Monday, January 1, 2018

புஷ்வாணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு

இந்திய அரசியலைப் பிரட்டிப் போட்ட வழக்குகளில் மிக முக்கிய வழக்கான 2ஜி  ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து  குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வழங்கப்பட்டது.

எமஜென்சி கால வழக்கு, போபஸ் பீரங்கி  ஊழல் வழக்கு என்பன தேர்தல் காலத்தில் துருப்புச்சீட்டாக  இருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைக் கொடுத்தன. அதேபோன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றிய வழக்கு தேசிய ரீதியில் காங்கிரஸையும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேர்தலில் தோற்கடித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை மாட்டிவிட்ட சுப்பிரமணியன் சுவாமிதான் 2ஜி வழக்கின் பிதாமகன். தனது அரசியல் எதிரிகளை வழக்குகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் சுப்பிரமணியன் சுவாமி பின்னர் ஜெயலலிதாவுடன் இணக்கமாகப் போனார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தள்ளியே வைத்திருக்கிறது. மிகச்சிறந்த சட்ட வல்லுநர், சட்டத்துறை விரிவுரையாளர் என்ற பெயருடன் பவனிவரும் சுப்பிரமணியன் சுவாமி  செய்யும் அரசியலும் மாதம் சம்பந்தமான கருத்துக்களும் அவருக்குக் கரும் புள்ளிகளாக உள்ளன.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தொலை தொடர்புத்துறை அமைச்சராகத் தயாநிதிமாறன் பதவி வகித்தார். அவருடைய குடும்பப் பத்திரிகையான தினகரன் நடத்திய கருத்துக் கணிப்பால் மாறன் குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது   தயாநிதி மாறன் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தபின்னர். ஆர்.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சரானார் அப்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம்  எனப்படும் அலைக்கற்றை ஏலம்  நடைபெறுவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டது. ஏலம் நடத்துவதைத் தவிர்த்து முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஆர்.ராசா கடைப்பிடித்தார்.அந்தக் கொள்கைதான் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் வரலாற்றில் சுனாமியாகச் சுழன்றடித்தது 

அமைச்சர் ஆர்.ராசாவின் இந்தக் கொள்கைக்கு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும்  ஒப்புக்கொள்ளவில்லை. ராசா விளக்கமைத்த பின்னர் அரைகுறை மனதுடன் அனுமதியளித்தனர். முதலில் வருபவர்களுக்கு முதலிடம்  என்ற கொள்கை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வகுக்கப்பட்ட கொள்கை. 2008  பெப்ரவரி முதலில் வந்த  நிறுவனங்கலுக்கு  2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது.அவற்றை வாங்கய வேறு  நிறுவனங்களுக்கு விற்பனை செய்து இலாபம் சம்பாதித்ததாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் என்ஜிஓ நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியது. ஜூன் மாதம் சிபிஐ விசாரணை ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் காப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்  இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.அதற்கு ஆதரமாக அமைச்சர் ராசாவுடன் நீரா ராடியா உரையாடிய தொலைபேசி  ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை பேசும் பொருளாக்கின. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சிக்கல் உண்டானது .இந்த நேரத்தில்தான் சுப்பிரமணியன் சுவாமி களத்தில் இறங்கினார். தன்னுடைய அரசியல் எதிரிகளான காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்தத்திட்டமிட்டார். அமைச்சர் ஆர்.ராசாவின் மீது  பிரதமர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஹைகோட்டில் 2010 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18 ஆம்திகதி  வழக்குத் தாக்கல் செய்தார்.அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. விடாக்கண்டன் கொடாக்கண்டனான சுப்பிரமணியன் சுவாமி செப்டம்பர் 24 ஆம் திகதி சுப்ரீம்கோர்ட்டை அணுகினார். அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது.  

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் உள்ள முறைகேட்டில் அமைச்சர் ஆர். ராசாவுக்குத் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது என அமுலாக்கத்துறை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. மத்திய கணக்கு தணிக்கைத் துறையும் பங்குக்கு ராசாவின் மீது குற்றம் சுமத்தியது. அமைச்சரின் முறையற்ற செயலால்  அரசுக்கு 1.76 இலட்சம்  கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமான இழப்பு என்ற செய்தி இந்தியாவையே  உலுக்கியது. இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. .  அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகம் ,நிதி அமைச்சு, தொலை தொடர்புத்துறை ஆகியவற்றின் மீது விமர்சனங்கள் எழுந்தன பாரதீய ஜனதாக் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தமது அரசியல் எதிரிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தன.

மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸையும்  தமிழகத்தி ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நெருக்கடி முற்றியது. 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அமைச்சர் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தார். 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி   ஆர். ராசா கைது செய்யப்பட்டார். கலைஞர் தொலைக் காட்சிக்கு 200 கோடி ரூபா  கைமாறப்பட்டது, கனிமொழி கைது, கருணாநிதியின் மனைவியும் கனிமொழியின் தாயாருமான தயாளுஅம்மாள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது போன்றவற்றால் இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில்  திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் குற்றம் செய்தது. காங்கிரஸுக்கு இதில் சம்பந்தமில்லை என்ற பார்வையே மேலோங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தை  முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது. கருணாநிதியையும் அவருடைய தலமையில் உள்ள கட்சியையும் முடக்குவதற்கு 2 ஜி அலைக்கற்றை விவகாரம் கைகொடுத்தது.  ராசாவும் கனிமொழியும் சிறைக்குச்சென்றது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமானது. அவர்களைப் பிணிஅயில்  வெளியே விட்டால் ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. 18 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் பிணையில் வெளிவந்த ராசா, நீதிமன்றத்தில் மூலம்  தனக்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும்  சேகரித்தார்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அஸ்திரமாக 2ஜி வழக்கை நோக்கினர். ஆனால், சட்ட வல்லுனர்களான ராசாவுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையிலான கெளரவப் பிரச்சினையாக வழக்கறிஞர்கள் கருதினர்.  கிரிமினல்வழக்கறிஞரான ராசா, தனக்காக தானே வாதாடினார். அவருடைய குறுக்குக் கேள்விகளுக்குப் ப்திலளிக்கமுடியாமல் சாட்சிகள் தடுமாறினர்.  சாட்சிக் கூண்டில் ஏறி ராசா சாட்சியமளித்தார்.  அரச தரப்பு வழக்கறிஞர்களால் சாராவை சிக்க வைக்க முடியவில்லை. யானையைத் தடவிப்பார்த்த குருடர்களின் கதையை கூறி ராசா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் விடுதலை செய்த  நீதிபதி ஒரே ஒரு ஆதாரத்துக்காக ஏழு வருடங்கள் காத்திருநததாகத் தெரிவித்தார். அத்துடன் முடக்கப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களையும் விடுவித்தார்.

No comments: