Monday, December 28, 2015

தேர்தலுக்கு தயாரான தமிழக மக்கள் கூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள்


  மழை வெள்ளப்  பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் பூரணமாக விடுபடாது அல்லல்படுகின்றனர். இழந்தவைகளை மீண்டும் பெறமுடியுமா எனத்தெரியாது தவிக்கின்றனர்.இந்த இக்கட்டான நிலையிலும் தமிழக அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கின்றனர். தமிழக அரசின் மீது கோபமாக  இருக்கும் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனர். தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிராக மக்களின் கோபம் திரும்பி உள்ளது.  மக்களின் கோப உணர்வை  தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல் தலைவர்கள் முயற்சிக்காது அடுத்த முதல்வர் கனவில் மிதக்கின்றனர்.
 திரவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திரவிட முன்னேற்றக் கழக‌மும் இல்லாத தமிழக அரசை நினைத்துப்பார்க்க முடியாது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்   மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கிய மூன்றாவது அணி மண்ணைக் கெளவியது. சூடுபட்டபின்பும்  மீண்டும் அதே போன்ற தவறைச் செய்யத் துணிந்துள்ளனர்.இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத அரசை உருவாக்குவோம் என வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி சபதம் எடுத்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் சபதத்தினால் முதல்வர் கதிரையை தக்கவைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா நம்புகிறார்.
மத்திய அரசு வழங்கிய நிவாரண உதவியை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு  ஜெயலலிதா கடிதத்துக்கு மேல்  கடிதம் எழுதுகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்ஸ் அப்பில் ஆறுதல் கூறுகிறார். கடிதத்திலும் வட்ஸ் அப்பிளும் மக்கள் வாக்களிப்பதில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு அவரது ஆலோசகர்கள் எடுத்துக் கூறவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்னும்  முடிவில் இருந்து ஜெயலலிதா பின்வாங்க  மாட்டார்.நிவாரண  உதவியைக் காரணம் காட்டி  பிரதமர்  மோடியும் மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிடிகொடாது ஜெயலலிதா நடந்து கொண்டார்.  ஜெயலலிதா சாதக சமிக்ஞை காட்டாததனால் விஜயகாந்தின் பக்கம் சாய்கிறது பாரதீய ஜனதா.
தமிழக சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து அரசியல் தலைவர்கள் காய்நகர்த்தி வரும் வேளையில் விஜயகாந்த் மதில் மேல் பூனை போல் இருக்கிறார். இதுவரைகாலமும் விஜயகாத்தை கண்டும் காணாமல் இருந்த பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் இன்று அவரது வீடு தேடிச் சென்றுள்ளனர். மக்கள்நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கப் போவதாக வைகோ கூறியதும் பாரதீய ஜனதாத்  தலைவர்கள் விஜயகாந்தின் வீடுதேடிச் சென்றுள்ளனர்.  
சாதகமான  முடிவு வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு  அதிர்ச்சி கொடுத்தார் விஜயகாந்த். நான்தான் முதலமைச்சர். எனது கட்சியின் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கக் கூடாது. என நிபந்தனை விதித்தார். விஜயகாந்தின் நிபந்தனையால் கலங்கிப் போன தலைவர்கள் வெறும் கையுடன் திரும்பினார்கள்.
விஜயகாந்த் நடிகராக இருக்கும்போது பாட்டாளி மக்கள் கட்சி அவரது படங்களைத் திரையிட விடாது தடுத்தது.நடிகர் விஜயகாந்தை எதிர்த்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ் அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்தையும் தனது எதிரியாகவே பார்க்கிறார். அரசொயலில் இருதுருவங்களாக இருக்கும் விஜயகாந்தையும் ராமதாஸையும்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்ரினைத்தது போல தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இணைக்கலாம் என்ற எண்ணத்தில் காய் நகர்த்திய பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடைந்தது.
Add caption
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் முதலில் பாட்டாளி மக்கள்  கட்சியுடன் பேரம் பேசினார்கள். தன்னிச்சையாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராகிய ராமதாஸின் நிபந்தனையால் பாரதீய ஜனதா ஆடிபோனது. அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர். என்ற ராமதாஸின் வேண்டுகோள் சாத்தியப்படாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதை எல்லாம் தெரிந்து கொண்ட விஜயகாந்த் கடும் கோபமானார். தனது கோபத்தை பாரதீய ஜனதாத் தலைவர்களிடம் காட்டினார். அவர்கள் தேடி வந்தபோது ஒருமணி நேரம் காக்கவைத்து சந்தித்தார். விஜயகாந்தும் அன்புமணியும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள் என்பதை அரசியல் தலைவர்கள் இப்போதாவது    உணர்ந்து கொண்டு  சாதகமான வழியில் காயை நகர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
 விஜயகாந்த் அல்லது அன்புமணி இருவரில் ஒருவரே  கூட்டணியில் சேர்க்க  வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் பாரதீய ஜனதா உள்ளது.ஒரு கட்சியில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. வாக்கு வங்கி அதிகமாக உள்ள விஜயகாந்தையே பாரதீய ஜனதா தேர்வு செய்யும். அன்புமணியைக் கைவிடும். இதனால் அன்புமணியின் அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும் ஆபத்து உள்ளது.

விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து விட்டு வைகோ வீட்டிலே இருக்க பாரதீய ஜனதாத் தலைவர்கள் விஜயகாந்தின் வீடு தேடிச்சென்றதால் கலக்கமடைந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விழுந்தடித்து ஓடிப்போய் விஜயகாந்தைச் சந்தித்தனர். இன்முகத்துடன் அவர்களை வரவேற்ற விஜயகாந்த் முடிவுசொல்லாது அனுப்பி வைத்தார். இந்தக் களேபரத்துக்கிடையில் விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சிறிய கட்சிகள்தான் பெரிய கட்சிகளைத் தேடிப் போகவேண்டுமா பெரிய கட்சிகள் இறங்கி வரக் கூடாதா என்ற விஜயகாந்தின் கேள்விக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

விஜயகாந்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.  ஆகையினால்அவர்தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பார். அதிக தொகுதிகளை எதிர் பார்த்து மெளனமாக இருக்கிறார்.  திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சிமக்கள் நலக் கூட்டணி ஆகியன விஜயகாந்தின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாற்று வழியில் சிந்திக்கிறது. அவரது கட்சியைச் சேர்ந்த  சட்டசபை உறுப்பினர்களுக்கு வலை விரித்துள்ளது. முன்னதாக ஒன்பது சட்டசபை  உறுப்பினர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்து விட்டனர். சட்டசபையில் அவர்கள் தனிக் குழுவாக இயங்குகின்றனர்.கட்சியைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க வேண்டிய நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.

காங்கிரஸ்புதிய தமிழகம் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆட்சியில் பங்கு துணை முதவர் பதவி  போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதனால் திராவிட முன்னேற்றக் கழகம் தயங்குகிறது.சோனியா,ராகுல் ஆகியோருக்கு எதிராக   வழகுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரத்தின் மகனுடைய வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்தியது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின்  முதன்மைச் செயலரின் அலுவலகத்திலை.பி.ஐ சோதனை நடத்தியது. இவை அரசியல் பழிவாங்கல் என பாதிக்கப்பட்டவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தால் 2ஜி வழக்கு மேலும் இருக்கமாகும்  என திராவிட முன்னேற்றக் கழகம் அச்சப்படுகிறது. ஆகையினால்  திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணையும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
தமிழக அரசியல்  தலைவர்கள் முதல்வர் கனவில்மிதக்க  ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. குவாரி  முறைகேட்டை விசாரிக்கும் நீர்மையான் அதிகாரியான சகாயம் முதல்வரானால் ஊழல் தலை தலைதூகாது என்று பலரும் நினைக்கிறார்கள். கட்சி சாராத மக்கள்  அனைவரும் சகாயத்தை விரும்புவார்கள். கட்சைசி நீரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்கள் சகாயத்தைத் தேர்வு செய்வார்கள்.மக்கள் நலக் கூட்டணியில் சகாவம் போட்டியிட்டால் ஆம் ஆத்மி எழுச்சி ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழாக சட்டசபைத்  தேர்தலில் கூட்டணி இல்லாது வெற்றி பெறலாம் என இறுமாப்புடன் இருந்த ஜெயலலிதாவை மழை வெள்ளம் அசைத்துள்ளது. இலவசங்களும் வெல்ல நிவாரணமும் தன்னைக் காப்பாற்றும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம்  என்ற நினைப்பில் மண் விழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம்மக்கள் நலக் கூட்டணி,பாரதீய ஜனதாக் கட்சி,காங்கிரஸ்கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி  ஆகியன தேர்தலை எதிர் நோக்குவதற்கு தம்மைத் தயார்ப்படுத்திவிட்டன. வசமாய்  போல விஜயகாந்த் முடிவெடுக்காது மதில் மீள்  பூனை போல் பதுங்கி இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள்தான் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்பதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் முதல்வராகலாம்.
வர்மா

தமிழ்த்தந்தி
27/12/15
  



தரம்கெட்ட பாடலால் தலை குனிந்த தமிழ் சினிமா

முகவரி தெரியாத ஒருவரை உயரத்தில் தூக்கி வைக்கும் சினிமாவால் அவரை குப்புற  விழுத்தவும் முடியும் என்பதை தமிழ் சினிமாவின் குழப்படிப் பையன்களான சிம்புவும் அனிருத்தும் நிரூபித்துள்ளனர். நல்ல தகவல்களை வெளியிட உதவும் நவீன தொழில் நுட்பம் மிகமோசமான தகவல்களையும் வெளியிட்டு சர்ச்சைகள் தோன்றக் காரணமாகிறது. கவலைதீர்க்கும் மருந்தான  இசையை விரும்பாதவர்கள் யாருமில்லை.கருத்து மிக்க பாடல்களால் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த சினிமா காலப்போக்கில் ஆபாசங்களையும் உள்வாங்கத் தொடங்கியது. சில ஆபாசங்களுக்கு அவ்வப்போது எதிர்ப்புகள் வெளிப்படும் பின்னர் அடங்கிவிடும்.  சிம்புவும் அனிருத்தும் வெளியிட்டபாடலுக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தும் சொற்களுடன் இணையத்தில் வெளியான பாடலை சிம்பு எழுதி பாடியதாகவும் அனிருத் இசையமைத்ததாகவும் தெரியவந்ததால் பெண்களும் சமூக ஆர்வலர்க்களும் போர்க்கொடி தூக்கினர். என்னா..........க்கு லவ் பண்றோம் என்னா..........க்கு லவ் பண்றோம் என ஆரம்பிக்கும் அப்பாடலில் என்னா  எனும் வார்த்தைக்குப் பின்னால் பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தது.அந்தச் சொல்லை மீறி பீப் இசை  ஒலித்தது. பீப் என்ற ஒலியையும் தாண்டி அச்சொல் என்ன என்பதை இலகுவாக உணரமுடிந்தது.யூரியூப்பில் வெளியான பாடல் இணையம் வட்ஸ் அப் மூலம் வேகமாக பரவியது.
 பாட்டில் ஆபாசம் இருந்தால் அதனைக் கேட்கவேண்டாம் என சிம்பு அலட்சியமாகப் பதிலளித்தார். ஆபாசப்பாடலின் எதிர்ப்பு அலையை தெரிந்து  கொண்ட சிம்பு அதனை தான் எழுதவில்லை என்றார். பின்னர் அது தனது  போனில் இருந்தது தனக்கு எதிரான யாரோ ஒருவர் திருடி வெளியிடுவிட்டார்  என்றார். சிம்புவின் வார்த்தைகளை யாரும் நம்பவில்லை. அனிருத் கனடாவில் இருந்தபடி எனக்கும் அந்தப் பாடலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. நான் இசையமைக்கவில்லை என அறிவித்தார். .
,சென்னை,திருத்துறைப்பூண்டி  ,கோவை ,சேலம் ஆகிய மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.சென்னையில் சிம்புவின் வீட்டின் முன்னால் போராட்டம் நடைபெற்றது. சிம்புவுக்கும் அனிருத்துக்கும் கோவை பொலிஸ் நிலையத்திலிருந்து அழைப்பாணை அனுப்பபட்டது. அனிருத்  கனடாவில் இருந்து நாடு திரும்பியதும் ஆஜராவார் எனத்தெரிவிக்கப்பட்டது. சிம்பு கால அவகாசம் கேட்டிருந்தார்.
சிம்புவை கதாநாயகனாக்குவதற்கு அவரது தந்தை ரி.ராஜேந்தர் மிகுந்த சிரமப்பட்டார். சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தாது வேறு பாதையில் சென்றார். சிம்புவுடன் நடிக்கும் கதாநாயகிகள் கிசுகிசுவில் சிக்குவார்கள். சிம்புவுடன் பல நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சிம்புவுக்கும் நடிகைக்கும் காதல் என பரபரப்பான செய்திகள் வெளியாகின. இவை எல்லாம் சிம்புக்கு பெருமையாக இருந்தன.தகப்பன் மறுப்பறிக்கை கொடுப்பார். தனது மகன் எதுவித தப்பு தன்டாவும் செய்யவில்லை. அவன் அப்பாவி என உருகுவார்.
சிம்பு நயனதாரா காதல் விவகாரம் ஒருகாலத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தது. இருவரும் பிரிந்தபின் வெளியான புகைப்படங்கள் நயனதாராவை சங்கடத்தில் ஆழ்த்தின. சிம்புவும் நயனதாராவும்  முத்தமிடும் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும்  முதலிடம் பிடித்தன. இதனால் நயனதாரா சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தார். தமிழ் சினிமாவை மறந்திருந்தார்.  ராமராஜ்யம் படத்தில் நயனதாரா சீதையாக நடித்தபோது ராம பக்தர்கள் எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்புகளையும் மீறி அப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சிவாஜி,எம்.ஜி.ஆர்;கமல்,ரஜினி;விஜய்,அஜித்;தனுஷ்.சிம்பு  என்ற போட்டி  நடிகர்கள் மத்தியில் நிலவியது. மற்றைய நடிகர்கள் தம்முடன் போட்டியிட்டவர்களுக்கு   சவால் விடுத்தனர். சிம்புவின் விளையாட்டு புத்தியால் தனுஷ் முன்னேறிவிட்டார்.     
கொலைவெறி பாடலின் மூலம் ஒரு இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத்.தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய  3 எனும் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்  ரஜினியின் மைத்துனரான ரவிச்சந்திரனின் மகன்  அனிருத்.ரஜினி, தனுஷ் ஆகியோரின் செல்வாக்கு அனிருத்துக்கு பக்கபலமாக இருந்தது.  தனுஷின்  ஆஸ்தான  இசையமைப்பாளரானார் அனிருத். குறைந்த வயது பாடசாலைப் பையன் போன்ற தோற்றம் கொண்ட அனிருத் வயதுக்கு மீறிய செயல்களால் சிக்கலின் சிக்கினார். ஆபாச வார்த்தகள் அடங்கிய ஆங்கிலப்பாடலை அனிருத் வெளியிட்டதால் பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டது. தகப்பன் ஓடிச்சென்று மன்னிப்புக் கேட்டதால் அன்று தப்பிவிட்டார். தன்னைவிட வயது கூடிய நடிகையான அன்ரியாவை அனிருத் முத்தமிடும் படங்கள் வெளியானதால் பால்மணம் மாறாத சிறுவன் என்ற போர்வை விலகியது. ஆபாசப் பாடலின் எதிர் வினையால் அனிருத்தின் கையில் இருந்த  படங்கள்  கைவிட்டுப்போயின..
எதிர்நீச்சல்,மாங்கராத்தே,வணக்கம் சென்னை,வேலை இல்லா பட்டதாரி,கத்தி,காக்கிசட்டை,நானும் ரவுடிதான்,வீதாலம் போன்ற படங்கள் அனிருத்துக்கு புகழைத்தேடிக் கொடுத்தன.அறிமுகமான நான்கு வருடங்களில் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்கலின் படங்களுக்கு இசை அமைத்தார். அனிருத்தின் கையில் இருந்த தங்கமகன் வெளியாகிவிட்டது. கையில் வேறு படம் அனிருத்தின் கையில் இல்லை.அனிருத்துக்கு எதிராக சகலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் அனிருத்தை வளர்த்துவிட்ட தனுஷ் மெளனமாக இருக்கிறார்
இசையைப்பற்றிய அறிவு உள்ளவர்களே ஆரம்பகாலத்தில் பாடல்களை எழுதினார்கள். அன்றைய காலத்தில் பாடல்களை சங்கீதம் என்றே குறிப்பிட்டனர்.  50  சங்கீதம் உள்ள திரைப்படம் என்றுதான் விளம்பரப்படுத்தினார்கள். பாடத்தெரிந்தவர்கள் தான் அன்று நடித்தார்கள். வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோது பேசத் தெரிந்தவர்கள் நடிகர்களானார்கள்.  நடிகர்களின் செல்வாக்கு உயர்ந்தபோது அவர்களே கட்டைக்குரலில் பாடினார்கள். பின்னர் பாட்டு எழுத ஆரம்பித்தனர். அப்போது பாடலின் தரம் குறையத்தொடங்கியது.
தரமற்ற பாடல்களை விளம்பரப்படுத்திய பத்திரிகைகள், ஒலிபரப்பிய வானொலிகள், ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் அவற்றை மக்களின் மத்தியில் கொண்டு சென்றன. அருமயான பாடல்,அற்புதமான பாடல் அட்டகாசமான பாடல் என உசுப்பேத்தி அதேரகமான பாடல்கள் வெளியாக காரணமாகின. 
ஆபாசப்பாடலின் உச்சக்கட்ட எதிர்ப்பினால் அப்பாடலை தான் எழுதியதாகவும் அனிருத்துக்கு இதில் சம்பந்தம் இல்லையென்றும் சிம்பு அறிவித்துள்ளார்.  இந்தப்பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவதெனத் தெரியாது சிம்பு தவிக்கிறார். சிம்புவின் திரைஉலக வாழ்க்கையை பீப் பாடல் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இதிலிருந்து சிம்பு வெளிவர வேண்டும் என அவரது தகப்பன் தவியாய் தவிக்கிறார்.
பீப் பாடலுக்குக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை என சிம்பு கூறினாலும் பொலிஸ் அவரை விடுவதாக இல்லை. கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நாட சிம்பு முடிவு செய்துள்ளார்.
வக்கிரம்,ஆபாசம் நிரந்த பாடல்களால் தமிழ் சினிமா தரம் தாழ்ந்துள்ளது.ஆபாசப்பாடல்களுக்கு ஒரு முடிவு கட்டினால் தமிழ் சினிமாவின் தரம் உயரும்.

ரமணி

 தமிழ்த்தந்தி
27.12.15

Friday, December 25, 2015

காணாமல் போனவர்களை கண்டறியமுடியுமா?

இலங்கையின் நடைபெற்ற உள்நாட்டு போரின் வடுக்களை மறைக்க  நேரடியாகவும் மறைமுகமாகவும் பல காரியங்கள் நடைபெற்றுவருகின்றன. யுத்தத்தின் உண்மையான முகத்தை வெளிக்கொணர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவ்வப்போது பல தடைகள் போடப்படுகின்றன. மரணம்,இழப்பு,துயரம்,அகதி போன்றன மக்களை வாட்டிவதைக்கின்றன. இவற்றுடன் காணாமல்  போனவர்கள் என்ற புதிய அத்தியாயம் உருவாக்கி உள்ளது. காணாமல்  போனவர்களை கண்டறிய வேண்டும் என்ற உலகின் நெருக்குதலினால் அவர்களைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 
யாழ் மாவட்டத்தில் கடந்த  11 ஆம், திகதிமுதல் 15 ஆம் திகதிவர இரண்டாம் கட்டமாக  993 பேரின்  சாட்சியங்கள் பதியப்பட்டன. அதிகமானவர்கள் தமது உறவினர்களின் கண்முனாலேயே கொண்டு செல்லப்பட்டனர். ஒருசிலர் தமது உறவுகளை  கூட்டிச் சென்றவரைப்பற்றிய தகவலை தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர். காணமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவில்  சாட்சியமளித்த்வர்களின் கூற்றுப்படி அவர்கள் காணாமல்  போகவில்லை கடத்தப்பட்டனர் என்பது புலனாகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் சரணடைந்தவர்களும்,கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்.

  காணாமல் போனவர்களில் சிலர்  இன்னமும் உயிருடன் இருப்பதாகவே அவர்களின் உறவினர்கள் நம்புகின்றனர். காணாமல் போனவரின் படத்தை பத்திரிகையில் பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்த்தேன் என அவர்களது உறவினர்கள் உறுதியாககூறுகிறார்கள். விடுதலையான சிலர் தமது உறவுகளைக் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளனர். காணாமல் போன சிலரை விடுதலை செய்ய பணம் கோரப்பட்டதாகவும் பணம் கொடுத்தும் எதுவித பலனும் இல்லையெனவும் சிலர் சாட்சியமளித்துள்ளனர்.  அப்போது யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே அதிகமானோர் குற்றம் சாட்டியுள்ளனர். 
யாழ்ப்பாணம்,பருத்தித்துறை,சங்கானை,தெல்லிப்பழை ஆகிய இடங்களில்  ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது. யாழ்ப்பாணம்,கரவெட்டி,நல்லூர்,மருதங்கேணி,பருத்தித்துறை,சண்டிலிப்பாய்,சங்கானை,உடுவில்,தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இருந்து 1600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்களில் இருந்து 993 பேரின் சாட்சியமே பதிவு செய்யப்பட்டன.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள் தன்னிலை மறந்து  உணர்ச்சிவசப்பட்டு சாட்சியமளித்தனர். காணாமல் போனவர்களைக் கண்டறியலாம் என்ற நம்பிக்கை இன்னமும் அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை ஆணைக்குழுவிடம் இருப்பதாகத்தெரியவில்லை. அரசாங்க உதவிகள் கிடைத்ததா? மரண சான்றிதழ் பெற்றீர்களா? போன்ற  கேள்விகளையே ஆணைக்குழு அவர்களிடம் கேட்டது. எமக்கு அரசாங்கத்தின் உதவிகள் எவையும் வீண்டாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவலைத்தாருங்கள் . என சாட்சியமளித்தவர்கள் கோரினார்கள்.
 காணாமல் போன யாரையும்   ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை கண்டறிய முடியவில்லை. அனுமார் வால் போல் நீண்டு கொண்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நன்மை உள்ளது. இதனால் பிரயோசனம் இல்லை என்ற பட்டிமன்றமும் ஒருபுறத்தே  நடைபெறுகிறது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் என்பது இலங்க வரலாற்றில் எழுதப்பட்ட உண்மை. இந்த உணமையைத் தெரிந்து கொண்டும் ஆணைக்குழுவின் முன்னால் பலர் சாட்சியமளித்து வருகின்றனர்.  எங்கிருந்து எப்பொழுது  காணாமல் போனார்கள் யாரால்  அவர்கள் காணாமல்  போகச்செய்யப்பட்டார்கள் போன்ற விபரங்கள் வெளிச்சத்துக்கு  வந்துள்ளன.  பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களைப்பதிவு  செய்வதுதான் ஆணைக்குழுவின் மிக முக்கியமான கடமை. முடிவு செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை. அரசாங்கத்துக்கு சில ஆலோசனை வழங்கலாம். அதற்கு மேலால் எதனையும் சாதிக்க முடியாது.
படையினர் மீது அதிகளவு குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. படையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சிங்களமக்கள் தயாராக இல்லை. அப்படியான் ஒரு நிலைக்கு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியாது. நல்லாட்சி என்ற பெயரில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தமக்குள்ள அதிகாரங்களைப் பங்குபோட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகாக்களை சாந்தபடுத்துவதிலேயே நல்லிணக்க அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கையின் வரலாற்றில் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்கள் எவையுமே உருப்படியான பயனைத்தரவில்லை. சில ஆணைக்குழுக்கள் பாதியிலேயே காணாமல் போய்விட்டன. சில ஆணைகுழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன  நடந்ததெனத்தெரியாது. ஆணைக்குழுக்களைக் கண்டுபிடிப்பதற்கு  ஆணைக்குழு அமைக்க  வேண்டிய நிலை உள்ளது.  இந்த நிலையில் காணாமல் போனவர்களைக்  கண்டறியும் ஆணைக்குழு விசாரணை செய்துவருகிறது.
 வானதி
சுடர் ஒளி
டிசம்பர் 23:29/15


Tuesday, December 22, 2015

பீகாரின் பாதையில் மேற்கு வங்கம் மம்தா, சோனியா கூட்டணி


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்ற உண்மை பீகார் சட்டசபைத் தேர்தலில் நிரூபனமானது. மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலிலும் அந்த உண்மை அரங்கேறும்  நிலை தோன்றி உள்ளது.  பாரதீய ஜனதாக் கட்சியைத்   தோற்கடிப்பதற்காக  இருபத்தைந்து ஆண்டுகால அரசியல் பகையை மறந்து நிதிஷ்குமாரும் லல்லுவும் ஒன்றிணைந்தனர். இவர்களுடன் சோனியாவும் கைகோர்த்ததனால் பாரதீய ஜனதாவின் வெற்றிமாயை அகன்றது. மேற்கு வங்கத்தில் இருதுருவங்களாக இருக்கும் மம்தா பார்னஜியும்  சோனியாவும் இணையும் காலம் தோன்றி உள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மம்தா பார்னஜி  முதலமைச்சராக  இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த மம்தாவின் தலைமையில்  திரிணாமூல்காங்கிரஸ்  உருவாக்கி ஆட்சியைப் பிடித்தது. அன்றிலிருந்து காங்கிரஸ் கட்சியின்  பகையாளியாக மாறினார் மம்தா. அவரின் செல்வாக்கினால்  மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் செல்வாக்கு  குறைந்தது. மாநிலத்தில் மட்டுமல்லாது மத்திய அரசிலும் காங்கிரஸுக்கு எதிராகவே மம்தா காய்நகர்த்தினார்.  கடந்த மாதம் நடந்த பீகார் சட்டமன்றத்தேர்தலில் இந்தக் காய் நகர்த்தல் முடிவுக்கு வந்தது. பாரதீய  ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்தபோது சோனியாவும் மம்தாவும் ஓரணியில் இருந்தனர். மேற்கு வங்கத்திலும் ஓரணியில் இருப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.
அரசியல் களத்தில் பகையாளியாக இருக்கும் சோனியாவை கடந்த வாரம் மம்தா சந்தித்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சோனியா ராகுல் ஆகியோர் மீதான நேசன் ஹெரால்ட் குற்றச்சாட்டினால்  இரண்டு நாட்கள் லோக் சபை கூடமுடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் கட்சியைவிட திரிணாமூல்காங்கிரஸ்  கட்சி உறுப்பினர்களே  மிக அதிகளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். லோக்சபையில் பாரதீய ஜனதாவைவிட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொகை அதிகம். ஆகையினால் பாரதீய ஜனதா லோக் சபையில் அதிகாரம் காட்ட முடியாது.காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் போது மெளநாமாக இருக்கும் திரிணாமூல்காங்கிரஸ் உறுப்பினர்கள் இம்முறை வெகுண்டெழுந்து தமது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் காங்கிரஸ் மிகப்பலத்துடன் இருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் ஒன்றிணைந்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கின்றன. மம்தாவின் குறைகளை பட்டியலிட்டு ஆட்சியைப்பிடிக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். மம்தாவின் மீது  வெறுப்புள்ளவர்களை வளைத்துப்போட்டு தேர்தலைச்   சந்திக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். இடதுசாரிகளின்  வியூகத்தை உடைப்பதற்காக தனது அரசியல் எதிரியான    சோனியாவின் கையைப் பிடிக்க மம்தா தயாராக உள்ளார்.

சாரதா  சிட் பண்ட ஊழல், நேசன் ஹெரால்ட் ஆகிய வழ்க்குகளில் காங்கிரஸும் திரிணாமூல்காங்கிஸும் சிக்கி உள்ளன. இந்த இரண்டு வழக்குகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால்  சோடிக்கப்பட்டவை என  இரண்டு கட்சிகளும் கூறுகின்றன.இதன் காரணமாக பாரதீய ஜனதாவுக்கு எதிராக இரண்டு கட்சித்தலைவர்களும் ஒன்றிணையத் தயாராகிவிட்டனர். மேற்கு வங்கத்தில் பாரதீய ஜனதா வலுவானதாக இல்லை. மம்தாவும் சோனியாவும் இணைந்தால் பாரதீய ஜனதா செல்லாக்காசாகிவிடும். இடதுசாரிகளும் எதிர்பார்த்த  வெற்றியைப்பெறமுடியாது.
லல்லுவும் நிதிஷ்குமாரும் இணைந்து பீகாரில்  தொகுதிப்பங்கீடு,முதல்வர் வேட்பாளர் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று மம்தாவும் சோனியாவும்  மேற்கு வங்கத்தில் முதல்வர்  வேட்பாளர், தொகுதிப்பங்கீடு என்பனவற்றை வெளிப்படையாக அறிவித்து போட்டியிட்டால் வெற்றிபெறலாம். லோக்சபையில் பாரதீய ஜனதாவின் பலத்தை  மேலும் குறைப்பதே இவர்களின் நோக்கம்.
மேற்கு வங்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மம்தாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த இணைப்பை அவர்கள் விரும்பவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணி சேர்ந்து மம்தாவை வீழ்த்த வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இடதுசாரிகளுடன் கூட்டணிசேர விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மீது இடதுசாரித் தலைவர்கள் சுமத்தும் ஊழல்  குற்றச்சாட்டு இந்தக் கூட்டணிக்குத் தடையாக உள்ளது.


கேரளாவின்  முன்னால் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்புவிழாவில்  இன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை கலந்துகொள்ள வேண்டாம் என ஏற்பாட்டாளர் தொலைபேசியில் தெரிவித்ததனால் கீறல மக்கள் கொதித்துப்போய் உள்ளனர் கேரளாவின் கொல்லத்தில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு சார்பில் கேரள முன்னாள் முதல்வர் ஆர். சங்கரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று சிலையை திறந்து திறந்து வைத்தார். இந்த விழா அழைப்பிதலில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்புகொண்ட   இந்த விழாவை நடத்தும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவர் வெள்ளாபள்ளி நடேசன், முதல்வர் உம்மன்சாண்டியை தொடர்பு கொண்டு சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள் வர வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல கூறியிருக்கிறார். இதனால் உம்மன்சாண்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இது கேரளா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவர்தான் இந்த வெள்ளாபள்ளி நடேசன்.
இது அப்பட்டமான் அரசியல் பழிவாங்கல் என கேரள மக்கள் நினைக்கின்றனர். இந்த அநாகரிகமான  செயலுக்கு பிரதமர் மோடியும் உடந்தை என்பதால் மக்களின் கோபம் இரட்டிப்பாக உள்ளது. வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக காய் நகேத்திவரும் வேளையில் தென்மாநிலத்திலும் மோடிக்கு எதிராக மக்கள் திரும்பும் நடவடிக்கையை பாரதீய ஜனதாவினரே  செய்து வருகின்றனர்.  சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட மோடி நடந்த சம்பவத்துக்காக போது மக்களிடம் மன்னிப்புகோரினார்.  மோடியின் மன்னிப்பு கோரிக்கையை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று டில்லி அரசைக்கைப்ப்றிய முதல்வர்  கெஜ்ரிவாலின்   முதன்மைச்  செயலரின் அலுவலகம் கடந்த செவ்வாய்கிழமை சி.பி.ஐயினால் சீல்வைக்கப்பட்டது.  கொம்பியூட்டர் வாங்கியதில் ஊழல்  செய்ததாக முதன்மைச் செயலர் ராஜேந்திரகுமார் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. அலுவலகத்திலும் அவரதுவீட்டிலும் சி.பி.ஐ ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. ஊழல் குற்றச்சாட்டில்  முதலமைச்சரின் முதன்மைச் செயலரின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீந்திரகுமாரின் வீட்டிலிருந்து  2.4 இலட்சம் ருபா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதற்குரிய கணக்கு அவரிடம் இல்லையெனவும் சில அசையாச்சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இதே குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஜி.கே.நந்தா அன்பவரின் வீட்டிலிருந்து 10.5 இலட்சம்  ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. ராஜேந்திரகுமாரின்  அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைப் பற்றிய விபரங்களை சி.பி.ஐ வெளியிடவில்லை. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டத்தில் ராஜேந்திரகுமார்  சில நிறுவனங்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
டில்லி மாநில அரசின் இன்னொரு முதன்மைச் செயலரான  சஞ்சை பிரதாப் சிங்க கடந்தவாரம் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டார், இரண்டு இலட்சம்  ரூபா இலஞ்சம் பெற்றதால் அவரை கைது செய்ததாகக்கூறிய சி.பி.ஐ மேலும் சில அதிகாரிகளைக் கைது செய்யபபோவதாக அறிவித்தது.

. கடந்த பத்து மாதங்களில் ஆம் ஆத்மி கட்சியில் மூன்று சட்டசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்சியான பாரதீய ஜனதாவின் அரசியல்  பழிவாங்கல் என கெஜ்ரிவால்  கூறியுள்ளார்.  கெஜ்ரிவாலுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எந்தக் காலத்திலும் ஒத்து வராது.ஊழல் குற்றச்  சாட்டை இருதரப்புமே அரசியலாகப் பார்க்கின்றன. இதன்காரனமாக் டில்லி அரசியல் சூடாகியுள்ளது.


Sunday, December 20, 2015

வடகத்திருடன்



ஐயோ ஐயய்யோ என்ரை லச்சுமியை காணவில்லை என்ற  பாறியின் அவலக்குரலுடன் வேம்படிக்கிராமம்துயிலெழுந்தது.  அவளுக்கு தகப்பன் வைத்த பெயர் பார்வதி.  காலப்போக்கில் பாறுவதியாகி வயதானபின் பாறி ஆச்சியாகச்சுருங்கிவிட்டது. அந்தக் கிராமத்தில் உள்ள பாதிக்கும் அதிகமானவர்கள் பாறியின் வீட்டில் குழுமி விட்டனர். லச்சுமி என்று பாறியினால் செல்லமாக அழைக்கப்பட்ட பசுமாட்டைக் காணவில்லை. தாயைப்பிரிந்த கன்று புதியவர்களைக் கண்டு மிரண்டது.
 கணவன் இறந்தபின்பு தனிக்கட்டையான பார்வதிக்கு  வருமானம் கொடுத்தவைகளில் பசுமாடும் அடக்கம். கணவன் உயிரோடு இருக்கும்வரை பார்வதிக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாது. கணவன் இறந்தபின்னர்தான் பிள்ளைகள் இல்லாத கொடுமையை உணர்ந்தாள். தோட்டம்,வயல் என்பன இருந்தபடியால் வருமானத்துக்கு குறை இல்லை. சிறிய வருமானத்தைக்கொடுத்த பசுமாடு களவு போய்விட்டது. பசுமாட்டை மிருகம் என்று பார்வதி நினைக்கவில்லை. தன்னுடைய ஒரு உறவாகவே அதனை நினைத்து வளர்த்தாள். அவளது தனிமையைப்போக்க லச்சுமி உதவியது. பசுமாட்டை யார் திருடியது எனத்தெரியாது அனைவரும் கூடிக்குசுகுசுத்தனர்.
வீட்டுக்குளே போன  பார்வதி, ஐயோ என்ரை வடகம் போச்சே எனப்பெருங்குரலெடுத்து குழறினாள்.  வெளியில் நின்ற சிலர் உள்ளே ஓடினார்கள். வடகம் வைத்த சாடி வெறுமையாக இருந்தது. கொஞ்ச வடகம் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
வேறை  என்ன களவு போனதென பாரணை  ஆச்சி ஒரு பெண்மணி கூறினாள். காசு, நகை எதுவும் பாறி ஆச்சியிடம் இல்லை. கத்தி,கோடாலி,மண்வெட்டி, உரல்,உலக்கை போன்றன. அந்தந்த இடங்களிலே  இருந்தன. பாவம் இந்தக்கிழவியின் வீட்டிலே களவெடுத்திருக்கிறானே எனப்பரிதாபப்பட்டனர். வேப்ப மரங்கள் அதிகமாக இருந்தபடியால் வீம்படி என்ற பெயர்  அந்தக்கிராமத்துக்கு நிலைத்துவிட்டது. வேப்பம் பூக்களை சேகரித்தி வடகம் செய்து விற்பனை செய்வது அந்தக் கிராமத்து கைத்தொழில்களின் ஒன்று. பாறி ஆச்சிக்காக அனைவரும் பரிதாபப்பட்டனர்.
  வேம்படிக்கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. ஆகையினால்  பொலிஸில்   அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். பொலிஸை எதிர்பார்த்து   கிராமத்து மக்கள் காத்திருந்தனர். பிற்பகல் நான்கு மணிக்கு புழுதியைக்கிளப்பியபடி பொலிஸ் வண்டி கிராமத்தினுள் நுழைந்தது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் அதன் பின்னால் போட்டிக்கு ஓடினார்கள். பசுமாடு நின்ற இடம் உட்பட வீடு முழுவதையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸார் சோதனை செய்யும்போது என்ரை வடகம் போச்சே என பாறி ஆச்சி அழுதார்.
பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பாறி ஆச்சியிடம் விசாரணை செய்தார்.
எவளவு காலமாக மாடு வளக்கிறது?.
பத்து வருசமாக
ராத்திரி நாய் குலைச்சு சத்தம் கேட்டதா?
இல்லை  
மாடு கத்தினதா?
இல்லை
யாரிலையும் சந்தேகமா?
இல்லை
கள்ளன் இந்தக்கிராமத்தில் உள்ளவனாக இருக்க வேண்டும் என இன்ஸ்பெக்ரர் கூறினார். அதை ஊரவர்கள் ஏற்கவில்லை. வடகம் களவு போனதே என பாறி ஆச்சி புலம்பியதைக்கேட்ட இன்ஸ்பெக்ரர் வடகத்தைப்பற்றி விசாரித்தார். வடகம் என்றால் என்ன. அதை எப்படிச்செய்வது என ஊரவர்கள் விளக்கினார்கள். வடகத்தைப்பார்க்க வேண்டும் என இன்ஸ்பெக்ரர் கூறியதால் பாறி ஆச்சி வடகத்தைக் காட்டினாள். வேறுயாரிடம் வடகம் இருக்கிறதென இன்ஸ்பெக்ரர் விசாரித்தார். அந்தக்கிராமத்தில் முப்பது குடும்பங்கள் உள்ளன. இருபது குடும்பங்களிடம் வடகம் இருப்பதாகக் கிராமத்தவர்கள் கூறினார்கள்.
பொலிஸாருடன்  ஆலோசனை செய்த இன்ஸ்பெக்ரர் வடகத்தைக் அனைவருக்கும் கட்டளை இட்டார். எல்லோரும் தமது வடகத்தைக் கொண்டுவந்து காட்டினார்கள். வடக்கத்தை மணந்து பார்த்து பரிசோதித்த இன்ஸ்பெக்ரர் இருபது பேரின் வடகத்தில் இருந்து பத்துபத்து வடகங்களை தனித்தனி பைகளில் போட்டு  பெயரை எழுதி பொதி செய்தார். பாறி ஆச்சியின் வடகத்தையும் தனியாக எடுத்தார்.

மாட்டுக்கள்ளனைப் பிடிக்க வந்த இன்ஸ்பெக்ரர் வடகத்தை ச்சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என கிராமத்தவர்கள் நினைத்தார்கள். பாறி ஆச்சியின் பசுமாடு களவு போய் ஐந்து நாட்களாகிவிட்டது. பொலிஸுக்குப்   போகாமல் விட்டிருந்தால் வடகமாவது மிஞ்சி இருக்கும் என வடகக்தைப் பறி கொடுத்தவர்கள் வருந்தினார்கள்.
பாறி ஆச்சியின் பசுமாடு களவுபோய் பத்து நாட்களாகிவிட்டது. கள்ளனைப்பற்றிய  ஒருதகவலும் ஒரு தகவலும் வெளிவரவில்லை. பாறி ஆச்சியைக்காண்பவர்கள் பசுமாட்டைப் பற்றிக் கேட்டு அவளது கவலையை  மேலும்கூட்டினர். பசுமாட்டுடன் வடகம் களவு போனதையும் பெரும் கவலையுடன் பாறி ஆச்சி கூறுவாள்.  அவளின் வடகம் மிகவும் சுவையானது. மாலை நான்கு மணியளவில் புழுதியைக்கிளப்பிக் வேம்படிக்கிராமத்தினுள் நுழைந்த ஜீப் பாறி ஆச்சியின் வீட்டின் முன் நின்றது. ஜீப்பைத்துரத்திசென்ற சிறுவர்களும் முச்சிரைக்க நின்றனர்.

வேம்படிக்கிராமத்தினுள்  ஜீப் நுழைவதைக்கண்ட  ஊரவர்களும் பாறி ஆச்சியின் வீட்டின் முன்னாள் குழுமிவிட்டனர். சத்தம் கேட்ட  பாறி ஆச்சி வீட்டுக்கு வெளியே வந்தார். ஜீப்பின் முன் ஆசனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்ரர்  பாறி ஆச்சியைப்பார்த்து சிரித்தார். கலவரத்துடன் இன்ஸ்பெக்ரரைப் பார்த்தார் பாறி ஆச்சி.
ஆச்சி கள்ளனைப்பிடிச்சாச்சு என்றார் இன்ஸ்பெக்ரர்.பாறி ஆச்சியின் முகம் மலர்ந்தது. உண்மையிலேயே கள்ளன் பிடிபட்டு விட்டானா என உள்  மனம் சந்தேகப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.திருடன் யாரென அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர்.இன்ஸ்பெக்ரர் கையைக்காட்டியதும் ஜீப்பினுள் இருந்ததிருடனை  பொலிஸார் இறக்கினர். திருடனைக்கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆறுமுகம் என சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

ஆறுமுகம் இப்படிச்செய்வான் என யாரும் நம்பவில்லை. பாறி ஆச்சியின் பசுமாட்டையும்,வடகத்தையும் திருடியது தான்தான் என்று ஆறுமுகம் ஒப்புக்கொண்டான். ஆறுமுகம் எப்படி அகப்பட்டான் என்பதை  அறியாது அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இன்ஸ்பெக்ரரிடம் எப்படிக்கேட்பது என்று தெரியாது தவித்தனர்.
என்னாலை நம்பேலாமல் கிடக்கு. ஆறுமுகம் தான் கள்ளன் எண்டு எப்பிடி கண்டு பிடிச்சியள்?துணிவுடன் இன்ஸ்பெக்ரரிடம் கேட்டாள் பாறி ஆச்சி.
உங்கடை வடகங்களை கொழும்புக்கு அனுப்பினேன். ஆறுமுகம் வீட்டிலை ஆச்சியின் வடகம் இருந்தது. ஆளைபிடிச்சு விசாரிச்சம் உண்மையை ஒப்புக்கொண்டான். என்றார் இன்ஸ்பெக்டர் .

   சூரன்.ஏ.ரவிவர்மா

யாதும் 2014

தமிழ்த்தந்தி 21/12/15