Thursday, July 14, 2016

சரித்திரமாகிய சம்பவம்

மனம் நிறைந்த கனவுகளுடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த சுவாதி என்ற இளம்பெண்ணை ஒரு வாலிபன் வெடிப்படுகொலை செய்தான். கொடூரமாக நடைபெற்ற இச்சம்பவம், ஒருசிலமணி நேரத்தினுள் சரித்திர முக்கியத்துவம் மிக்கதாக மாறிவிட்டது.  ஒர் இளம் பெண்ணை வாலிபன் வெட்டிச்சாய்த்தது பரபரப்பான செய்தியாக மாறியது. கொலைக்கான காரணம் எது எனத் தெரிவதற்கு முன்பே காதல் பிரச்சினையால் நடைபெற்றகொலை என ஒட்டுமொத்தமாக முடிவு  செய்யப்பட்டது. கடந்த மாதம் 24 ஆம் திகதி பொழுது புலரும்  வேளையில் ஓர் இளம் பெண்ணின் வாழ்வு அரிவாளினால் முடிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதி என அடையாளம் காணப்பட்டாள். அவளைக்     கொலை செய்த இளைஞர் யாரெனத் தெரியாது  பொலிஸார் தடுமாறினர். கொலைகாரனைப் பிடிப்பதற்காக சிறப்புப் பிரிவுகளை பொலிஸார் அமைத்தனர். ஊடகங்கள் பரபரப்பான செய்திகளுக்காக உள்ளதையும் இல்லாததையும் இட்டுக்கட்டி செய்திகளைப் புனைந்தன.  இளம் பெண்ணின் வாழ்க்கை  கொடூரமாகப் பறிக்கப்பட்டது. அவளது பெற்றோரின் கனவு சிதைக்கப்பட்டது.  இவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காது.  தலித் பெண் கொல்லப்படும் போது சினந் தெழுபவர்கள் எங்கே? பிராமணப் பெண்ணை முஸ்லிம் கொலை செய்துவிட்டான் என்று சாதி ரீதியகவும் மத ரீதியாகவும் பிரசாரம் செய்யப்பட்டது. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் உள்ளது. மத சார்பற்ற நாடு  என்பது தேர்தல் காலங்களில் மட்டும் உரக்கச் சொல்லும் கோஷம்.


சுவாதியைக் கொலை செய்தவன் அவளது கைத் தொலை பேசியையும் அபகரித்துச்சென்றுவிட்டான். அதன்  காரணமாக சுவாதி கடைசியாக யாருடன் கதைத்தாள் என்ற விபரம் தெரியாது பொலிஸார் குழம்பினர் எதிர் பாராத  நேரத்தில் நடைபெற்ற கொலையால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சியில் இருந்து விடுபடமுன்னர் கொலைகாரன் தப்பி ஓடிவிட்டான். சிலர் அவனைத் துரத்தினர். என்றாலும் அவனைப்பிடிக்கமுடியவில்லை. ரயில் நிலையத்தில் பாது காவலர் யாரும் இருக்கவில்லை. ரகசிய கண்காணிப்பு கமரா எதுவும் பூட்டப்படவில்லை. ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள வீட்டிலும் வீதியிலும் இருந்த  சிசிரிவி கமரா மூலம் முதுகிலே பாக்கை சுமந்து கொண்டு கட்டம் போட்ட சட்டையுடன் ஒரு உருவம் வெளியேறியது தெரிய வந்தது. அந்த உருவம் தான் கொலைகாரன் என கொலையை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் அவனை அடையாளம் காணமுடியவில்லை.

வீட்டையும் நிறுவனத்தையும் பாதுகாப்பதற்கு சிசிரிவி கமராவை பொருத்துங்கள் என பலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சுவாதியை கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றவனை அந்த சிசிரிவி கமராவால் சரியாக இனம் காண முடியவில்லை.  பொலிஸுக்கு நெருக்குதல் அதிகரித்தது. ஊடகங்கள் தமக்குத்தெரிந்த கதைகளை ஜோடித்தன.    கொல்லப்பட்ட பெண்ணை ஒரு இளைஞன் அடித்ததை சிலநாட்களுக்கு முன்னர்  தான் பார்த்ததாக ஒருவர் வாக்கு மூலம் கொடுத்தார். அவன் அடிக்கும் போது எதிர்த்து ஒரு வார்த்தையும் அவள்  பேசவில்லை என்றும்  அவர் தெரிவித்தார். காதல் பிரச்சினைதான் கொலையில் முடிந்ததாக சிலர் முடிவு செய்தனர்.

ரயில் நிலையத்தில் சுவாதியை ஒருவன் அடித்ததை பலர் பார்த்திருப்பார்கள். அன்று யாராவது ஒருவர் தட்டிக் கேட்டிருந்தால் சிலவேளை இன்று சுவாதி உயிரோடு இருந்திருப்பாள்.  தன்னை யாரோ பின்தொடர்வதாக தனது நண்பர்களிடம் சுவாதி கூறி இருக்கிறாள். அவனைத் தட்டிக்கேட்க முற்பட்ட நண்பர்களை சுவாதி தடுத்து நிறுத்தினாள். கோயில் பூசகரும் இதனை உறுதிப்படுத்திஉள்ளார்.தன்னைப்  பின்தொடர்பவனை சமாளிக்கலாம் என்ற அசட்டுத் துணிச்சலே சுவாதியின் உயிருக்கு எமனானது. சுவாதியைப் பின் தொடர்ந்தவனை தட்டிக் கேட்டிருந்தால் அவன் பயத்தில் விலகி இருப்பான். அவனுடைய வன்மம் கொலைவரை சென்றிருந்தாலும்  கொலைகாரன் யாரென உடனடியாக அடையாளம் கண்டிருக்கலாம்.  சுவாதியின் கொலை இளம் பெண்களுக்கு  ஒரு பாடமாக வேண்டும். முன்பின் தெரியாத ஒருவர் தொல்லை கொடுத்தால் துணிச்சலுடன் தட்டிக் கேட்க வேண்டும். அல்லது உறவினர் நண்பர்களிடம் கூறி எச்சரிக்கைப்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வேளையில் பொலிஸில் புகார் செய்யத் தயங்கக்கூடாது. சுவாதிக்கு நேர்ந்த   முடிவு இன்னொரு பெண்ணுக்கு வரக்கூடாது.

சுவாதியைக் கொலை செய்த சந்தேகத்தில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.   சுவாதியைக் கொலை செய்ததை  ராம்குமார் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் அறிவித்தனர். சுவாதியின் கொலை  பற்றிய மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டது என பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். அவர்களுடைய நெம்மதி நெடுநேரம் நீடிக்கவில்லை. ராம்குமார் கைது செய்யப்பட்டபின் பொலிஸாருக்கு நெருக்கடி  ஆரம்பித்தது. 

 சென்னையில் ராம்குமார் தங்கி இருந்த மேன்சனில் உள்ள ஒருவர் கொடுத்த தகவலின் மூலம் ஒரு வாரமாக ராம்குமாரைப் பின்தொடர்ந்த பொலிஸார் நள்ளிரவில் அவரைக் கைது செய்தனர். பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடிய ராம்குமார் தந்து கழுத்தை பிளேட்டால் அறுத்ததாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது. ராம்குமாரை பொலிஸ் கைது செய்த முறை தவறானது என்ற குரல் பலமாக ஒலித்தபோது அவரது குடும்பத்தினரும் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறத்தொடங்கிவிட்டனர்.

ராம்குமார் குற்றவாளி என்பதற்கான ஆதரங்களை பொலிஸார் மிக வேகமாகச் சேகரிக்கும் அதேவேளை ராம்குமார் கொலைசெய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை சிலர் முன்வைக்கின்றனர். நீதிமன்றத்தில் கேட்கவேண்டிய கேள்விகளை சமூகவலைத் தளங்களிலும் இணைய தளங்களிலும் பதியப்பட்டுள்ளன.  சுவாதி கொலையில் முக்கியபுள்ளி இருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக அவசர அவசரமாக ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என சிலர் குரல் கொடுக்கின்றனர்.

ராம்குமார் தனது கழுத்தை அறுத்த படம் கசியவிடப்பட்டது.  சந்தேக  நபரை அடையாள அணிவகுப்பில்  நிறுத்துவதற்கு முன்னர் அவரின் படத்தை ஊடகங்களுக்குக் கொடுத்தது மிகப்பெரிய தவறு. ராம்குமாரின்  தாயையும் அக்காவையும் துரத்தித் துரத்திப் படமெடுத்து ஊடகங்களில் பகிரங்கப்படுத்தினர். இது ஊடக தர்மம் அல்ல.  இது ஒருவகையான ஊடக வன்செயல். ஊடகங்களுக்கு முகத்தைக் காட்ட மறுத்த ராம்குமாரின் சகோதரியும் தகப்பனும் பின்னர் துணிவுடன் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறினர. ராம்குமார் கைது செய்யப்பட்ட்டபோது பயன்திருந்தவர்களுக்கு யாரோ பின்னணியில் இருந்து துணிச்சலைக் கொடுத்துள்ளனர்.

ராம்குமாருக்கு பிணை வழங்கக்கோறி  வழக்கறிஞர்  ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். ராம்குமாரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் அனுமதி பெறாது தன்னிச்சையாக களம் இறங்கிய வழக்கறிஞர் ஒரு அரசியல் கட்சியில் பிரதிநிதி என்ற உண்மை வெளியானதால் அவர் பின்வாங்கிவிட்டர். ராம்குமாரின் சார்பாக அவரது ஊரைச் சேர்ந்த  வழக்கறிஞர் ஆஜரானார். உண்மை கண்டறியும் குழுவும் ராஜ்குமாருக்காக களம் இறங்கி உள்ளது. ராஜ்குமார் கொலை செய்யவில்லைஎன இவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.ராஜ்குமார் வைத் திறந்தால்  பல உண்மைகள் வெளிவரும் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். சுவாதியின் உறவினர்களும் நண்பர்களும் அவளைப்பற்றி மிக உயர்வாக கூறியுள்ளனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட அன்று தமிழகத்தில் 18    பேர்  கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களின் பார்வை சுவாதியின் மீது மட்டும் விழுந்துள்ளது.சுவாதிக்கு எதுவித களங்கமும் இல்லாது நீதி கிடைக்க வேண்டும்.

வர்மா 

No comments: