனை உள்ளே இழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அந்தக்கூட்டணியைப் பாதுகாக்க அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தன்னாலானதைச் செய்யக்  காத்திருக்கிறது. வைகோவின் கட்சியின் முக்கியஸ்தர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.இறுதி நேரத்தில் இன்னும் சிலர் அங்கிருந்து வருவார்கள் என திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.இதே வேளை விஜயகாந்தின் கட்சியை உடைக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் காய் நகர்த்துகிறது.

ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் விரும்பினாலும் தமிழகத்தலைவர்கள் விரும்பவில்லை.பீகார்  மாநிலத்தலைவர்கள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாக் கட்சியை மண்கெளவ வைத்ததை முன்மாதிரியாகக்கொண்டு தமிழகத்தலைவர்களும் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்தால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறவேறும் இல்லையேல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்..

ரமணி
தமிழ்த்தந்தி
15/11/15