Monday, December 18, 2017

கெளரவப்பிரச்சினயான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தமிழக அரசியல் அரங்கில் ஆர்.கே.நகர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முதலமைச்சரின் தொகுதி என்ற மிடுக்குடன் இருந்த ஆர்.கே.நகர், இலஞ்சம் தலை விரித்தாடும் தொகுதியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்காளர்களுப் .பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்ட களம்  இறங்கியுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக் கோட்டையான ஆர்.கே. நகரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்  உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  ஸ்டாலினுக்கு ஆர்.கே. நகர் வெற்றி அத்தியாவசியமானது. கருணாநிதி ,ஜெயலலிதா ஆகிய இரண்டு அரசியல் ஆளுமைகளும் இல்லாத இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல் தலைவர் ஸ்டாலின் வழிநடத்துகிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது, தினகரன் தனி ஒருவனாக நின்று அனைவரையும் எதிர்த்துப் பிரசாரம் செய்கிறார். எடபடியும் பன்னீரும் ஒன்றாக நின்று தேர்தல் பரப்புரை செய்கின்றனர். இரண்டு அணிகளும் இனைந்தன. மனங்கள் இணையவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான ஆர்.கே. நகரைக் கைப்பற்றித் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என ஸ்டாலின் கங்கணம் கட்டியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியைத் தக்க வைக்க வேண்டிய கடமைப்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. கழகமும் சின்னமும் அங்கே இருந்தாலும் தொண்டர்கள் எனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என அடித்துச்சொல்கிறார் தினகரன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பளராக  ஆர்.கே. நகரைச்சேர்ந்த மருதுகணேஷ், களம்  இறங்கி உள்ளார்.  ஆர்.கே. நகரில் இரண்டு முறை வெற்றி பெற்ற மதுசூதனன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பலறக்கப் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளராக தினகரன், வளம் வருகிறார்.நாம் தமிழர் கட்சியும் பாரதீய ஜனதாவும் தமது கட்சியின் வேட்பாளர்களைக் களம் இறக்கி உள்ளனர். நான்கு தினகரன், மூன்று மதுசூதனன், மூன்று ரமேஸ், இரண்டு பிரேம்குமார் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்கள். சின்னத்தைப் பார்க்காது பெயரைப்பார்த்து வாக்களித்தால் பிரதான வேட்பாளர்களின் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பன்னீரும் எடப்பாடியும் எதிரும் புதிருமாக இருந்தனர். பன்னீர் அணியின்வேட்பளராக மதுசூதனனும் எடப்பாடியின் அணி வேட்பாளராக தினகரனும் போட்டியிட்டனர். இன்று பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக நின்று தினகரனை எதிர்த்துப் பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் த்சம்ச்து கட்சியும் இருக்கிறது என்பதனை வெளிக்காட்டுவதற்காக பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்த கங்கை அமரன் இம்முறை பினவங்கி விட்டார். ஆகையால் இன்னொரு கட்சியில் இருந்து தாவியவரை பாரதீய ஜனதா வேட்பாளராக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தம் பங்குக்கு ஒருவரை நிறுத்தியுள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது பிரபலமான எந்த ஒரு கட்சியுடனும்  கூட்டணி சேரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒன்றாக இருந்தன. வைகோ,விஜயகாந்த்,திருமாவளவன்,இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து போட்டியிட்டனர். ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் விஜயகாந்தைத் தவிர அமர்றைய அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தினகரனுக்கும் இடையிலான போட்டியாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மாறி விட்டது. வெற்றி பெறவிட்டலும் இரண்டாம் இடம் யாருக்கு என்ற கெளரவப் பிரச்சினையாக பிரசாரம் செய்யப்படுகிறது.  கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடினார் தினகரன். அதில் தலையிட முடியாது என நீதிமன்றம்  மறுத்துவிட்டது. தொப்பி சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு அதிகளவு பணம் கொடுக்கப்பட்டதால் 29 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தைத் தமக்கு வழங்கக்கோரினர். இவர்களுடன் இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. கட்சியில் கோரிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு தொப்பி வழங்கப்பட்டது.

  தினகரனின் விருப்பமாக  விசில்,கிரிக்கெற் மட்டை என்பன இருந்தன. தினகரனின் விருப்பத்தை  நிறைவேற்றக்கூடாது என்பதற்காக அவருக்கு குக்கர் சின்னமாக வழங்கப்பட்டது. மக்கள் மனதில் மிக இலகுவாக பதியக்கூடியகுக்கரால் தினகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார். பன்னீரும் எடப்பாடியும் இரட்டை  இலையை நம்பி பிரசாரம் செய்கின்றனர். புதிய சின்னமான குக்கரை பிரபலயப் படுத்துவதில் தினகரன் முந்திவிட்டார்.

வாக்காளருக்குப் பணம்  கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஆதரத்துடன் பிடித்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.  தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இப்படியான தில்லு முல்லுகளைக் கண்டு பிடிப்பதற்காக கூடுதலான பொலிஸார், பறக்கும் படை,துணை இராணுவம் என்பன கலத்துள் ரோந்து வருகின்றன. பணம் கொடுப்பவர்கள் யாரும் அவர்களின் கண்ணில் சிக்கவில்லை. ஆதாரத்துடன்  பிடித்துக் கொடுத்தாலும் ஆளும் கட்சியைச் சேந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.  இரண்டாவது முறையும் இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டால் அது மிகப்ப பெரிய அவமானமாகும். கொடுக்கிற பணத்தை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆர்.கே. நகர் வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வாங்கிய சொற்ப பணத்துக்காக தமது வாக்கை விற்பப்போகிறார்களா என்பதை அறிவதற்கு தேர்தல் முடிவுவரை காத்திருக்க வேண்டும்.  நடக்கப்போவது இடைத் தேத்தல் என்றாலும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பம் என்றே கருத வேண்டி உள்ளது.     

No comments: