Thursday, October 29, 2009

சாதனைகளுடன் வென்றது இந்தியா


அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களினால் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாக்பூரில் அமைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்கின் முடிவு தவறானது என்பதை இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிரூபித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 354 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய அணி வீரர்களான பிரட் லீ, ஹோர்ஸ் ஆகிய இருவரும் காயம் காரணமாக விளையாடம்ததனால் கிபர் ரைஸ்,ஷான் மாஸ், ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் அதிரடி மன்னன் யுவராஜ் சிங் குணமடைந்து அணியில் சேர்க்கப்பட்டதனால் விராட் கோஹ்லி நீக்கப்பட்டார்.
ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இத் தொடரில் 83 ஓட்டங்கள் அடித்து 17,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெறுவார் என்று ரசிகர் காத்திருந்த வேளையில் நான்கு ஓட்டங்களுடன் சச்சின் ஆட்டமிழந்தார். சிட்டிலின் பந்தை வைட்டிடம் பிடிகொடுத்த சச்சின் வெளியேறியதும் களம் புகுந்தார் கம்பீர்.
ஷேவாக் தனது வழக்கமான அதிரடி மூலம் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். ஷேவாக்கின் ருத்திர தாண்டவத்தினால் கலங்கிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் பொண்டிங் பந்து வீச்சு பவர் பிளேயை எடுப்பதைத் தள்ளிப் போட்டர். ஷேவாக் ஆட்டமிழந்த பின்னரே பந்துவீச்சுபவர் பிளையை பொண்டிங் பயன்படுத்தினார்.
31 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்ஸர், ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 40 ஒட்டங்கள் எடுத்தார். ஜோன்சனின் பந்தை ஹில்பனாசிடம் பிடிகொடுத்து ஷெவாக் ஆட்டமிழந்தார். ஷெவாக் வெளியேறியதும் களம் புகுந்த யுவராஜ் சிங் தனது வழமையான அதிரடி மூலம் எதிரணி வீரர்களை திக்கு முக்காடச் செய்தார். 24 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் சிங் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
97 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை இந்திய அணி எடுத்திருந்தவேளை களம் புகுந்த அணித் தலைவர் டோனி தனது பழைய அதிரடியை வெளிப்படுத்தினார்.
நான்காவது இணைப்பாட்டத்தில் விளையாடிய கம்பீர், டோனி ஜோடி நிதானமாகக் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 15.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி 30.3 ஓவர்களில் 200 ஓட்டங்களைத் தாண்டியது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாது அவுஸ்திரேலிய வீரர்கள் திணறிக்கொண்டிருந்தவேளை கம்பீர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
80 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார்.
முதலாவது போட்டியில் அரைச் சதம் கடந்த கம்பீர் இரண்டாவது போட்டியிலும் அரைச் சதம் கடந்து 18 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். கம்பீர், டோனி ஜோடி 119 ஓட்டங்கள் எடுத்தது.
டோனியுடன் ரைனா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அவுஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை நொறுக்கித் தள்ளியது. டோனியும் ரைனாவும் அடித்து ஆடியதால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
மிக நீண்ட நாட்களின் பின்னர் அடித்தாடிய டோனி தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். டோனிக்கு போட்டியாக அடித்து ஆடிய ரைனா தனது 11 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
50 ஆவது ஓவரில் இந்திய அணியின் மூன்று விக்கட்டுகள் வீழ்ந்தன. 49.3 ஆவது ஒவரில் ஜோன்சனின் பந்தை பெயினிடம் பிடிகொடுத்து டோனி ஆட்டமிழந்தார். 107 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேம்னி மூன்று சிக்ஸர், ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 124 ஒட்டங்களை எடுத்தார். டோனி, ரெய்னா ஜோடி ஐந்தாவது இணைப்பாட்டத்தில் 93 பந்துகளில் 136 ஒட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்களான ஜடேஜா, ரொபின் சிங் ஜோடி ஐந்தாவது இணைப்பாட்டத்தில் 141 ஓட்டங்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 49.5 ஆவது பந்தில் ஜோன்சனின் பந்தை பெயினிடம் பிடிகொடுத்து ரைனா ஆட்டமிழந்தார். 50 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா ஒரு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஆவது கடைசிப் பந்தில் பிரவீன் குமார் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கட்டுகளை இழந்து 354 ஓட்டங்கள் எடுத்தது.
உடற்தகுதி இல்லா நிலையிலும் விளையாடிய ஜோன்சன் 75 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். ஹில்பனாஸ் 83 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டை வீழ்த்தினார். 55 ஓட்டங்களை கொடுத்த சிட்டில் ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
355 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்கள் எடுத்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இந்திய வீரர்கள் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்.
அவுஸ்திரேலிய வீரர்களில் ஹஸி மட்டும் 53 ஒட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். வொட்சன் 19, பெயின் 8, பொண்டிங் 12, வைட் 23, வெகாஸ் 36, மார்ஸ் 21, ஜோன்சன் 21 ஓட்டங்கள் எடுத்தனர். ஹாரிட்ஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜடேஜா மூன்று விக்கட்டை வீழ்த்தினார். பிரவீன் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும். நெஹ்ரா, யுவராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டோனி தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை இங்கிலாந்தது அணிகளுக்கு எதிராக தலா மூன்று முறையும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், கென்யா, பெர்முடா, ஹொங்கொங் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் இந்திய அணி 350 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்த டோனி மேலும் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். உலக சம்பியன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் (124 ஓட்டங்கள்) என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. முன்னதாக 2003 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் தலைவராக இருந்த ஜயசூரிய 122 ஓட்டங்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் சேர்த்த விக்கட் காப்பாளர் என்ற சாதனையும் நேற்று டோனி வசம் ஆனது.
டோனி பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் (116 ஒட்டம் 2009 ஆம் ஆண்டு) நியூஸிலாந்தின் வாட்ஸ்வொர்த் (104 ஓட்டங்கள் 1974 ஆம் ஆண்டு) இலங்கையின் சங்கக்கார (101 ஓட்டங்கள் 2004 ஆம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே அவுஸ்திரேலியாவுடன் சதம் கண்ட விக்கட் காப்பாளர் ஆவர்.
""டோனி ஒருநாள் போட்டியில் 1 1/4 ஆண்டுக்கு பிறகு சதம் கண்டுள்ளார். கடைசியாக 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கராச்சியில் நடந்த ஆசிய கிண்ண கிரிக்கட்டில் ஹாங்காங் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
""ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா குவித்த அதிகபட்ச ஒட்டங்கள் (354 ஓட்டம்) இதுவாகும். இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலில் 315 ஒட்டங்கள் எடுத்திருந்தது. மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய அணி குவித்த அதிகபட்சமாகவும் இது பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்து அதிகபட்சமாக 343 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
""ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருப்பது இது 12 ஆவது முறையாகும். வேறு எந்த அணியும் இத்தனை முறை இந்த இலக்கை கடந்ததில்லை. அது மட்டுமின்றி இந்த 12 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த சாதனை பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ள தென்னாபிரிக்கா 8 முறையும் அவுஸ்திரேலியா 6 முறையும் 350 ஓட்டங்களுக்கு மேல் கடந்துள்ளன

ஒதுக்கப்பட்ட ட்ராவிட்


இந்திய அணியின் பெருஞ்சுவர், இந்திய அணியில் வெற்றிகள் பலவற்றுக்குக் காரணமாக இருந்தவர். இந்திய கிரிக்கட் அணியின் தலைவராகி பல சாதனைகளுக்கு உரிமையானவர், எதிரணி வீரர்களை கிலிகொள்ளச் செய்தவர் போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராகுல் ட்ராவிட்டை இந்திய தேர்வுக்குழு மீண்டும் ஒரு முறை அவமானப்படுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். இந்தியக் கிரிக்கட் அணிக்கு புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதனால்
ராகுல் ட்ராவிட் 2007ஆம் ஆண்டு ஒரு நாள் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
134 டெஸ்ட் போட்டி
களில் விளையாடி 10,823 ஓட்டங்களும் 339 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,765 ஓட்டங்களும் எடுத்த ராகுல் ட்ராவிட்டின் அனுபவத்தைப் புறந்தள்ளிய இந்திய தேர்வுக் குழு திடீரென விழித்துக் கொண்டு 2009 ஆம் ஆண்டு ராகுல் ட்ராவிட்டை ஒரு நாள் அணியில்
சேர்த்தது. இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு
தொடர், தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மினி உலகக் கிண்ணம் ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு
தனது திறமை மழுங்கவில்லை என்று ராகுல் ட்ராவிட் நிரூபித்தார். ஐந்து போட்டிகளில் 180 ஓட்டங்கள் எடுத்து தேர்வாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ராகுல் ட்ராவிட்டுக்கு அவுஸ்திரேலியத் தொடரிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷேவாக் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமையினால் ராகுல் ட்ராவிட்டுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஷேவாக் குணமடைந்து அணிக்குத் திரும்பியதும் ராகுல் ட்ராவிட் அணியிலிந்து கழற்றி விடப்பட்டார். யுவராஜ் சிங் அணியில் இல்லாத நிலையில் ராகுல் ட்ராவிட் ஓரங்கட்டப்பட்டது தவறானது என்ற கருத்து உள்ளது. வீராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் மத்திய வரிசையில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தேர்வாளர்கள் கருதினார்கள்.
அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சைச்
சமாளிக்கும் வல்லமை
ராகுல் ட்ராவிடிடம் உண்டு. தென் ஆபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிவரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார் ராகுல் ட்ராவிட்.

Sunday, October 25, 2009

அலட்சியப்படுத்துகிறது மத்திய அரசுதடுமாறுகிறது தமிழக அரசு


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மூக்குடைந்து போயுள்ள தமிழக அரசு, தனது இயலாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையேயான பிரச்சினையில் முதன்மையானது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும் என்று கேரளா விரும்புகிறது. தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் நடவடிக்கையில் தாமதம் காட்டி வந்தது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலமும் நீதிமன்றம் மூலமும் அதனைத் தடுத்து நிறுத்த பலமுறை முயற்சி செய்தது. தமிழக அரசின் எதிர்ப்பின்போது பணிந்திருந்த கேரள அரசு இப்போது மத்திய அரசின் அனுமதியுடன் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்குரிய ஆய்வை மேற்கொள்வதற்கு மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலின்றி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு அனுமதி வழங்கி இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகனும் சோனியா காந்தியும் கேரள அரசை எதிர்த்து தமிழக அரசுக்கு ஆதவாக இதுவரை வாய் திறக்கவில்லை.
மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் சக்தி தனக்கு இருப்பதாகப் பெருமைப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் சகல திட்டங்களுக்கும் தமிழக அரசு தனது பூரண ஆதரவை வழங்கி வருகிறது. மத்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு தமிழக அரசு துணை போகிறது. மத்திய அரசின் கொள்கைகள் விமர்சிக்கப்படும் போது மத்திய அரசுக்கு முண்டு கொடுத்து தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறது தமிழக அரசு.
மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்த தமிழக அரசு நீதிமன்றத்தின் உதவியை நாடியது. நீதிமன்றம் கேரள அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கி உள்ளது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் படி தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. ஆய்வு மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அணை கட்டப்படும் என்று தமிழக அரசு பயப்பட வேண்டாம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் சென்றதும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக இந்த வழக்கை இரண்டு மாதங்கள் பிற்போட வேண்டும் என்று கேரள அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கேரள அரசின் மனுல்வயும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த உத்தரவை கேரள அரசு மீறி விட்டது. அணையை உயர்த்தும் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக கேரள அரசு எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு உறுதிமொழி தரவில்லை என்று காரணம் கூறிய நீதிமன்றம் கேரள அரசின் மனுவை நிராகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தினால் தமிழக, கேரள மாநிலங்களுக்கிடையே பிரச்சினை உருவாகும். மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படும் என்பதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு கேரள அரசு தயங்குகிறது.
ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கேரள அரசுக்கு எதிரம்கவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விடயம் பற்றி இதுவரை எதுவும் கூறவில்லை. உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன், மத்திய அரசின் ஆதரவை விலக்கப் போகிறேன் என்று மிரட்டும் தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியாத நிலையில் மிரண்டு போயுள்ளம்ர். மத்திய அரசில் இருந்து வெளியேறினால் காங்கிரஸின் தயவில் ஆட்சி நடத்தும் தமிழக அரசை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, உலகத் தமிழ் இனத்தின் தலைவர் என்ற பெருமையுடன் வாழும் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் ஆதவுடன் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கனவு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது.
அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. உலகத் தமிழினத் தலைவரான தான் முதல்வராக இருக்கும் போது உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை என்ற ஆதங்கம் முதல்வர் கருணாநிதியின் மனதை உறுத்தியதால் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி மாதம் கோவையில் நடைபெறும் என்று தன்னிச்சையாக அறிவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிவிப்புக்கு தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. உலகத் தமிழம்ராய்ச்சி மாநாடு நடைபெறும் இடத்தையும் திகதியையும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு உரிமை உடைய அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனத் தலைவரான நெபொரூ சுரோஷிமாவின் எதிர்ப்பினால் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற வாசகத்துக்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நெபொரூ சுரோஷிமா ஒரு வருட கால அவகாசம் கேட்டார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கு நீண்ட காலம் வேண்டும் என்பது ஜப்பானிய தமிழ் அறிஞரான நெபொரூ சுரோஷிமாவின் வாதம். ஆனால், அவசர அவசரமாக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்.
தமிழகத்தில் நடைபெற்ற மூன்று தமிழாராய்ச்சி மாநாடுகளின் போதும் தமிழக அரசின் கொள்கைகளும் சாதனைகளும் தான் அதிகம் பேசப்பட்டன. தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிடும் மாநாடாக அது மாறிவிடுமோ என்ற ஐயமும் தமிழ் உலகில் எழுந்தது.
ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரால் 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பிலேயே உலகத் தமிழம்ராய்ச்சி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய தமிழாராய்ச்சி மாநாடு பல வருடங்களாக நடத்தப்படவில்லை.
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தும் சந்தர்ப்பத்தை தவற விட்ட தமிழக முதல்வர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி தனது ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்கிறார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 25/10/09

போராடித் தோற்றது இந்தியா

அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையே வரோதாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய வட்சன், பெய்ன் ஜோடியை நெஹ்ரா பிரித்தார். ஐந்து ஓட்டங்களை எடுத்த வட்சன் நெஹ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்கு விளையாடிய பெய்ன், பொண்டிங் ஜோடி சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது. இருவரும் இணைந்து 97 ஓட்டங்கள் எடுத்தனர். 50 ஓட்டங்கள் எடுத்த பெய்ன் இஷாந்த் சர்மாவின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழந்ததும் பொண்டிங்குடன் வைட் ஜோடி சேர்ந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய பொண்டிங் 74 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வைட் நெஹ்ராவின் பந்தை ரைனாடிவும் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய ஹசி 54 பந்துகளில் ஒரு சிக்சர், எட்டு பௌண்டரி அடங்கலாக 73 ஓட்டங்களை எடுத்தார். இஷாந்த் சர்மாவின் பந்தை கொக்கியிடம் பிடிகொடுத்து ஹசி ஆட்டமிழந்தார். ஹோப்ஸ், ஜோன்சன் ஆகியோர் ஆட்டமிழக்காது தலா 14 ஓட்டங்கள் எடுத்தனர். பொண்டிங், ஹசே, வைட், பெய்ன் ஆகியோரின் அபாரத் துடுப்பாட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணி இமாலய இலக்கை அடைந்தது.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் விட்ட தவறுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
பிரவீன்குமார் 77, நெஹ்ரா 58, இஷாந்த் சர்மா 50, ஹர்பஜன் சிங் 57, ஜடேஜா 39 ஓட்டங்களைக் கொடுத்தனர். ஒரே ஒரு ஓவர் வீசிய ரைனா ஒன்பது ஓட்டங்களைக் கொடுத்தார்.
இஷாந்த் சர்மா மூன்று விக்கட்டுகளையும் நெஹ்ரா இரண்டு விக்ய்கட்டுகளையும் ஹர்பஜன் , ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
293 என்ற பிரமாண்டமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களை எடுத்து நான்கு ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேவாக்கும் சச்சினும் ஏமாற்றிவிட்டனர். மிக நீண்ட நாட்களின் பின்னர் களமிறங்கிய ஷேவாக் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். மூன்றாவது இணைப்பாட்டத்தில் களமிறங்கிய கம்பீர், கோக்லி ஜோடி ஓரளவுக்குத் தாக்குப் பிடித்தது.
கோஹ்லி 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய கம்பீர் 68 ஓட்டங்கள் எடுத்த வேளை ஜோன்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரைனா 9 ஓட்டங்களுடனும் வெளியேறினார். அணித் தலைவர் டோனி 30 ஓட்டங்களில் வட்சனின் பந்தை பிரட் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஏழு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை எட்டாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங்கும் பிரவீன் குமாரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் போராடினார்கள். இவர்கள் இருவரும் இணைந்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தபோது இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலை உண்டானது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சவால் விட்டனர். கடைசி ஆறு பந்தில் ஒன்பது ஓட்டங்கள் என்ற இலக்கு இருந்தபோது இரண்டாவது பந்தில் சிடிலின் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
31 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்பஜன் சிங் மூன்று சிக்சர் நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்த இந்திய அணி 288 ஓட்டங்கள் எடுத்து நான்கு ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.
பிரவீண் குமார் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய வீரர்கள் 24 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். வட்சன், ஜோன்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிரட் லீ, சிட்டில், வொகாஸ், ஹரிட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக் கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய வீரர் ஹசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Monday, October 19, 2009

தனிமரமான அ.தி.மு.ககுழப்பத்தில் பா.ம.க.



தமிழக அரசியல் தலைவர்கள் தமது கட்சியைப் பலப்படுத்தி வரும் வேளையில் ஓய்வெடுக்கிறேன் என்ற போர்வையில் கொடநாட்டில் தங்கி இருந்து அரசியல் காய்களை நகர்த்தி வந்த ஜெயலலிதா, கடந்த வாரம் சென்னைக்கு திரும்பியதால் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனும் இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்த ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அக்கட்சிகளை ஒதுக்கத் தொடங்கினார். இடதுசாரிகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தனிமரமாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கத் துணையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது.
அதிரடியாக பலரை கட்சியில் இருந்து நீக்கியதாலும் சிலரின் பதவியை பிடுங்கியதாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஜெயலலிதாவின் செல்வாக்கு குறைந்திருக்கும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. நாட்டிலே பல பிரச்சினைகள் இருக்கும் போது கொடா நாட்டில் ஓய்வு என்ற பெயரில் ஜெயலலிதா உல்லாசமாக இருக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் பரப்புரையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பொய்யாக்கி உள்ளனர்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்வைத்தே தமது அரசியல் நடவடிக்கைளை மேற்கொள்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் கூட்டணியை தோல்வியடையச் செய்யக் கூடிய பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிடம் இல்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கட்சியைப் பலப்படுத்தி, பலமான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அபிமானியாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, எதிர்க்கட்சிகளுடன் ஒட்டி உறவாடுபவர்களை வெளியேற்ற வேண்டிய அல்லது ஓரம் கட்ட வேண்டிய கடமையும் ஜெயலலிதாவுக்கு உள்ளது.
ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் சிக்கி இருப்பவர்களை வலை வீசிப் பிடிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகளிடம் இருந்த செல்வாக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தராதமை ஆகிய காரணங்களினால் ஜெயலலிதாவின் மீதுள்ள நம்பிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது மாநில அரசையும் மத்திய அரசையும் எதிர்ப்பதற்கு ஒரு ஆயுதமாக ஜெயலலிதாவைப் பாவித்த இடதுசாரிகள் தமது எண்ணம் நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடையும் என்று எதிர்பார்த்த டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தன் மகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா தர மாட்டார் என்பதை உணர்ந்ததாலும் கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ்.
தமிழக அரசியற் கட்சிகள் ஜெயலலிதாவை கைவிட்டாலும் கழகத் தொண்டர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஜெயலலிதாவின் கரங்களைப் பலப்படுத்த தயாராக உள்ளனர்.
கட்சிக்குள் இருக்கும் களைகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளில் ஜெயலலிதா கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர்களுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்படாததனால் அவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ் தனது கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். ஜெயலலிதாவும் இடதுசாரித் தலைவர்களும் மூன்றாவது அணி அமைப்பதற்கு பல முறை முயன்றனர். மூன்றாவது அணி பற்றிய அறிக்கைகளும் கலந்துரையாடல்களும் பரபரப்பாக பத்திரிகையில் இடம்பிடித்ததே தவிர மூன்றாவது அணியால் முழுமையாக எதனையும் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராமதாஸின் தலைமையில் மூன்றாவது அணி அமைக்க எந்த ஒரு அரசியல் தலைவரும் தயாராக இல்லை என்பதே யதார்த்தம். என்றாலும் தனது இருப்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக மூன்றாவது அணி என்ற வார்த்தையை டாக்டர் ராமதாஸ் பிரயோகித்துள்ளார்.
மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீண் விரயமாகின. அட்டகாசமாக ஆரம்பமான மூன்றாவது அணி பற்றிய அறிக்கைகளும் அணி வகுப்புகளும் ஆரம்பத்திலேயே காணாமல் போயின. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு சவால் விடும் வகையில் மூன்றாவது அணி அமைக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தேர்தல் நெருங்கும் போது இடதுசும்ரிகளும் டாக்டர் ராமதாஸும் ஏதாவது ஒரு அணியில் ஐக்கியமாவார்கள்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/10/09

Friday, October 16, 2009

தீபாவலி



உங்கள்வீட்டில் தீபாவளி
எங்கள்வீட்டில் தீராதவலி

இந்த வசனத்தைதந்த நண்பர் சித்திக்காரியப்பருக்கு நன்றி

Monday, October 12, 2009

முறிந்ததுஅ.தி.மு.க. உறவுவெளியேறியது பா.ம.க



பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ஆகியோருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தியதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதும், உறவு கசந்த பின்னர் வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது புதிய விடயமல்ல. தலைவரின் விருப்பம் பொதுக் குழுத் தீர்மானம் என்ற பெயரில் வெளிவருவது வழமையான சம்பவங்களில் ஒன்று.
மேடைகளில் ஆக்ரோசமாகப் பேசி சூடான அறிக்கைகளை விடும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அன்னை சோனியாவின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறி பிரச்சினையில் இருந்து ஒதுங்கி விடுவார்கள்.
தமிழக முதல்வரிடம் சில பிரச்சினைகளின் முடிவைப் பற்றிக் கேட்கும் போது பொதுச் சபை கூடி முடிவெடுக்கும் என்பார். பொதுச் சபை கூட முன்னரே இதுதான் முடிவு என்று கோடி காட்டி விடுவார்.
விஜயகாந்தின் தீர்மானத்திற்கு அவரது கட்சியில் உள்ள அனைவரும் ஆமாம் போட்டு கட்டுப்படுவார்கள்.
ஜெயலலிதா என்ன கூறினாலும் காலில் விழுந்து பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்த இடது சாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை அன்புமணியும் வேறு சில தலைவர்களும் விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் வாயார வாழ்த்தி வரவேற்கும் ஜெயலலிதா, தேர்தல் முடிந்ததும் கண்டு கொள்ள மாட்டார் என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த விடயம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸுக்கும் அது தான் நடந்தது.
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலிருந்த இடதுசாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்தன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் வெளியேறினால் அக்கூட்டணியின் பலம் குன்றி விடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தது போன்று திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பலவீனமடையவில்லை. மாறாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முண்டு கொடுத்த வைகோவும், ராமதாஸும், இடதுசாரிகளும் படுதோல்வியடைந்தனர். இவர்களுடன் கூட்டணி சேர்ந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர் காடுவெட்டி குரு. டக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி உட்பட பலரின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரம்ன முருகானந்தத்தின் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸையும் அன்புமணியையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததே கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம்.
வன்னியர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது. சாதிப் பெயர்களில் அரசியல் கட்சிகள் செயற்பட முடியாது என்பதனால் வன்னியர் என்ற பெயர் இல்லாமல் வன்னியர் சமூகத்துக்காக பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி உதயமாகியது. வன்னியர் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால் அணி வகுத்து இருப்பதை உணர்ந்த திராவிட கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை விரும்பின. வன்னியரின் நம்பிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்ததனால் முன்னர் இருந்த மதிப்பும் மரியாதையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இப்போது இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் மிக மோசமாகக் குன்றியதால் அதனுடன் இணைவதற்கு எந்த ஓர் அரசியல் கட்சியும் இப்போதைக்கு தயாராக இல்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி இல்லாது தேர்தலில் தனித்து போட்டியிட்டு எந்த ஓர் அரசியல் கட்சியும் வெற்றி பெற முடியாது. பிரதான அரசியல் கட்சிகளின் வெற்றியை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது.
தலைவரின் புகழுக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறவை பாட்டாளி மக்கள் கட்சி முறித்துக் கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாதநிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தடுமாறுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸின் பிரதான எதிரிகளாக உள்ளனர். தமிழக நாடாளுமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு நடக்க உள்ளதால், அதுவரை கூட்டணி பற்றி சிந்திக்காது கட்சியைப் பலப்படுத்துவதற்கு டாக்டர் ராமதாஸ் முக்கியத்துவம் கொடுப்பார்.
பாரதிய ஜனதாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியன தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ளன. அவற்றுடன் கூட்டணி அமைத்து தனது மதிப்பை மேலும் குறைப்பதற்கு ராமதாஸ் தயாராக இல்லை. நாடாளுமன்றத்திலும், சட்ட சபையிலும் உறுப்பினர்கள் இருந்தால்தான் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும் என்ற உண்மையும் ராமதாஸுக்குத் தெரியும். ஆகையினால், தமிழக சட்ட மன்றத் தேர்தல் வரை எதிரணிகளை விமர்சிக்காது தனது கட்சியைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் அன்புமணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதனால் அக்கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் சாத்தியம் உண்டு. அதற்கு முன்னர் தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ராமதாஸிடம் உள்ளது. பிரமாண்டமான பேரணிகளும் கூட்டங்களும் நடத்தி, தனது பலத்தை பகிரங்கப்படுத்திய பின்னர் கூட்டணி சேர்வது பற்றிய அறிக்கையை ராமதாஸ் வெளியிடுவார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 11/10/09

Friday, October 9, 2009

கறைபடிந்த கனவான் விளையாட்டு

மினி உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகளால் கனவான் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் கறைபடிந்துள்ளதாக வெளியாகும் விமர்சனங்களினால் கிரிக்கெட்டின் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது. மினி உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும் பரிதாபமாக வெளியேறின. அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதியில் விளையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும்.

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்திடுவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பாகிஸ்தானின் வேகங்களுக்கு அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களான பிரட்லீயும், ஹரிஸும், முகம் கொடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதியி“ல பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இலகுவான பிடியை தான் தவறவிட்டதால் தான் பாகிஸ்தான் தோல்வியடைந்தது என்பதையும் பாக். அணித்தலைவர் யூனுஸ்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் செயற்பாடு சிறப்பாக இருக்கவில்லை.
இந்திய அணி அரை இறுதியில் விளையாடக் கூடாது என்பதனாலேயே அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்திய சூதாட்ட முகவர்களின் விருப்பத்துக்காக அரை இறுதியில் நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல் போட்டியிலேயே இந்திய அணியைப் புரட்டி எடுத்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி மினிக் கிண்ணத்தைப் பெறுவதற்கு தகுதியான அணி என்று நிரூபித்தது.
பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் மோதினால் சூதாட்டக் காரர்களுக்கு பலகோடி ரூபா நஷ்ட மேற்பட்டிருக்கும். அதøனாலேயே பாகிஸ்தான் விலை பேசப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் இதனை முற்றாக மறுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம்கோரி அணித்தலைவருக்கும், பயிற்சியாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சந்தேகப்பட்டிருப்பதால் தனது அணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அணித்தலைவர் யூனுஸ்கானின் கையில் உள்ளது.

பயங்கரவாதம், குண்டு வெடிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையை நீக்குமா அல்லது அப்படியே அமுக்கிவிடுமா என்பது விசாரணையின் பின்னர் தான் வெளி உலகத்துக்கு தெரியும்.

ரமணி

Sunday, October 4, 2009

ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதாமுந்துகிறார் விஜயகாந்த்


தமிழக அரசையும் மத்திய அரசையும் எதிர்த்து அரசியல் நடத்தும் விஜயகாந்த் தனது பலத்தை டில்லியில் காட்டி விட்டு திரும்பியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் பின்னரும் இலங்கையை மையப்படுத்தியே தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.
இலங்கையின் கடற்படையினரால் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தியது. தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு இலங்கைப் பிரச்சினையையே எதிர்க்கட்சிகள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன.
தமிழக அரசையும் மத்திய அரசையும் எதிர்த்து தனது பலத்தைக் காட்டுவதற்கு டில்லியில் விஜயகாந்த் நடத்திய போராட்டம் அவருக்கு ஓரளவு பலனைக் கொடுத்துள்ளது. கச்சதீவை இலங்கைக்கு கையளித்ததையும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதையும் கண்டித்தே டில்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், த. பாண்டியன், வரதராஜன் போன்ற தமிழகத் தலைவர்களைப் பார்த்த டில்லியின் ஊடகங்கள் விஜயகாந்த் என்ற புதிய தலைவரையும் பார்த்து வியந்தது. டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக கட்சி தொண்டர்கள் விமானத்திலும் ரயிலிலும் சென்றனர்.
டில்லியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தனது பலத்தைக் காட்டுவதற்கு இந்தப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பாவித்துள்ளம்ர் விஜயகாந்த். தமது தலைவர் டில்லி வரை சென்று போராட்டம் நடத்தினார் என்று கட்சித் தொண்டர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்ய வேண்டிய பணிகளை விஜயகாந்த் செய்து வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் முக்கியமான கட்சியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பு நடவடிக்கையை மந்தமாக்கியுள்ளது. அந்த இடத்தைப் பிடிப்பதற்கு விஜயகாந்த் முயற்சி செய்கிறார். மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினையை டில்லியிலே அரங்கேற்றியதன் மூலம் தேசிய அளவில் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததைக் கண்டித்து டில்லியில் விஜயகாந்த் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினால் அவருடைய கட்சித் தொண்டர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் சக்தியாக விஜயகாந்த் விளங்குவதால் அவருடைய பேரம் பேசும் சக்தி அதிகரித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டையும் புறந்தள்ள வேண்டும் என்ற எண்ணம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் உள்ளது. முதல்வர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விமர்சித்து அரசியலில் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தும் விஜயகாந்த்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
இந்திய மத்திய அரசின் தோழமைக் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக இருக்கின்றனர். காங்கிரஸின் தயவில் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. தமிழக அமைச்சராக வலம் வரவேண்டும் என்று விரும்பும் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
காமராஜரின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் அமுல்படுத்துவோம் என்று மேடைதோறும் காங்கிரஸ் கட்சி முழக்கமிடுகிறது. ராகுல் காந்தி தமிழகத்தின் மீது அக்கறை செலுத்துவதனால் இளைஞர்கள் உற்சாகமாக உள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க கட்சியின் உதவியின்றி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையினால் தாம் அமைச்சராவதற்காக விஜயகாந்தை தமிழக முதல்வராக்கலாம் என்று கருதுகின்றனர்.
தமிழக காங்கிரஸின் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களின் பணிகள் இளைய தலைவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறன்றன. தனக்குப் பின்னர் துணை முதல்வராக இப்போது பதவி வகிக்கும் ஸ்டாலின் முதல்வராகும் போது அவருக்கு உறுதுணையான அமைச்சரவையையும் அமைப்பதற்காக இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.
அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழக அரசு ஒரு வருடமாகக் கொண்டாடியது. கட்சிப் பெயருக்கு முன்னால் அண்ணாவின் பெயரை ஒட்டிக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா முதல்வர் கருணாநிதியின் புகழ்பாடும் விழாவாக நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தும் விழாக்களையும் போராட்டங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கொடாநாட்டில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்.
கொடாநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு அறிக்கைவிடும் ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை மாற்றுகிறார்.
திருச்செந்தூர் சட்ட சபைக்கான தேர்தலை தமிழகம் எதிர்நோக்கி உள்ளது. திருச்செந்தூர் இடைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரைத்துள்ளது. தமிழக அரசை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலையில் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றியைப் பெறும் சாத்தியம் உள்ளது.
ஜெயலலிதாவின் அஞ்ஞம்தவாசமும், களை எடுப்பும் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றன
வர்மா
வீரகேசரிவார்வெளியீடு 04/10/09