Tuesday, May 19, 2026

ஜேர்மனி அணியில் மீண்டும் மானுவல் நியூயர்

  உலகக்  கிண்ண உதைப்ந்தாட்ட அணியில் நட்சத்திர கோல்கீப்பர்  மானுவல் நியூயர் தேசிய அணிக்குத் திரும்புவார் என  ஜேர்மனிய பத்திரிகையான 'கிக்கர்' தெரிவித்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக ஜேர்மனி பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மான் சமர்ப்பித்த 55 வீரர்களைக் கொண்ட பூர்வாங்கப் பட்டியலில் நியூயர் இடம்பெற்றுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

  யூரோ 2024 போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூயர் அறிவித்திருந்த போதிலும்,  அவரை மீண்டும் அணிக்கு அழைப்பது குறித்து தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக 'கிக்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

  உலகக்  கிண்ண ஜேர்மனியின் முதல்நிலை கோல்கீப்பராக ஹாஃபன்ஹெய்ம், கோல்கீப்பர் ஆலிவர் பாமன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்,   ஸ்டட்கார்ட்டின் அலெக்சாண்டர் நியூபெல் மாற்றுத் தேர்வாகக் கருதப்படுகிறார்.

பாமன், நியூபெல், ஆக்ஸ்பர்க் கோல்கீப்பர் ஃபின் டாஹ்மென், பேயர்ன் மியூனிக்கின் ஜோனாஸ் அர்பிக் ,நியூயர் ஆகியோர் அனைவரும் பரிசீலனையில் இருப்பதாக கிக்கர் செய்தி வெளியிட்டது.

 

    

ஜேமி ஓவர்டன் காயம்சென்னை அணிக்கு பாதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதாகவும், மேலதிக பரிசோதனை   சிகிச்சை என்பனவற்றுக்காக  ஐக்கிய ராச்சியத்திற்குத் திரும்பியதாகவும் சி எஸ் கே  நிர்வாகம் புதன்கிழமை இரவு சமூக வலைதளங்களில் அறிவித்தது

சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது காயங்கள் நிறைந்த ஒரு பருவமாக அமைந்துள்ளது, மேலும் அந்த இங்கிலாந்து வீரர் அதன் சமீபத்திய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.

சமூக வலைதளப் பதிவில், 32 வயதான அவர் எவ்வளவு காலம் விளையாடாமல் இருப்பார் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. 

இந்த சீசனில்  துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஓவர்டனுக்கு இது சிஎஸ்கே-வுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.   

நவீன பென்டத்லான் போட்டியில் விளையாட பெலாரஸுக்கு அனுமதி


  பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய நிறங்கள், கொடி ,தேசிய கீதத்தின் கீழ் போட்டியிட  விளையாட்டின் நிர்வாக அமைப்பு,  செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது

இந்த முடிவு சர்வதேச நவீன பென்டத்லான் யூனியனின் நிர்வாகக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது, 2023 முதல் நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றுகிறது. அந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிந்துரைகளுடன் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை சீரமைத்த பிறகு, பெலாரஸ் நாட்டினர் தனிநபர் நடுநிலை விளையாட்டு வீரர்களாகப் போட்டியிடத் தொடங்கினர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தத் தகுதியின் கீழ் தகுதியை மதிப்பாய்வு செய்ய ஒரு சுயாதீனக் குழுவையும் நியமித்தது.

உலக விளையாட்டு முழுவதும் பெலாரஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ,அணிகள் மீதான மீதமுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஐஓசி பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது. இந்தப் பரிந்துரை, யுஐபிஎம் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு வழிவகுத்தது. அந்தத் தீர்மானம், பசார்ஜிக்கில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைக்கு ஏற்கனவே ஒரு விதிவிலக்குடன், அந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்கால நிகழ்வுகள் அனைத்திற்கும் "உடனடியாக அமலுக்கு வரும் வகையில்" கட்டுப்பாடுகளை நீக்குவதையும், பெலாரஸ் நாட்டினர் தங்கள் தேசிய சின்னங்களுடன் போட்டியிட அனுமதிப்பதையும் முன்மொழிந்தது.

 

நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது, ஜூன் 9 முதல் 13 வரை புடாபெஸ்டில் நடைபெற உள்ள பென்டத்லான் உலகக் கோப்பையிலிருந்து, UIPM போட்டிகளுக்கு பெலாரஸ் நவீன பென்டத்லான் கூட்டமைப்பு முழுமையான பிரதிநிதித்துவக் குழுக்களை அனுப்ப அனுமதிக்கும். இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் அனைத்து வயதுப் பிரிவுகளுக்குமான உலக சம்பியன்ஷிப் போட்டிகளில், குழுப் பதக்கங்களுக்காகப் போட்டியிடவும், தொடர் ஓட்டங்களில் பங்கேற்கவும் பெலாரஸின் திறனை மீட்டெடுக்கிறது.

 

Monday, May 18, 2026

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரிதான சம்பவம்

  .பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டி தரம்சாலா நகரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ,பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியது.

 இந்தப் போட்டியின் போது  நாணயச் சுழற்சியில்  வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி  ஒரு ஓவரை கூட சுழற்பந்து வீச்சாளரை வைத்து வீசாமல் 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது. டெல்லி அணி சார்பாக மிட்சம் ஸ்டார்க், லுங்கி இங்கிடி, ஆகிப் நபி, முகேஷ் குமார், மாதவ் திவாரி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தலா 4 ஓவர்கள் வீசினர். அக்சர் பட்டேல் இந்த போட்டியில் பந்து வீசவில்லை. இதன் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு அணி மொத்தமாக 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வீசியது இதுவே முதல் முறையாக மாறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி இப்படி ஒரு சாதனையை செய்து இருந்தது.

  ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 20 ஓவர்களை வீசுவது 13வது முறையாக அரங்கேறியுள்ளது. அதோடு போட்டியின் இரண்டாம் பாதியில் பந்துவீசிய பஞ்சாப் அணியும் தாங்கள் வீசிய 19 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது குறிப்பிடத்தக்கது

Friday, May 15, 2026

உடைந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமானது தமிழக வெற்றிக் கழகம்


 

  தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு  அன்று சமாதி கட்டியவர் அண்ணா. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு  இன்று புத்துயிர் கொடுப்பவர் விஜய் அண்ணா.

அசைக்கு முடியாத தலைவராக  இருந்த எடப்பாடியைத் தூக்கி எறிந்த அதிமுகவின்  தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சுமக்க முடியாத கடன் சுமை. முதல் நாளே புலம்பிய முதல்வர் விஜய். மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பயணம் ஆகியவற்றுக்குச் சிக்கல்

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழக தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது. சர்கார் படபாணியில் நியாயம் கிடைக்குமா?

தமிழக அரசியல்  எதிர் பார்த்ததைவிட மிகுந்த பரபரப்பாக உள்ளது. ஆட்சியைத் தக்க வைப்பேன் என  நம்பிக்கையுடன் இருந்த ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். விஜய்யைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் காலி எகன் கணக்குப் போட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தனது சட்ட மன்ற உறுப்பினர் யார் எனத் தெரியாமலே, விஜய் சொன்னதற்காக கொத்துக் கொத்தாக வாக்களித்தனர்.

 தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.  10 பேருக்கு விஜய் என்ன செய்யப்போகிறார் என காத்திருக்கையில்  திமுகவுடன் உரசுப்பட்ட காங்கிரஸ், ஓடிப்போய் கைகொடுத்தது. திமுகவின்  கூட்டணியில் வெற்றி பெற்ற க்கங்கிரசை மகிழ்ச்சியுடன் கைகுலுகி வரவேற்றார் விஜய். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதென  திமுக கண்டனம் தெரிவித்தது.

நகமும் சதையுமாக  இருந்த திமுகவும், காங்கிரஸும் கீரியும் பாம்புமாக மாறிவிட்டன. காங்கிரஸின் திட்டம் வேறு விதமாக  இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, தெலுங்கு தேசம் எங்கும்  ஆழமாகக் கால் வைப்பதற்கு விஜய்  உதவுவார்  என்ற தூரநோக்கு என்கிறார்கள் விமர்சகர்கள். விஜய் இல்லாமலே கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட்டது. விஜய்யுடன் சேர்ந்தால் தென் மாநிலங்களில் அறுவடை செய்யலாம் என ராகுல் காந்தி நினைக்கிறார். அரசியல் சதுரங்கத்தில் ராகுல் காந்தி பெரிய தவறு செய்து விட்டார். வட மாநிலக் கட்சிகள் ராகுலை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ராகுல் பிரதமராவதை, மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் மட்டும்தான் ராகுல் காந்தியைத் தூக்கிப் பிடித்தார். இந்திய அரசியலில் ராகுல்காந்தியை தனது தோளில் தூக்கிச் சுமந்தவர் ஸ்டலின் என்ற உண்மை  என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

ச‌ட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்காக நான்கு முறை ஆளுநர் மாளைகைக்கு விஜய் சென்றார்.  போதிய பெரும்பான்மை இலாததால் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.  அரசியல்  தெரியாதவர்களின் வழி காட்டலால் விஜய் அவமானப்படுத்தப்பட்டார். ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில்  திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கொம்யூனிஸ்டுகளும், விடுதலைச் சிறுத்தைகளும் விஜய்க்கு ஆதரவளித்துள்ளன. ஆளுநரின் தலையீடு ஜனாதிபதி ஆஅட்சி என்பன தமிழகத்துக்குள் புகுந்து விடக்கூடாது என்பதே  முக்கிய  கருப்பொருளாகப் பேசப்பட்டது.

பெரும்பான்மையைக் காட்டியதால்  பதவி ஏற்பு வைபவம்  ஒழுங்கு செய்யப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்பே விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் வெளியாகத்தொடங்கின.

பதவி ஏற்பின் போது வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டௌ, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப்பாடப்பட்டதால் தமிழகமே கொந்தளித்தது. அரசாங்கம் அனுப்பிய சுற்று நிருபத்தின் பிரகாரமே பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றதாக தமிழக அரசு குறிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், வங்க தேச மாநிலத்தில் பதவி ஏற்பின் போது  வந்தே மாதரம் பாடப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

விஜக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்   திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி நடத்தப்போவதாக செய்தி தீயாகப் பரவியது. இந்தச் செய்தியால் திமுக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் கடும் கோபமடைந்தனர்.

இந்த வதந்தீக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய ருடேக்கு பேட்டியளித்த ஸ்டாலின் ஆரு மாதங்களுக்குப் பொறுமையாக இருக்கப்போவதாகத் தெரிவித்தாஅர்.  அதிமுகவுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கப்போவது கற்பனை என்றார்.


 இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, தவெக ஆட்சியமைப்பதில் எந்த இடையூறும் செய்யமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதேவேளை  எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையில், சுமார் 30 எம்எல்ஏ-க்கள்,  தனியார் விடுதியில் தங்கியது அதிமுகவில் உள்ள பிளவை வெளிச்சம்  போட்டுக் காட்டியுள்ளது. ஆதவின் மாமியார் லீமாதான் இதன் பின்னணியில் உள்ளதாக எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.

 அதிமுகவில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மூலம் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில், அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார். ஆனால், அந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக  செயல்படுவார் என 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், மாலையில், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டதால், அதிமுகவின் உட்கட்சி மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவத்தின் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. காலையில் இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், மாலையிலேயே அவர் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதர்வான 25 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 29 பேரின் பதவிகளைப் பறித்த எடப்பாடி புதியவர்களை நியமித்தார். அதிமுக எடப்பாடியின் கையில் இருக்கிறது. ஆனால், தமிழக சட்ட சபையில் 25 பேர் எடப்பாடிக்கு எதிராக  இருக்கிறார்கள்.அங்கு சபாநாயரின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எஸ்.பி. வேலுமணி அணி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கும் கொறடாவுக்கே அதிகாரம் உண்டு என எடப்பாடி தரப்பு சொன்னாலும், பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில் எஸ்பி வேலுமணி தரப்புக்கே கொறடா அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என கூறுகின்றனர். ஒருவேளை எஸ்பி வேலுமணி தரப்பு அங்கீகரிக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் எம்எல்ஏ பதவி பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது  எடப்பாடியின் அனி எதிர்த்து வாக்களித்தது. மற்றைய அணி ஆதரவு தெரிவித்தது.  அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், வேலுமணி அணி இதை ஏற்காமல், தாங்களே சட்டமன்றக் குழுவின் உண்மையான பெரும்பான்மை அணி என்றும், சி. விஜயபாஸ்கர்தான் கொறடா என்றும் வாதிட்டு வந்தது. அதன்படி, அவர்கள் தனியாக முடிவு எடுத்து விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி நடந்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே வலியுறுத்தி வந்தது.

இந்த சூழலில் தற்போது எஸ்.பி. வேலுமணி அணியும் அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "உண்மையான அதிமுக சட்டமன்றக் குழு நாங்கள் தான். எங்கள் கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கே சபாநாயகர் அங்கீகாரம் வழங்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், வேலுமணி அணியினர் தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக வாதிட்டு வருகின்றனர். இதனால் சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் அதிமுகவின் எதிர்கால தலைமை யார்? சட்டமன்றக் குழு கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தவெக தனிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டால் அமைச்சர் பதவி கிடைக்கும் எனப்பலர் எதிர்பார்த்தனர். காங்கிரஸும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களும் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படுவதால் விஜய் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.

சட்டசபையில் கேட்கும் கேல்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தடுமாறுவதால் தவெகவினர் நொந்துபோயுள்ளனர். இதை எல்லாம் தாண்டி  விஜய் ச‌மாளிப்பாரா  எனப்தும் கேள்விக்குரியாகவெ உள்ளது. 

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பலர் வெளிநாட்டில் இருந்து சென்றார்கள். விசிலுக்கு வாக்களிக்கப்போவதாக அவர்கள் சொன்னார்கள்.

அவுஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள்  வாக்களித்ததாகப் பேட்டி கொடுத்தார்கள். பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் தமிழகத் தேர்தலில்  வந்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  உள்ள விமான நிலையங்களில் சுமார் 17 பேர்   வாக்களித்த குற்றாச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விட்டால் அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும்.

அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், இங்கு வந்து சொந்தத் தொகுதியில் வாக்களித்ததாக தகவல் வெளியானது.

 இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

அவர்களின் விமானப் பயணங்களை இரத்துசெய்து, அவர்களை  பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குமாறாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளது தெரியவந்தது.

அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர்.விஜய் நடித்த சர்கார் பட பாணியில் மறு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த   உத்தரவிடப்பட்டுள்ளது.

  

 

 

 

 

 

 

 

 

Wednesday, May 13, 2026

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக சபலென்கா எச்சரிக்கை

பரிசுப் பணத்தில் அதிகப் பங்கைப் பெறுவதற்காக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதாக உலக நம்பர் 1 வீராங்கனை அர்னா சபலென்கா செவ்வாயன்று கூறினார்.

"இந்த நிகழ்ச்சி எங்களைச் சார்ந்தது என்று நான் உணர்கிறேன். நாங்கள் இல்லாமல் இந்தப் போட்டியே இருந்திருக்காது, அந்தப் பொழுதுபோக்கும் இருந்திருக்காது," என்று நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற அவர் இத்தாலியன் ஓபனில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிச்சயமாக எங்களுக்கு அதிக சதவீதம் பணம் வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் புறக்கணிப்போம் என்று நினைக்கிறேன். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அதுதான் ஒரே வழி என்று நான் உணர்கிறேன்.

"நாங்கள் வீராங்கனைகள் எளிதாக ஒன்றிணைந்து இதற்காகப் போராட முடியும், ஏனென்றால் சில விஷயங்கள் வீரர்களுக்கு மிகவும் அநியாயமாக இருப்பதாக நான் உணர்கிறேன்." ஒரு கட்டத்தில் இது இந்த நிலைக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வீரர்களும் நான்கு கிராண்ட்ஸ்லாம் நிர்வாகிகளுக்கும் இரண்டு கடிதங்களில் கையெழுத்திட்டனர். அதில், பரிசுத் தொகையை அதிகரித்தல், ஓய்வூதியம் ,மகப்பேறு சலுகைகளை மேம்படுத்துவதற்காக வீரர் நல நிதியில் பணம் செலுத்துதல், அத்துடன் தங்களைப் பாதிக்கும் முடிவுகளில் தங்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவற்றை அவர்கள் கோரியிருந்தனர்.

போட்டி வருவாயில் 22 சதவீதப் பங்கைப் பெறுவதை அந்தக் கடிதங்கள் இலக்காக நிர்ணயித்தன. இது, ஏடிபி ஆண்கள் சுற்று மற்றும் பெண்கள் டபிள்யூடிஏ சுற்று ஆகியவற்றால் நடத்தப்படும் ஒன்பது ஒருங்கிணைந்த 1000-நிலை நிகழ்வுகளுக்கு இணையாக மேஜர் போட்டிகளைக் கொண்டுவரும்.

இருப்பினும், நான்கு முறை பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டிகளைப் புறக்கணிப்பது "கொஞ்சம் அதீதமானது" என்று நம்புகிறார்.

கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் அறிவித்த 9.5 சதவீத பரிசுத்தொகை உயர்வு போதுமானதாக இல்லை என்று வீரர்கள் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸ் 395 மில்லியன் யூரோக்கள் ($463 மில்லியன்) வருவாய் ஈட்டியதாகவும், இது 14 சதவீத அதிகரிப்பு என்றும் அந்த அறிக்கை கூறியது.இருப்பினும், மொத்த பரிசுத்தொகை வெறும் 5.4 சதவீதம் மட்டுமே உயர்ந்ததால், வருவாயில் வீரர்களின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டு வருவாய் 400 மில்லியன் யூரோக்களைத் தாண்டும் என்றும், வீரர்களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 

இத்தாலிய ஓபன் போட்டியிலிருந்து விலகினார் மார்டா கோஸ்ட்யூக்


   இடுப்பு , கணுக்கால் பிரச்சினைகள் காரணமாக இத்தாலிய ஓபன் போட்டியிலிருந்து விலகினார்உக்ரைனைச் சேர்ந்த மார்டா கோஸ்ட்யூக்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற மாட்ரிட் ஓபன் பட்டத்தை வென்ற கோஸ்ட்யூக் , இந்த வாரத் தரவரிசையில் தனது வாழ்நாள் சிறந்த இடமான 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மாட்ரிட் போட்டிக்கு முந்தைய வாரம் பிரான்ஸின் ரூவன் நகரில் நடைபெற்ற மற்றொரு களிமண் தரைப் பட்டத்தையும் வென்றதன் மூலம், கோஸ்ட்யூக் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

"என் விளையாட்டு வாழ்க்கையின் மிகச் சிறந்த காலகட்டத்திற்குப் பிறகு, நான் ரோம் போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் சில நேரங்களில் நம் உடலுக்கு வேறு திட்டங்கள் இருக்கும், மேலும் கடந்த சில நாட்களாக, நான் இடுப்புப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். என் கணுக்கால் இன்னும் முழுமையாக 100 சதவீதம் குணமடையாத நிலையில், தற்போதைக்கு தொடர்ந்து முயற்சி செய்வது புத்திசாலித்தனம் அல்ல, எனவே இந்த ஆண்டு நான் அங்கு போட்டியிட மாட்டேன்," என்று ரோமில் போட்டி தொடங்கிய செவ்வாயன்று கோஸ்ட்யூக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.