Thursday, March 31, 2016

சீனாவின் பிடியில் மீண்டும் இலங்கையின் அபிவிருத்தி

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த போது சீனாவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது.இந்தியாவை மிரட்டிப்பணிய வைக்கும் பிரம்மாஸ்திரமாக  அன்றைய இலங்கை அரசாங்கம் சீனாவை முன்னிறுத்தியது. இலங்கயில் நடைபெற்ற போரை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இந்தியாவின் பரம எதிரிகளான சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்களை வாங்கியது. இலங்கயின் அபிவிருத்திப்பணிகளுக்காக கண்ணை மூடிக்கொண்டு கேட்ட போதெல்லாம் கனட வழங்கியது சீனா. சீனாவின் உதவிகள் இலங்கையை அபிவிருத்தி செய்வதில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியவைச் சீண்டும்  வகையில் இருந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவின் கைப்பொம்மையாக இருந்தது. தமிழ்  ஈழம் கோரிய போராட்டம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் இலங்கையை நெருக்கமடையச் செய்தது.  அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இந்தியாவைக் கணக்கில்  எடுக்காது சீனாவிடம் அதிக உதவிகளைக் கோரினார். அவர் கேட்ட போதெல்லாம் சீனா கடன்  கொடுத்தது. இலங்கயின் அபிவிருத்தியை தனது நட்டு அபிவிருத்தி போல் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றியது.

  இலங்கையுடனான சீனாவின் நெருக்கத்தை இந்திய ரசிக்கவில்லை. இந்தியாவின் எச்சரிக்கையை அன்றைய அரசாங்கம் உதாசீனம் செய்தது.  இந்தியவைச் சீண்டுவதற்காக  சீனாவுக்கு இலங்கை செங்கம்பளம் விரித்தது. சீனாவின் எதிரிகளான அமெரிக்காவும் ஜப்பானும் இலங்கை மீதான சீனாவின் பிடியை சந்தேகக்கண் கொண்டு பார்த்தன.
சீனாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அன்றைய எதிர்க்கட்சிகள் கடுமையாகச்சாடின. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காரசாரமாக எதிர்த்தார். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு  சீனாவின் உதவி தேவை  என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளார்.  சீனாவிடம் உதவி பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் சினாவுக்குச் செல்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவை  ஆட்சியில்  இருந்து அகற்ற வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக இருந்தன. சில மேற்கத்தைய நாடுகளும் இதற்கு ஆதரவு வழங்கின. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர்  அதற்கு வழிவகுத்தது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற மனித உரிமை, மீறல்  போர்க்குற்றம் என்பனவற்றால்  இலங்கையை ஐ.நாவின் கேள்விக்குப் பத்ஹில் சொல்லவேண்டிய நிலைக்குத்தள்ளியது. ஐ.நாவுக்கு அடிபணியாது இலங்கை நடந்ததால் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தது.
நல்லிணக்கம்  என்ற பெயரில் இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றபின் இந்தியாவும் அமெரிக்காவும் நிம்மதிப்பெருமூச்சு  விட்டன. சீனா அதிர்ச்சியடைந்தது.  முன்னாள் ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையான சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்தள  விமானநிலையம்,அம்பாந்தோட்டை துறைமுகம்,சர்வதேச  விளையாட்டரங்கு என்பனவற்றில் சீனாவின் கை ஓங்கி இருந்தது.  இலாபமீட்ட  முடியாத விமான நிலையமும் துறைமுகமும் எமக்குத்தேவை இல்லை என்ற கோஷம் தேர்தல் பிரசாரத்தின் போது முன்வைக்கப்பட்டது.   அதே விமான நிலையத்தையும்,துறைமுகத்தையும் இலாபத்தில் இயங்க வைப்பதற்காக சீனாவின் உதவியை நாடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்ல உத்தேசித்துள்ளார்.

 மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சீனாவிடம் வாங்கிய கடன்களால் நாடு நலிவடைந்துவிட்டது எனக்குற்றம் சாட்டியவர்கள் இன்று கடன் வாங்குவதற்காக சீனாவுக்குச் செல்லப்போகிரார்கள்.  மஹிந்த சீனாவிடம் கடன் வாங்கியபோது   இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கபட்டுவிடும் எனற குற்றச்சாட்டு இன்று பொய்யாகியுள்ளது. உலகத்துக்கு கடன் கொடுக்கும் வகையில் சீனாவின் பொருளாதாரம் உச்சம் பெற்றுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் எப்படியும் தனது வழிக்கு வரும் என்று காத்திருந்த சீனா மகிழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல்கள் இலங்கையில் தரித்து நின்றபோது இந்தியா  சீற்றமடைந்தது அன்றைய அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டு சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்தபோதுஇலங்கையின் தேசியக்கொடியை விட அதிகமாக சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.  சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் பனை ஆரம்பிக்கப்பட்டது.துறைமுக நகரத்தின் 20 ஹெக்டேயர் நிலம் சீனாவுக்கு சொந்தமாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தது. புதிய அரசாங்கம் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்தியது. அந்தத்திட்டம் தமது கையை விட்டுப்போகாது என சீனா உறுதியாக நம்பியது. அந்த நம்பிக்கை வின் போகவில்லை.

துறைமுக நகரத் திட்டத்துக்கு நல்லிணக்க அரசாங்கம் பச்சைக் கொடி காட்டிவிட்டது.முன்னைய அரசாங்கம் உறுதியளித்த 20 ஹெக்டேயர் நிலம் வழங்கப்படமாட்டாது. 99 வருட குத்தகை என ஒப்பந்தம் செயபட்டுள்ளது.  ஹொங்ஹொங்கை   பிரிட்டனிடம் இருந்து 99  வருட குத்தகைக்குப் பெற்ற சீனா இன்று அதனை தனது நாட்டுடன் இணைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் அதிரடிகளால் கலங்கிப்போய் இருந்த சீனா ,இன்று மகிழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார உதவிகள் அனைத்தும் அந்த நாட்டின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்தவை என்றே உலக நாடுகள் கணிக்கின்றன. முன்னைய அரசாங்கத்தின் சீனாவுடனான செருக்கத்தைக் கண்டித்த  இந்தியாவுக்கு புதிய அரசாங்கத்தின் நகர்வு தலையிடியைக் க்டுத்துள்ளது. இலங்கையின் v பொருளாதாரத்தை கட்டிஎழுப்பும் வல்லமை சீனாவிடம் இருப்பதை இந்திய புரிந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ற போர்வையில்  சீனா, இலங்கையில் காலூன்றுவதை இந்திய விரும்பவில்லை
 முன்னைய  அரசாங்கம் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு   சீனாவுடன் நெருக்கமாக இருந்தது. நல்லிணக்க அரசாங்கம் இரண்டு  நாடுகளையும் பகைக்க விரும்பாது. பிரதமர் ரணிலின் சீன விஜயத்தை இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து காய் நகர்த்தும் என்பதில் சந்தேமமில்லை.

ஊர்மிளா 

Wednesday, March 30, 2016

சலசலப்பை ஏற்படுத்திய வடக்கின் வீடமைப்புத் திட்டம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வு  மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு வடக்கில்  நிர்மானிக்கும் 65 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தில் பாரிய மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட வைபவத்தில்   உரையாற்றிய .வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த வீடுகள் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்றதல்ல என்று எடுத்துரைத்தார்.  வடக்கு, கிழக்கு மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு வீட்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை அதிகம் எனவும் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்கவும்,  எம்.ஏ. சுமந்தினும்  பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து மோசடி எவையும் நடைபெறவில்லை என்றார்.

வடக்கில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம்  வீட்டுத்திட்டத்தை  உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாணசபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில்அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் பற்றிய சர்ச்சை காரணமாக  வடமாகாண சபையில் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம்  நடைபெற்ற அமர்வில் இந்த வீட்டுத்திட்டத்தை வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசித்து முன்னெடுக்குமாறும், அதுவரைக்கும் இவ்வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிரேரணையொன்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனூடாக தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களும்  வசதியாக வாழவேண்டும் என்பதற்காக வடக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வு  மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பிரபலமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் முறைகேடானது என்ற கருத்து பரவலாக உள்ளது. இலங்கையின் சூழலுக்கு இந்த வீடு உகந்ததல்ல என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. உலோகத்தினால் வீடு அமைக்கப்பட  உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் வெப்பநிலைக்கு உலோகத்தினாலான வீடுகள் வாழும் சூழ் நிலைக்கு ஏற்றதல்ல என்பதை அமைச்சு உணரத்தவறி உள்ளதாக கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. நிலம்,சுவர் அனைத்தும் உலோகத்தினாலானவை  சமையலறை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுத் தளவாடப் பொருட்கள், மின் இணைப்பு,காஸ், வைபை    என்பனவற்றை வீடு கட்டும் நிறுவனம் இலவசமாக வழங்கும் என கூறப்படுகிறது. யாழ்ப்பணத்தில் உள்ள மக்களில் அதிகமானோர் சமையலுக்கு விறகையே பயன் படுத்துகின்றனர். வீட்டில் உள்ள பயன் தரு மரங்களில் இருந்து விறகு கிடைக்கிறது. இலவச காஸ்  எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் எனக் குறிப்பிடவில்லை. வீடு கட்டுவதையே யாழ்ப்பாண மக்கள் விரும்புவர்கள். இந்திய நிறுவனம் வீடு கட்டப்போவதகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் அந்த நிறுவனம் வீடு கட்டுவதில்லை. அந்த நிறுவனத்தால் வீடுகள் இணைக்கப்படுகின்றன.
சாத்திரம் சம்பிரதயங்களில் அதிக நம்பிக்கை உள்ள யாழ்ப்பாண மக்கள் வீடு கட்டும் போது வாஸ்த்து சாத்திரம் பார்ப்பார்கள். தாயறை எங்கே இருக்க வேண்டும், சமையலறை எந்தத் திசையில் இருக்க வேண்டும் கிணறு அமையும் இடம் அங்கே  நல்ல நீர் உள்ளதா, மலசலகூடம் இருக்கும் இடம் என்பனவற்றை தமக்கு நம்பிக்கையான சாத்திரியுடன் ஆலோசித்தே வீடு கட்டுவார்கள்.  தமது பிள்ளைகளின் சாதகத்துக்கு ஏற்ற வகையிலேதான் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள் உள்ளன. இந்திய நிறுவனம் அமைக்கும் வீடுகளில் இந்த சாத்திர சம்பிரதாயங்கள் எவையும் இல்லை.

இந்தியாவின் உதவியுடன் கடந்த  காலத்தில் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா  வழங்கப்பட்டது. பயனாளிகள் தமக்கு சாதகமான வகையிலே வீடுகளை கட்டினார்கள். அதிகமானோர்  மேலதிகமாகச்  செலவுசெய்து தமக்கு  வசதியான வீடுகளைக் கட்டினார்கள். பயனாளிகளுக்கு விருப்பம் இல்லாத வீடுகளையே இந்திய நிறுவனம் கொடுக்கப்போவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.வைபை  போன்ற வசதிகளை சிலர் எதிர் பார்க்கவில்லை.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த  விவாதத்தில் எம்.ஏ. சுமந்திரன் வீட்டுத்திட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் 
இந்திய வீடுகளுக்கு தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 21 இலட்சம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய வீடுகளை விட 3 மடங்காகும். இதனை கொண்டு 2 வீடுகள் நிர்மாணிக்க முடியும்.எமது மக்களுக்கு வீடுகள் தேவை. அவர்களுக்கு இலவசமாக வீடுகள் அமைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். அரசாங்கம் வழங்கும் வீடுகளுக்கு தளபாடங்கள் சூரிய சக்தி நீர் வசதி என்பன வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பெறுமதி தெரியாதுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் 5 வருடங்கள் கூட நிலைக்குமா என்பது சந்தேகமே. இவற்றின் தரம் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்.

  வீட்டுத்திட்டம் குறித்து அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாவது
இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கட்டுவதற்காக நீண்டகால அடிப்படையில் என வெளிநாட்டு கடன் உதவி கிடைத்துள்ளது. இதற்காக திறந்த கேள்வி மனு கோரப்பட்டது.ஆனால் கொள்முதல் செயற்பாடு இரகசியமாக வெளிப்படைத் தன்மையின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.ஒரு வீட்டிற்கு 12 லட்சம் ரூபா செலவிட முதலில் மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர் இது 21 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டது. இந்த மோசடியை மறைக்கும் நோக்கில் மோசடிக்கு எதிரான அமைச்சு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.21 லட்சத்தில் இரு வீடுகள் கட்ட முடியும். வீடுகளுக்கு கிணறு, மின், தளபாட வசதிகள் வழங்குவதாக அமைச்சு கூறுகிறது. வீடு கட்டுவதை ஒரு நிறுவனத்திற்கும், ஏனைய வசதிகள் வழங்குவதை வேறு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என்றார்

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் எந்தவொரு மோசடியும் இடம்பெறவில்லை.  இதன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றோம் என்று  மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில்  தெரிவித்தார்..

65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயமும் முறையற்ற தகவல்களைக் கொண்டே கூறப்பட்டுள்ளது. 22ஆம் திகதி செப்டெம்பர் 2015 ஆம் ஆண்டு 65 ஆயிரம் வீடுகளை வடக்கில் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதிச் செலவீனமானது வரவு செலவு திட்டத்தைப் பாதிக்காதவாறு பெறப்பட்டு 12 வருடங்களில் கடனை மீளச் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அந்த வீடுகளை அமைப்பதற்கான கேள்விமனுக்கள் கோரப்பட்டன.

எட்டு நிறுவனங்கள் விலைமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்முக நிறுவனமே முறையான தரமான விலைமனுவைத் தாக்கல் செய்திருந்ததோடு சர்வதேச வங்கியொன்றின் ஊடாக கடனை மீளத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தது.

அத்துடன் மிகக் குறைந்த வட்டி வீதமான 1.34, 1.74 வரையான வட்டியையே அறவிடுவதற்கும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் தான் சர்வதேச தரம் வாய்ந்த அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.மேலும், 12லட்சமாக இருந்த வீட்டின் தொகை 21லட்சமாக அதிகரித்திருப்பதற்கான காரணம் மேலதிக பெறுமதி அதிகரித்தமையேயாகும். விசேடமாக ஆரம்ப கணிப்பீட்டின் போது 133 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி தற்போது 143 ரூபாவாக அதிகரித்திருப்பதால் தற்போது வீட்டுக்கான செலவீனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவை நவீன தொழில் நுட்பம் உள்ள வீடுகள்.. அதாவது வைபை, சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பம்இ மலசலகூட வசதிகள் ஆகியன காணப்படுகின்றன. மேலும் இந்த வீட்டுக்கான தளபாடங்களை குறித்த நிறுவனம் இலவசமாக வழங்குகின்றது. ஆகவேதான் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி   வீட்டு செயற்திட்டம் தொடர்பான செயற்றிட்டக்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு நிதி அமைச்சு, கிராமிய பொருளாதார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளையும் உள்ளடக்கியுள்ளது.

  வீட்டுத்திட்டத்துக்கான மாதிரி வீடு யாழில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியும் அங்கு வருகை தந்து பார்வையிட்டிருந்தார். அவ் வீட்டுத் திட்டம் தொடர்பான விமர்சனங்களை போக்குவதற்காக மக்கள் கருத்துக்கள் பெறப்படுகின்றன. இந்த மாத இறுதிக்குள் அக்கருத்தறிக்கை வெளியிடப்படவுள்ளது என்றார்.
பயனாளிகளின் கருத்து மிக முக்கியமானது. அங்கு வசிக்கப் போகும் மக்களின் கருத்து அறியப்படுவது அவசியம்.
வானதி
சுடர் ஒளி
மார்ச் 29/ஏப்ரல் 5




Sunday, March 27, 2016

தமிழக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி


தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று வெற்றிக்கான வியூகங்களைத்  தேர்வு செய்கின்றனர். வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சிகள்   ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற எழுதப்படாத விதியால் ஐந்து சத வீத வாக்குவங்கி உள்ள கட்சி கூட மிடுக்குக் காட்டுகிறது. வெற்றிக்கனிக்கு ஆசைப்பட்டு பலம் நழுவி பாலில் விழும் என  பழுத்த அரசியல் தலைவர் காத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி  இணைந்துள்ளது. இவற்றுடன் மேலும் சிறிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் சிறிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. விஜயகாந்துக்காக காத்திருந்த பாரதீய ஜனதாக் கட்சி  நடிகர் ஒருவர் தேவை என்பதனால் சரத்குமாரை வளைத்துப் பிடித்துள்ளது. மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகம,விடுதலைச்சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி என்பன மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ளன. சிறிய கட்சிகள் எவையும் இக் கூட்டணியைத் திரும்பியும் பார்க்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி வீம்புக்காக தனித்துப் போட்டியிடுகிறது. தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்த விஜயகாந்துக்கு கட்சியில் உள்ளவர்கள் கூட்டணி சேருமாறு குடைச்சல் கொடுக்கிறார்கள்.

தமிழக அரசியல்  கட்சிகள் அனைத்தும் ஆளுக்கு ஒருபக்கமாக சிலிர்த்துக் கொண்டிருப்பதால் ஜெயாலலிதா நிம்மதியாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையாததால் அவர் நிம்மதியாக நம்பிக்கையுடன் இருக்கிறார். விஜயகாந்தை எதிர்பார்த்து ஏமாந்த கருணாநிதி விரக்தியில் இருக்கிறார்.  மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தைக் கைகழுவி விட்டது. பாரதீய ஜனதாக்  கட்சியும் விஜயகாந்தை வளைக்க முயற்சிக்கிறது.

 இளைய தலைமுறையின்  வாக்கும் தேர்தல் அறிக்கையும் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.  கருணாநிதி அறிவித்த இலவசங்கள்  2006  ஆம்  ஆண்டு  ஜெயலலிதாவை வீழ்த்த உதவியது.   2011  ஆம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்த  இலவசங்கள் கருணாநிதியை பதவி   இழக்கச் செய்தன.  தமிழக  அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைதயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  வெற்றிக்கு அக்கட்சி வெளியிட்ட  தேர்தல் அறிக்கை பெரிதும் உதவியது.  குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்கப்படும். இலவச தொலைக்காட்சி என்ற அறிவிப்பால் மக்கள் மயங்கினர்.   அந்த தேர்தல் பிரசாரத்தின்போது  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என அக்கட்சித் தலைவர் கருணாநிதி வர்ணித்தார். கருணாநிதி வாக்களித்த இலவசங்களுகாக வாக்காளர்கள் வாக்களித்து அவரை முதல்வராக்கினர். ஏனைய மாநிலங்கள் இலவச அறிவிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தன. 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும்   திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம் பெற்றன.. இந்த தேர்தல் அறிக்கையை 'கதாநாயகி' என்றனர்.

 கருணாநிதியின் இலவச அறிவிப்பால் ஆட்டம் கண்ட ஜெயலலிதா   2011  தேர்தலில் அவருக்குப் போட்டியாக இலவசங்களை அள்ளி வழங்கினர்.
20 கிலோ அரிசி  . மிக்சி கிரைண்டர் மின் விசிறி இலவசமாக வழங்கப்படும். திருமணமாகும் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது.இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. .

  தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 38 சதவீதம்; 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம்; புதிய வாக்காளர்கள், 12.6 சதவீதம் பேர். இதில், இளைய சமுதாயத்தினரின் வாக்குகளைக்  கவர, அனைத்து கட்சியினரும், புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதில் பிரசாரம் மேற்கொள்வதில், கட்சியினர் முனைப்பு காட்டுகின்றனர்.தமிழகத்தில் தினமும், 2.5 கோடி பேர், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக, தொலைத்தொடர்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சட்டசபை தேர்தலில், சமூக வலைதளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதில் மேற்கொள்ளும் பிரசாரத்துக்காக, கட்சிகள், கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, இளைஞர்களை கவரும் வகையில், பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்வெளியிடும்  தேர்தல் அறிக்கையில், 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டம், முக்கிய இடங்களில், இலவச 'வை  பை' சேவை, இலவச கேபிள் இணைப்பு, கேபிள் இணைப்பில் இன்டர்நெட் பயன்பாடு உட்பட, பல முக்கியஅறிவிப்புகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக வாக்காளர்களில், 18 முதல், 49 வயதினர், 3.98 கோடி பேர்; 50 முதல், 80 வயதுக்கு மேற்பட்டவர், 1.81 கோடி பேர். எனவே, அடுத்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை, இளைய தலைமுறை வாக்குகள்  தான்தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அந்த இளைய சக்தி, யார் பக்கம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

50 சதவீத இளைய தலைமுறை வாக்காளர்கள், சமூக வலைதளங்களின் உதவியால், நாட்டு நடப்பை தெரிந்து, ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.அவர்கள் ஒருங்கிணைந்து, ஒரு கட்சியை ஆதரித்தால்,
அதற்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஊழலுக்கு எதிரான அணி என சொல்லிக் கொள்பவர்கள், தனித்தனியாக பிரிந்துள்ளதால், ஊழலுக்கு எதிரான இளைய தலைமுறையின் வாக்குகள் , சிதறும் சூழல் உள்ளது.

முதன் முதலில்,1967 ஆம் ஆண்டு  மாணவர் சக்தியால், ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தால்   இளைஞர்களின் ஆதரவை தக்கவைக்க முடியவில்லை.   '2ஜி' குற்றச்சாட்டால் . 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் ; 2014 ஆம் ஆண்டு  இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அப்போதைய தேர்தல்களில் , தோல்விக்கு இதுவே காரணம்.
இதனால்இளைஞர்களின்  வாக்குகளைக் கவர  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சைக்கிள், 'ப் டாப்' உதவிகள், இளைஞர் பாசறை அமைப்பு ஆகியவற்றில், அதிககவனம் செலுத்தி உள்ளது. ஆனாலும், வெள்ள பாதிப்பை தடுக்கத் தவறியது, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் போன்றவற்றால், ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவை, இக்கட்சியால் பெற முடியாத நிலைமை உள்ளது.மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு என பேசும், மக்கள் நலக் கூட்டணியினரும், இளைஞர்களை முழுவதுமாக ஈர்க்கும் சக்தியாக இல்லை.


இளைஞர்களின் ஆதரவால் வேகமாக வளர்ந்த விஜயகாந்தின் மீது அதிருப்தி உள்ளது., அவரின்  விஜயகாந்தின் சமீபத்திய மோசமான பேச்சு, தள்ளாட்டமான செயல்பாடுகளை, இளைய தலைமுறையினர் ரசிக்கவில்லை. எனவே, இந்த முறை தேர்தலில், இளைய தலைமுறையினர் வாக்குகள் யாருக்கு செல்லும் என்பது தெளிவாகவில்லை.

அம்மா உணவகம்,அம்மா குடி தண்ணீர், அம்மா பேருந்து , அம்மா உப்பு என்று தமிழகத்தை அம்மா மாயையில் சிக்க வைத்துள்ளார் ஜெயலலிதா. கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டிபோட்டு அறிவித்த இலவசங்களினால் தமிழக மக்கள் சோம்பேறிகளாக மாறிவிட்டனர். தமிழக அராசுக்கு கடன் சுமை ஏறிவிட்டது என பொருளாதார  வல்லுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  என்றாலும் இலவசங்களுக்கு அடிபணிய வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இலவச அறிவிப்பு இலத்திரனியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் முன்நிலையில் இருப்பதால் ஏனைய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. யாருடைய தேர்தல் அறிக்கை மக்களைக் கவர்ந்தது என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும.
வர்மா
தினத்தந்தி.
27/03/16
/////////////////////////////////////////////////////////

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைய முன்பு எழுதப்பட்ட கட்டுரை.



ஜனாதிபதிக்கு எதிராக காய் நகர்த்தும் கூட்டு எதிரணி

 

நல்லிணக்க அரசாங்கம் பதவி ஏற்ற தினத்தில்  இருந்து  அதனை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை பொது எதிரணி என்ற பெயரில் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். மஹிந்த மீண்டும் உச்சத்துக்கு வருகிறார். ஜனாதிபதி  ரணிலை விட்டுக்கு அனுப்பப்போகிறார் என்ற கோஷம் முன் வைக்கப்படுகிறது. முன்னாள்  ஜனாதிபதியை முன்னிறுத்தி நடைபெறும் கூட்டங்களும் பேரணிகளும் ரணிலைக் குறிவைத்துத்தான் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரியை தமது எதிரியாக அவர்கள் கருதவில்லை. இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் ஒரே கட்சியியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த   பிதமரை வெளியேற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக்கும் திட்டம் அவர்களிடம் உள்ளது.
புதிய கட்சி ஆரம்பமாகப் போகிறது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைவராகிறார் என்ற பூச்சாண்டி சிலகாலம் காட்டப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு  வெளியேறமாட்டேன் என்று மஹிந்த சொன்னதும் அந்தப் பூச்சாண்டி அடங்கிவிட்டது. என்றாலும்  அவருடைய ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் என கங்கணம் கட்டியுள்ளனர்.
பொது எதிரணியின்  கூட்டங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்த்த மஹிந்த கடந்தவாரம் ஹைபாக் கோணரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்     அக் கூட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பீடம்   உத்தரவிட்டது அதனை சட்டை செய்யாமல் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி உறுப்பினர்கள் 37 பேர்     கலந்து கொண்டனர்..

சி.பி. ரத்நாயக்க, குமார வெல்கம, விமலவீர திசாநாயக்க,சிறியானி விஜேவிக்கிரம, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ,  ஷேஹான் சேமசிங்க, எச்.ஏ.முத்துக்குமாரண, வீரகுமார திசாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜயந்த சமரவீர, , கனக ஹேரத், தாரக பாலசூரிய, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, சிசிர ஜய,டி, இந்திக அனுராதா, மோகன் டி சில்வா, சி.பி. ரத்நாயக்க, சனத் நிஷாந்த, மஹிந்தானந்த  அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாலிந்த திசாநாயக்க,  வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்தில்,   கூட்டு எதிரணிசார்பில், 51 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில், 45 பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய ஆறு பேரில் நால்வர் வெளிநாடு சென்றதாலும், இருவர் மருத்துவமனையில் உள்ளதாலும், கலந்துகொள்ளவில்லை  என்று அவர் கூறியிருக்கிறார்.

  பங்கேற்றவர்களில் 34 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரும் அடங்கியுள்ளனர்.
கட்சியின் அனுமதியின்றி வேறு கூட்டங்களில் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்பவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் பொதுச்செயலர் துமிந்த சில்வா, பொருளாளர். எஸ்.பி.திஸாநாயக்க போன்றவர்கள் எச்சரித்திருந்தனர். கொழும்பு ஹைட்பார்க்கில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பாக மத்திய செயற்குழு சமனான முறையில் முடிவு ஒன்றை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியினர் எதிரிகள் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில்  நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது எதிரணியின் கூதடத்தில் பங்கு  பற்றியவர்களின் மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு உடனடியாக பதில் கிடைக்காது. 

ஐக்கிய தேசியக் கட்சியை வெளியேறி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை அமைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவளர்கள் விரும்புகிறார்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்     தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.  .ஹிக்கடுவை-சீனிகம தேவாலயம்இஇரத்தினபுரிஇ சிறிய கதிர்காமம், சிங்கக்குலிய, மொரட்டுவ, முகத்துவாரம் காளிகோவில், குளியாப்பிட்டி சிலாபம்- முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவில்  ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் தேங்காய் உடைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டினர்

 எந்த வழியிலாவது  ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் துடிக்கின்றனர். இன்றைய நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவளர்களை  வெளியேற்றினால் அது அவர்களுக்கு சாதகமாகிவிடும் என்பதை ஜனாதிபதி மைத்திரி உணர்ந்துள்ளார். ஆகையினால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது  என்ற நம்பிக்கை  எதிரணியிடம் உள்ளது.அந்த நம்பிக்கை நீடிக்கும்வரை அவர்களின் போராட்டம் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிந்த உண்மை.
ஊர்மிளா
சுடர் ஒளி
 மார்ச்23/மார்ச்30



Saturday, March 26, 2016

பதவி ஆசையால் தடம் மாறிய தலைவர்கள்

தமிழக அசியலில்  அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸின் அதிகார ஆசையால் அரசியல் களத்தில் காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழக‌மும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் முதலில்  பட்டாளி மக்கள் கட்சியுடன் தான் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். தமிழக முதலமைச்சரைத்  தீர்மானிக்கும் சக்தியாக இருந்த பட்டாளி மக்கள் கட்சி இன்று  செல்வாக்கிழந்துள்ளது. கூட்டணி சேர்ந்தே வெற்றி பெற முடியாத கட்சியின் இளவலான அன்புமணியை முதல்வராக்கியே  தீருவேன் என்று ராமதாஸ்  சபதமெடுத்துள்ளார். கட்சி வேட்பாளர்களை விட முதலமைச்சர் வேட்பாளர்கள் அதிகமாகிவிட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா தவிர ஸ்டாலின்,அன்புமணி,விஜயகாந்த்,சீமான்  ஆகியோர்  முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்றனர்.

அன்புமணி முதலமைச்சராகியது போன்ற விளம்பரங்களை வெளியிட்டு திருப்தியடைகிறார் ராமதாஸ். வன்னியர்சமூக வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழக‌கத்துக்கும்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் குடைச்சலைக் கொடுத்த ராமதாஸ் வாக்கு வங்கியை இழந்துள்ளார். வன்னிய சமூகத்தை மேம்படுத்துவதற்காக இயக்கத்தை ஆரம்பித்த ராமதாஸ் காலப்போக்கில் அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக்கினார். .நானும் எனது  வாரிசுகளும் தேர்தலில்  போட்டியிடமட்டோம் என்ற வாக்குறுதியுடன் அவரது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகியது. அரசியலின் நெளிவு சுளிவுகளை நன்கு தெரிந்து கொண்ட ராமதாஸ்  தேர்தலில் போட்டியிடாமல் தனது  மகனான அன்புமணியை  நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சராக்கினர். யாருடன் கூட்டணி அமைத்தாலும் மகனுக்கு எம்பி பதவியை உறுதி செய்வார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அன்புமணி எம்பியானார். அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்த ராமதாஸ் கடைசியில்  ஏமாற்றமடைந்தார்.
கருணாநிதியும்,ஜெயலலிதாவும் முதலமைச்சராவதற்கு பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறார்கள். வன்னியர் சமூக வாக்குகளை மட்டும் நம்பி மகனை முதலமைச்சாரக்குவேன் என ஒற்றைக்  காலில் நிற்கிறார் ராமதாஸ். தமிழக சட்ட சபை தேர்தலில்  போட்டியிட விரும்பினால் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்படும் பலமான கட்சியுடன் இணையாமல் வெற்றி பெற முடியாது என்பதை சாதாரண மக்கள் அறிவார்கள். அதனை அரசியல்வாதியான ராமதாஸ் உணரவில்லை.

தமிழக காங்கிரஸ் கட்சியில் பலமான சக்தியாக விளங்கிய வாசன் கட்சியில் இருந்து வெளியேறி தகப்பனின் கட்சிக்கு உயிர் கொடுத்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில்  வளர்த்தவர்களில் ஒருவரான மூப்பனார் தலைமையுடன் பிணக்குப்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார். கங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை அவரது கட்சியின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கட்சி இணைவதை விரும்பாத மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்தார். தமிழக காங்கிரசில் செல்வாக்கு உள்ளவர்களான பா.சிதம்பரம் போற தலைவர்கள் அவருடன் இனைந்து வெளியேறினர்.கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த  அவரது கட்சி  வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவுக்கு எதிரான அலை, ரஜினியின் ஆதரவுக்குரல் என்பனவற்றின் உதவியால் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக மூப்பனார் பரிணமித்தார்.  அரசியலில் கூட்டணி நிரந்தரமில்லை என்பற்கு மூப்பனார் விதிவிலக்கல்ல. ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக  கட்சி ஆரம்பித்த மூப்பனார் டைடிசியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கு குறைந்தது. மூப்பனார் மறைந்ததும். கட்சியைக் கலைத்துவிட்டு அவரது மகனான வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசின் கோஷ்டிப் பூசலுக்கு பலியான வாசன் தகப்பனின் கட்சிக்கு புத்துயிர்  கொடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் எவரும் அவருக்குப் பின்னால் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரான அலை எதுவும் இல்லை. இந்த நிலையில் அவரது கட்சியால் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

வாசனின் வெளியேற்த்தால்   காங்கிரஸின் செல்வாக்கு பாதிப்படையவில்லை.  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான நெருக்கம் விரிவடைந்ததால் வாசன் கருணாநிதியின் பக்கம் செல்வார் என்று எதிர்  பார்க்கப்பட்டது. வாசன் அமைதியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக‌மும் வாசனுக்கு அழைப்பு விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸும் தமது பகையை மறந்து ஒன்றாகியதால் வாசன் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் நலக் கூட்டணி வாசனை வருந்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு பதிலளிக்காது அலட்சியமாக இருந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைய வேண்டும் என்பதே வாசனின் விருப்பம். ஜெயலலிதாவின் அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் முதலில் வெற்றிகரமாக அமையவில்லை.ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையினால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்படி ஒரு பதவி வேண்டும் என்பது வாசனின் விருப்பம். மற்றைய தலைவர்கள் முதலமைச்சராக ஆசைப்பட வாசன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை குறி வைக்கிறார். ஜெயலலிதாவுடன் இணைந்தால் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்  என வாசன் கருதுகிறார்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு எதிரான வாக்குகளை விஜயகாந்த் அள்ளினார்.  விஜயகாந்தின் வளர்ச்சியை முடக்குவதற்காக அவரை தனது பக்கத்துக்கு இழுப்பதில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். கடந்த சட்ட சபைத்  தேர்தலில்  எதிர்பாராத வெற்றி  விஜயகாந்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. தனது வெற்றிக்குக் கிடைத்த பரிசு எதிர்க்கட்சித் தலைவர் பதவி என விஜயகாந்த் பெருமைப்பட்டார். காலப்போக்கில் தான் தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தார். 

தமிழக சட்ட சபைத்  தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கின் பலத்தை விஜயகாந்த் வெளிப்படுத்தியதால் அவருடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். வாசனுக்குரிய வாக்கு வங்கி பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியாது. வாசன் மட்டும் தான் அக்கட்சியில் உள்ள ஒரே ஒரு தலைவர். காங்கிரஸ் கட்சியால்தான் வாசனுக்கு மதிப்பு. வாசனின்  வெளியேற்றத்தால் காங்கிராஸ் கட்சிக்குப் பாதிப்பு இல்லை
.
பலமான கூட்டணியில் இவர்கள் சேர்ந்தால் கட்சிக்கு இலாபம். இல்லையேல் முதலுக்கே மோசம். முதலமைச்சர் பதவிக்காக அன்புமணியும், ஜெயலலிதாவின் அழைப்புக்காக வாசனும் காத்திருக்கின்றனர். தமிழக வாக்காளர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவு இவர்களின் செல்வாக்கை பகிரங்கமாக்கும்.
ரமணி
தமிழ்த்தந்தி
27/03/16



Friday, March 25, 2016

மனம் மாறிய விஜயகாந்த் உற்சாகத்தில் மக்கள் நலக் கூட்டணி


 தமிழக அரசியலில் நிலவிய குழப்ப நிலைக்கு விஜயகாந்த்  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத் தேர்தலில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் இம்முறை பெரும் குழப்பம் ஏற்பட்டது. தமிழக  அரசியலைக் குழப்பிய விஜயகாந்த் அதனை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம்,  பட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் விஜயகாந்தின் வரவுக்காகக் காத்திருந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌ம், மக்கள் நலக் கூட்டணி, பாரதீய ஜனதாக் கட்சி  ஆகியவருடன் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள்  அவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தன. யாரும் எதிர் பார்க்காத நிலையில் திடீரென மக்கள் நலக்  கூட்டணியுடன் தேர்தல் உடன் படிக்கையில் கைச்சாத்திட்டார் விஜயகாந்த்.
தமிழகத் தேர்தலில் இரண்டு முனைப் போட்டி நடைபெறும் போது திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் பலமான கூட்டணி அமைத்து மாறி மாறி வெற்றி பெற்றன.மும் முனைப் போட்டி என்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எதாவது ஒரு கட்சி வெற்றி பெற்று விடும். இம்முறை ஆறு  முனைப் போட்டி நடைபெறுவதால் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு 35 சத வீத வாக்கு வங்கியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு 37 சத வாக்கு வங்கியும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சதவீத வாக்கு வங்கி உள்ள விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைந்தால் வெற்றி பெறலாம் என கருணாநிதி கணக்குப் போட்டார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்தும் வேட்பாளர் பட்டியலை   வெளியிட்டு  தேர்தல்  களத்தைச்  சூடாக்கும்  ஜெயலலிதா விஜயகாந்த்தின் முடிவுக்காகக் காத்திருந்தார்.  திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் விஜயகாந்த் சேரக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம்.ஜெயலலிதாவின் விருப்பத்தை விஜயகாந்த் நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின்  முடிவு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் பல முனையில் பிரிவதால்  ஒருங்கிணைந்த வெற்றியை எதிரணிகளால் பெறமுடியாது.பலமான வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் இல்லை.என்றாலும் தேர்தலுக்கு முன்னே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அவரிடம் நிறையவே உள்ளது.
 அரசியலில் பழுத்த அனுபவம் உள்ள கருணாநிதியின் நிலை பரிதாபமாக உள்ளது. விஜயகாந்தின் ஐந்து சத வீத வாக்கு கிடைத்தால் வெற்றி பெறலாம் என்ற அவரது நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது.  விஜயகாந்த் வந்தால் வெற்றி பெறலாம் என்ற மாயையை தொண்டர்களிடம் உருவாக்கிய  கருணாநிதி நொந்து போய் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தை விட்டு வெளியேறிய காங்கிரஸ் கட்சி மீண்டும் வந்ததால் சந்தோசப்பட்ட கருணாநிதியின் பார்வை விஜயகாந்தின் மீது இருந்தது. அவர் வந்தால்தான் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை கடைசிவரை இருந்தது. விஜயகந்தின் விசயத்தில் கருணாநிதி சற்று தள்ளாடினார். ஆனால், ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த்    அறிவித்ததும் அவர் இல்லாமலே வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது.மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகர் , விஜயகாந்தின் வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தார். அதனை சற்றும் சட்டை செய்யாத விஜயகாந்த் மரியாதையை நிமித்தமான சந்திப்பு  என தெரிவித்தார். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்தை பெரிதும் நம்பி இருந்தது. பாரதீய ஜனதாவுடனான கூட்டணிக் கதவை விஜயகாந்த் அடித்துச் சாத்திவிட்டார் எனத் தெரிந்து கொண்டும் விஜயகாந்துடன் சேர்வதற்கான பேச்சு வார்த்தையில் அக் கட்சி நம்பிக்கை வைத்தது.  விஜயகாந்தின் முடிவால் திராவிட முன்னேற்றக் கழக‌மும், பாரதீய ஜனதாக் கட்சியும் நிலை குலைந்துள்ளன.

ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு விஜயகாந்தின்  அனுசரணை தேவை என்பதை அறிந்த தலைவர்கள் அவருக்குத் தூது விட்டனர். தனது மதிப்பை உயர்த்துவதற்காக சில தலைவர்களுடன் வெளிப்படையாகவும்,   சில கட்சிப் பிரதிநிதிகளுடன் இரகசியமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் நம்பிக்கையுடன் பேட்டியளித்தனர்.  விஜயகாந்த் மெளனம் காத்தார். பேச்சுவார்த்தை பற்றி விஜயகாந்த் முச்சு விடவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர்களை அனைவரும் ஆளுக்கொரு திசையில் இருக்கின்றனர்.இது  ஜெயலலிதாவுக்குச் சாதகமானது  எனத்தெரிந்துகொண்டும் வரட்டுக் கெளரவத்தினால் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர்.
விஜயகாந்தின் கட்சியின் சார்பில் தமிழகத் தேர்தலில்  போட்டியிட விரும்பும் பிரமுகர்கள் அனைவரும் திராவிடமுன்னேற்றக் கழ‌கத்துடன்  இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திராவிடமுன்னேற்றக் கழ‌கத்தை பரம எதிரியாகக்  கருதுகிறார். தமிழகத் தேர்தலில் தனித்துப் போட்டியிடபோவதாக விஜயகாந்த் அறிவித்தார். விஜயகாந்தை முதல்வராக்க விரும்புகிறவர்கள் எமக்குப் பின்னால் வரலாம் என பிரேமலதா அழைப்பு விடுத்தார். இதனால் விஜயகாந்துக்காக காத்திருந்த திராவிடமுன்னேற்றக் கழ‌கம்,மனித நேயக் கூட்டணி,   பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன ஏமாற்றமடைந்தன.
விஜயகாந்தின் தலைமையில் கூட்டணி  அமைக்க பிரேமலதா விடுத்த பகிரங்க அழைப்பை அரசியல் தலைவர்கள் ரசிக்கவில்லை.அவர் அழைப்பு விடுத்து இரண்டுவாரங்கள் கடந்தபின்னரும் எந்த ஒரு அரசியல் தலைவரும் அவரைத் தேடிப் போகவில்லை.சிறுகட்சித் தலைவர்கள் தொழிற்சங்கங்கள் எவையும் விஜயகாந்தைத் திரும்பிப் பார்க்கவில்லை.விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் அவரது வாக்கு வங்கியைத்தான் குறிவைத்துள்ளனர். விஜயகாந்தைத் தலைவராக ஏற்க எவரும் தயாராகவில்லை.
தமிழக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு விஜயகாந்த்  குழுவை அமைத்தார். அந்தக்குழு சில கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது. அந்தக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. வெறுத்துப் போன விஜயகாந்த் குழுவைக் கலைத்துவிட்டார்.  விஜயகாந்தை மற்றைய தலைவர்கள் தேடிச்சென்ற  காலம் போய் விஜயகாந்த் மற்றைய தலைவர்களைத் தேடிச்செல்லும் காலம் வந்துள்ளது.
தனித்துப் போட்டியிடுவது தவறான முடிவு என உணர்ந்த விஜயகாந்த் ,மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள்ளார்.  மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், மாக்சிஸ்ட் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன இணைந்து மக்கள் நலக் கூட்டணியை அமைத்தன அக் கூட்டணியில்  விஜயகாந்த் இணைந்துள்ளார். விஜயகாந்தின் கட்சிக்கு 124 தொகுதிகளும் ஏனைய நன்கு கட்சிகளுக்கு  110  தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  . விஜயகாந்த் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அறுதிப் பெரும்பான்மையுடன்  விஜயகாந்த் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்   30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ளது. மக்கள் நலக் கூட்டணிக்கு  20 சதவீத வாக்கு வங்கி உள்ளது.  கட்சி சாரத நடு நிலையாளர்களின் வாக்கு கிடைத்தாலும்  அறுதிப் பெரும் பான்மையை எட்ட முடியாது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரான  இளைஞர்களின் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைக்கும்.
 தேர்தல் அறிக்கை,பிரச்சாரம், பணம் என்பனவே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகியவற்றிடம் இவை அளவுக்கதிகமாக உள்ளன.

வர்மா 
துளியம்.கொம்

Tuesday, March 22, 2016

மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை

 அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரம் தடைப்பட்டதால் கடந்த 13 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  இலங்கை இருளில் மூழ்கியது. பிற்பகல் மூன்று மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. சில நேரங்களில் ஏற்படும் வழமையான மின் தடை என நினைத்த மக்கள் தமது அன்றாடக் கடமைகளை மேற்கொண்டனர். நேரம் செல்லச்செல்ல மின்சாரம் இல்லாதது பற்றிய செய்திகள் வேகமாகப் பரவத்தொடங்கின. தொலை தூரத்தில் இருக்கும் உறவினர்களுடனும்,நண்பர்களுடனும் தகவல்களைப் பரிமாறியபோது இலங்கை பூராவும் மின்சாரம் இல்லை எனத்தெரியவந்தது.

  வீதிச் சமிக்ஞைகள் செயலிழந்ததால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. ரயில் சேவை தாமதமாகியது. மின்சாரம் இல்லை என்றால் நகர வாழ்க்கை நரகமாகிவிடும். மின்சாரத்தை நம்பி வாழ்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். சில இடங்களில்   உள்ள மக்கள் நீர் இன்றித் தவித்தனர். மின் விசிறியை நம்பி வாழ்ந்தவர்கள் புழுக்கத்தில் வெந்தனர். இரவு இன்பது மணிபோல் கொழும்பு,கண்டி  போன்ற பிரதான நகரங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக மற்றைய இடங்களுக்கும்  மின்சாரம் வழங்கப்பட்டது.  துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கிடைத்ததால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அந்த நிம்மதி விடிந்ததும் கலைந்தது. பியகம உப மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி வெடித்ததால் மின்சாரம் தொடர்ந்து வழங்க மிடிய்தை என்ற செய்தி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

பியகம உப மின் நிலையே மின் மாற்றி வெடித்ததில் சதி உள்ளது என்ற செய்தி பரவத் தொடங்கியது. நல்லிணக்க அரசங்கத்தி முடக்குவதற்கு யாரோ திட்டமிட்டு மின் மாற்றியை வெடிக்கச் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்கும் பரவியது. அரசங்கத்தை ஆட்டம் காணச்செய்வதற்கு மக்களை நெருக்கடிக்குத் தள்ளுவதா என்ற கேள்வி எழுந்தது. பிரதான மின் நிலையங்களுக்கு இராணுவப்பாதுகப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரி உத்தரவிட்டார். உபமின் நிலைய வெடிப்பின் பின்னணியில் உள்ள சதி பற்றி விசாரணை  நடத்தி உண்மையை அறிய வேண்டும் என  பிரதமர் ரணில் தெரிவித்தார்.  அரசாங்கத்தின் தகவல்கள் மூலம்   மின்மாற்றி வெடித்ததன் பின்னணியில் சதி உள்ளதென்ற உண்மை வெளிவந்தது.

நல்லிணக்க அரசாங்கத்தில் ஆளுகையில்  கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை  மின்சாரம் தடைப்பட்டதால் அதற்குப் பொறுப்பேற்று மின்சார சபைத் தலைவர்   தனது  இராஜினாமாக் கடிதத்திக் கையளித்தார். அவரின்   இராஜினாமாவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.மின் மாற்றி வேடித்ததில்சதி உள்ளதால் மின்சார சபைத் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என அரசாங்கம் கருதுகிறது. மின் தடையின் பின்னணியில் உள்ள திக்கு தலைவரை பலியாக்க அரசாங்கம் விரும்புகிறது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது.   மின்சாரம்  தடைப்பட்டதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோஷமிடுகின்றனர். இதே போன்ற பல சம்பவங்கள் முன்னைய அரசாங்கத்தில் ஏற்பட்ட போது அமைச்சுப் பதவியில் இருந்தவர்கள் இப்போது அமைச்சரை பதவி விலக கோருகின்றனர்.

    ஞாயிற்றுக் கிழமை பியகமவில் நடந்த உபமின்நிலைய வெடிப்புச் சம்பவத்துக்கும்  வெள்ளிக்கிழமை கொட்டுகொட உபமின்நிலையத்தில் நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கும் ஒற்றுமையுள்ளதாக மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மின்மாற்றிகளிலிலும் மர்மமான முறையில் ஆனால் ஒரே மாதிரியே வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தித் துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பொறியியலாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு இடங்களிலும் பாதுகாப்பில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்இ இரண்டு இடத்திலும் எவ்வாறு ஒரேமாதிரி வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கும்? என இத்துறையில் ஐம்பது வருடங்கள் அனுபவம் மிக்க பொறியியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

உலகெங்கிலும் இப்படியான சம்பவங்கள் இதுவரை நடைபெறவில்லையெனவும் கொக்கொடுவ மின்மாற்றியின் திருத்தவேலைகள் முடியும்வரை நீர்கொழும்புப் பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கொடுவ பகுதியில் இலங்கை விமானப்படையினரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மின்சார விநியோகம் சீர்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் மினுவாங்கொட பகுதியில் அடுத்த மின்மாற்றி மர்மமான முறையில் வெடித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்மாற்றியில் வெடிப்பு நடைபெற்று திருத்தவேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில் இன்றுவரை சரியாக மின்சாரம் வழங்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை  மதியம் மின்சாரத்துறை அனைத்து வேலைகளும் நிறைவடைந்துவிட்டன. இனிவரும் காலங்களில் சீராக மின்சாரம் கிடைக்கும் என அறிவித்திருந்த நிலையில் மினுவாங்கொட பகுதியில் உள்ள உப மின்வழங்கும் நிலையத்தில் மின்மாற்றியொன்று மர்மமான முறையில் வெடித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். ஈடுபட்டுள்ளனர். இதனால் நீர்கொழும்பில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.

மின்சார விநியோகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் சதிவேலைகள் நடைபெற்று வருகின்றது எனும் சந்தேகத்தின் பேரில் அனைத்து மின்நிலையங்களிலும் இராணுவத்தினரைப் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே   உபமின்மாற்றியொன்று வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் வழமைக்குத் திரும்பிவிட்டது  இனி மின் தடை இருக்காது என அறிவிக்கப்பட்டபின்னர்    ஜாஎல கொட்டு கொடவில் உள்ள மின்  மாற்றி வெடித்தது. பியகம, ஜாஎல ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள   மின்மாற்றிகள் ஒரேமாதிரி வெடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அரசாங்கத்துக்கு  விசுவாசமான அதிகாரிகளின் வேலை என்றே கருத வேண்டி உள்ளது. அரசங்கத்தி சீர் குலைப்பதற்கு மக்களுடன் விளையாடும் அதிகாரிகள் களை எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மின் தடி ஏற்பட்டதற்கும் சதி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வானதி
சுடர் ஒளி
மார்ச் 22/மார்ச் 28



Sunday, March 20, 2016

மமதாவை வீழ்த்த இடதுசாரிகளுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர் மமதா பானர்ஜி. அங்கு அவருடன் கூட்டணி சேர்ந்தால்தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் வெற்றி பெறமுடியும். மமதா பானர்ஜியின் ஆட்சியை அகற்றுவதற்காக  காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் தனித்தனியாக களம் இறங்கி உள்ளன. மேற்கு வங்க  சட்ட சபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம்   5 ஆம் திகதிவரை  ஆறு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ் நாடு, புதுவை,அசாம், கேரளா,மேற்கு வங்கம்  ஆகிய  ஐந்து சட்ட  சட்ட சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது.  கூட்டணி பேரம் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு  வார்த்தைகளை பிரதான கட்சிகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. தேர்தல் திகதி பற்றிய அறிவிப்பு வெளியான இரண்டு மணி  நேரத்தில் மமதா தனது  கட்சியில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டர்.

மேற்கு வங்கத்தில்  தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரி  அரசை  2011 ஆம் ஆண்டு மமதாவின் தலைமையிலான  திரிணாமூல் காங்கிரஸ்  வீட்டுக்கு அனுப்பியது. மேற்கு வங்கத்தில அசைக்க முடியாத  சக்தியாக இருந்த இடதுசாரிகளை அசைத்ததில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு. மமதாவுடன் கூட்டுச்சேர்ந்த காங்கிரஸ்  இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து அகற்றியது. . 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட மமதாவின் கட்சி படுதோல்வியடைந்தது. 2004 ஆம்  ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தனித் தனியே நின்றால் வெற்றி பெற முடியாது என்ற உண்மையை காலம்  கடந்து  உணர்ந்த மமதா,  காங்கிரஸுடன்இணைந்து  போட்டியிட்டார். தனது பரம எதிரியான  இடதுசாரிகள்  தோல்வியடைய வேண்டும் என்பதற்காக  இன்னொரு எதிரியான மமதாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

 காங்கிரஸின்  புண்ணியத்தால்  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் பெரும் பான்மை பலத்துடன் மமதா முதலமைச்சரானர். முதலமைச்சர்  கதிரையில் அமர்ந்ததும், காங்கிரஸை ஓரம் கட்டினர் மமதா. 2011 ஆம் ஆண்டு மமதாவை  முதலமைச்சராக்கிய காங்கிரஸ் இப்போது அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயற்சி செய்கிறது. 2011 ஆம் ஆண்டு இடதுசாரிகளை வெளியேற்றுவதற்கு மாமதாவுடன் கைகோர்த்த காங்கிரஸ்,  இப்போது  இடதுசாரிகளுடன் கைகோர்த்து மாமதாவை  ஆட்சியில் இருந்து அகற்ற  திட்டம் போடுகிறது.  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாக மமதா மதிக்கவில்லை.  தனக்கு தேவை ஏற்படும் போது கூட்டணி அமைப்பதும்  தேவை முடிந்ததும்  காங்கிரஸை கழற்றி விடுவதும் மாமதாவின்  கொள்கையாக இருந்தது.     மாமதாவுக்கு பாடம் புகட்டுவதற்கான  நேரத்தை எதிர்பார்த்திருந்த காங்கிரஸுக்கு தேர்தல் என்ற ரூபத்தில்  நல்ல நேரம் கூடி வந்துள்ளது.


 மேற்கு வங்கத்தில்  294 தொகுதிகள் உள்ளன.  2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்ட  சபைத்  தேர்தலில் மாமதாவின்  திரிணாமூல்  156 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  மாமதாவின் தலைமையிலான  திரிணாமூல்    காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கய விவகாரம் அக்  கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்திய  நாடாளுமன்றத்தின் இரண்டு  சபைகளிலும்   இலஞ்ச  விவகாரம் சூடு பிடித்தது.
மேற்கு வங்கத் தேர்தலில் மாமதாவின் கட்சி தனித்துப் போட்டியிடுகிறரது..  கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்கள் பல நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். மக்கள் அனைவரும் தனது பக்கம் நிற்கிறார்கள் என்ற  அதீத நம்பிக்கை மாமாதாவிடம் இருக்கிறது.

மேற்கு வங்கத் தேர்தலில் மமதாவை வீழ்த்தும் அதே வேளை பாரதீய ஜனதாக் கட்சியையும் ஓரம் கட்ட வேண்டிய தேவை  காங்கிரஸுக்கு உள்ளது. இடதுசாரிகள், பாரதீய ஜனதாக்  கட்சி, மமதா, காங்கிரஸ் கட்சி  என நன்கு முனைப் போட்டி நடைபெற்றால் காங்கிரஸின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. இடதுசாரிகளும் மமதாவும் கடும்  போட்டியைக் கொடுப்பர்கள் பாரதீய ஜனதாவை விட குறைவான   வாக்குகளைப் பெற்றால் அது நாடளாவிய ரீதியில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தப் பாதிப்பில் இருந்து   மீள்வதற்கான  வழியை காங்கிரஸ் தேடிக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பலமான இடதுசாரிகளுடன்  இணைந்தால் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நம்புகிறது.   மேற்கு வங்கத்தில் மமதா  ஆட்சியைத் தக்கவைப்பார்  என்ற நம்பிக்கை பலருடன் உள்ளது. இடது சாரிகளும்  காங்கிரஸும்   இணைந்தால் மாமதாவின் வெற்றி கேள்விக்குறியாகி விடும்.

 ரமணி 
தமிழ்த்தந்தி
20/03/16