Friday, July 3, 2026

குரோஷியாவின் கோலை மறுத்த ஸ்னிக்கோ தொழில்நுட்பம்

போத்துகல்,குரோஷியா ஆகியவற்றுக்கிடையே  டொராண்டோவில் நடைபெற்ற போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் போத்துகல் வெற்றி பெற்றது.

கூடுதல் நேரத்தின் இறுதிக் கட்டத்தில் ரூபன் நெவ்ஸ் பந்தைத் தனது சொந்த வலைக்குள் திருப்பியபோது, குரோஷியா அணி ஆட்டத்தைக் கூடுதல் நேரத்திற்கு இழுத்துவிட்டதாக நினைத்தது. ஆனால், VAR மறுஆய்வுக்குப் பிறகு அந்த கோல் ஒஃப்சைட் காரணமாக இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர், குரோஷிய வீரர் பந்தைத் தொட்டாரா என்பதைத் தீர்மானிக்க, கிரிக்கெட்டில் அதன் பரவலான பயன்பாட்டிற்காக நன்கு அறியப்பட்ட 'ஸ்னிக்கோ' தொழில்நுட்பமும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தொழில்நுட்பம், 2022-ல் கட்டாரில் நடைபெற்ற  உலகக் கிண்ணத்  தொடர் முதல் அதன் VAR அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

"உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ போட்டிப் பந்தான அடிடாஸ் ட்ரியோண்டாவில் உள்ள 'கனெக்டட் பால் டெக்னாலஜி' வழங்கிய தரவுகளின்படி, போத்துகலுக்கு எதிரான கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர் குரோஷியாவின் இகோர் மட்டனோவிச் பந்தைத் தொட்டது நிரூபிக்கப்பட்டது. இதன்மூலம் நடுவர் ஓஃப்சைட்டைச் சரியாகத் தீர்மானித்து, கோலை நிராகரிக்க முடிந்தது," என்று ஃபிஃபா கூறியது.

டிரையோண்டா பந்தினுள் பொருத்தப்பட்டுள்ள IMU சென்சார்கள், பந்தில் ஏற்படும் மிகச்சிறிய தொடர்பையும் கண்டறியும் திறன் கொண்டவை. இது ஒளிபரப்பில் பார்வையாளர்களுக்கு 'இதயத்துடிப்பு வரைபடம்' போலக் காட்டப்பட்டு, வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான தரவுகளை வழங்குகிறது.

  

உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்ட கோட்டி காக்போ

  உலகக் கிண்ண  32 அணிகள் சுற்றுப் போட்டியில் மொராக்கோவுக்கு எதிராக நெதர்லாந்து விளையாடியபோது   92-வது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்து சமன் செய்தது. கோல் அடித்த கோடி காக்போ, பின்னர் கண்ணீர் விட்டு அழுதார்.

கோல் அடிக்கும் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு  அழுவது வழமையானதே. ஆனால்,  கோட்டி காக்போ தன் சிசுவை இழந்த துயரத்தில் அழுதார். சக வீர்ரர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். 

தன் சிசுவை  இழந்த துயரத்தில் இருந்தபோதே ஆடுகளத்திற்குத் திரும்பிய காக்போவின் உணர்ச்சிப்பூர்வமான கோல், அவரது குறிப்பிடத்தக்க வலிமையைக் காட்டியதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

தன் சிசுவை  இழந்த துயரத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, தன் நாட்டிற்காக கோல் அடித்ததன் மூலம், நெதர்லாந்து முன்கள வீரர் கோடி காக்போ  உலகக் கிண்ணப் போட்டியில்  மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் ஒன்றை நிகழ்த்தினார்.

காக்போவும் அவரது காதலி நோவா வான் டெர் பிஜும், கர்ப்ப காலத்தில் தங்கள் மகன் எலிஜா ரபேல் காக்போ காலமானதை அறிவித்தனர்.

  பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி 16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

 

 

மிகைல் ஒயர்சாபல் இரட்டை கோல் வென்றது ஸ்பெய்ன்


 லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோஃபி மைதானத்தில்  ஆஸ்திரியாவை எதிர்த்து விளையாடிய ஸ்பெய்ன் 3-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இப்போட்டியில் மிகைல் ஒயர்சாபல் இரட்டை கோல் அடித்து ஸ்பெயினின் வெற்றியை எளிதாக்கினார்.

 ஆரம்பம் முதலே ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் அணி பந்தை அதிகம் தன் வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தியது.  ஆட்டத்தின் ஆரம்பத்தில் மார்க் குகுரெல்லா அடித்த கோல், பவ் குபார்சி ஆஃப்சைடு பகுதியில் இருந்ததால் நடுவரால் மறுக்கப்பட்டது. பின்னர், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் குகுரெல்லா கொடுத்த துல்லியமான கிராஸை பயன்படுத்தி மிகைல் ஒயர்சாபல் முதல் கோல் அடித்து ஸ்பெயினுக்கு 1-0 என முன்னிலை தந்தார்.  

இரண்டாவது பாதியில் ஆஸ்திரியா அணி மாற்று வீரர்களைக் களம் இறக்கி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றது. முன்னதாக, அலெக்ஸ் பேனா அடித்த ஃபிரீ கிக் பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் அலெக்ஸ் பேனா கொடுத்த பாஸை பயன்படுத்தி பெட்ரோ போரோ ஹெட்டர் மூலம் கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடித்த முதல் கோலாகும். தொடர்ந்து ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது (89-வது நிமிடம்), குகுரெல்லா கொடுத்த துல்லியமான கிராஸை மீண்டும் ஒயர்சாபல்  கோலாக மாற்றி ஸ்பெயினின் 3-0 என்ற வெற்றியை உறுதி செய்தார்..ஓயர்சபல் அடித்த இரண்டு கோல்களுக்கும் மார்க் குகுரெல்லா உதவினார்

  இந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில்  ஸ்பெய்ன் இதுவரை ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்கவில்லை. ஆஸ்திரியா அணி இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கத் தவறியதால், உனை சைமன் தொடர்ந்து நான்காவது முறையாக கோல் எதுவும் விடாமல் தடுத்தார்.

இந்த  வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி தனது அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பலம் வாய்ந்த போத்துகல் அணியை டல்லாஸ் நகரில் திங்கட்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.

இப்போட்டியை ஹாலிவுட் பிரபலங்களான பெனிலோப் குரூஸ், ஜேவியர் பார்டெம் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.