Thursday, April 25, 2013

பரம்பரையாகத்தொடரும் எழுத்தூழியம்


இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்திலேயே எனக்கு இலங்கையில் வடமராட்சிப்பிரதேசத்துடன் நெருக்கமான உறவும் பாசமும் ஆரம்பமாகிவிட்டது. இன்று வரையில் நீடிக்கும் இந்தச்சொந்தம்எப்பொழுதும் முற்றுப்பெறாத தொடர்கதையாகத்தான் வளரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குண்டு.
இந்த உறவு நீடிப்பதற்கு நான் மட்டுமல்ல என்னை நேசிக்கும் அந்தப்பிரதேச கலைஇ இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும்தான் காரணம். இந்த உறவு சங்கிலித்தொடர் போன்றது.
என்னுடன் சகோதரவாஞ்சையுடன் உறவாடும் தெணியான் எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ராஜஸ்ரீகாந்தன். அவரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த கதைக்கோவையின் படைப்பாளி ரவிவர்மா. புலம்பெயர்ந்து வந்தபின்பும் எனக்கு வடமராட்சியுடனான உறவு ஆரோக்கியமாகவே தொடருவதற்கு இலக்கியமும் இதழியலும் முக்கியமான காரணிகள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வந்தபொழுது வடமராட்சிக்கும் பயணித்தேன். அப்பொழுது எனக்கு இரண்டு தகவல்கள் கிடைத்தன. ஒன்று சகோதரர் தெணியானின் பிறந்த நாள்விழாவும் அவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வும். மற்றது ரவிவர்மாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு.
கடந்த ஜனவரி 6 ஆம் திகதி அல்வாயில் ஜீவநதி இதழின் ஏற்பாட்டில் தெணியான் விழாவுக்கு தலைமைதாங்கிவிட்டு கொழும்பு திரும்பியதும் ரவிவர்மா வீட்டிற்கு விருந்துக்கு வந்தேன். அவரது குடும்பமும் எனது இனிய நண்பர் மறைந்த ராஜஸ்ரீகாந்தனின் குடும்பமும் அந்த விட்டில் என்னை உபசரித்து மகிழ்ந்தார்கள். எனக்கு அன்றைய தினம் மனநிறைவான நாள். பாசாங்குத்தனமற்ற உபசரிப்புகளை மறக்கவே முடியாது.
ரவிவர்மா தனது சிறுகதைத்தொகுதி பற்றி குறிப்பிட்டார். அதற்கு வாழ்த்துரை வேண்டும் எனவும் சொன்னார். அவர் ஒரு ஊடகவியலாளர் என்ற முகம் மாத்திரமே அதுவரையில் தெரியும். அவரும் சிறுகதை எழுதுகிறார் என்று சொன்னதும்இ  “இலக்கிய உலகில் படைப்பாளிகளாக இயங்குபவர்கள் பத்திரிகையாளர்களாகவும் நடமாடுவது அபூர்வம்எனச்சொன்னேன்.
ரவிவர்மா இலக்கியபிரதி ஆக்குநராக தனது எழுத்துலகப்பிரவேசத்தை ஆரம்பித்து ஊடகவியலாளரானாரா? அல்லது ஊடகவியலாளராக எழுதத்தொடங்கி படைப்பாளியானரா? என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியாது.
ஆனால் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் குலதெய்வம் சூரனின் முதல் பேரன் என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியும். ராஜஸ்ரீகாந்தன் 2004 இல் பதிப்பித்து வெளியிட்ட சூரன் சுயசரிதை நூலின் மூல எழுத்துப்பிரதி ரவிவர்மாவிடமே இருந்திருக்கிறது என்ற தகவலை ராஜஸ்ரீகாந்தன் வாயிலாக தெரிந்துகொள்கின்றோம்.
வடமராட்சியில் அடிநிலைமக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை. இயல்பிலேயே இலக்கியநாட்டமும் பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன.
ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவிபுனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா சிறுகதைப்படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் இரண்டு தளங்களில் பயணிக்கின்றார்.
ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பெசத்தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்தக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள்தான் காரணமாக இருக்கவேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும் ஊடகவியலாளராக செய்திகளை செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மனநிறைவைத்தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல்மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும்  சிறப்பிக்கமுடியும். ரவிவர்மாவின் பின்புலம் மனிதஉரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது.
ரவிவர்மா தனது எழுத்தூழியத்தில் மென்மேலும் பணிகளைத்தொடர வாழ்த்துகின்றேன்.

முருகபூபதி
அவுஸ்திரேலியா

வடக்கே பொகும் மெயில் சிறுகதைத்தொகுப்புக்கு திரு.முருகபூபதி வழங்கிய வாழ்த்துரை

No comments: