Friday, December 30, 2016

பாடல் பிறந்த கதை


கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணதாசனின் கவிதைகளில் வெளிப்படும்.மனதைப் பாதித்த சம்பவங்கள் பாடலாக வெளிவரும்போது அடிமனதில் ஆழப்பதிந்துவிடுவது உண்மையே. கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பல அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவானவையே.

"நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் வரும் "சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே" என்ற பாடல் வரிகள் கேட்பவரின் மனதை உருகச்செய்பவை. தான் இறக்கப்போவதைத் தெரிந்துகொண்ட கதாநாயகன் தான் இறந்த பின்னர் திருமணம் செய்யும்படி மனைவியிடம் கூறுகிறான்.அப்போது கதாநாயகி தனது மனதில் உள்ள ஆதங்கத்தைப் பாடலாக வெளிப்படுத்துகிறாள்.

அந்தச்சந்தர்ப்பத்துக்காக கவிஞரால் எழுதப்பட்ட பாடல்தான்
"சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே""
"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?, தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?"
"ஒரு கொடியில் ஒருமுறை தான் மலரும் மலரல்லவா......
எனப் பாடல் வரிகள் செல்கிறது.

சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மிகச்சரியான பாடல்.இணை பிரிய நண்பர்கள்,  உயிருக்குயிரான காதலர்கள் கூட  தமக்குள்ள பிணக்கு ஏற்படும்போது இப்பாடலைப் பாடுவார்கள். ஆனால், அந்தப் பாடலை கவிஞர் எழுதிய சந்தர்ப்பம் வேறு.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் கூறிய ஒரு சொல்லை வைத்துத்தான் கவிஞர் அப்பாடலை எழுதினர்.  
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கான பாடல்களை எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசனும் இசை அமைப்பதற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் ஒப்பந்தம் செய்பப்பட்டனர். படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.கவிஞர் பாடலைக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். கவிஞருக்காக  விஸ்வநாதனும் அவரது குழுவினரும் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தனர். உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.


ஸ்ரீதரின் வெற்றிப்படமான நெஞ்சில் ஓர் ஆலயம் 21 நாட்களில் எடுக்கப்பட்டு சாதனை புரிந்தபடம். அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கான முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்ட கண்ணதாசன் பாடல்களைக் கொடுக்காததனால் கோபமடைந்த ஸ்ரீதர், விஸ்வநாதனிடம் மிகவும் கடுமையகப் பேசிவிட்டார்.  படத்தை வெளியிட முடிவு செய்த நாளில் வெளியிட வேண்டும் என்ற ஸ்ரீதரின் துடிப்பு மெல்லிசை மன்னர் மீது கோபமாக வெளிப்பட்டது.

விஸ்வநாதனும் கண்ணதாசனும் மிக நெருக்கமான நண்பர்கள். விஸ்வநாதனின் சொல்லை கண்ணதாசன் தட்டியதில்லை. அவரை செல்லமாகக் கடிந்துகொள்ளும் உரிமையும் விஸ்வநாதனுக்கு மட்டும் உள்ளது.கண்ணதாசனைக் கண்டுபிடிப்பதற்காக சென்னை முழுவதும் சல்லடைபோட்டுத் தேடினார் விசுவநாதன். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. கண்ணதாசனின் உறவினர்களும் நண்பர்களும் தேடியும் உருப்படியான தகவல் எதுவும் தெரியவில்லை.

சென்னைக்கு வெளியே மதுரை,திருச்சி எங்கும் கண்ணதாசனைத்  தேடி அலைந்தனர். எங்கேயும் அவர் இல்லை. பெங்களூரில் உள்ள லொட்ஜ் ஒன்றில் கவிஞர் இருப்பதாக   ஒருவர் தகவல் கொடுத்தார்.மெல்லிசை மன்னருக்குத் மிகவும் நம்பிக்கையான  ஒருவர் கொடுத்ததகவல் என்பதால் அடுத்த விமானத்தைப் பிடித்து அவர் பெங்களூருக்குப் பறந்தார்.
எதிர்பார்க்காத நேரத்தில் மெல்லிசை மன்னரைக் கண்ட கவிஞர் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். மெல்லிசை மன்னரின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கவிஞர் 
   பாட்டெழுதிக் கொடாத கோபத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பேசிய பேச்சு எல்லாவற்றையும் மெல்லிசை மன்னர் கொட்டித்தீர்த்தார்.  மெல்லிசை மன்னரிக் கோபம் கவிஞருக்குப் புதிதல்ல.நம்ம விஸ்வநாதன் தானே பேசுகிறான். பேசிவிட்டு ஓயட்டும் என எண்ணிய கவிஞர் அமைதியாக இருந்தார்.

"நீ ஸ்ரீதரை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாய். அவர் என்னை வாங்குவாங்கென்று  வாங்கிவிட்டார். வேண்டாம், இனி உன்னுடன் எந்த விதமான தொடர்பும் வைக்கப்போவதில்லை. இதுதான் கடைசிப் படம் இனி உனது பாட்டுக்கு நான் இசை அமைக்கப்போவதில்லை. நான் யாசை அமைக்கிற படங்களுக்கு நீ பாட்டு எழுத வேண்டாம்" என்று மெல்லிசைமன்னர் கண்டிப்பாகக் கூறினார்.

மெல்லிசைமன்னரின் சொற்கள் அனைத்தும் கவிஞரின் மார்பில் அம்பாகத் தைத்தன.
"விஸ்வநாதனா இப்படிச்சொன்னான்.என்னால் நம்ப முடியவில்லை. எனது பாட்டுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னது நீ தானா விஸ்வநாதா" தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கேட்டு விட வேண்டும் என கண்ணதாசன் நினைத்தார். ஆனால், கேட்கவில்லை.
கண்ணதாசனின்  நிழல் போல் எப்பவும் கூடவே இருப்பவர் கண்ணப்பன்.  .கண்ணப்பனைப் பார்த்து கண்ணப்பா எடு பேப்பரை என்றதும். கண்ணப்பன் கண்ணப்பன் எழுதத்  தயாராவார். கண்ணதாசன் சொல்லச்சொல்ல கண்ணப்பன் எழுதுவதுதான் வழமை. அன்று வழமைக்கு மாறாக கண்ணதாசன் தனது கைப்பட எழுதினார். மெல்லிசைமன்னரின் கோபம் இன்னமும் தணியவில்லை. அவர்  பேசப்பேச கவிஞர் எழுதிக்கொண்டே இருந்தார்.

கவிஞர் தான் எழுதிய பேப்பரை மெல்லிசைமன்னரின் கையில் கொடுத்தார். அதனை வசித்த மெல்லிசைமன்னரின் முகம் மாறியது. அவரின் கோபம் எப்படிப்போனதென்று தெரியாது. அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கவிஞரைக் கட்டிப்பிடித்து ஒருபாட்டம் அழுத்து தீர்த்தபின்,  அப் பாடல் வரிகளை மீண்டும் படித்தார்.
கவிஞர் தான்  கேட்க நினைத்ததை பாடலாக எழுதி இருந்தார். உனது பாடலுக்கு நான் இசை அமைக்க மாட்டேன் என மெல்லிசைமன்னர் கூறியதை மனதில் வைத்து கவிஞர் எழுதிய பாடல் இன்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருகிறது.

”சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே .............
நண்பனின் சொல்லை ஜீரணிக்க முடியாமல் எழுதிய அப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படக்காட்சிக்கும் கனகச்சிதமாகப் பொருந்திவிட்டது.
ரமணி
மித்திரன்
17/10/2014

Sunday, December 25, 2016

உயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்

ஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறைமுகமாகவும்  காய் நகர்த்துகின்றனர். சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.  சிலர் மதில் மேல் பூனையாக தருணம் பார்த்து காத்திருக்கின்றனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் பாதையில் பயணிப்போம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் நிர்வாகிகளும் சபதம் எடுத்துள்ளனர். கழகம் பிளவுபடும் என நினைத்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.


அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம் உடையும் என சிலர் எதிர்பார்த்தர்கள். இங்கிருந்து ஒரு துரும்பைக்கூட யாராலும் எடுக்க முடியாது. ஒன்றரைக்கோடித் தொண்டர்களும் விசுவாசமாக இருக்கிறார்கள் என மூத்த அமைச்சர் ஒருவர் கர்ஜித்தார். வெளிப்பார்வைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒற்றுமையாக இருப்பதுபோல தெரிந்தாலும் அங்கே உட்பூசல் அதிகமாக உள்ளது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத சசிகலாவின் காலில் மூத்த அரசியல்வாதிகள் விழுந்து கிடக்கிறார்கள். முதலமைச்சர் பதவியைக் காப்பாற்ற தனி ஒருவனாக பன்னீர்ச்செல்வம் போராடுகிறார். முடிவெடுக்க முடியாது சிலர் தடுமாறுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தலைமைச்செயலாளரின் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமானவரித்துறை  அதிகாரிகள் நடத்திய தேடுதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் கரும் புள்ளியாக பற்றிக்கொண்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரின் தனிச்செயலாளராகக்    கடமையாற்றியவர் ராம்மோகன ராவ்.  அப்போது தமிழக தலைமை ச்செயலாளராக   ஞானதேசிகன்  பொறுப்பேற்றிருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை ஞானதேசிகன் இழந்ததால் ஜெயலலிதாவின் கருணைப்பார்வையால்  ராம்மோகன ராவ்  தலைமைச் செயலாளரானார். ராம்மோகன ராவுக்கு முன்னால் 12 மூத்த அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் புறந்தள்ளி  ராம்மோகன ராவை  தலைமைச் செயலாளராக   ஜெயலலிதா நியமித்ததற்கு அப்போது எதிர்ப்புக் கிளம்பியது. ஜெயலலிதாவின் ஆணவ செல்வாக்கினால் அவை  அனைத்தும் காணாமல் போயின. ஒருமாநிலத்தின் முதலமைச்சராக ஒருவர் செல்வாக்குடன் வலம் வந்தாலும் அந்த மாநிலத்தின்  தலைமைச் செயலாளர் தான் அதனை இயக்குபவராக இருப்பார்.


இந்திய வரலாற்றில்  தமிழக  தலைமைச் செயலா ளரின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தமிழக ஊழலின் உச்சக்கட்டமாக அமைந்துள்ளது.  ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அனைத்திலும் பின்தங்கி உள்ளது. ஊழலில் மற்றைய மாநிலங்களைப் பின்னுக்குத தள்ளி முன்னேறியுள்ளது. தமிழகத்தின் நிர்வாகம்,சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நெறிப்படுத்தி, ஊழல்,முறைகேடு என்பனவற்றை களையும் அதிகாரம் கொண்ட தலைமை அதிகாரி கறைபடிந்தவர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்மோகன ராவ். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது  செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த ராம்மோகன ராவ், ஜெயலலிதாவின் ஆட்சியில் அசைக்க முடியாத புள்ளியாக உயர்ந்தார். ராம்மோகன ராவிடம் ஒப்புதல் பெற்றால் ஜெயலலிதா தட்டிக்கழிக்க மாட்டார்  என்ற உண்மையைப் புரிந்துகொண்ட அமைச்சர்கள் ராம்மோகன ராவைச்சுற்றி வலம் வந்தார்கள். தமிழக  தலைமைச் செயலாளரின் வீடு அலுவலகம் என்பனவற்றைச் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள்   ஆவணங்களையும்  44 கிலோ தங்கத்தையும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  .எட்டு  கார்களில் வந்த இருபது அதிகாரிகள் மூன்று நாட்களாகதுணை இராணுவத்தின் உதவியுடன்  இச்சோதனையை மேற்கொண்டனர்.

தலைமைச் செயலாளரின் வீடு அலுவலகம் என்பனவற்றில் சோதனை துணை இராணுவம் குவிப்பு என்பன தமிழக அரசை திணறடித்துள்ளன. ஜெயலலிதா  மரணமானதன் பின்னர் மத்திய  அரசின் பிடி தமிழக அரசின் மீது இறுகப்படிந்துள்ளது. டில்லிக்குச்சென்ற பன்னீர்ச்செல்வம் மோடியைச்சந்தித்தது  அங்கு தன்னிச்சையாக பேட்டி கொடுத்தது, டில்லியில் இருந்து திரும்பிய  பன்னீர்ச்செல்வம்,  சசிகலாவை சந்திக்காமை  போன்றவற்ரால் சசிகலா தரப்பு பன்னீர்ச்செல்வ்காத்தின் மீது கடுப்பாக இருந்தது. வருமானவரித்துறையின் சோதனையால் கடுப்பின் வேகம் தணிந்துள்ளது. ராம்மோகன ராவின் வீட்டிலும் அலுவலகத்திலும் சித்தனோ நடந்த அதேசமயம் அவருடைய மகன்,உறவினர் நண்பர்கள்  வீகள் அலுவலகங்கள் என  13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். பதுக்கி வைக்கப்பட்ட பணம், தங்கம்  என்பனவற்றுடன் முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. ராம்மோகன   ராவின் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பலவற்றுடன் இரகசிய டயரி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்த டயரியில் உள்ள இரகசியத தகவலால் அமைச்சர்கள் சிலர் சிக்குவார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. 

மணலைக் கயிறாக்குபவர் என்ற என்ற சொல்லால் சிலர் உச்சத்துக்கு உயர்த்தப்படுவர். மணல் மூலம் கோடிகோடியாகச் சம்பாதிக்கலாம் என்று தமிழக அரசுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தவர் ராம்மோகன ராவ் மணல் விற்பனையால் அதிக லாபம் கிடைத்ததால் மணல் விற்பனையை தமிழக அரசு கையிலெடுக்க வேண்டும் என ஆலோசனை கூறியவர்.இதனால் தமிழக அரசாங்கம் மட்டுமல்லாது சில அமைச்ரகளும்கோடியில் புரண்டார்கள்.  தமிழக அரசின் சகல நகர்வுகளும் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் கண் அசைவுக்குப் பின்னரே அசையத்தொடங்கும். ராம்மோகன ராவின் திருவிளையாடல்கள்  ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராம்மோகன  ராவைப்பற்றிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்றிருக்கும்.அவர் மீது ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு யாராலும் பதில் கூறமுடியாது.


சேகர் ரெட்டி என்ற ஒப்பந்தக்காரர், அவரது  சகோதரன் சீனிவாச ரெட்டி,பங்குதரர்பிரேம் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். சேகர் ரெட்டியின் வீட்டில் 171  கோடி ரூபா பணமும் 130 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டனர். அவை  அரசு அதிகாரிகளுக்கும் ஐந்து அமைச்சர்களுக்கும் சொந்தமானவை என அவர் போட்டுக்கொடுத்தார்.ஏனைய இருவரிடமும் இருந்து 131  கோடி  ரூபா பணமும் 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. 90  கோடி ரூபா புதிய பண நோட்டுகள்.புதிய  பணத்தைப் பெறுவதற்காக  அப்பாவிமக்கள் வங்கியின் முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கோடிக்கணக்கான புதிய பணம் இவர்களின் கைக்கு வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமுலாக்கப் பிரிவினரின் முறையான விசாரணையின் பின்னர் மூவரும் கைது செயப்பட்டு விசாரணை வளையத்தினுள் வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மரணமான அன்று இரவு 100 கோடி ரூபாவை பதுக்குவதுபற்றி சேகர் ரெட்டியும் ராம்மோகன் ராவும் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டி மீதான விசாரணையின் பின்னர் தமிழக  தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் குறிவைக்கப்பட்டார் தனது பண பலத்தினால் திருப்பதி தேவஸ்தான  உறுப்பினரானார் சேகர் ரெட்டி. திருப்பதி  பிரசாதமான லட்டை ஜெயலலிதாவுக்குக் கொடுத்து அவர் மனதில் இடம் பிடித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம்  சேகர் ரெட்டி , பன்னீர்ச்செல்வத்துக்கு அறிமுகமானார். சசிகலா பன்னீர்ச்செல்வம், உட்பட சில அமைச்சர்களும் சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்களுக்கு புதிய பண  நோட்டுகளைக் கொடுத்த குற்றச்சாட்டில் டில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகம்,ஆந்திரா, கர்நாடகம்,டில்லி என பரந்துபட்டு விசாரணை நடைபெறுகிறது. . 

தமிழகத்தின்  முன்னாள் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன்,பன்னீர்ச்செல்வத்தின் நெருங்கிய சகா கரூர் அன்புநாதன்,நந்தம் விஸ்வநாதன்,முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடைகள்,  அலுவலகங்கள், அப்பலோ குழுமத்துக்குச்சொந்தமான  30 இடங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் நடைபெற்றன. வழமை போல பணங்களும்    ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழகத்தின் முக்கிய புள்ளிகளின் வீதுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.ஆண்டுக் கடைசியிலும் சோதனை தொடர்கிறது புதிய ஆண்டு  வருமானவரித்துறை அதிகாரிகளின் பிறக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
வர்மா 

Wednesday, December 21, 2016

பன்னீர்ச்செல்வ‌த்தின் பதவிக்கு ஆப்புவைக்கும் அ .தி .மு. க நிர்வாகிகள்

அரசாங்கத்தை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான செயற்பாடு. ஒரு நாட்டில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி பதவிவிலக வேண்டும். பிரதமர்பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும். மாநிலத்தில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் என்ற கோஷம் மேலெழும். இந்த அரசியல் நெறிக்கு மாறாக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பில் இரும்புக் கோட்டையாக  உறுதியுடன் இருந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்த போதும் அவரின் விடுதலைக்காக போராட்டம்,யாகம்,நேர்த்திக்கடன் என்பனவற்றை கண்ணீரும் கம்பலையுமாகச் செய்து போராடியவர்கள் அவரது  மரணத்தின் போது அமைதியாக இருந்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்கினர். ஜெயலலிதாவின் மரணம் தந்த அதிர்ச்சி நீங்குவதற்கிடையில் பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்குப் பின்னர் கட்சியை யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழ முன்பே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் கையைக் காட்டியது. தமிழகத்தின் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌ம் என்ற எண்ணம் மனதில் பதிவதற்கிடையில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சிலர்   சசிகலாவிடம் சரணடைந்தனர். ஜெயலலிதா இருக்கும் போது பன்னீர்ச்செல்வ‌த்தை ஏற்றுக் கொண்டவர்கள், அவர் இறந்த பின்னர் பன்னீர்ச்செல்வ‌த்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மர்மம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

தமிழக அமைச்சர்கள் சிலர் தமது கட்சியைச்சேர்ந்த பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இதில் முன்னிலை வகிக்கிறார். சசிகலா முதலமைச்சரவதர்காக பன்னீர்ச்செல்வ‌ம் பதவியை விட்டுக்கொடுப்பார் எனத் தெரிவித்தார்.  இதற்குஎதிராகப்  பலத்த கண்டனங்கள்  எழுந்ததனால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிரான அறிக்கை அல்ல  எனப் பின்வாங்கினார். அமைச்சர்கள் தங்கமணி,எடப்பாடி பழனிச்சாமி,வெல்லம்பட்டி  நடராஜன்,கடம்பூர் ராஜு,சேவூர் ராமச்சந்திரன்,எம்.சி.சம்பத்,தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க விரும்பினார்கள். மத்திய அரசின் விருப்பப்படி பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.


1999 ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி. தினகரன்வேட்பாளராகக்  களம் இறங்கிபோது தங்கத்தமிழ்ச்செல்வனால்  திவாகரன் மூலம் சசிகலா குடும்பத்துக்கு  அறிமுகமானவர் பன்னீர்செல்வம். கட்சியில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் ஓரம்கட்டப்பட்டுள்ளார். பன்னீர்ச்செல்வ‌த்தின் செயற்பட்டால் தான் ஓரம்கட்டப்பட்டதாக நினைக்கும் தங்கத்தமிழ்ச்செல்வன்  இப்போது பன்னீர்ச்செல்வ‌த்தை எதிர்க்கும் கோஷ்டியில் இருக்கிறார்.1954 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி   தேனி மாவட்ட பெரியகுளம் தொகுதியில் பிறந்தவர்  பன்னீர்செல்வம்,i தகப்பன் ஓட்டக்ககாரத்தேவர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்.பால் பண்ணை நடத்தியதால் ரீ க்கடை நடத்தினர். தாயார் பழனிஅம்மாள். குலதெய்வம் பேச்சி அம்மனின்  ஞாபகார்த்தமாக‌ பேச்சிமுத்து எனப்பெயரிட்டனர். பின்னர் தனது பெயரை பன்னீர்செல்வம் என மாற்றினார். எம்.ஜி.ஆர் இறந்தபின்னர் ஜானகியின் பக்கம் செயற்பட்டார். தேனீ மாவட்டத்தில் கழகத்தின் சிறு சிறு பதவிகள் வகித்த பன்னீர்ச்செல்வ‌ம், பெரியகுளம் நகர மன்றத்தேர்தலில் வெற்றி பெற்றறார்.  2001.ஆம் ஆண்டுத தமிழக  சட்ட மன்ற உறுப்பினராகத்    தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அரசியலின் மிக உச்சத்துக்குச் சென்றார்.
அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு பட்டதாரி ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். அண்ணாவைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரான கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜானகி,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.சினிமாக் கவர்ச்சி  இல்லாத முதலமைச்சாரக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார். ஜெயலலிதா சிறைக்குச் சென்றதால் இரண்டு முறை முதல்வரான அனுபவம் அவருக்கு உள்ளது. இரண்டு முறையும் ஜெயலலிதாவை முன்னிறுத்தியே கடமையை ச் செய்தார். புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைப்படி என்றுதான் ஆரம்பிபார். இப்போது அந்த ஆரம்ப வசனம் இல்லாமல் செயலாற்றுகிறார்.


கடந்த ஆண்டு சென்னை  வெள்ளத்தில் மூழ்கியதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் காரணம் என மக்கள் கொந்தளித்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் அமைச்சர்களும் உடனடியாக உதவிக்கு வரவில்லை.கடந்த வாரம்  புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்ச்செல்வ‌ம் சென்று பார்வையிட்டார். தமிழக முதலமைச்சரின் வாகனம் சிக்னலுக்காகக் காத்திருந்ததை மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இவற்றால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

பன்னீர்ச்செல்வ‌ம் இப்போது பழைய பன்னீர்ச்செல்வ‌மாக இல்லை. தனது பதவியை தக்க வைப்பதற்கான முயற்சிகளைச் சத்தமின்றிச் செயற்படுத்துகிறார். டில்லிக்குச் சென்ற  பன்னீர்ச்செல்வ‌ம்   பிரதமர் மோடியைச்சந்தித்து புயலால் ஏற்பட்ட சேத விபரங்களைக் கூறி நிவாரணம் கேட்டார். ஜெயலலிதா டில்லிக்குச் சென்றால் குனிந்து கும்பிடு போடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சரைக் கண்டுகொள்ளவில்லை. தமிழக முதலமைச்சரான  பன்னீர்ச்செல்வ‌ம்  , டில்லியில் முதன் முதலாக பத்திரிகையளர்களுக்குப் பேட்டியளித்தார். முன்னர் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தபோது  அறிக்கைகளை மட்டும் வெளியிட்டாரே தவிர யாருக்கும் பேட்டியளிக்கவில்லை. தமிழகத்துக்கு வெளியே முதல் பேட்டியளித்து தன்னைப் பாதுகாத்துள்ளார்

 பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் மோடியும் பாரதீய ஜனதாவும் இருக்கிறது.ஜெயலலிதாவை எதிர்த்த அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் நடவடிக்கை  பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பாதுகப்பாக உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக கழக பொதுச்செயலாளராக சசிகலா தெரிவாவதை எதிர்த்து சசிகலாபுஷ்பா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவரின் மனுவுக்குப் பதிலளிக்கும் படி சசிகலா,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக தேர்தல் ஆணையம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தால்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் அட்டை சசிகலாவிடம் இல்லை எனக் கூறப்படுகிறது. கழக உறுப்பினர் இல்லாதவர் எப்படி பொதுச்செயலாளர் பதவியை ஏற்கலாம் எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளிவந்த பின்னர் முடிவெடுக்கலாம் என சில நிர்வாகிகள் அமைதியாக இருக்கின்றனர்.ஜெயலலிதா மரணமானதால் வழக்கில் இருந்து  அவருடைய பெயர் நீக்கப்படும். சசிகலா குற்றவாளி எனதீர்ப்பு வழங்கப்பட்டால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.  சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வெளியானால் பன்னீர்ச்செல்வத்துக்கு எதிரானவர்கள் புதிய ஒருவரைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. கட்சி மாறி தன்னிடம் சரணடைந்தவர்களுக்கும் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து உயரத்தில் வைத்தவர். உடன்பிறவா சகோதரி, ஜெயலலிதாவின் நிழல் என புகழப்படும் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் பதவியையும் கொடுக்க ஜெயலலிதா முன்வரவில்லை.சசிகலாவுக்கு பதவி கொடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை.அவரின்  விருப்பத்துக்கு மாறாக சசிகலாவை முதன்மைப்படுத்துவது தவறு என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. தன்னை அழைப்பவர்களுக்கு பதில் கூறாமல் மெளனமாக இருக்கிறார் சசிகலா. வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வரை அவர் மெளனவிரதத்தைக் கடைப்பிடிப்பார்.


தமிழகத்தின் சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் சசிகலாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சசிகலா தலைமை ஏற்பதை விரும்பாத கழகத் தொண்டர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் இணைகிறார்கள்.  சசிகலா கட்சியைப் பொறுப்பேற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபடும் என மத்திய மாநில உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்குரிய காலம் வரும்வரை  அமைதியாக இருப்பதற்கு சசிகலா தீர்மானித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் விபரத்தை வெளியிட வேண்டும் என பல அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்பலோவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைப் புறந்தள்ளியுள்ளன.ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் வழங்குமாறு  தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது சசிகலா தரப்புக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகும்.பன்னீர்ச்செல்வத்துக்கு  எதிரானவர்கள் சசிகலாவின் பின்னால் மறந்து நிற்கின்றன.  தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவுக்கு பன்னீர்ச்செல்வம் செக் வைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெல்லப்போவது பன்னீர்ச்செல்வமா அல்லது அவருக்கு எதிரானவர்களா என்பதை இவர்களின் அடுத்த நகர்வுகள்தான் தீர்மானிக்கும். இதில் யார் வெற்றி பெற்றாலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தான் பாதிப்பு.
வர்மா 

Monday, December 19, 2016

தமிழக அரசியல் தலைமைப் பதவிக்கான போராட்டம் ஆரம்பம்


ஜெயலலிதாவின் மறைவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கருணாநிதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும்  தமிழகத்தில் மிகப்பெரியதொரு அரசியல் தலைமைத்துவ இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெயலலிதாவின் மரணத்தால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை சூனியமாகி உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பின்னால் இருந்து அரசியல் நடத்திய சசிகலா அரங்கத்துக்கு வந்துள்ளார்.கருணாநிதிக்குப் பின் கழகத் தலைவர் என அனைவராலும் அடையாளம் காட்டப்பட்டவர் ஸ்டாலின். ஸ்டாலினைத்  தலைவராக்குவதற்குரிய  களம் கனியவில்லை என்பது கருணாநிதியின் எண்ணம்.


நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது குடும்பத்தவர்களும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சத்தியப்பிரமாணம் எடுத்து ஜெயலலிதாவுடன் இணைந்த உடன்பிறவா சகோதரி சசிகலா அரசியல் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றத் துடிக்கிறார்.ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கைகட்டி வாய்பொத்தி  நெடுஞ்சாண் கிடையாக  காலில் விழுந்த எல்லோரும் அவர் சடலமானதும்  அவருக்குக் கொடுத்த அதே மரியாதையை சசிகலாவுக்குக் கொடுக்கிறார்கள்.  ஜெயலலிதா  மரணமானதும் சசிகலாவின் அரசியல் அரங்கமேறத் தொடங்கிவிட்டது.
 ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட மன்னார்குடி சொந்தங்கள் அவரின் பூத உடலைச் சுற்றி நின்று பாதுகாப்பளித்தனர்.ஜெயலலிதாவுக்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள்  தள்ளி நின்று எட்டிப்பபார்த்தனர் ஜெயலலிதாவின்  மீது உயிரையே வைத்திருக்கும் தொண்டர்கள் கண்ணீரும் கம்பலையுமாக கண்ணுக்கெட்டாத தூரத்தில் நின்று அழுது புலம்பினர். ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணி இல்லை என்றதும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களுக்கு பயம் தெளிந்துவிட்டது. கழக நிர்வாகிகள் அனைவரும் சொல்லி  வைத்ததுபோல் சசிகலாவிடம் சரணடைந்து விட்டனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்தும்  தகுதி தனக்கு இருப்பதாக சசிகலா நினைக்கிறார்..

   ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருமித்து சசிகலாவை முன்னுக்குக் கொண்டு வருவதற்குரிய சகல ஏற்பாடுகளையும்  செய்து வருகின்றனர். ஜெயலலிதா பேரவை,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி ,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மீனவர் பிரிவு  போன்ற அமைப்புகள் சசிகலாவைப் பொதுச்செயலாளராக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஜெயலலிதாவின் சமாதிக்குத் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செல்வதாக ஜெயா தொலைக்காட்சி அறிவிக்கிறது. எம்.ஜி.ஆரின் சமதிக்கருகில்தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டார் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போகிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்   போயஸ்கார்டனுக்குச் சென்று கழகத்துக்குத் தலைமை ஏற்க வரும்படி கெஞ்சிக் கூத்தாடுவதை ஜெய தொலைக்காட்சி திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்கிறது.ஜெயா தொலைக்காட்சியில் சசிகலாவின் புராணம் ஆரம்பமாகிவிட்டது.

எம்.ஜி.ஆர் இறந்த பின்பு ஒன்றரைக்கோடி உறுப்பினர்களைக்  கட்சியில் சேர்த்த பெருமை ஜெயலலிதாவுக்குரியது. ஏழு முறை கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றவர் ஜெயலலிதா.எதிரணி அரசியல் தலைவர்களின் முன்னால் நேர்படப்பேசும் திராணி உடையவர்.ஜெயலளிதவிப் போன்ற ஒரு பெண் தலைமைத்துவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை. ஜெயலலிதாவுக்கு இணையாக சசிகலா இல்லை என்பதே யதார்த்தம். ஜெயலலிதாவுடன் 30 வருடங்கள் ஒன்றாக இருந்த தகுதி போதும் என சிலர் நினைக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை   முன்னாள் அமைச்சர் பொன்னையன் வெளியிடுகிறார். ஒரு  நிறுவனத்தில்  வைப்புச்செய்த பணத்தை பெறுவதற்கு தகுதியானவர் சசிகலா என ஜெயலலிதா  குறிப்பிட்டதை பொன்னையன் வெளியிட்டு ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என அடித்துக் கூறுகிறார்.அந்தப் பத்திரத்தை யாரிடம் இருந்து பெற்ற விபரத்தை  பொன்னையன் தெரிவிக்கவில்லை.
சசிகலாவைப் பொதுச்செயலாளராக்கி ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறச்செய்து முதலமைச்சரக்குவதை பன்னீர்ச்செல்வ‌த்தின் ஆட்கள் விரும்பவில்லை. பன்னீர்ச்செல்வ‌த்தின் ஆதரவாளர்களுக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. சசிகலாவுக்கு  எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு எதிரானவர்கள் அடக்கி  வாசிக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தில் சசிகலாவின் கை ஓங்கினால் கட்சி பிளவுபடும். இதனை  பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. சசிகலாவின் கை ஒங்க வேண்டும் கட்சி பிளவுபட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப்பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வியூகம் வகுக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதற்கு எதிர் மாறான நிலை காணப்படுகிறது. ஸ்டாலின் எதிர்பார்த்த தலைமைப் பதவி அவரைத் தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுக்குழு 20 ஆம் திகதி கூடும் என அறிவிக்கப்பட்டது. அன்று ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அரசால் புரசலாக செய்தி வெளியானது. இதனால் அவருடைய  ஆதரவளர்கள்   உற்சாகமடைந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் 20 ஆம் திகதி பொதுக்குழு கூட்டப்படமாட்டது என அறிவிக்கபட்டுள்ளது.

 கருணாநிதி சுகமடைந்து வீட்டுக்கு திரும்பினாலும் அவரால் முன்பு போல் செயற்படமுடியாது.  ஸ்டாலினுக்குப் போட்டியாக வலம்  வந்த அழகிரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கனிமொழியின் செல்வாக்கு சொல்லும்படியாக இல்லை. தடை இல்லாத பாதையில் ஸ்டாலின் பயணம் செய்கிறார்.  சாதுரியமான பதிலாலும் ,உறுதியான வாதத்தாலும் ஸ்டாலினை முடக்கிய ஜெயலலிதா இல்லாதது ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்குச் சாதகமானதாக இருக்கிறது. வைகோ, விஜயகாந்த்,திருமாவளவன்,தா.பாண்டியன், அன்புமணி,ராமதாஸ் ஆகிய தலைவர்கள் செல்வாக்கிழந்துள்ளனர். இதனால் எதுவித தடைகளும்  இல்லாத அரசியல் பாதையில் ஸ்டாலின் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலின் தலைமைத்துவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்றுவதற்கு பெரியாரின் தலைமையில் திராவிடக் கழகம் போராடியது.அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்கள் பெரியாரின் பின்னால் அணிவகுத்து நின்றனர். பெரியாரைப் பிரிந்த அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து  தமிழக அரசியலில் கோலோச்சிய காங்கிரஸ் கட்சியை படுகுழியில் விழுத்தினர். அண்ணாவின் மறைவின் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியவர்களுடன் போட்டி போட்ட கருணாநிதி தலைமைப்பீடத்தைக் கைப்பற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து  கருணாநிதியிடம் இருந்த தமிழக தலைமைப்பீடத்தைக் கைப்பற்றினர். எம் .ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் தலை நிமிர்த்த முடியவில்லை.எம்.ஜி.ஆர் மறைந்ததும் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் இரண்டாகியது. அப்போது தமிழகத்தின் தலைமைத்துவம்  மீண்டும் கருணாநிதியின் வசமாகியது. ஜெயலலிதாவின் கடின உழைப்பு கருணாநிதிக்கு சவால் விட்டது.இருவரும் மாறிமாறி ஆட்சிபீடம்  ஏறினர். கட்சியாக நடைபெற்ற ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலும் இரண்டு சட்ட மன்றத் தேர்தல்களிலும் ஜெயலலிதாவின் வியூகத்தால் கருணாநிதி அடுத்தடுத்து தோல்வியடைந்தார்.


எம்.ஜி.ஆரின் வழியில் ஜெயலலிதா பெற்ற வெற்றிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தக்கவைப்பர்களா அல்லது  பறிகொடுப்பர்களா என்பதை அறிவதற்கு உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
வர்மா 

Tuesday, December 13, 2016

புதிய தலைவி உருவாக்கப்படுகிறார்

  
தமிழகத்தை தனது   இரும்புப்பிடியில் வைத்திருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி, அம்மா என கழகத்தவர்களால்  போற்றிப் புகழப்பட்ட ஜெயலலிதா ஒரே இரவில்    தூக்கி எறியப்பட்டுவிட்டார் என தொண்டர்கள் குரல் எழுப்புகிறனர்.  ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமாகி உடல் அடக்கம் செய்யப்பட்டதுவரையான நிகழ்ச்சிகள் அனைத்தும் கனவுபோல நடந்து முடிந்துவிட்டது.
ஜெயலலிதாவுக்குப்பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றியபோது ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களின் பெயர்கள்  வந்து போயின.. ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி ஏழுநாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின்  முகத்தைப் பார்க்காது துடித்துப்போன தொண்டர்கள்,  அவரை  அடக்கம் செய்த இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்த அமைதியாக வரிசையில் நின்றனர்.ஆனால்,  ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க காய் நகர்த்தினார்கள்.

ஜெயலலிதாவை  இழந்த சோகத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் மீள்வதற்கிடையில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியைப் பிடிப்பதற்கு சசிகலா முயற்சி செய்கிறார் என்ற  செய்தி கசிந்தது. ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலவா என்ற ஆச்சரியம் அரசியல் அரங்கில் எழுந்தது.இது  பொய்யான செய்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகத்தை உண்டாக்குவதற்காக யாரோ கிளப்பிவிட்ட புரளி என்றுதான் அதிகமானோர் நினைத்தனர்.

ஜெயலலிதாவின் வழியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்த வருமாறு சசிகலாவிடம் கழக நிர்வாகிகள் கெஞ்சுவதை ஜெயா  தொலைக்காட்சி ஒளிபரப்பியது. செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, கோகுல இந்திரா, சைதை துரைசாமி, சி.சரஸ்வதி ஆகியோர் உட்பட சிலர் சசிகலாவின் முன்னால்  கைகூப்பி  கெஞ்சுவதை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.ஜெயலலிதாவின் கம்பீரம், மிடுக்கு, ஆளுமை ,எதுவும் இல்லாத சசிகலா எப்படி பொதுச்செயலாவராவார் என்ற கேள்வி எழுந்தது. சசிகலாவின் இறுக்கமான பிடியில் ஜெயா தொலைக்காட்சி சிக்கி இருப்பதை அந்தக் கட்சியின் மூலம் தெரியக்கூடியதாக உள்ளது.
ஜெயலலிதாவின் உடலருகே சோகத்துடன் சசிகலா நிற்கும் படத்துடன்  தலைமைப் பொறுப்பை ஏற்க அவரை வருமாறு வேண்டுகோள் விடுக்கப்படும் விளம்பரங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. பெரியார்,அண்ணா,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோருடன் சசிகலாவையும் இணைத்து கட் அவுட்கள் சில இடங்களில் முளைத்தன. யாரோ திட்டமிட்டு சசிகலாவை முன்னிலைப்படுத்த இவற்றைச் செய்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது  அவரை மகிழ்விப்பதற்காக விளம்பரங்கள்  வெளியிட்டவர்கள் அவர் மரணமானபின்னர் கண்ணீர் அஞ்சலி இரங்கல் பற்றிய விளம்பரங்களையோ  அல்லது கட் அவுட்களையோ வெளியிடவில்லை. ஜெயலலிதா இறந்தபின்னர் பலருக்கு குளிர் விட்டுப்போயுள்ளது.

ஜெயலலிதாவை அம்மா என  அழைத்தவர்கள் வாய் கூசாது சசிகலாவை சின்னம்மா என அழைக்கத் தொடங்கிவிட்டனர். காந்தி  தாத்தா, நேரு மாமா, பெரியார், கர்மவீரர் காமராஜர்,அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி,கவிஞர் கண்ணதாசன் என அடைமொழியுடன் அந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். புரட்சித்தலைவர் புரட்சி நடிகர் போன்ற பட்டங்களால் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் அவருடைய அண்ணா எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்றும் விழித்தார்கள். ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என அழைத்தார்கள். சோனியாவை அன்னை என காங்கிரஸார் அழைத்தபோது அதற்குப்[ போட்டியாக அம்மா என  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களால்  ஜெயலலிதா அழைக்கப்பட்டார். ஜெயலலிதா இறந்ததும் சசிகலாவுக்கு சின்னம்மா, புரட்சித்தோழி  போன்ற பட்டங்களை வழங்கி அவரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.


ஜெயலலிதாவால் ஓரமாக வைக்கப்பட்டவர் பொன்னையன். இவருக்கு சசிகலாவை அறவே  பிடிக்காது    ஜெயலலிதாவை பிழையான வழிக்கு .சசிகலா,   அழைத்துச்செல்கிறார் என  பொன்னையன் குற்றம் சாட்டினர். இப்போ சசிகலாவுக்கு ஆதரவாக பொன்னையன் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.ஜெயலலிதா வகித்த பதவிக்கு பொருத்தமானவர் நாடாளுமன்ற  உறுப்பினர் தம்பித்துரை என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் சசிகலாவின் பக்கம் சாய்ந்துவிட்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பத்திரமானவர்  பன்னீர்ச்செல்வம். அவரைப்  பற்றிய பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இரண்டு முறை  ஜெயலலிதாவால் அவர் முதலமைச்சராக்கப்பட்டார்.  ஜெயலலிதா வகித்த பதவியை அவருக்கு வழங்கலாம் அதனை தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்து மேலோங்கியது. எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாது முதல்வர் கதிரையில் அமர்ந்த பன்னீர்ச்செல்வமும்  சசிகலவால்தான் கட்சிய கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார்.


ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என வர்ணிக்கப்படுபவர் சசிகலா. உற்றார் உறவினர் சொந்தபந்தம் எதுவும் இல்லாத ஜெயலலிதாவுக்கு இரவும் பகலும் துணையாக இருந்தவர். ஜெயலலிதா துவண்ட போதெல்லாம் அவருக்குத் தோள் கொடுத்தவர்.ஜெயலலிதாவுக்காக  உயிரையும் கொடுப்பேன் என வீரவசனம் மற்றவர்களால் பேசப்பட்டபோது ஜெயலலிதாவுடன் சேர்ந்து சிறைக்குச்சென்றவர்.  ஜெயலலிதா செய்த குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராவதற்கும் தமிழகத்தின் முதல்வராவதற்கும் இந்தத் தகுதி போதும் என சிலர் நினைக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உறுதியாகக் கட்டி எழுப்பிய ஜெயலலிதா மரணமானதும் கட்சிக்குள் சில பிரச்சினைகள் தோன்றும் கழகம் கலகலக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.  5 ஆம் திகதி மாலையில் ஜெயலலிதா மரணமான செய்தி வெளியாகியது.தொண்டர்கள் குழம்பினார்கள். அச்செய்தி வதந்தி என அப்பலோ அறிவித்தது. தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். அன்று நள்ளிரவு ஜெயலலிதா   காலமானார். மறுநாள் மாலை  முதலமைச்சர்  பன்னீர்ச்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறது. ஜெயலலிதாவின் மரணமும் பதவி ஏற்பும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மறுநாள் மாலை ஜெயலலிதாவின் பூதஉடல்  எம்.ஜி.ஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது.

ஜெயலலிதா மரணமான பின்னர்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாரால் வழி நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்குப் பதிலாக இவர் என  தொலைக்காட்சித் தொடரில் காட்டுவது போல ஜெயலலிதாவுக்குப் பதிலாக சசிகலா என சுட்டிக்காட்டப்படுகிறது.சசிகலாவைச்சுட்டிக்காட்டிய கை எது என்பது மர்மமாக உள்ளது. அந்தக்கை பாரதீய ஜனதாவுடையது என்ற சந்தேகம் உள்ளது.  ஆனால், சகிகலாவின் கணவர் நடராஜனும் அரசியல் சித்து விளையாட்டு செய்கூடியவர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் எதுவித சஞ்சலமும் இன்றி சசிகலாவின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். சசிகலாவின் காலில்  விழுகிறார்கள், கும்பிடுகிறார்கள். தலைமை ஏற்க வா என வருந்தி அழைக்கிறார்கள். ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டங்களுக்கு பன்னீர்ச்செல்வம் பச்சைக்  கொடி காட்டிவிட்டார். மத்திய அரசுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இணையும் என்ற செய்தி வேகமாகப் பரவுகிறது.அப்போது சிலருக்கு மத்திய அமைச்சுப்பதவி கிடைக்கும் . தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்படப்போகிறது. அப்போது சிலருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் அதனால் சிலர் அமைதியாக இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி  தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும் இரு அணிகளும் செயற்பட்டன. அப்போது ஜானகியின் பக்கம்  நின்று ஜெயலலிதாவை எதிர்த்தவர்களில்  பன்னீர்ச்செல்வமும் ஒருவர் ஜானகி ஒதுங்க ஜெயலலிதா கழகத்தைக் கைப்பற்றினார். ஜெயலலிதாவின் கை ஓங்கியதும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் கட்டம் கட்டப்பட்டதால் பலர் வெளியேறினர். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இருந்ததால் கட்சி தப்பிப் பிழைத்தது. தன்னை எதிர்த்த பன்னீர்ச்செல்வத்தின் மீது ஜெயலலிதா முழு நம்பிக்கை வைத்ததால்,  அவர் இல்லாத நிலையில் எதுவித பிரச்சினையும் இன்றி பன்னீர்ச்செல்வம் முதல்வரானார்.

ஜெயலலிதாவின் அறையைப் பாவிக்க பன்னீர்ச்செல்வம் விரும்பவில்லை. தமிழக சட்ட மன்றத்தில்  ஜெயலலிதாவின் கார்  நின்றால் மற்றவர்களின் கார்கள் தூரத்திலே நிற்கும் இப்போது நிலைமை தலை கீழாகிவிட்டது.. அமைச்சரவை சுதந்திரமாககச்செயற்படுகிறது.   முதலமைச்சர் கட்டளை பிறப்பித்தால் தான் முன்பு அமைச்சர்கள் செயற்படுவார்கள். இப்போது முதலமைச்சரின் சொல்லுக்கு  காத்திருக்காமல் செயற்படுகிறார்கள்.  அடுத்த தேர்தலைக் குறிவைத்து அமைச்சர்கள் செயற்படுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தலைச்சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள். அதனால் மீதமிருக்கும் பதவிக்காலத்தை தக்க வைப்பதற்கு ஒற்றுமையாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர்.

சசிகலாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஒப்புதலளித்துள்ளனர். ஆனால், தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராக உள்ளனர்.ஜெயலலிதாவினால் கட்டம் கட்டப்பட்ட சசிகலாவை மன்னிக்கத் தொண்டர்கள் தயாராக இல்லை.  சசிகலாவைப் போற்றும் பதாகைகளை தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான போராட்டம் நடந்தால் தொண்டர்களின் கைதான் மேலோங்கும். தொண்டர்கள் இல்லையென்றால் தலைவர்கள் இல்லை என்பது யதார்த்தம்.இந்த உண்மை தலைவர்களுக்கும் தெரியும்.இப்போதைக்குத் தொண்டர்களின் ஆதரவு அவர்களுக்குத்  தேவை இல்லை. இன்றைய நிலைமையைச் சமாளித்துவிட்டால் தேர்தல் சமயத்தில் தொண்டர்களின் மனநிலை அறிந்து தலைவர்கள் செயற்படுவார்கள்.

ஜெயலலிதா கம்பீரமாக வளம் வந்த போயஸ்கார்டனில் வெளிச்சம் படாமல் இருந்த சசிகலா இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அங்கிருந்தபடியே அவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்கு கழகத் தொண்டர்கள் தினமும் வந்து குவிகிறார்கள். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவுச்சின்னமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. ஜெயலலிதா  அமர்ந்த கதிரையில் அமர்ந்துகொண்டு சசிகலா பிரமுகர்களைச் சந்திக்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்படலாம் என்ற தோற்றப்பாடு வெளிப்படையாகத்  தென்பட்டாலும்,,  கழக  யாப்பின் பிரகாரம் சசிகலா அதற்குத் தகுதியானவர் அல்ல.தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் அங்கத்தவராக இருப்பவர்தான் பொதுச்செயலாளராவதற்குத் தகுதி உடையவர். 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர்  13ஆம் திகதி  சசிகலாவின் உறுப்புரிமை நீக்கப்பட்டு அவர் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டர் 2012 மார்ச் மாதம்  28 .ஆம் திகதி மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் கழகத்தில் இணைந்தார். அவர் கழகத்தில் இணைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவில்லை பொதுச்செயலாளராவதற்கு அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.  சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகளுக்கு இந்த யாப்புப்பற்றி எதுவும் தெரியாதா அல்லது தெரிந்து கொண்டு சசிகலாவை உசுப்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 38  மாநில நிர்வாகிகள் உள்ளனர்.   அவர்களில்   நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சியும் ஜெயலலிதாவும் காலமாகிவிட்டனர்.   200 க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர்களும்     3000 பொதுக்குழு உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவர்கள்தான் கழகப் பொதுச்செயலாளரைத் தெரிவு செய்வார்கள்.இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தினால் தான்  பொதுச்செயலாளராகலாம்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

ஜெயலலிதாவால் கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டவர்கள் உயிரற்ற அவரது உடலைச்சுற்றி நின்றுகொண்டு  உண்மைத் தொண்டர்களை தூரத்தில் பரிதவிக்க விட்டார்கள்.  நான்கு சட்டங்களுக்குள் மாலையுடன் படமாக  இருக்கும் ஜெயலலிதா இவற்றைப்  பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.
வர்மா