Showing posts with label கண்டி. Show all posts
Showing posts with label கண்டி. Show all posts

Monday, July 17, 2023

மருத்துவமனை மரணங்கள் சொல்லும் சேதி என்ன?


 உயிர்காக்கும் தெய்வமாக மருத்துவர்கள்  போற்றப்படுகிறார்கள். வைத்தியசாலைகள் மீது மக்கள்  முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ருவதர்கு  அவித்தியர்கள்  போராடும்  போதுவிதிவசமாக  சில  உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், மயக்க மருந்துகளாலும், பூஞ்ஞைகளாலும் நோயாளிகள் மரணமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்டதாகக் கருதப்படும் ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நோயாளிகள் பெரிட்டோனியல் டயாலிசிஸ் தீர்வு, அங்கீகரிக்கப்பட்ட மருந்து மூலம் சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் ஜனவரியில் ஒரு மரணமும், ஜூன் மாதத்தில் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளன. மரணங்கள் உண்மையில் பூஞ்சை தொற்றினால் ஏற்பட்டதா என்பதை கண்டறிவதே விசாரணையின் நோக்கமாகும்.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் ஒரு செயல்முறையாகும். டயாலிசிஸ் கரைசலின் வெவ்வேறு தீர்வுகளில் டெக்ஸ்ட்ரோஸ் அல்லது ஐகோடெக்ஸ்ட்ரின் வெவ்வேறு அளவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு - தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள்,பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

இக்குழந்தையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும், ஆனால் மயக்க ஊசி செலுத்தியதன் விளைவால் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் எனினும் மரணம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    சந்தேகத்துக்கிடமான  மருந்துகள் பாவனையில் இருந்து அகற்றப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  நேர்மையான விசாரணையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மரணத்துக்கான காரணம் என்ன என்பதை  பொது  வெளியில் தெரியப்படுத்த வேண்டும். இவை எல்லாம்  வெளியிலே தெரிந்த  ஒரு சில அசம்பாவிதங்கள். வெளி  உலகுக்குத் தெரியாமல் அங்கும் இங்கும்பல தவறுகள் நடைபெறுகின்றன.அவற்றையும் ஆராய வேண்டியது அவசியம்.