Wednesday, February 8, 2017

பொங்கி எழுந்த பன்னீரால் இரண்டாகிறது அ.தி.மு.க

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகம் ஏற்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எந்தவித முணுமுணுப்பும் இன்றி பன்னீர்ச்செல்வ‌ம்  முதலமைச்சரானார். ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வ‌ம் முதல்வராகியதால்  அவரது தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயல்பு நிலை மாறாது  இயங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக அரசியலுடன் எந்த வித தொடர்பும் இல்லாத சசிகலா நியமனமான போது உள்ளே ஏதோஒரு பூசல் இருப்பது போன்ற தோற்றப்பாடு தோன்றியது. உட்கட்சிப் பூசலுக்கான ஆதாரம் எவையும் வெளியில் தெரியவில்லை.
 

பன்னீர்ச்செல்வ‌த்தை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு சசிகலாவை  முதல்வராக்க வேண்டும் என பன்னீர்ச்செல்வ‌த்தின் அமைச்சரவையில் உள்ளவர்கள் பெட்டு கொடுத்தனர். சசிகலாவை  முதல்வராக்கி விட்டுத்தான் அடுத்த வேலை என  தம்பித்துரை  முழங்கினார்.பொறுமையின் சிகரமான பன்னீர்ச்செல்வ‌ம் அமைதியாக நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அரசியலுக்கு அப்பால் பன்னீர்ச்செல்வ‌த்தின் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் செய்கையல் ஆத்திரமடைந்தனர். சசிகலாவி முதல்வராக்க  நாள் குறித்தார்கள்.பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் டில்லிக்குச்சென்றதால்  சசிகலாவின்  பதவி ஏற்புவைபவம் தள்ளிப்போனது. இரண்டாவது  முறையும்  நாள்  குறித்து தடல் புடலாக ஏற்பாடு நடைபெற்றது.  வித்யா சாகர் ராவ் டில்லியில்  முகாமிட்டார். சந்தேகங்களும்  சட்டச் சிக்கல்களும் உண்மையும் பொய்யும் கலந்து பரவலானது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தமிழக மக்களும் சசிகலாவைக் கடுமையாக எதிர்த்தனர். இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் முதல்வர் கனவில் காய்களை நகர்த்தினார் சசிகலா. தமிழக முதலமைச்சர் என்ற கோதாவை மறந்து சசிகலாவின் முன்னால் பவ்வியமாக இருந்த பன்னீர்ச்செல்வ‌த்தின் சுயரூபம் சசிகலா தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது.என்னை மிரட்டி ரஜினாமாச்செய்ய வைத்தனர் என்ற  பன்னீர்ச்செல்வத்தின்  ஒரு சொல் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9   மணிக்கு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்னால் சுமார் முக்கால் மணிநேரம் மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் பன்னீர்ச்செல்வ‌ம் வழங்கிய பேட்டி உறக்கத்தில் இருந்த தமிழக மக்களைத் தட்டி எழுப்பியது.


 என்னை முதல்வராக்கி அவமானப்படுத்தினார்கள்.   முதலமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு  சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என எனது அமைச்சரவையில் உள்ளவர் பேட்டியளித்தார். இது பற்றி  முறையிட்டேன். தொலைபேசியில் அவரைக் கண்டித்ததாகக் கூறினார்கள்.  தொடர்ந்தும் இதேபோல செய்திகள் வெளியாகின. போன்ற பல குற்றச்சாட்டுகளை பன்னீர்ச்செல்வம் முன்வைத்தார்.  தனது மனதில் இருந்தவற்றை பன்னீர்ச்செல்வ‌ம் கொட்டியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகமானார்கள்.சசிகலாவின் குடும்பத்தை எதிர்க்கும் ஒரு தலைவனை எதிர்பார்த்திருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் முன்மொழிந்த பன்னீர்ச்செல்வ‌மா போர்க்கொடி  தூக்கினார் என்ற சந்தேகம் பலர் மனதில் உண்டாகியது. ஜெயலலிதா இறந்தபின்னர் களில் விழும் கலாசாரம் முடிந்துவிடும் என எதிர்பார்த்திருந்த  வேளையில் சசிகலாவின் காலில்  விழுந்து அக் கலாசாரத்தைத் தொடர்ந்த பன்னீர்ச்செல்வ‌ம், ஜெயலலிதாவின் சமாதியின் முன் சசிகலா முதல்வராவதற்கு முன்வைத்த  திட்டங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தினார்.. பன்னீர்ச்செல்வ‌த்தின் மனச்சாட்சி ஜெயலலிதாவின் சமாதிக்கு முன் பேசியதால் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஆனந்தமடைந்தனர்.  பன்னீர்ச்செல்வ‌த்தின் பேட்டியால் சசிகலா  தரப்பு விசனமடைந்தது.

பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பின்னால் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லக்கூடாது என்பதற்காக நள்ளிரவில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தை  சசிகலா நடத்தினார். நள்ளிரவு நடைபெற்ற கூதடத்தில் கலந்து கொண்ட அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. நள்ளிரவுக் கூதடத்தின் முடிவில்  பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்ச்செல்வ‌ம் நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். திராவிட ட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எம்.ஜி.ஆர் விலக்கப்பட்ட சம்பவம் பலரின் மனதில் வந்து போனது. பன்னீர்ச்செல்வ‌த்தின் வீட்டிலும் போயஸ் கார்டனிலும் குவிந்த தொண்டர்கள்  அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டனர். நள்ளிரவுக் கூட்டம் முடிந்ததும் சட்ட மன்ற உறுப்பினர்கள் வீட்டுக்குச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்ட அவர்கள் வசதியான ஹூட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சாய்ந்துவிடுவர்களோ  என்ற பயம்  சசிகலாவின் மனத்தில் இருக்கிறது.
சசிகலாவை ஆதரிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்கள்   சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  எத்தனை உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. சட்ட மன்ற உறுப்பினர்கள் எனது கட்டுப்பாட்டில் உள்ளனர். பன்னீர்ச்செல்வ‌த்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது எனும் சந்தோஷத்துடன் படுக்கைக்குச்சென்ற நித்திரையால்  எழும்பும்போது கட்சிகள் பல மாறிவிட்டன. மக்கள் விரும்பினால் ராஜினாமாக் கடிதத்தை வாபஸ் பெறுவேன்,ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்கு விசாரணைக்கமிசன் அமைக்கப்படும் என்ற பன்னீர்ச்செல்வ‌த்தின் அறிவிப்பு பலரையும் கவர்ந்தது. ஜெயலலிதாவின்மரனத்தின் மர்மம்  வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். போயஸ் தோட்டத்தில் தவறான மருந்து கொடுக்கப்பட்டதல் தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என முன்னாள் சபாநாயகர் பி.எச். பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற  உறுப்பினர் மைத்திரேயன் , முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் அவருடைய மகன், முன்னாள் அமைச்சர்கள்  முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்தைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் கண்காணிப்பையும் மீறி ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்சூர் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, மன்சூர் அலிகான் சரத்குமார் எஸ்.வி.சேகர் கராத்தே ஹுசைன்  ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர். வெளித் தோற்றத்துக்கு ஓரணியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுபட்டுள்ளது.

ஷீலா பாலகிருஷ்ணன்,வெங்கட்ரமணன்,சாந்த ஷீலா நாயர் போன்ற தலைமைச்செயலக அதிகாரிகள் பதவியை விட்டு விலகி விட்டனர்.தமிழக அரசு இப்போது யாரின் கையில் உள்ளது என்ற  குழப்பம் நீடிக்கிறது. சட்டம் ஒழுங்கைக் கவனிப்பது யார்?  பொலிஸாரைக் கையாள்வது    யார்                          போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. பன்னீர்ச்செல்வ‌த்ஹ்டின் வீட்டிலும் போயஸ் கார்டனிலும்  கூடியுள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஜெயலலிதாவுக்குக் குடைச்சல் கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


இரண்டு பெரியதலைகள் முட்டி மோதும்போது தீபாவைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தீபா ரன்னுடன் சேரலாம் என பன்னீர்ச்செல்வ‌ம் பச்சைக்கொடி காட்டியுள்ளார். சசிகலாவை எதிர்க்கும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமனவர்கள் அனைவரும் பன்னீரின் பின்னால் சென்றுவிட்டனர். தனி மர்மக் நிற்கும் தீபாவை தன்னுடன் இணையுமாறு பன்னீர்ச்செல்வ‌ம் அழைப்பு விடுத்துள்ளார்.சசிகலாவுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் அணிவகுத்துள்ளன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் இருக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்களை சசிகலா சிறை வைத்துள்ளார்.

சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பேன் என பன்னீர்ச்செல்வ‌ம் சூளுரைத்துள்ளார். சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு  வழக்கின் தீர்ப்பு இவ்வாரம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டதால்  அவரின் தளிக்கு மீள் கத்தி தொங்குகிறது. ஆளுநரின்  கையில் இவர்களின் தலைவிதி  உள்ளது.
வர்மா.


No comments: