Saturday, October 31, 2020

டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி

   இஷான் கிஷானி அதிரடியால் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி

பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் நானயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன்  பொலாட்  பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து, டெல்லி கபிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் ஓட்டம் எடுக்காமல் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்


 

அடுத்து வந்த கப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், பிரித்வி ஷா 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார் 

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் கப்டன் ஷ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 25 ஓட்டங்கள்எடுத்த  ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை வீரர் சாஹர் பந்து வீச்சில் வெளியேறினார் 

அடுத்துவந்த மார்க்கஸ் ஸ்டாயினஸ் 2 ஓட்டங்களில் வெளியேறினார். 24 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.


 

அடுத்து வந்த ஷிம்ரான் ஹேட்மயர் (11 ஓட்டங்கள்), ஹர்ஷ் பட்டேல் (5), அஸ்வின் (12) மும்பை பந்து வீச்சில் அடுத்தடுத்து   வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட்  ஆகியோர்தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.   

இதையடுத்து, 110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இஷான் கிஷன்,   குவிண்டன் டிகாக் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 28 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்திருந்த டிகாக் டெல்லி வீரர் நார்ட்ஜீ பந்து வீச்சில் வெளியேறினார் 

ஆனால், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் டெல்லி அணியின் பந்துவீச்சை நாளாபுறமும்  சிதறடித்தார். இதனால் 14.2 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்த மும்பை அணி வெற்றி இலக்கான 111 ஓட்டங்களை எட்டியது


 

இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. 

47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர் உள்பட 72 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் மற்றும் 11 பந்துகளில் 12 ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி


 

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சம்சன் ஆகியோரி அதிரடியில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ரோயல்ஸ் 

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

மந்தீப் சிங் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.. அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


 

இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 46 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டகெயில் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. 

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.


 

உத்தப்பா நிதானமாக ஆட, ஸ்டோக்ஸ்  அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் சேர்த்தனர். இதில் ஸ்டோக்ஸ் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் இறங்கினார். 

நிதானமாக ஆடிய உத்தப்பா30  ஓடங்களில் ஆட்டமிழந்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ஓட்டங்களில் வெளியேறினார். 

அடுத்து ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ஓட்டங்களுடனும், பட்லர் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது. 

ராஜஸ்தான் பெற்ற 6வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.