Monday, September 3, 2018

நிழல் தலைவர் ஸ்டாலின் நிஜத் தலைவரானார்


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக ஸ்டாலின்  பொறுப்பேற்பார்  என்ற செய்தி  கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே வரையறை செய்யப்பட்டு விட்டது. சிறந்த ஒரு தலைவரால் வழி நடத்தப்படும் அரசியல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை தொண்டர்களும் ஏனையவர்களும் ஊகித்து வைத்திருப்பார்கள். சடுதியாக நடைபெறும் சம்பவங்கள் அந்த ஊகங்களை உடைத்தெறிந்தமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

நேருவின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகள் இந்திரா காந்தியை காமராஜர் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார். இந்திரா காந்தி கொல்லப்பட்டபின் அவருடைய மகன் ராஜீவ் தலைவரானார்.. ராஜீவ் கொல்லப்பட்டபின் அவருடைய மனைவி சோனியா தலைவரானார்.  ராஜீவ், சோனியா ஆகியோரின் மகன் ராகுல் இப்போ காங்கிரஸ் தலவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாஜ்பாய்க்குப் பின்னர் பாரதீய  ஜனதாக் கட்சியை  அதவானி வழி நடத்துவார் என எதிர்பார்த்திருந்த வேளை மோடி அலையில் அவர் அடித்துச்செல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்  அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினைத் தலைவராக நினைத்டுக் கொண்டனர். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோதும், செயற்படாதிருந்த போதும் ஸ்டாலின் சொன்னதையே மூத்த தலைவர்கள்  வழிமொழிந்தார்கள். ஆகையினால் ஸ்டாலின் தலைவரானது ஒன்றும் புதுமையல்ல.

அண்ணாத்துரை மறைந்தபோது நெடுஞ்செழியனா, கருணாநிதியா என்ற போட்டி ஏற்பட்டது. சகல எதிர்ப்புகளையும் தகர்த்து கருணாநிதி தலைவரானார். அப்போது கருணாநிதிக்கு 45 வயது. இப்போது கருணாநிதி மறைந்த பின்னர் எதுவித சலனமும் இன்றி  65 வயதில் ஸ்டாலின் தலைவரானார். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் அடிமட்டத் தொண்டனாகப் போராடி சிறை சென்று கட்சியின் உயர் பதவியைப் பிடித்துள்ளார்.

கருணாநிதி கட்சித் தலைவனான போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருந்தது. தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்திய அரசியலில் ஒரு கட்சித் தலைவராக 50 வருடம் வழி நடத்தியவர் கருணாநிதி மட்டும்தான்.

ஸ்டாலினின் முன்னால் மிகப்பரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன.  சென்னைமேயராகவும் துணை முதல்வராகவும் கடமையாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும். ஊழலுக்கு அப்பாற்பட்ட தலவராக ஸ்டாலின் விளங்குகிறார். அவருடைய மென்மையான் அரசியல் போக்கை  சிலர் விரும்பவில்லை.
அதிரடி அரசியலில் விருப்பம் கொண்ட அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தனக்குப் பின்னல் இருப்பதாக அழகிரி அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாரும் அழகிரிக்கு ஆதரவாக இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கின்றனர். கட்சிய விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கட்சியைப் பலப்படுத்தித் தனது தலைமைப் பதவியை வலுப்படுத்துவதற்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

  மு..ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச்  1 ஆம் திகதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.   1967ல் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில்  சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது,  திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகப்  பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திராவிட முன்னேற்றக் கழக  இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

  அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக  பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பு முனையாக  இருந்தது.   1975-இல் துர்காவை மணந்தார். 1977 இல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். 1978 இல் முதல் திரைப்படத்தை தயாரித்தார்  சில காட்சிகளில் நடித்தார்.

1984 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.   1988 இல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.   1996 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார்.

 1996 சென்னையின் 37 ஆவது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது. ஜெயலலிதா அமுல் படுத்திய சட்டத்தால் மேயர் பதவிய இழந்தார்.  2001 இல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001 இல் ஊழல் குற்றச்சாட்டில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.  2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி 2008 இல்  திராவிட முன்னேற்றக் கழகத்தில்  பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009 இல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011 இல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016 இல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

 2016 இல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி நோய்வாய்ப்பட்டதால் 2017 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.  இதைத் தொடர்ந்து  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.  . ஸ்டாலினை தவிர்த்து வேறு  எவரும்  வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர்   தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திராவிட மூன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின், தனது   முதல் உரையில் மாநில சுயாட்சி, மதசார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார். இந்தியாவுக்கு காவி பூசுபவர்களை எதிர்ப்பேன் என மத்திய அரசையும், முதுகெலும்பில்லாத அரசு என தமிழக அரசையும் கண்டித்துள்ளார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பாதையில்  செல்லப்போவதாக ஸ்டாலின் சூழுரைத்துள்ளார்.
”என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே” என்பது கருணாநிதியின் கரகரத்த குரல். “ என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே” எனக் கூறி ஸ்டாலின்  தனது உரையை ஆரம்பித்தார்.

திருப்பரம்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கு சவால் விடும் களமாக உள்ளது. திருப்பரம் குன்றம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை.. திருவாரூர் கருணாநிதியின் சொந்த ஊர். இந்த இரண்டு தொகுதிகளையும் ஸ்டாலின் எப்படிக் கையாளப் போகிறார் என்பதை அறிய அரசியல் ஆய்வாளர்கள் ஆவலாக உள்ளனர்.

No comments: