Sunday, May 3, 2026

உதிக்குமா சூரியன்? ஒலிக்குமா விசில்? இரட்டை இலைக்கு என்னாச்சு?


 

  இந்தியத் தேர்தலை இலங்கையில் உள்ளவர்களும்  எதிர் பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கைக்குச் சாதகமா? பாதகமா?  தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?

விஜய்யின் வருகையால் சீமான் பெருமளவில் பாதிக்கப்ப‌ட்டுள்ளார். திமுக, அதிமுகவுக்கு  எதிரான வாக்குகள் முழுமையாக சீமானுக்குச் சென்றன. அந்த வாக்குகள்  சிஜய்யை நோக்கிச் சென்றுள்ளன.

 அறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 1957ம்  ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 14 சதவீத வாக்குகளை பெற்றது.. அப்போது திமுக சுயேசையாக போட்டியிட்டது..

நடிகர்களின் முதல் தேர்தல் வாக்கு சதவீதம். எம்.ஜிஆர் 30.4,  என்.டி. ராமா ராவ்  46.2,  விஜயகாந்த்  8.4 ,  சிரஞ்சீவி 16.3 ,   பவன் கல்யாண்   5.5  ,   கமல்ஹாசன் , 2.6    சீமான்   1.10,விஜய்?

மேற்கு வங்கத்தில் பாஜக, கேரளாவில் காங். ஆட்சிக்கு வாய்ப்பு - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியத் தேர்தலின்  போதும், தமிழக சட்டசபைத் தேர்தலின்  போதும் உப கண்டத்தையும் தாண்டி இலங்கையில் உள்ளவர்களும்  எதிர் பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கைக்குச் சாதகமா? பாதகமா?  தமிழக அரசு இல்;அங்கைத் தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?  போன்றவற்றுக்கான விடை தேடப்படும்.   அந்தக் கேள்விகளுக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலை இலங்கைத்தமிழர்கள்  அக்கறையுடன் எதிர் நோக்குகின்றனர். விஜய் எனும் நடைகரே அத்ற்குக் காரணம்.

 சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து அதிர்வலையை ஏற்ப‌டுத்தியுள்ளார்.விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பட்டாளம் விஜய்க்குப் பின்னால் அணிவகுத்துள்ளது. அதன் காரணமாக  தமிழக சட்டசபைத்  தேர்தல் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழக‌த்தின் அடுத்த முதல்வர்  விஜய் என்பதில் இளைஞர்கள்  உறுதியாக  இருக்கின்றனர். தேர்தலுக்குப் பின்னரான  கருத்துக் கணிப்பு அவர்களது நம்பிக்கையை சோதித்துள்ளது.  இதுவரை வெளியான தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளில் அதிகமானவை திமுக  மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன. தேர்தலுக்குப் பின்னரான    இரண்டு கணிப்புகள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன. ஒரே ஒரு தேர்தலுக்குப் பின்னரான  கருத்துக்கணிப்பு மட்டும்  தவெக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி 401 தொகுதிகளில் வெற்றி பெறும்  எனக்கணித்து த்லைகுனிந்த நிறுவனம் விஜய் முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான திமுக - அதிமுக மோதலுக்கு அப்பால்,  விஜய்யின் தமிழக வெற்றி கழகம்  என்ற புதிய  கட்சி நுழைந்திருப்பது ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எக்ஸிட் பூல் முடிவுகளைத் தொகுத்து உருவான 'பூல் ஆஃப் பூல்ஸ்' (Poll of Polls) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கத்தைத் தெரிவிக்கின்றன.'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் , அரசுப் பஸ்களில் இலவச பயணம் போன்ற திட்டங்கள் பெண்களிடம் திமுகவுக்கு ஒரு நிலையான ஆதரவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. திமுக அரசுக்கு எதிராக  விமர்சனங்கள்  உள்ளன. அவை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவு  வலிமையானதல்ல.திராவிட முன்னாற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போயுள்ளன. தேர்தலுக்கு முன்னரே இது  பற்றி எச்சரிக்கை விடப்பட்டது.

 திமுகவுக்கு எதிரான வாக்குகள்  எதிர்க்கட்சிகளிடையே சிதறிப்போனது திமுகவுக்குப் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது.   இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஈர்ப்பு விசை என்றால் அது நடிகர் விஜய் தான். அவர் தனித்துப் போட்டியிட்டாலும், முதல் முறையிலேயே 15% முதல் 18% வரையிலான வாக்கு சதவீதத்தைப் பெற்று 13 முதல் 19 இடங்களை வெல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  புள்ளிவிவரங்களின்படி, விஜய் பிரித்தது பெரும்பாலும் ஆட்சி எதிர்ப்பு வாக்குகளைத் தான். இது நேரடியாக அதிமுகவுக்குச் செல்ல வேண்டிய வாக்குகளாகும். இளைஞர்களின் எழுச்சி: 18-25 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களின் முதல் தேர்வாக தவெக இருந்தது, வாக்குப்பதிவு நாளன்று வெளியான வீடியோக்கள் மூலம் உறுதியானது. ஆனால், இந்த இளைஞர் வாக்குகள் ஒரு பெரும் அலையை உருவாக்கி ஆட்சி மாற்றத்தைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதார்த்தத்தில் அது வாக்குப்பிரிப்புக்கு மட்டுமே வழிவகுத்துள்ளது போல் தெரிகிறது.

2016 தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணி சுமார் 6% வாக்குகளைப் பிரித்ததால், திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று 2026-ல், அதே போன்ற ஒரு சூழல் விஜய்யால் உருவாகியுள்ளது. ஒருவேளை அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைத்திருந்தால், இந்த 150 இடங்கள் திமுகவுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. "ஆட்சி எதிர்ப்பு வாக்குகள் சிதறினால் அது ஆளும் கட்சிக்கே சாதகம்" என்ற அரசியல் அரிச்சுவடியை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளன.

அதிமுக  பெறும் எனக் கணிக்கப்பட்ட 80-95 இடங்கள் என்பது ஒரு பலமான எதிர்க்கட்சிக்கான அறிகுறியாகும்.  எடப்பாடி பழனிச்சாமி தனது அடிமட்டத் தொண்டர்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததும், பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்ததும் அதிமுகவை முழுமையாக வீழ விடாமல்  தடுத்துள்ளது. விஜய்யின் வருகையால் சீமான் பெருமளவில் பாதிக்கப்ப‌ட்டுள்ளார். திமுக, அதிமுகவுக்கு  எதிரான வாக்குகள் முழுமையாக சீமானுக்குச் சென்றன. அந்த வாக்குகள்  விஜய்யை நோக்கிச் சென்றுள்ளன.

தேர்தல் வாக்களிப்பு முடிந்ததும்  யூடியூப்  , எக்ஸ் (X) தளங்களில் "விஜய்க்குத்தான் வாக்கு  என்று சொன்னவர்களின் எண்ணிக்கைக்கும், எக்ஸிட் பூல் முடிவுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.   40 வயதைக் கடந்த குடும்பத் தலைவிகள் ,கிராமப்புற வாக்காளர்கள் பெரிய அளவில் வீடியோக்களில் பேசவில்லை. அவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுக , அதிமுக என்ற இருமுனைப் போட்டியிலேயே சுருங்கிவிட்டன.  சமூக வலைதளங்கள் ஒரு பிம்பத்தை   உருவாக்கலாமே தவிர, பலமான வாக்குச் சாவடி முகவர்கள் , பல ஆண்டுகால அடிமட்டத் தொண்டர்கள் இல்லாத வரை ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடிப்பது கடினம்.   எக்ஸிட் பூல் முடிவுகள் என்பது ஒரு முன்னறிவிப்பு மட்டுமே. நிஜமான தீர்ப்பு மக்களின் வாக்குப் பெட்டிகளில்  தூங்கிக் கொண்டிருக்கிறது. மே 4‍ம் திக‌தி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது  திமுக தனது பலத்தை நிரூபித்து 'ஹட்ரிக்' வெற்றியை நோக்கி நகருமா? எதிர்க்கட்சிகளின் வாக்குப்பிரிப்பு அரசியலில் யார் பலியாகப்போவது?  எதிர்பார்த்ததை விட அதிக இடங்களைப் பெற்று  விஜய் 'கிங்-மேக்கராக' மாறுவாரா?  இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைத்துவிடும். 

  தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை திரையுலகில் இருந்து அரசியல் களத்தில் பலர் களம் அமைத்துள்ளனர். இவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றனர்? எத்தனை தொகுதிகளில் வென்றனர். அவர்களை விஜய் விஞ்சுவாரா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

  தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட விஜய்யின் கட்சி எத்தனை சதவீத வாக்குகள் பெறும்? வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அதிகரித்துள்ளன. தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் விஜய்க்கு நம்பிக்கையளித்துள்ளன.

அறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 1957ம்  ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 14 சதவீத வாக்குகளை பெற்றது.. அப்போது திமுக சுயேசையாக போட்டியிட்டது.

 எம்.ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்.ஜி.ஆர் அந்த தேர்தலில் 30.4 சதவீத வாக்குகள் பெற்ற்று ஆட்சியை பிடித்தார். முதல் தேர்தலிலேயே 51,94,876 வாக்குகள் பெற்று 130 தொகுதிகளில் வென்றார். 200 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், 130 தொகுதிகளில் வென்றது.

 ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த என்.டி. ராமா ராவ் தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை தெலுங்குதேசம் கட்சி எதிர்கொண்டது. 250 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. 46.2 சதவீத வாக்குகள் பெற்று முதல் தேர்தலிலேயே ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுதினார்.

 * எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கிய பெரிய நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன். 1989 தேர்தலை எம்.ஜி.ஆர் மனைவி விஎன் ஜானகியுடன் இணைந்து அதிமுக அணியுடன் இணைந்து 50 தொகுதிகளில் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டது. ஆனால், இதில் சிவாஜி உள்பட அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது.

 விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். 2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இதர அனைத்து தொகுதியிலும் தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 8.4 சதவீத வாக்குகளை விஜயகாந்த் பெற்றார்.

நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2009 ஆம் ஆண்டு தனது முதல் பொதுத்தேர்தலை சந்தித்தது. 288 தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தம் 16.3 சதவீத வாக்குகள் பெற்று அவரது கட்சி வென்றது. ஆனால், அவரது கட்சி நாளைடைவில் கரைந்து போனது. இறுதியாக காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்த சிரஞ்சீவி மீண்டும் முழு நேரமாக சினிமா பக்கம் திரும்பினார் .

 சிரஞ்சீவியின் சகோதராரான பவன் கல்யாண் 2019 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை சந்தித்தார். 137தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய பவன் கல்யாணால் 5.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

 நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 2.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனே தோல்வியை தழுவினார்.

டாக்டர் ராமதாஸால் துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி 1991ம் வருடம் முதல் சட்டமன்ற தேர்தலில் சந்தித்து 5.80 சதவீத வாக்குகளை பெற்றது.

திமுகவிலிருந்து பிரிந்த வை.கோபால்சாமி துவங்கிய மதிமுக 1996-ல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 5.80 சதவீத வாக்குகளை பெற்றது.. மூப்பனாரால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 1996ம் வருடம் முதல் தேர்தலை சந்தித்து 9.30 சதவீத வாக்குகளை பெற்றது.

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்ட தேமுதிக 2006ம் வருடம் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 8.40 சதவீத வாக்குகளை பெற்றது.

சினிமா துறையிலிருந்து வந்த சீமான் துவங்கிய நாம் தமிழர் கட்சி 2016ஆம் வருடம் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் 1.10 சதவீத வாக்குகளை பெற்றது.. ஆனால் அதே கட்சி தற்போது வளர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றது.

 233 தொகுதிகளுக்கும் விஜய் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். அவரது கட்சி பெறும் வாக்கை அறிவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லரசிகர்க ளும் ஆவலாக உள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎப்) வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கேரளாவில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 78 முதல் 90 இடங்களை கைப்பற்றும் எனவும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 49 முதல் 62 இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜக 3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் யுடிஎப் 66 முதல் 76 இடங்களையும், எல்டிஎப் 58 முதல் 68 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் யுடிஎப் 75 முதல் 85 இடங்களையும், எல்டிஎப் 55 முதல் 65 இடங்களையும் கைப்பற்றும் எனவும் பாஜக 3 இடங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் அசாம் மாநிலத்தில் பாஜக 88 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 24 - 36 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 25 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 15 முதல் 26 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.மே 4 ஆம் திகதி வாக்காளர்களுன் முடிவு ஏற்படுத்தப் போகும் தாக்கம் வலுவானதாக  இருகும் ஏனதில்  எவ்வித ஐயமும் இல்லை.

 

ரமணி

3/3/26

Friday, May 1, 2026

உதைபந்தாட்ட வீராங்கனை மில்லி பிரைட் ஓய்வை அறிவித்தார்


 செல்சி அணியின் தடுப்பாட்ட வீராங்கனை மில்லி பிரைட், மகளிர் சூப்பர் லீக் கிளப்புடன் 20 கோப்பைகளை வென்ற தனது 17 ஆண்டுகால புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கைக்கு புதன்கிழமை அன்று முற்றுப்புள்ளி வைத்தார்.

செல்சி அணிக்காக நீண்ட காலம்  விளையாடியவரும் , அந்த அணிக்காக 314 போட்டிகளில் விளையாடியவருமான, இங்கிலாந்தின் முன்னாள் தற்காப்பு  வீராங்கனையான மில்லி பிரைட் , கிளப்பின் தூதர் , செல்சி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆகிய பொறுப்புகளை ஏற்பார்.

2015-ல் டான்காஸ்டர் பெல்ஸ் அணியிலிருந்து ஒப்பந்தமாகித் தொடங்கிய பிரைட்டின் குறிப்பிடத்தக்கப் பயணத்தின் உச்சமாக அவரது ஓய்வு அமைந்துள்ளது.

அவர் தொடர்ந்து 216 WSL போட்டிகளில் பங்கேற்று, நவம்பரில் ஜோர்தான் நோப்ஸின் 210 என்ற முந்தைய சாதனையை முறியடித்து, அதிக WSL போட்டிகளில் பங்கேற்றதற்கான சாதனையை படைத்தார்.

32 வயதான அவர், 2015-ல் செல்சி தனது முதல் கோப்பையை வென்றபோதும், அதனைத் தொடர்ந்து வென்ற 19 கோப்பைகள் அனைத்திலும், அத்துடன் கிளப் வென்ற எட்டு WSL பட்டங்கள் அனைத்திலும் அணியில் இடம்பெற்றிருந்தார்.

அவரது பதக்க சேகரிப்பில் ஆறு மகளிர் FA கோப்பை வெற்றிகளும், நான்கு மகளிர் லீக் கோப்பைகளும் அடங்கும். இவை 2021 ,2025-ஆம் ஆண்டுகளில் இரண்டு உள்நாட்டு மும்முனை வெற்றிகளும் அவருக்குரியவை

2023-ல் கிளப் கப்டனாகப் பெயரிடப்பட்ட பிறகு, பிரைட் 2024-25-ல் செல்சியின் தோல்வியற்ற உள்நாட்டுப் போட்டித் தொடரின்போது முன்னின்று வழிநடத்தினார், மேலும் கப்டன் பொறுப்பை ஏற்று 3,000 நிமிடங்களுக்கும் மேலாக விளையாடினார்.

உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கினார் சர்வதேச கால்பந்தில், 2016-ல் அறிமுகமான பிரைட், இங்கிலாந்து அணிக்காக 88 போட்டிகளில் பங்கேற்று ஆறு கோல்களை அடித்தார்.சொந்த மண்ணில் நடைபெற்ற யூரோ 2022 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு ஒரு தூணாக விளங்கிய அவர், பின்னர் 2023-ல் இங்கிலாந்தை உலகக்  கிண்ண  இறுதிப் போட்டிக்கு வழிநடத்தினார், அதில் இங்கிலாந்து ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.

 உதைப்ந்தாட்டத்துக்கு  அவர் ஆற்றிய சேவைகள், 2024 ஆம் ஆண்டின் மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அவருக்கு OBE பட்டம் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன.

 

பீபா தலைவரின் கோரிக்கையை நிராகரித்தது கனடா பொலிஸ்

  வான்கூவரில் நடை பெறும் பீபா கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக,  தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக வான்கூவர்  பொலிஸ் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

"போக்குவரத்து நிறுத்தப்படும் முறையான வாகன அணிவகுப்புகள் நாட்டுத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டவை" என்று துணைத் தலைவர் டான் சாப்மேன் ஒ  அறிக்கையில் கூறினார்.

 பீபாவின் நிர்வாகக் குழுவினர், அத்தகைய பாதுகாப்புக்குத் தகுதியான சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர் (IPP) தரநிலைகளைப் பூர்த்தி செய்யாததால் (சாலைகள், சந்திப்புகளை மூடுதல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் இருத்தல் போன்றவை), இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது" என்று சாப்மேன் கூறினார்.

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா ,மெக்சிகோ ஆகிய நாடுகள்  இணைந்து நடத்தும் உலகக்  கிண்ண உதைப்ந்தாட்டப் போட்டியின் 16 மைதானங்களில் ஒன்றான வான்கூவரில்,  உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பு இந்த வாரம் கூட்டங்களை நடத்துகிறது.

 பீபா வின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டமான அதன் காங்கிரஸ், வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

 

ஆசிய பீச் சம்பியனானது ஈரான்

தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யாவில்,  நடைபெற்ற 6வது ஆசிய பீச் சம்பியன்  போட்டியில்  ஓமானை எதிர்த்து விளையாடிய ஈரான் சம்பியனானது

  உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஈரான் அணி, புதன்கிழமை அன்று ஓமன் அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆறாவது ஆசிய  பீச் விளையாட்டுப் போட்டிகளில் தனது மூன்றாவது  பட்டத்தை வென்றது. 

ஈரானிய தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மஹ்தி அலிநெஜாத், நாட்டின் வலிமையான கடற்கரை கால்பந்து அணியைப் பற்றி பெருமையுடன் பேசினார்.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில், கூடுதல் நேரத்திற்குப் பிறகு சவூதி அரேபியா பாலஸ்தீனத்தை 6-4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

 

 

 

 

 


ஊக்கமருந்துத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார் முட்ரிக்

  இங்கிலாந்து  உதைபந்தாட்டச்   சங்கம்   விதித்த நான்கு ஆண்டு ஊக்கமருந்துத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தை

செல்சி அணியின் முன்கள வீரர் மைக்கலோ முட்ரிக்,  அணுகியுள்ளார் என்று  இங்கிலாந்து  ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

2024-ல் எடுக்கப்பட்ட மாதிரியில், மெல்டோனியம் எனக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட பொருளுக்கான பாதகமான முடிவு வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த உக்ரேனிய வீரர் மீது ஊக்கமருந்து விதிமீறல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருளைத் தெரிந்தே ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்பதால், இந்தப் பாதகமான முடிவு தனக்கு "முழுமையான அதிர்ச்சியை" அளித்ததாக முட்ரிக் கூறியிருந்தார்.

2023 ஜனவரியில் €70 மில்லியன் ($81.83 மில்லியன்) ஆரம்பக் கட்டணத்தில் செல்சி அணியில் இணைந்த முட்ரிக், 2024 டிசம்பரில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 25 வயதான அவர் அன்று முதல் விளையாடவில்லை.

மெல்டோனியம் என்பது மரியா ஷரபோவாவிடம் சோதனை முடிவில் பாசிட்டிவ் என வந்த அதே பொருளாகும். இதையடுத்து, அந்த ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு முதலில் இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. பின்னர் அவர் செய்த மேல்முறையீட்டின் விளைவாக, அவரது தடை 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.

 


 

Saturday, April 25, 2026

தமிழகத் தேர்தலில் வ‌ரலாறு காணாத வாக்குப் பதிவு குழப்பமடையும் கருத்துக் கணிப்பு

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் அதிகரித்த வாக்குப்  பதிவு

5 பேர் மட்டுமே வாக்களித்த வாக்கு சாவடி... தேர்தலை புறக்கணித்த ஆற்றுப்படுகை கிராம மக்கள்

அசத்தும் அசாம் மம்தா பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி

 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவீதம் வரலாறு  காணாத வகையில் அதிகரித்ததால்  பெரும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. வாக்கு சத விகிதம் அதிகரித்தால் ஆளும் கட்சிக்கு ஆபத்து என்பதே பொதுவான கருத்தாகும். தமிழகத்தைப்போலவே அசாமில் நடந்த முதல் கட்ட சட்டசபைத்தேர்தலில் 92 சத விகித வாக்கு பதிவாகி உள்ளது.

 தமிழகத்தில் வாக்குப் பதுவு அதிகரிப்புக்கு விஜய் காரணம் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அசாமில் விஜய் போல் ஒருவர் தேர்தலில் களம் இறங்கவில்லை. வாகாளர் மறு சீரமைப்பே அதிகரித்த வாக்கும் பதிவுக்குக் காரணம் என சிலர் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்  சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் வேட்பாளர்களுக்காக  மக்கள் வாக்களித்தனர்.

காலை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி 84.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஸ்ஐஆர் செயல்பாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், பொதுமக்கள் தன்னெழுச்சியாக வாக்களிக்க படையாக திரண்டு சென்றதாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.


இந்த சூழலில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை நெருங்கியது.

  கரூர் - 92 சதவீதம்,சேலம் - 90 சதவீதம்,.தர்மபுரி - 90 சதவீதம்,.  ஈரோடு - 90 சதவீதம்,. நாமக்கல் - 89 சதவீதம்  .தொகுதி வாரியாக தமிழ்நாட்டிலே அதிகமாக வீரபாண்டி தொகுதியில் 93.43 சதவீதம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் தொகுதியில் 93.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 92 சதவீதமும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 92 சதவீதமும், குளித்தலை தொகுதியில் 92 சதவீதமும், பாலக்கோட்டில் 92 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொங்கு மண்டலமான நீலகிரிக்கும் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் போதிய  பஸ் வசதிகள் இல்லாததால் அவர்களால் தக்க சமயத்தில் வாக்களிக்கச் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகிறது.

6 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளாக குளச்சல், காரைக்குடி, மதுரை மத்திய தொகுதி, மதுரை வடக்கு, கிளியூர், பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகள் அமைந்துள்ளது.

6 மணி நிலவரப்படி முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு..ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 86 சதவீதமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 91 சதவீதமும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 73 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 89 சதவீதமும், திருச்சி கிழக்கு 81.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணிக்கு முன்பாக வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 6 மணியை கடந்தும் வாக்களித்தனர்.

"அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்திற்கு எதற்கு தேர்தல்?" என்ற கேள்வியோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர் பகுதி மக்கள்  சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். சாலை ,குடிநீர் வசதி கோரி தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி அவர்கள் நடத்திய போராட்டம் மாவட்ட நிர்வாகத்திடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் அமைந்துள்ள குக்கிராமம் முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர். இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 98 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் இயற்கைச் சூழலில் அமைந்திருந்தாலும், நவீன காலத்தின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவை இன்றும் இந்த கிராமத்திற்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

கடந்த பல பத்தாண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும் இப்பகுதி மக்கள் அரசியல் கட்சியினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஒரே கோரிக்கையைத்தான் முன்வைத்து வருகின்றனர். "மழைக்காலங்களில் ஊருக்குள் செல்ல முறையான சாலை இல்லை; அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை நீடிக்கிறது. ஆற்றுப்பகுதியில் வசித்தாலும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை" என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டு.

ஒவ்வொரு முறையும் "தேர்தல் முடிந்ததும் செய்து தருகிறோம்" என்று வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு இக்கிராமத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என மக்கள் குமுறுகின்றனர். இந்த முறை வெற்று வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லாத கிராம மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

 காலை தேர்தல் தொடங்கியபோது, முதலை மேடு திட்டு கிராமத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் , பாதுகாப்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தபோதிலும், வாக்களிக்க ஒருவர் கூட வரவில்லை. அதிகாரிகளின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளுக்குப் பலனாக 5 பேர் மட்டுமே வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அவர்களைத் தவிர மற்ற 93 வாக்காளர்களும் வாக்குச்சாவடி பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

தேர்தலை புறக்கணித்தது மட்டுமின்றி, அண்ணாமலை நகர் பகுதி மக்கள் தங்களது வீடுகளின் கூரைகளிலும், தெருக்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டித் தொங்கவிட்டனர். பின்னர், ஊரின் பொது இடத்தில் ஒன்று திரண்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கறுப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். "சாலை வசதி உடனே வேண்டும்", "குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்து" போன்ற வாசகங்கள் அடங்கிய பிளக்கார்டுகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், "நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களாக மதிக்கப்பட வேண்டுமென்றால், மற்ற ஊர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும். சாலை இல்லாததால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அரசு அதிகாரிகள் நேரில் வந்து எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என ஆவேசமாகத் தெரிவித்தனர்.

சீர்காழி தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், ஒரு குறிப்பிட்ட கிராமமே ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளது வேட்பாளர்கள் ,அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டிய மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காக இத்தகைய முடிவை எடுத்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை வாக்குப்பதிவு முடியும் வரை இக்கிராமத்தில் இருந்து மேலதிகமாக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால், முதலை மேடு திட்டு அண்ணாமலை நகர் பகுதியில் மிகக்குறைந்த அளவிலான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது. தேர்தல் நாளில் ஒரு குக்கிராமமே திரண்டு நின்று நடத்திய இந்தப் போராட்டம், ஆட்சியாளர்களுக்கு மக்கள் விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப் வ்வ்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மேற்கு வங்கம். ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த 2011ல் அந்த கோட்டையை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைத்தது. 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் 'ஹட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி 3 முறை தொடர்ந்து முதல்வராகி உள்ளார்.

 இப்போது 4வது முறையாக முதல்வராகும் முனைப்பில் தேர்தலை சந்திக்கிறார். 152 தொகுதிகளில்  தேர்தல் தமிழகத்தை போல்   மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

ஆட்சி அமைக்க‌ 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில்   முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் திகதி 142 தொகுதிகளில் நடைபெறுகிறது.

16 மாவட்டங்களில் 152 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.. இதில் 103 தொகுதிகள் பொதுத்தொகுதிகளாகும். 34 தொகுதிகளில் தலித் மக்களுக்கான தனித்தொகுதியாகும். 15 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கான தனித்தொகுதிகளாக உள்ளன. இந்த தொகுதிகளில்  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

இந்த முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள் ,465 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

 வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ்   பா... ஆகியவற்றுக்கு  இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற்றது.   முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் சட்டசபை தொகுதி, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹராம்பூர்தொகுதிகளி தேர்தல் நடைபெற்றது. இதில் நந்திகிராம் சட்டசபை தேர்தலில் கடந்த 2021 ம் ஆண்டில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி வீழ்த்தியிருந்தார். இந்த முறை சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி களமிறங்கவில்லை.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்கட்சியாக உள்ள பாஜக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கூட்டணி இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பாரதியா கேர்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது. மாறாக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பார்வர்ட் பிளாக், புரட்சிகர இந்திய கம்யூனிஸ்ட், அனைத்திந்திய பார்வர்ட் பிளாக், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் உள்ளன. இவர்கள் தவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன.

இத்தனை கூட்டணிகள் இருந்தாலும் நேரடி போட்டி என்பது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காஙகிரஸ் - பாஜக இடையே தான் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. ஐஎஸ்எப் எனும் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் தோற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 ரமணி,

26/4/26