Wednesday, October 17, 2018

ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு


அரசியல்வாதிகள் மீது   சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். சிலர் வழக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.  தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் ஊழல் புகார் கைகொடுக்கிறது. மிக நீண்ட கால நீதி விசாரணையின் பின்னர் சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதில் சம்பந்தபப்ட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தி தப்பியவர்களும் உண்டு. பொய்யான புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சம்பவங்களும் உண்டு.

முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறத்தண்டனை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது தமிழகம். இப்போது முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. ஊழல் புகார் எல்லம் பொய் அரசியல் பழிவாங்கல் என  அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்  உள்ளன. தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் நிலுவையில் உள்ளது. அதற்கான பனம் கொடுக்கல் வாங்கலுல் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட முன்னாள் இந்நாள் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அதற்காக விஜயபாஸ்கர்  அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கைச்  சந்தித்து நான் குற்றமற்றவனென்பதை நிரூபிப்பேன் என்கிறார். அமைச்சர் வேலுமணி மீதும்  புகார் உள்ளது. அதிகார துஸ்பிரயோகம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 3000 பக்க அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது. இவற்றை சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவிக்கிரார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின்  கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் 4800 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாலர் எஸ்.ஆர்.பாரதி இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அந்தப் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை ஹைகோட்டில் புகார் செய்தார் பாரதி.

நெடுஞ்சாலை சீரமைக்கும் ஒப்பந்தங்களை, எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர், நண்பர்கள், பினாமிகள்  பெற்றதால் 4800 கோடி ரூபா ஊழல் நடந்ததாக பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை என முதல்வரின் கீழுள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை  நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனி ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பதவிக்காக எடப்படியும் பன்னீரும் முட்டி மோதுகிறார்கள். முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையில் பனிப்போர் நடைபெறுகிறது.  அண்ணா திராவிட முன்னேற்றக் க்ழக அதிகாரத்தைக் கைப்பற்றும்போட்டியில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் தற்காலிகமாக இணைந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை  இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான தினகரனைச் சந்தித்த விவகாரம் பகிரங்கமானதால் பன்னீர் பரிதவிக்கிறார். தனுடன் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தினகரனை, பன்னீர்ச்செல்வம் சந்தித்த விவகாரம் எடப்பாடிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் புகார்  எடப்பாடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

பாரதீய ஜனதாவின்  ஆதரவில் இயங்கும் தமிழக அரசுக்கு நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.

No comments: