Sunday, July 25, 2010

தேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதாகூட்டணி அமைக்க காத்திருக்கிறார்



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்கள் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்படி ஜெயலலிதா விடுத்த உத்தரவையடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உசாரடைந்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு கோவையில் சற்று அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கூட்டமொன்றை கோவையில் வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளார். கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனப் பேரணியை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதன் காரணமாக, பேரணி கூட்டமாக மாற்றமடைந்தது.
தமிழக அரசுக்கு எதிராக கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கூட்டத்தில், இலட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் தற்பொழுது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவை இலகுவில் எவரும் சந்திக்க முடியாது. ஆனால், இப்பொழுது தொண்டர்களையும் சந்திப்பதற்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுத்துள்ளார்.
இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து மீண்டும் பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முடிவுக்கு வந்து விடும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தத் திராணியற்ற அரசு என்று ஜெயலலிதா மிகக் காட்டமாக தமிழக அரசை விமர்சித்துள்ளார். கடந்த வாரம் நடுக் கடலில் இந்திய மீனவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இத்தாக்குதலின் காரணமாக ஒருவர் இறந்துள்ளார். இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசின் மீது தமிழக மீனவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தவறிய தமிழக அரசை எதிர்த்து உரையாற்றிய இயக்குனர் சீமான், கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமான் அடிக்கடி கைது செய்யப்படுவது வழமையாகி விட்டது. இந்திய அரசின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் வகையில் உரையாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய வைகோ, நெடுமாறன் உட்பட பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு எதிராகப் பேசுபவர்களும் போராட்டம் நடத்துபவர்களும் தமிழகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதேவேளை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்திய மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு, இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதென்று நிம்மதியாக இருக்கிறார் கருணாநிதி.
தமிழக அரசின் இந்த நழுவும் போக்கை தனது பிரசாரத்தில் முதன்மைப்படுத்துகிறார் ஜெயலலிதா. தமிழக அரசின் மீது கடும் சொற்பிரயோகங்களை வீசிய ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா காத்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் வைகோ வெறுப்புற்றிருக்கிறார் என்ற தகவல் காற்று வாக்கில் பரவியதால் வைகோவை கடந்த வாரம் சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெயலலிதா.
வைகோ அணி மாறுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பினால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வைகோ, ஜெயலலிதா சந்திப்பின் மூலம் வைகோ அணி மாற மாட்டார் என்பது உறுதியானதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய் விட்டது. கூட்டணியிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
டாக்டர் ராமதாஸ் இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. இப்போது வெற்றி பெறும் கூட்டணியைத் தேடி அலைகிறார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்வதற்காகத் தூது விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் விதித்த நிபந்தனைகளினால் முடிவு கூறாமல் காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருடனும் பேரம்பேசி அதிக தொகுதிகளை தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக அவர் காத்திருக்கிறார்.
ஜெயலலிதா விரும்பும் கட்சிகளுடன்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை கூட்டணி அமைத்து வந்தது. மக்கள் விரும்பும் கூட்டணியே அமையும் என்றும் மக்கள் விருப்பமே எனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியதால், தொண்டர்கள் மகிழ்ந்து போயுள்ளனர். ஜெயலலிதாவின் விருப்பமே கட்சியின் விருப்பம் என்ற நிலை மாறி மக்களின் விருப்பமே ஜெயலலிதாவின் விருப்பம் என்பதனை ஜெயலலிதா பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், கூட்டணி பற்றிய இரகசியப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகக் கருத முடிகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எதிரான அந்தப் பலமான கூட்டணி பற்றிய அறிவிப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இரகசியமாக இருக்கும்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 18/08/10

எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்பிசுபிசுத்தது போராட்டம்





தமிழக சட்ட சபை தேர்தலை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்ததனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலம் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்வார் என்ற கருத்து நிலவியது. அதனை முற்றாக மறுத்த முதல்வர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று அறிவித்தார்.
தமிழக சட்ட சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தும் உத்தேசம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்கும் இதேவேளை தேர்தலைச் சந்திப்பதற்கான வேலைகளை இப்பொழுதே முடுக்கிவிட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலப்படுத்தும் வேலைகள் மறைமுகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குவலை வீசப்படுகிறது. ஒரு சிலர் அதில் வசமாக அகப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டனர். இன்னும் சிலர் இணைவதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமடைந்தால் அதனுடன் கூட்டணி சேர்வதற்கு ஏனைய கட்சிகள் தயக்கம் காட்டும் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தை உணர்ந்து கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தொகுதிகளின் அளவைக் குறைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதற்கு அமைவாகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் புள்ளிகளுக்கு வலை வீசப்படுகிறது.
செம்மொழி மாநாட்டின் பின்னர் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார். ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படும் என்ற செய்தி பரபரப்பாக அடிபடுகிறது. செம்மொழி மாநாடு முடிந்த கையுடன் ஓய்வு என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் கருணாநிதி. அடுத்த தேர்தலையும் தலைமையேற்று நடத்த சந்திக்க தயாராக இருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்கு போட்டி ஏற்படும். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையேயான புகைச்சல் வெளிப்பட்டுவிடும். தலைமைப் பதவிக்காக இருவரும் முட்டி மோதுவர். ஸ்டாலின், அழகிரி ஆகியோரின் மோதலினால் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவர்களை அமைதியாக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. சகோதர யுத்தத்தினால் கட்சி இரண்டாக உடைந்து விடும் என்ற பயத்தினால்தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தை முதல்வர் கைவிட்டுள்ளார் என்ற கருத்தும் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற தேர்தல் வெற்றிகளில் மு.க. அழகிரியின் பங்கு கணிசமானது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் முக்கிய பொறுப்புகளை அழகிரியிடம் கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளார். அதற்காக மத்திய அமைச்சுப் பதவியை அழகிரி ராஜினாமா செய்வார் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரிடமும் தேர்தல் தொகுதிகளை மு. கருணாநிதி ஒப்படைப்பார்.
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் தமிழகத்தில் பிசுபிசுத்துவிட்டது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடந்த வாரம் நடைபெற்ற போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. எரிபொருள் விலை உயர்வினால் பொது மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை.
ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் முழு மூச்சுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் இந்தப் போராட்டத்தைப் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் இணைப்பதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களின் முன் தோன்றி தமது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவிப்பார்கள் என்ற செய்தி வெளியாகியதால் மத்திய, தமிழக அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாததன் காரணம் அறிவிக்கப்படவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவராலும் ஒதுக்கப்பட்ட ஒருவராக வலம் வருகிறார் டாக்டர் ராமதாஸ். தமிழகத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் சந்தித்த பெரும் தோல்விகளால் அக் கட்சியின் மீது இருந்த மதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த தூது அனைத்தும் புறக்கணிக்கப்பட்டதனால் நொந்து போயிருக்கும் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெற்ற ஹர்த்தாலில் கலந்து கொள்ளவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டால் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை தெம்புடன் நடத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டாக்டர் ராமதாஸ் பகிஷ்கரிப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசுக்கு ஆதரவு கொடுத்தபோது தமிழக அரசு விட்ட தவறுகளை வெளிப்படையாக விமர்சித்த டாக்டர் ராமதாஸ் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த போது தமிழக அரசை மிகத் தீவிரமாக எதிர்த்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்காக டாக்டர் ராமதாஸ் விடுத்த தூதுகள் அனைத்தும் பயனற்றுப் போயின. டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்த வரவேற்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கிடைக்கவில்லை. கருணாநிதி கண்ணசைத்தால்தான் சோனியா சம்மதிப்பார். ஆகையினால் கருணாநிதியைத் திருப்திப்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரகசியமாக நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தை பரகசியத்துக்கு வந்துவிடும். விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் ஒரே கூட்டணியில் இணைப்பதற்கு திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதேவேளை காங்கிரஸின் வரவை ஜெயலலிதா எதிர்பார்த்துள்ளார். விஜயகாந்த் உள்ளே சென்றால் வைகோவின் நிலை தர்மசங்கடமாகிவிடும். விஜயகாந்துக்கு ஜெயலலிதா கொடுக்கும் முன்னுரிமை வைகோவைப் பின்னுக்குத் தள்ளிவிடும். விஜயகாந்த் முன்னிலை பெற்றால் வைகோ தொடர்ந்தும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு வழங்க மாட்டார்.
காங்கிரஸுடன் ஜெயலலிதா இணைந்தால் ஜெயலலிதாவுக்கு வழங்கி வரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிவிடுவர். காங்கிரஸ் இருக்கும் இடத்தில் இடதுசாரிகள் இருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவுடனான கூட்டணியில் இருந்து வைகோவும் இடதுசாரிகளும் வெளியேறினால் அவர்களை அரவணைப்பதற்கு கருணாநிதி தயாராக உள்ளார்.




வர்மா
வீரகேசரிவாரவெளியீடு11/08/10

Tuesday, July 20, 2010

பெக்கமுக்குத்தடைபோட்டமனைவி



டேவிட் பெக்கம் தனது துணைவியாரின் உத்தரவுக்குக் கீழ்படிந்து தனது மார்பில் பச்சை குத்த மாட்டார் என அறிவித்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் உடல் எங்கும் பச்சை குத்தியுள்ளார். மேலும் பச்சை குத்துவதற்கு அவர் ஆவலாக உள்ளார். எனினும் துணைவி விக்டோரியாவும் அவரது தாயார் சான்ட்ராவும் அதை விரும்பாமையால் மட்டுப்படுத்தவுள்ளதாக ஒன்லைன் நேர்காணலில் தெரிவித்தார்.
நான் எனது கைகளுக்கும் முதுகுக்கும் அவற்றை மட்டுப்படுத்திக் கொண்டேன். எனது துணைவியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்த விரும்பவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் எனது விருப்பம் யாதெனில் எனது ஆண் பிள்ளைகளின் பெயர்கள் எனது முதுகுப் பக்கமும் மனைவியின் பெயர் கையிலும் இருக்கலாம் என்பதே எனது விருப்பம். ஆனால் அம்மா அதனை விரும்பவில்லை.
தமது பிள்ளைகளும் பச்சை குத்தும் விடயத்தை தொடர்வார்களே என விக்டோரியா சந்தேகிப்பதாக டேவிட் பெக்கம் தெரிவித்தார்.
எமது ஐந்தே வயதான கு×ஸ் உலகப் போட்டியைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வரும்போது தனது கை முழுக்க பச்சை குத்தப்பட்டிருந்தமை அறிவித்தார். இது உண்மையல்ல.
முன்னாள் மன்செஸ்டர் ஐக்கிய விளையாட்டு வீரர் தெரிவித்ததாவது,
எப்படித் தனது பிள்ளைகள் வெவ்வேறு தனித்துவக் குணங்கள் இருக்கும்.
""ஒவ்வொருவரும் சிறுவர்கள். சில ஹாஸ்யங்களை விடுவார். புரூக்லின் அவ்வளவு கதைப்பதில்லை. புரூஸ்லிங் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. குரூஸ் இந்த முழு நாளையும் எடுப்பார். ரோமியோவும் அப்படித்தான். புரூக்ஸின் அவ்வளவு கதைக்கமாட்டார். அவர் பெண் பிள்ளைகளைக் கவனிப்பார் என்றார்.


Tuesday, July 6, 2010

சாதனயை நெருங்கும் க்ளோஸ்


ஸ்பெய்ன் வெல்லும்

ஜேர்மனி,ஸ்பெய்ன் அகியவற்றுக்கிடையே நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் வெல்லும் என்று போல் எனும் இரண்டுவயதான நட்சத்திரமீன் எதிர்வுகூறியுள்ளது.இதுவரை நடைபெற்ற ஐந்துபோட்டிகளில் வெற்றிபெறும் நாட்டை இந்தமீன் துல்லியமாகக்கூறியுள்ளது. ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் ஜேர்மனி வெல்லும் என்று இந்தமீன் கூறியது.இதுமுட்டாள்த்தனமான நம்பிக்கை என்று சிலர்கூறினாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Monday, July 5, 2010

ம.தி.மு.க.வை ஓரம் கட்டுகிறது அ.தி.மு.க.வைகோவின் புகழ் பாடுகிறது தி.மு.க.



திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்தை இந்திய மத்திய அரசு அறியும் வகையில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாடு பற்றிய அறிவித்தல் வெளியான உடனேயே ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் பல அரங்கேறின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி வித்தகர்கள் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி எடுத்தியம்பினர். தமிழுக்காக எடுக்கப்பட்ட இவ் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமும் தமிழக முதல்வரின் புகழும் அரங்கமெங்கும் ஒலித்தன.
தேர்தலின் வெற்றிக்காக அமைக்கப்படும் கூட்டணிகள் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் பின்னர் தொடர்வது அபூர்வம். அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு எனத் தெரிந்ததும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து கூட்டணிக்குள் பிரிவினை ஏற்பட்டு விடும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பிரிக்க முடியாதபடி உறுதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
ஜெயலலிதாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில் பிரணாப் முகர்ஜியை அழைத்து தனது பலத்தை வெளிக்காட்டி உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் கூடிய கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி இல்லாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை மறைமுகமாக உணர்த்தி உள்ளது செம்மொழி மாநாடு.
தமிழக முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் செம்மொழி மாநாட்டில் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறிய பின்னர் தமிழக முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் சந்திக்கவில்லை. டாக்டர் ராமதாஸின் அனுமதி பெற்றுத் தான் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் டாக்டர் ராமதாஸின் பெயர் பொறிக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டுக்கு டாக்டர் ராமதாஸ் சென்றிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. செம்மொழி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளாததனால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லையென்றே தெரிகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் இடதுசாரிக் கட்சிகள் ஆகியன செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். டில்லியில் உள்ள இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தன் பக்கம் இருப்பதை தமிழக இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி உள்ளார் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் பதவியும் வழங்கப்படுவதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அடுத்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுக்க முடியாது தடுமாறும் ஜெயலலிதா, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரப் போகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் வெறுத்துப் போயிருப்பவர்களின் பட்டியலைத் தயாரித்த திராவிட முன்னேற்றக் கழகம் மெதுவாக அவர்களைத் தன் பக்கம் திருப்பி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஓரம் கட்டப்பட்டவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகமே எழுந்துள்ளது.
மத்திய மாநில அமைச்சர்களான ஜெகத் ரட்சகன், காத்தூர் இராமச்சந்திரன், எ.வ. வேலு உட்பட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவியவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாகத் தெரிவான செல்வ கணபதி, கே.பி. இராமலிங்கம், தங்கவேல் ஆகியோரும் அணி மாறியவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனிதா இராதாகிருஷ்ணன், கருப்பு சாமி பாண்டியன் உட்பட பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் எதிரியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அணி மாறியவர்களுக்கு பதவியும் மரியாதையும் கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணரின் சகோதரர் தா. ராமையா, ஜெனிபர் சந்திரன், கு.ப. கிருஷ்ணன், இன்பத்தமிழன் போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படாமையினால் அவர்களில் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினர்.
நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது படுதோல்வியடைந்த ஜெயலலிதாவை விட்டுப் பிரியாமல் இருக்கிறார் வைகோ. வெல்லும் கூட்டணியில் சேராது தோல்வியடைவோம் என்ற பயமில்லாது ஜெயலலிதாவுக்கு பக்கத் துணையாக இருக்கும் வைகோவை மறைமுகமாக புகழ்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் அல்லது விஜயகாந்த்துடன் கூட்டணி சேரும் ஆவலில் உள்ள ஜெயலலிதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அந்தக் கூட்டணியில் வைகோ இணைந்து இருப்பார் என்பது சந்தேகம். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சியே முழு ஒத்துழைப்பையும் வழங்கியது என்பது வெளிப்படையானது. யுத்த காலத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய வைகோ காங்கிரஸ் கட்சியுடன் சேர்வதற்கு விரும்பமாட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவரது அடுத்த தெரிவு திராவிட முன்னேற்றக் கழகம் தான். காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தான் இலங்கையில் யுத்தத்தை வழி நடத்தின என்று குற்றம் சாட்டிய வை.கோ. திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் இணையமாட்டார். வைகோவின் முடிவை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர் அவருடைய ஆதரவாளர்கள்.
ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கும் வைகோ, முற்று முழுதாக ஜெயலலிதாவை நம்பவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிதாக இணைந்த இடது சாரித் தலைவர்களுடனும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து அவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்த பின்பே வைகோவுடன் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினார். ராஜ்ய சபாத் தேர்தலில் ஜெயலலிதா, வைகோவை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் அல்லது விஜயகாந்துடன் இணைவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்கிறார். இந்த இணைப்புப் பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் வைகோவின் நிலையில் மாற்றம் ஏற்படும். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறு செய்து விட்டது என்று குற்றம் சாட்டிய வைகோ, காங்கிரஸுடன் இணைந்து போகக் கூடிய வாய்ப்புக் குறைவு. அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கிறார் விஜயகாந்த். வைகோவை விட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் அக் கூட்டணியில் வைகோ தொடர்ந்தும் இருப்பது சந்தேகம். இந்தச் சூழ்நிலையில்தான் வைகோவை தன் பக்கம் இழுப்பதற்கான சாதக சமிக்ஞைகளை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு வருகிறது.
வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 04/07/10