Thursday, August 5, 2010

ஓய்ந்தது சுழல்


அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்புபிரேமதாஸ மைதானத்தில் உருவான முரளி எனும் சுழல் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி காலியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் அமைதியடைந்தது.முரளி என்ற சுழல் அகோரப் பசிக்கு 800 விக்கெட்டுகள் இரையாகின.முரளிதரன் அறிமுகமான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்தது. இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்ற முரளி தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.முரளி என்ற பெயரைக் கேட்டாலே எதிரணி வீரர்கள் அச்சத்தில் உறைவார்கள். அடித்தாடும் வீரர்களும் முரளியின் பந்தை சரியாகக் கணித்த பின்னரே அடிக்கத் தொடங்குவார்கள். முரளியின் பந்துக்கு அடிப்பதா? தடுத்து ஆடுவதா? எனத் தடுமாறும் வீரர்கள் ஆட்டமிழந்துவிடுவார்கள். இலங்கைக்கு எதிராக விளையாடும் நாடு ஓட்டங்களைக் குவிக்கும் போது இலங்கை ரசிகர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி முரளி பந்து வீசவில்லையா என்பதாகும். முரளி பந்து வீச ஆரம்பித்தால் எதிரணி விக்கெட்கள் வீழ்ந்து விடும் அல்லது ஓட்ட எண்ணிக்கை குறைந்து விடும். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி அதிகளவு வெற்றிகளைப் பெறாத காலத்திலேதான் கிரிக்கெட் அரங்கினுள் முரளி புகுந்தார். இலங்கை கிரிக்கெட் அணியை வெற்றித் தேவதையின் பக்கம் அழைத்துச்
சென்றதில் முரளியின் பங்கு முக்கியமானது. 800 விக்கெட் என்ற சாதனையைத் தொடுவதற்கு முரளி கடந்து வந்த பாதை மிக மிகக் கரடுமுரடானது.
நிறபேதம், இன பேதம் வளர்ந்துள்ள அவுஸ்திரேலிய மண்ணில் அவர்பட்ட அவமானங்கள், சாதனைபுரிய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தின.
கிரிக்கெட் அரங்கில் சுழல் பந்து வீரர்கள் சாதனைகளைப் செய்த போதும் துஷ்ரா என்ற மாயச் சுழலை கனகச்சிதமாக வீசி விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன் மட்டுமே. துஷ்ராவை அறிமுகப் படுத்தியவர் பாகிஸ்தான் முஷ்டாக் அகமது. துஷ்ராவை நேர்த்தியாகக் கையாண்டவர் முரளி. கையைச் சுழற்றி முழியைப் பிதுக்கி எதிரணி விக்கெட்டுகளை துவம்சம் செய்த சுழல்பந்து வீச்சு சக்கரவர்த்திக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் 1995 96 ஆம் ஆண்டு புயல் ஒன்று வீசியது. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று நடுவர் டேரர் ஹேர் குற்றம் சாட்டினார்.
பந்து வீச்சுப் பரிசோதனையின் பின்னர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் முரளிதரன். 1998 99 ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவில் றோய் எமர்சன் என்ற நடுவர் முரளிதரனின் பந்து வீச்சில் குற்றம் பிடித்தார். இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையின் போதும் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தார்முரளிதரன்.
2004 ஆம் ஆண்டு இது போன்ற சர்ச்சை கிளம்பியது. பிஷன்சிங்பேடி, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் போன்றோரும் முரளிதரனின் பந்து வீச்சு தவறு என்று விமர்சித்தார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளினால் முரளியின் சாதனைக்குத்தடை போட முடியவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் முரளிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போது அன்றைய அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க சீறி எழுந்தார். முரளிதரன் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக மைதானத்தில் நடுவருடன் வாதிட்டார். அர்ஜுன ரணதுங்க ஆவேசப்படாது மௌனமாக இருந்திருந்தால் முரளியின் கிரிக்கெட் பயணம் அன்றே முடிந்திருக்கும். முரளியின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த பெருமை அர்ஜுன ரணதுங்கவைச்சாரும். இலங்கை அணியின் கிரிக்கெட் வீரனுக்கு ஏற்படும் அவமானம் இலங்கை நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என்பதை உணர்ந்த அர்ஜுன இலங்கையின் மதிப்பை உயர்த்தினார்.
1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐந்து தலைவர்களின் கீழ் முரளி விளையாடியுள்ளார். அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, திலகரத்ன, அத்தபத்து, மஹேலஜயவர்த்தன, சங்கக்கார ஆகிய ஆறு தலைவர்களின் வெற்றிக்கு முரளி பெரும் பங்காற்றியுள்ளார். வேர்ள்ட் ஙீஐ அணியில் ஸ்மித்தின் தலைமையில் விளையாடினார். ஐ. பி. எல். போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பலவற்றின் உரிமையாளரான முரளி எனும் கறுப்பு முத்தைக் கண்டு மெருகேற்றியவர் கிரிக்கெட் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ, சென் அன்ரனீஸ் பாடசாலை மைதானத்தில் ரென்னிஸ் பந்தில் பாடசாலைச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் பார்வை முரளிதரனின் மீது படிந்தது. முரளி பந்து வீசும் பாணியை அவதானித்த சுனில் பெர்னாண்டோ, முரளிக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார்.
சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் சிறப்பாகப் பந்து வீசிய சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன எனக் கேட்டார் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ.அந்தச் சிறுவன் முரளிதரன் என்று பதிலளித்தான். கனிஷ்ட கிரிக்கெட் அணியில் விளையாடுகிறாயா என்று பயிற்சியாளர் கேட்ட போது முரளிதரன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. தனது எதிர்காலம் கிரிக்கெட்தான் என்பதை முரளிதரன் அப்போது உணரவில்லை. பந்து வீச்சில் தன்னிடம் இருக்கும் திறமை பற்றி முரளி என்றுமே அறிந்திருக்கவில்லை.திறமையான ஒரு வீரனை இழக்கக் கூடாது என்று
முடிவெடுத்த பயிற்சியாளர் முரளியின் பெற்றோரிடம் சென்று முரளியின் திறமையைப் பற்றிக் கூறி கனிஷ்ட கிரிக்கெட் அணியில் இணைத்தார். வேகப்பந்து வீச்சையே முரளிதரன் தெரிவு செய்தார். அவரை சுழல்பந்து வீச்சாளராக மாற்றியவர் பயிற்சியாளர் சுனில் பெர் னாண்டோ.
அன்று ஆரம்பித்த சுழல் இன்றுவரை ஓயவே இல்லை. டெஸ்ட்டில் முரளிதரன் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் எதிரணிகளை அச்சுறுத்தத் தயாராகஇருக்கிறார்.
800 விக்கெட்களைப் பெறுவதற்கு எட்டுவிக்கெட்டுகள் இருக்கையில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார் முரளிதரன். முரளி அவசரப் பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடினால் 800 என்ற இலக்கு இலகுவானது என்ற எண்ணம் ரசிகர்களிடம்
ஏற்பட்டது. முரளியின் தன்னம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. 800 ஆவது விக்கெட்டை முரளிக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் போராடினர்.ஒரே ஒரு விக்கெட் கிடைத்தால் 800 என்ற இலக்கை அடைந்து விடலாம் என்ற உத்வேகத்துடன்முரளி களத்தில் நின்றார்.
இந்திய வீரர்கள் முரளியிடம் அகப்படக் கூடாது என்ற உறுதியுடன் விளையாடினர். உலகமே பதைபதைப்புடன் பார்த்திருந்த நீண்ட போராட்டத்தின் பின் 800ஆவது விக்கெட்டைப் பெற்று இலங்கையின் டெஸ்ட் வெற்றியை உறுதி செய்தார் முரளிதரன். லாரா, டெண்டுல்கர் ஆகியோர் பிரபல்யமாக இருந்தவேளை முரளி அவர்களை எதிர்கொண்டõர். சச்சின் டெண்டுல்கரை ஒன்பது தடவை ஆட்டம் இழக்கச் செய்தார். சச்சினை அதிக தடவை ஆட்டம் இழக்கச் செய்தவர் முரளி. லாரா, டெண்டுல்கர், ஷேவக் ஆகிய மூவருமே முரளியின் சுழலுக்குக் கட்டுப்படாது அவ்வப்போது தமது துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் டெஸ்ட் தொடர்களின் போது ஐந்து போட்டிகள் விளையாடப்படுகின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களிலேயே விளையாடுகின்றன. தனக்குக் கிடைத்த மிகக் குறைந்தளவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரும் நெருங்க முடியாத உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளார் முரளிதரன்.முரளிக்கு அடுத்தது யார் என்று கேட்டால் யாராலும் பதிலளிக்க முடியாது. எனக்கு அடுத்தது ஹர்பஜன் சிங் என்று முரளி கூறியுள்ளார். இன்னும் 10 வருடங்கள் விளையாடினால்தான் ஹர்பஜனால் முரளியின் இலக்கை நெருங்க முடியும். டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார் முரளி. முரளிக்குப் பின்னர் உள்ள ஷேன்வோர்ன், கும்ப்ளே, மக்ராத், வாஸ், கபில்தேவ், ஹட்லி, பொலக், வசீம் அக்ரம், அம்புரூஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். தென்னாபிரிக்க வீரரான நிதினி 390 விக்கெட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். நிதினி, முரளியின் சாதனையை நெருங்குவது மிகவும் சிரமமான காரியம். புதிய பந்து வீச்சாளர்கள் முரளியின் சாதனையை பார்த்து வியக்க முடியுமே தவிர நெருங்குவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் முரளி மிகவும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது முரளிக்கு எதிரான குற்றச்சாட்டு. அமைதியான முறையில் பல சமூக சேவை செய்துள்ளார். ஆனால் அவற்றைப் பிரபலப்படுத்தவில்லை. சேர்.பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் தமது தோளில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னர், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முரளியை தோளில் சுமந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டெஸ்ட்டில் அமைதியடைந்த சுழல் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் விக்கெட்களை கபளீகரம் செய்ய காத்திருக்கிறார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

1 comment:

Sweatha Sanjana said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .