Thursday, June 25, 2026

தோல்வியடைந்தாலும் வரலாறு படைத்தது கனடா

உலகக்  கிண்ணத் தொடரின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கனடா அணி தனது உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடின. இதனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. சுவிஸ் கேப்டன் கிரானிட் ஷாகா மற்றும் கனடா வீரர் கைல் லாரின் இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி   கோல் அடித்து சுவிஸ் அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அடுத்த 11வது நிமிடத்தில்   இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி, பந்தை கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பி சுவிட்சர்லாந்தின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இதற்கிடையில், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய கனடாவின் பிராமிஸ் டேவிட், தான் விளையாடிய முதல் பந்திலேயே அபாரமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.  சுவிட்சர்லாந்து 2 - 1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே பிரிவில் கனடா அணி இரண்டாவது இடம் பிடித்து தனது உலகக்  கிண்ண வரலாற்றில் முதல்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

 

 

   

அதிர்ச்சியளித்த ஹெய்ட்டி மீண்டு வந்த மொராக்கோ


   உலகக் கிண்ணத் தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹெய்ட்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ அணி, குரூப் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய போதிலும், ஹெய்ட்டி அணி இப்போட்டியில் மொராக்கோவுக்கு கடுமையான சவாலை அளித்தது.

இந்த ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே ஹெய்ட்டி வீசிய பந்து, துரதிர்ஷ்டவசமாக மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ மீது பட்டு ஓன் கோலாக (Own Goal) மாறியது.   39வது நிமிடத்தில் அதன் கப்டன் அஷ்ரப் ஹகிமி கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஹெய்தியின் வில்சன் இசிடோர் தூரத்திலிருந்து ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 2-1 என மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

 43வது நிமிடத்தில் ஹகிமி கொடுத்த பாஸை இஸ்மாயில் சைபாரி கோலாக மாற்ற, முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. சைபாரிக்கு இது நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ந்து 3வது கோலாகும்.   78வது நிமிடத்தில் மொராக்கோவின் மாற்று வீரர் சுஃபியான் ரஹிமி ஒரு கோல் அடித்து அணியை முதன்முறையாக 3-2 என முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 20 வயதான கெசிம் யாசின் மற்றொரு கோல் அடிக்க, மொராக்கோ அணி 4-2 என்ற கணக்கில் திரில் வெற்றியை உறுதி செய்தது. இந்த கோல் போஸ்ட்டின் எல்லையைக் கடந்ததா என்ற சர்ச்சை எழுந்த போதிலும், 'வார்' தொழில்நுட்ப சோதனையின் மூலம் கோல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி 7 புள்ளிகளுடன் குரூப் சி பிரிவில் 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பிறேஸில் அணி அதே 7 புள்ளிகளுடன் சிறந்த கோல் அடிப்படையில் முதலிடம் பிடித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்  கிண்ணத்தில்  விளையாடிய ஹெய்தி அணி புள்ளிகள் ஏதுமின்றி வெளியேறினாலும், தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை வென்றது.

 


வினி ஜூனியர் அதிரடி ஸ்கொட்லாந்தை வீழ்த்திய பிறேஸில்


 உலகக்  கிண்ணத் தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், ஸ்கொட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிறேஸில் அணி, குரூப் பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய இப்போட்டியில் வினிசியஸ் ஜூனியர் இரட்டை கோல்கள் அடித்து அசத்தினார்.

மியாமி மைதானத்தில் 64,478 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியின் 10வது நிமிடத்திலேயே வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார்.  நடப்பு உலகக்  கிண்ண  லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் கோல் அடித்துள்ள வினிசியஸ் ஜூனியருக்கு இது 4வது கோலாகும். இதன் மூலம் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்தில் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அவர் உள்ளார்.


  முதல் பாதி முடிவடைவதற்கு சற்று முன்பாக 43.3 செக்கன்களில்   வினிசியஸ் ஜூனியர் தலையால் முட்டி  இரண்டாவது கோலை அடித்தார். 60 ஆவது நிமிடத்தில்   மேதியஸ் குன்ஹா 3வது கோலை அடித்து 3-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தார்.

இப்போட்டியின் போது மைதானத்தில் மிகப்பெரிய கொண்டாட்டம் கோல் அடிக்காத போதுதான் நிகழ்ந்தது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், கடந்த 2023 அக்டோபருக்குப் பிறகு காயம் காரணமாக விளையாடாமல் இருந்த 34 வயதான நெய்மர் மாற்று வீரராக களம் இறங்கினார். அவர் 10வது எண் ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் எழுந்து நின்று பலத்த கோஷமிட்டு வரவேற்றனர்.

 

 

Wednesday, June 24, 2026

ரொனால்டோ சாதனை அசத்தியது போத்துகல்


   உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்துகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக, காங்கோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரொனால்டோ எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் தமக்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவருக்கு நிகரான வீரராக கருதப்படும் மெஸ்ஸி, ஆர்ஜென்ரீனா விளையாடிய முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்தது ரொனால்டோ மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. இருப்பினும், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து ரொனால்டோ தனது விமர்சகர்களின் வாயை அடைத்ததோடு புதிய வரலாற்றையும் படைத்தார்.

உஸ்பெகிஸ்தான் , ஆஸ்திரியா ஆகிய நாடுகளுகு எதிராக ரொனால்டோவும், மெஸ்ஸியும்  அடித்த கோல்களின் மூலம், இருவரும் மற்றுமொரு சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதாவது, ஒரு வீரரின் முதல் மற்றும் சமீபத்திய உலகக்  கிண்ண கோல்களுக்கு இடையிலான மிக நீண்ட கால இடைவெளியை (சரியாக 20 ஆண்டுகள் மற்றும் 11 நாட்கள்) இவர்கள் எட்டியுள்ளனர். இவ்விரு வீரர்களும் தங்களது முதல் உலகக் கிண்ணத் தொடர் கோலை கடந்த 2006 ஆம் ஆண்டு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை போர்ச்சுகல் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்தால், கால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் ஆர்ஜென்ரீனா அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதே சமயம், போத்துகல் இரண்டாம் இடத்தைப் பிடித்தால், இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகும்.

காங்கோ அணிக்கு எதிரான ஏமாற்றமளிக்கும் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ரொனால்டோ ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே ஜோவோ கான்செலோவின் லோ கிராஸ் (low cross) பந்தை கோலாக மாற்றி ரொனால்டோ கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர், புருனோ பெர்னாண்டஸ் கொடுத்த த்ரூ-பாஸைப் பெற்று, உஸ்பெகிஸ்தான் கோல்கீப்பர் அப்துவோஹித் நேமடோவை வீழ்த்தி முதல் பாதியிலேயே தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 34 முறை பந்தைத் தொட்டு விளையாடினார். இதில் எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் 10 முறை பந்தைக் கையாண்டதுடன், இலக்கை நோக்கி 7 முறை பந்தை அடித்து, அதில் 5 முறை இலக்கைத் துல்லியமாக எட்டினார். அவரது இந்த சிறப்பான பங்களிப்பிற்காக அவர் ஆட்டநாயகனாகத் (Man of the Match) தேர்வு செய்யப்பட்டார்.

 2026 உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் இலக்கை நோக்கி அதிகமுறை (5 முறை) பந்தை அடித்த வீரர்களின் பட்டியலில் என்னர் வலென்சியா (vs குராசோ) ,ஜொனாதன் டேவிட்    [vs கட்டார்) ஆகியோருடன் ரொனால்டோவும் இணைந்துள்ளார். இந்த இரண்டு கோல்களின் மூலம், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்களை அடித்த யூசிபியோவின் (Eusebio) சாதனையை ரொனால்டோ முறியடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் இவரது கோல்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்ததுடன், அவரது தொழில்முறை வாழ்க்கையின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 975 ஆக அதிகரித்துள்ளது.

 

கலக்கியது கானா தடுமாறியது இங்கிலாந்து


  உலகக்  கிண்ண  குரூப் L போட்டியில்  கானாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து  0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. 

  நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கிண்ணத்தின்   கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது  இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை. 

  உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என   விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இரண்டு போட்டிகளில் இருந்து இங்கிலாந்தும் கானாவும் தற்போது தலா நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து 'L' பிரிவில் முன்னிலை வகிக்கிறது. 

 

200 போட்டிகளில் விளையாடி வரலாறு படைத்த மோட்ரிச்


 

கனடாவின் டொராண்டோவில் உள்ள டொராண்டோ ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2026   உலகக் கிண்ண  'எல்' பிரிவு போட்டியில்,   பனாமாவை எதிர்த்து விளையாடிய குரோஷியா பனாமாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  குரோஷிய நடுக்கள வீரர் லூகா மோட்ரிச், 200  ஆவது சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வரலாற்றில் நான்காவது ஆண்   வீரர் ஆனார்.  

மாற்று வீரரான ஆன்டே புடிமிர் 54-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார். இதன் மூலம், குரூப் L-ல் குரோஷியா இந்தப் போட்டியில் தனது முதல் மூன்று புள்ளிகளைப் பெற்றதுடன், இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் புள்ளி எதுவும் பெறாத பனாமாவையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

2006 ஆம் ஆண்டு ஜேர்மனியில் தனது உலகக்  கிண்ணப் போட்டியில் அறிமுகமான      மோட்ரிச் [40] , 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய   கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ,குவைத்தின் பாதர் அல்-முத்தாவா ஆகியோருடன் இணைகிறார்.  

57-வது நிமிடத்தில், பனாமாவின் கார்னர் கிக்கிலிருந்து ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கி, மரியோ பாசலிச்சை கோலை நோக்கி அனுப்பியதன் மூலம், குரோஷியாவின் முன்னிலையை இரட்டிப்பாக்க மோட்ரிச் உதவினார். ஆனால், அந்த நடுக்கள வீரரின் ஷாட் தடுக்கப்பட்டது. 43,036 ரசிகர்களின் முன்னிலையில், 81-வது நிமிடத்தில் மோட்ரிச் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார். அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பப்பட்டது.

குரோஷியாவின் இந்த வெற்றியானது  சுமார் நாற்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டின் மிகச் சிறந்த தொடர் வெற்றிகளில் ஒன்றைத் தொடரச் செய்கிறது. 1998-ல் தனது முதல் உலகக் கிண்ணப்  போட்டிக்குப் பிறகு, குரோஷியா 2018-ல் ஒருமுறை இரண்டாம் இடத்தையும், 1998 ,2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

 

Monday, June 22, 2026

  உலகக் கிண்ண  பார்வையாளர்களின் எண்ணிக்கை  23 இலட்சத்தைத் தாண்டியது

 

 

 

பீபா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 உலகக் கோப்பை போட்டி பார்வையாளர் வருகையில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில்  நடைபெறும்  இப்போட்டியின் முதல் 36 ஆட்டங்கள் மொத்தம் 23,07,947 பார்வையாளர்களை  ஈர்த்ததாக  உதைபந்தின் உலகளாவிய நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது காலி இருக்கைகள் காணப்பட்டபோதிலும், இது ஒரு போட்டிக்கு சராசரியாக 64,100 பார்வையாளர்கள் வருகை தந்ததைக் குறிக்கிறது. மேலும், மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 99.54 சதவீதம் நிரம்பியிருந்தது.

அதிக விலையுள்ள பயணச்சீட்டு விலைகள் , சில பங்கேற்கும் நாடுகளின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்கள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், இந்த வலுவான பார்வையாளர் வருகை ஏற்பட்டுள்ளது.

 உதைப்ந்தாட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மெக்சிகோவில் அதிக பார்வையாளர் வருகை எதிர்பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவிலும் , கனடாவிலும் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கு, கால்பந்து ஏற்கனவே நன்கு நிலைபெற்ற பல குழு விளையாட்டுகளுடன் கவனத்திற்காகப் போட்டியிடுகிறது