Friday, October 26, 2018

எடப்பாடியைக் காப்பாற்றிய நீதிமன்றம்



ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ஆட்டம் காணத்தொடங்கியது. கட்சித் தலைமையைப் பிடிப்பதற்கும் தமிழக  முதல்வராவதற்கும் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான சசிகலா முயற்சி செய்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றதால் அது பலனளிக்கவில்லை. தர்ம,  அதர்ம யுத்தங்களினால் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.தினகரன், கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தனக்கு விசுவாசமான தமிழக சட்டசபை உறுப்பினர்களின் உதவியுடன் முதல்வர் கதிரையில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்கு தினகரன் எடுத்த முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்பினால் தகர்ந்தது
.
முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது. முதலமைச்சர் கதிரையில் இருந்து பன்னீரை இறக்கிவிட்டு தான் ஏறி அமர்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்ச்செல்வம். சட்டப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்காக எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல் புகார்களுடன் நீதிமன்றத்தின் துணையை நாடுகிறார் ஸ்டாலின். பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் மத்தியில் எடப்பாடியை அகற்றியே தீருவேன் என அதிரடி காட்டுகிறார் தினகரன். எந்த நேரமும் புன் சிரிப்புடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,   சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு  அரசியற் காய்களை அகற்றி தனது பதவியைக்  காப்பாற்றுகிறார்.

அரசியல் அரங்கில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்காக தினகரனின் விசுவாசிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன் உச்சக் கட்டமாக அன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரான வித்தியாசாகர் ராவைச்  சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை. அவருக்குப் பதிலாக வெறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  நாங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கூறிய  19 சட்டசபை உறுப்பிர்களின் செயலால் எடப்பாடி கடும் சீற்றமடைந்தார்.  விளக்கம் கோரி 19 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவரலில் கமபம் தொகுதி உறுப்பினர் ஜக்கையனின் விளக்கம் ஏற்றுக்கொண்ணப்பட்டது ஏனைய  18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக சபாநாயகர் தனபாலின் உத்தரவால் 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 18  ஆம்  திகதி முதல்  18 தொகுதிகள் காலியாகின. அதை எதிர்த்து மறு நாள் தினகரன் தரப்பு  உயர் நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் இந்திரா பார்னஜி, சிந்தர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதிருப்தியடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் உச்ச நீதின்றத்தை நாடினர். 18 உறுப்பிஅர்களின் தகுதி நீக்கம் செல்லும்  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடியின் பதவி காப்பாற்றப்பட்டுவிட்டது.

எடப்பாடியை எதிர்த்ததனால் 18 உறுப்பினர்கள் பதவி இழந்தனர். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தொகுதிகளை எட்டியும் பார்க்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும் தொகுதிப்பக்கம் செல்லவில்லை.  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அந்தத் தொகுதி மக்களின் மனநிலை  தெரிந்துவிடும். கருணாநிதி, போஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய எடப்பாடியின் அரசு ஒரே ஒரு மேலதிக உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல்  நடந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் வெற்றி பெறும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவே பிரதான காரணி. ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமற்றது என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல்   நிரூபித்துள்ளது. ஆர்கே நகர் போன்றதொரு இன்னொரு வெற்றியை தினகரனால் செய்துகாட்ட முடியாது. எடப்பாடி, தினகரன் ஆகிய இருவருக்கும் 18 தொகுதிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துத் தொகுதிகளும் இருவருக்கும் கெளரவப் பிரச்சினையானவை. ஜெயலலிதா என்ற நட்சத்திரம் இல்லாமல் இருவராலும்  வெற்றியைப் பெறமுடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது,  இடைத் தேர்தலைச் சந்திப்பது, வழக்கை எதிர்கொண்டு இடைத்தேதலைச் சந்திப்பது ஆகிய மூன்ரு தெரிவுகள் தினகரனின் முன்னால் உள்ளன. தினகரனின் முடிவைப் பொறுத்துத்தான் தமிழக அரசியலின் அடுத்த காய் நகர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிரடி காட்டாமல் அமைதியாக அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கும் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.  20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு எடப்பாடிக்குப் பாதகமாகத்தான் அமையும் ஆகையால் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார்.

No comments: