முட்டுக்கட்டை போட்ட ஆளுநர் பதவி
ஏற்புவிழா இரத்து
விஜய்க்கு ஆதரவாக
கொந்தளிக்கும் தமிழகத் தலைவர்கள் மெளனம் காகும் விஜய்
தமிழக சட்ட மன்றத்தில்
அமரப்போகும் 22 சிங்கப் பெண்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
பொற்சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் கூவத்தூர்
கூத்து மீண்டும் வந்தது.
ஸ்டாலினின் முதுகில்
குத்திய ராஜீவ் காந்தி தவெகவுக்கு ஆதரவு. 1967 க்குப் பின்னர் அமைச்சர்
பதவியில் காங்கிரஸ்
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு பெரும்
திராவிடக் கட்சிகளை வெளியேற்றிய தவெக புதிய வரலாறு படைத்துள்ளது. 1967 ஆம்
ஆண்டு காங்கிரஸிடம் இருந்த தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம்
தட்டிப் பறித்தது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என வரிசையாக
தமிழகத்தை கட்டி ஆண்ட திராவிடப் பாரம்பரியத்தை ஸ்டாலினிடம் இருந்து
விஜய் தட்டிப் பறித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108
இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எதுவித தடையும்
இல்லாமல் விஜய் முதலமைச்சராகலாம். விஜய்க்கு வெற்றியை அள்ளிக் கொடுத்த
மக்கள் வெற்றிக் கோட்டையைப் பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 10
உறுப்பினர்களத் தேடிப் பிடித்தால்தான் விஜய் முதல்வராக முடியும்.
முதல் ஆளாகக் களம் இறங்கிய ராகுல் காந்தி
, தவெக தலைவர் விஜய்க்காகக் குரல் கொடுத்தார். தவெகவினர் கொண்டாடி
மகிழ்ந்தனர். திமுகவினர் கொந்தளித்தனர். தோல்வியடைந்தது திமுக மட்டுமல்ல.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது
திமுகவினர் குமுறிக் கொண்டிருக்கையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் எழுப்பியதை
திமுகவினரால் சகிக்க முடியவில்லை.
கூட்டணித் தலைவர்கள்
அறிவாலயத்துக்குச் சென்று ஸ்டலினைச் சந்தித்த அதே வேளையில் ராகுல்
காந்தியின் தூதரும், தமிழக காங்கிரஸ் காரர்களும் விஜய்க்கு பூங்கொத்துக்
கொடுத்து மகிழ்ந்தார்கள்.எதிர்க் கட்சிக்கு சுளையாக 40 எம் பிக்களைக் கொடுத்த ஸ்டாலினுக்குத்
துரோகம் செய்து விட்டதாக திமுகவினர் விமர்சிகின்றார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக
வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக
வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு
தெரிவித்தது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை,
மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ்
அறிவித்தது. தவெக வின் 108 எம்.எல்.ஏ.க்கள் ,காங்கிரசைச் சேர்ந்த 5
எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சித்தலைவர் ,ஆளுநரைச்
சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோருவது வழமையானது. தமிழக ஆளுநர் அர்லேகரை
சந்தித்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின்
108 எம்.எல்.ஏ.க்கள் , காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113
எம்.எல்.ஏ.க்க ளின் பட்டியலை வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118
எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும்
என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத
நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சராக வியாழக்கிழமை
விஜய் பதவியேற்பார் என தவெக தொண்டர்களும், அவரது ரசிர்களும்
எதிர்பார்த்திருந்தனர். பெரும்பான்மை கிடைக்காததால் பதவியேற்பு
விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாத நிலையில் பதவியேற்பு விழா நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தகவல வெளியானது. தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பு
போடப்பட்டிருந்த பாதுகாப்புகள் முழுமையாக அகற்றம்பட்டன. சென்னை நீலாங்கரையில்
உள்ள விஜய் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆளுநரை மீண்டும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதன்படி ஆளுநர் மாளிகையின் அழைப்பின் பேரில் விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகை சென்றார். காலை 11 மணியளவில் விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் ஆளுநரை சந்திக்க சென்றனர். ஆளுநர் மாளிகையில் தவெக தலைவர் விஜய் காரை மட்டும்தான் பொலிஸார் உள்ளே அனுமதித்தனர். விஜய் உடன் சென்றத தவெகவினரின் பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆளுநர் அர்லேக்கர் உடனான தவெக தலைவர் விஜயின் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த சந்திப்பின் போது பெரும்பான்மை குறித்து ஆளுநர் சில கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. எனவே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மெஜாரிட்டியை நிரூபிக்க தயார். முதலமைச்சராக பொறுப்பேற்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என விஜய் உறுதியளித்துள்ளார். அப்போதும் பதவி ஏற்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தத் தடையின் பின்னணியில் பாரதீய ஜனதா அரசு இருக்கும் என தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். முதல்வராகப் பதவி ஏற்கக் காத்திருக்கும் விஜய் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கிறார். என்ன பிரச்சனை என்றாலும் முண்டி அடித்துக் கருத்துக் கூறும் ஆதவ் அர்ஜுனாவின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை.
2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்ததும் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் அதரவுக் கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சசிகலாவை அலைக்கழித்தவர் அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். விஜய் முதல்வராவதைத் தடுப்பதே ஆளுநரின் முக்கிய நோக்கம் எனக் கருதப்படுகிறது. மத்திய அரசின் முகவராகவே அளுநர் கருதப்படுகிறார். மத்திய அரசு செய்ய விரும்புக் காரியங்களை தனது அதிகாரத்தின் மூலம் ஆளுநர் கனகசிதமாகச் செய்வார்.காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்தபோது இதனைத்தான் செய்தது. இன்றைய பாரதீய ஜனதா அரசும் அதனையே பின் பற்றுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற இலக்கை எட்ட முடியாத சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான தருணத்தில், டெல்லியின் நேரடி , மறைமுகத் தலையீடுகள் விஜய்க்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனை விஜய் எதிர் பார்க்கவில்லை. விஜய்க்கு டெல்லி கொடுக்கும் முதல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பான்மை இல்லையென்றாலும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அனுமதித்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும். ஆளுநர் ஏன் அதனைச் செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அரசியல் சதுரங்கத்தில் விஜய் சிக்கி உள்ள நிலையில் பாரதீய ஜனதா அரசு தனது முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும் வேளையில், தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 'பிஎம் ஸ்ரீ' மாதிரிப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த உடனடியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுமாறு மத்தியக் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது
திமுக அரசு, மும்மொழிக் கொள்கையை (ஹிந்தி திணிப்பு) எதிர்த்து இந்தத் திட்டத்தைப் புறக்கணித்தது. இதனால் மத்திய அரசு வழங்க வேண்டிய 'சமக்ர சிக்சா' நிதி முடக்கப்பட்டது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழலில், "நிதியைப் பெற வேண்டுமென்றால் மும்மொழிக் கொள்கையை ஏற்றாக வேண்டும்" என்ற அழுத்தத்தை டெல்லி மீண்டும் பிரயோகித்துள்ளது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று முழங்கிய விஜய், பதவி ஏற்பதற்கு முன்பே மொழிப்போர் , நிதி நெருக்கடி ஆகிய இரண்டு முனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
விஜய்க்கு எதிரான மிக முக்கியமான நெருக்கடி நீதித்துறையிலிருந்து வந்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு மற்றும் சொத்து விவரங்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. எம். ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்: விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வருமானத்தை மறைத்துள்ளார். அவர் மீது ஐபிசி (IPC) பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அமலாக்கத்துறை (ED) மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் முன்பே அவருக்குச் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளைப் போடும் முயற்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் டெல்லி விஜய்யை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதையே இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஆளுநரின் இழுபறி, மும்மொழிக் கொள்கை திணிப்பு, வருமான வரி வழக்கு என மூன்று திசைகளில் இருந்தும் விஜய்க்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்த "டெல்லி ஆட்டத்தை" விஜய் தனது ராஜதந்திரத்தால் எப்படி முறியடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் அமையும்.
பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அதிமுக மூத்த தலைவர்களான ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம் ஆகியோரும் அங்கு சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி , சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்ததாக தகவல் வெளியானது. அதிமுக முன்னாள் தலைவரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கேபி முனுசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது" என்று தெரிவித்தார்.
திருமாவளவனிடமும், இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். இக் கட்டுரை எழுதும் வரை அவர்களின் முடிவு வெளிப்படுத்தப்படவில்லை. தீய சக்தி என விஜய் விமர்சித்த கட்சியின் கூட்டணிகட்சிகளிடம் விஜய் ஆதரவு கோருவதும் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் 2026-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பல்வேறு மாநிலத் தேர்தல்கள் ,இடைத்தேர்தல்களின் முடிவுகள், இந்திய அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாகக் கருதப்பட்ட பல தலைவர்களின் கோட்டைகளைத் தகர்த்துள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் முகங்களாக அறியப்பட்ட தலைவர்கள் தங்களின் சொந்தத் தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவியிருப்பது, பாஜகவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அபாயச் சங்காகவும் பார்க்கப்படுகிறது.
அரசியல் பூகம்பம் தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக நிலவி வந்த திராவிட அரசியலின் பிடி தளர்ந்துள்ளதைக் காட்டும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி பாஜகவிற்கு எதிர்காலத்தில் சாதகமாக மாறலாம். திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் அக்கட்சிவீழ்ந்துள்ளது . தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்துள்ளது. ஒரு முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியை இழப்பது என்பது அந்தப் கட்சியின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
மாற்று அரசியலை முன்னெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது சொந்தத் தொகுதியை இழந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு பலத்த அஸ்ஸாமில் காங்கிரஸின் இளம் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட கௌரவ் கோகாய் தோல்வி, வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் பிடி எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ஜித்து பட்வாரியின் தோல்வி, அங்கு பாஜகவின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. பீகாரில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வீழ்ச்சியைக் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் (UBT) முக்கிய முகமான ஆதித்ய தாக்கரே, தனது தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போராடி வென்றார். அவர்களின் கட்சி வீழ்ந்தது. இது மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்கரே குடும்பத்திற்கு இருந்த செல்வாக்கு குறைந்து வருவதைக் காட்டுகிறது.
வங்கதேசத்தில் மம்தான் பானர்ஜி தோல்வியடைந்தமையும், அங்கு பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்ததும் எதிர்க் கட்சிகளின் பலவீனத்தைக் கட்டியம்கூறுகிறது.
எதிர்க்கட்சிகளின் பலவீனம் இந்தத் தொடர் தோல்விகள் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன: எதிர்க்கட்சிகளின் பலம் வாய்ந்த தலைவர்களை அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே முடக்குவது என்ற பாஜகவின் வியூகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரு கட்சியின் தலைவரே தனது தொகுதியைக் காப்பாற்றப் போராடும்போது, அவரால் மாநில அளவில் அரசியல் செய்ய முடியாத சூழல், வலுவான தலைவர் என்று காட்டிக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வலுவான பாஜகவிற்கு எதிராக எதிராக ஒரு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி இன்னும் உருவாகவில்லை என்பதும், பல மாநிலங்களில் 'இந்தியா' (INDIA) கூட்டணியின் கட்சிகளுக்குள் நிலவும் முரண்பாடுகளும் பாஜகவிற்குச் சாதகமாக அமைந்துள்ளன.
தற்போது இந்தியாவில் பாஜகவிற்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒரு வலுவான தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைமை இல்லை என்ற பிம்பம் உருவாகியுள்ளது. தங்களின் சொந்தத் தொகுதிகளிலேயே செல்வாக்கை இழந்த தலைவர்கள், இனி வரும் காலங்களில் மக்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. 2026-ன் இந்த தேர்தல் முடிவுகள், இந்திய அரசியல் இனி "தலைமுறைகள் தாண்டிய குடும்ப அரசியல்" என்பதிலிருந்து மாறி, "சோசியல் மீடியா மற்றும் புதிய வியூகங்கள்" கொண்ட அரசியலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பாஜக இந்த மாற்றத்தை அறுவடை செய்து, தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களை முழுமையாக மறுசீரமைப்பு செய்யாவிட்டால், வரும் காலங்களில் ஜனநாயகம் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலை நோக்கித் தள்ளப்படலாம்.
ரமணி
10/5/26

