Thursday, June 10, 2010

உலகக்கிண்ணம்2010


உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழா இன்று தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. 32 நாடுகள் பங்கு பற்றும் 64 போட்டிகள். தென்னாபிரிக்காவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. நிற வெறியால் உலக அரங்கில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு தென்னாபிரிக்கா. நிறவெறியை மூட்டை கட்டி புதைத்து விட்டு கடந்த 15 வருடங்களில் முன்னேற்றமடைந்துள்ள தென்னாபிரிக்காவை நோக்கி உலகமே திரும்பியுள்ளது.
தென்னாபிரிக்காவில் உதைபந்தாட்டம் பிரபலமானது. 1879ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட குழு ஆரம்பிக்கப்பட்டது பீட்டர் மாரிட் ஸ்பார்க் கன்ட்ரி என்னும் அந்த அணியில் ஐரோப்பியர்களும் வெள்ளையரும் மட்டுமே அங்கத்துவம் பெற்றனர். இந்த உதைபந்தாட்ட அணி இராணுவ வீரர்களுடன் மட்டுமே விளையாடி வந்தது. நிற வெறி காரணமாக விளையாட்டுத் துறையில் இருந்து தென்னாபிரிக்கா ஒதுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போட்டியே உலக உதைபந்தாட்ட அரங்கில் தென்னாபிரிக்கா கடைசியாக விளையாடிய போட்டியாகும்.
நிறவெறி காரணமாக விளையாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டாலும் சோர்ந்து போகாத தென்னாபிரிக்கா, 1959ஆம் ஆண்டு தொழில் முறை உதைபந்தாட்டப் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது தென்னாபிரிக்கா. உதைபந்தாட்ட வரலாற்றில் முதன் முதலாக ஆபிரிக்கக் கண்டத்தில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. தென்அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உதைபந்தாட்ட கிண்ணத்தைப் பெற்று முன்னணியில் உள்ளன. பிரேஸில் ஐந்து தடவை சம்பியனாகி முன்னணியில் உள்ளது. இத்தாலி நான்கு தடவை சம்பியனாகி இரண்டாவது இடத்திலும் ஜேர்மனி மூன்று தடவைகள் சம்பியனாகி மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகியன தலா இரண்டு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன தலா ஒரு முறையும் சம்பியனாகின.
உலகின் எல்லாக் கண்டங்களிலும் சம்பியனான நாடு என்ற பெருமையை பெறுவதற்காக காத்திருக்கிறது பிரேஸில். ஐரோப்பா (1958சுவீடன்), தென் அமெரிக்கா (1962சிலி), வட அமெரிக்கா (1970 மெக்ஸிகோ), வட அமெரிக்கா (1994 அமெரிக்கா), ஆசியா (2002 கொரியா / ஜப்பான்) ஆகிய கண்டங்களில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆபிரிக்கக் கண்டத்திலும் சம்பியனாகும் முனைப்புடன் காத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி பிரேஸிலில் நடைபெற உள்ளது. சம்பியன் கிண்ணத்துடன் சொந்த நாட்டில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் ஆர்வத்துடன் உள்ளது பிரேஸில்.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரேஸிலில் பிரபலமான "ஆர்' கூட்டணி இல்லாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ரொபேட்டோ கார்லோஸ் ஓய்வு பெற்று விட்டார். உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் (15) அடித்த ரொனால்டோ முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால் அணியில் இடம்பெறவில்லை. பிரேஸில் அணியின் குழப்படிக்காரப் பையனான ரொனால்டினோவுக்கு பயிற்சியாளர் துங்கா வாய்ப்பளிக்கவில்லை. விளையாட்டுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்து பொழுதுபோக்குக்கு முதலிடம் கொடுக்கும் ரொனால்டினோ 23 வீரர்கள் அடங்கிய பட்டியலில் இல்லையென்றாலும் ரிசேவ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
மத்திய பகுதியில் பம்பரமாகச் சுழன்று விளையாடும் காகா இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். காகாவின் உதவியுடன் ரொபின் ஹோ, பபியானோ ஆகியோரும் கோல் அடிப்பதற்குத் தயாராக முன் களத்தில் உள்ளனர். டேனியல் ஆல்வ்ஸ், தியகோ சில்வா, ஜுவான் ஆகியோர் பின் வரிசையில் பலமாக இருப்பதனால் இவர்களைத் தாண்டி கோல் அடிப்பது சிரமமானது.
மிக நீண்ட காலமாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் கடந்த மாதம் பிரேஸிலிடம் முதலிடத்தை பறிகொடுத்து விட்டு இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அண்மையில் ஸ்பெயின் பெற்ற வெற்றிகள் அதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை ஸ்பெயின் வீரர்களின் விளையாட்டினால் ரசிகர்கள் கொதித்தெழும் சம்பவங்களும் உள்ளன. பலவீனமான நாட்டுடன் அல்லது அணியுடன் விளையாடும் போது ஸ்பெயின் இலகுவாக வெற்றி பெற்று விடும். இந்தப் போட்டியில் ஸ்பெயின் தோல்வியடைந்து விடும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்று விடும்.
ஸ்பெயின் வீரரான பெர்னாண்டோ டாரஸை எதிரணி வீரர்கள் அச்சத்துடனேயே எதிர்நோக்குவார்கள். இரண்டு, மூன்று வீரர்கள் சேர்ந்து சுற்றி வளைத்தாலும் அவரிடமிருந்து பந்தைப் பறிப்பது மிகவும் சிரமமானது. அவருடைய கால்களுக்கு இடையே உள்ள பந்து எந்தத் திசை நோக்கி செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு முறை விளையாடி கிண்ணத்தை பறிகொடுத்த நாடு நெதர்லாந்து. அதிர்ஷ்டமில்லாத நாடு என்ற பெயரை நீக்குவதற்காக அர்ஜான் ரொபின், ரூபின் வான் பஸி ஆகிய நட்சத்திரங்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
உலகக் கிண்ணத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெக்கம், ஜோன் டெரி, வோர்ன் பிரிட்ஜ், ரூனி ஆகியோரின் கூட்டணி எதிரணிக்கு சிம்மசொப்பனம் என எதிர்பார்க்கப்பட்டது. காலில் அடிபட்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் பெக்கம் அணியில் சேர்க்கப்படவில்லை. வேயர்ன் பிரிட்ஜின் காதலியுடன் அணித்தலைவர் ஜோன் டெர்ரி பழகியதால் வேயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னன்கா கர்ப்பமானார். இந்த இரகசியம் அம்பலமானதால் ஜோன் டெர்ரி தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மனமுடைந்த வேயர்ன் பிரிட்ஜ் உலகக் கிண்ண அணியில் தன்னைச் சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
கோல் அடிக்கும் இயந்திரமான ரூனியும் ஜோன் டெர்ரியும் இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இரசிகர்களிடம் உள்ளது. 30 வயதைக் கடந்து விட்டால் உதைபந்தாட்ட வீரர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள்.
ஆனால், 35 வயதான பெக்கமின் விளையாட்டு இன்னமும் ஓய்ந்து விட வில்லை. மூன்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய பெக்கம் நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
பயிற்சியாளர் மரடோனா, 22 வயதான லயோனல் மெஸ்னி ஆகியோரின் மீது ஆர்ஜென்ரீனா நம்பிக்கை வைத்துள்ளது. மிகப் பிரபலமான விளையாட்டு வீரரான மரடோனா சர்ச்சைகளிலும் பிரபலமானவர். ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளிலும் சோதனைகளிலும் சிக்கி வருகிறார் மரடோனா. மகளின் காதலனை அணியில் சேர்த்ததை ஆர்ஜென்ரீனா பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை இந்த ஆண்டு பெற்ற லயோனல் மெஸ்ஸி மீது பல விமர்சனங்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டில் பர்ஸிலோனா அணிக்காக திறமையாக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி தாய் நாட்டுக்காக விளையாடும் போது ஏமாற்றி வருகிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார் லயோனல் மெஸ்ஸி.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசிச் சுற்று வரை காத்திருந்த நாடு ஆர்ஜென்ரீனா. ஆர்ஜென்ரீனாவைப் போன்றே கடைசிச் சுற்றில் வெற்றி பெற்று தகுதியான இன்னொரு நாடு போர்த்துக்கல். அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மட்டும் நம்பி உள்ளது போர்த்துக்கல். சிறந்த வீரருக்கான பீஃபா விருதை இரண்டு முறை பெற்றவர். ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணி 93 மில்லியன் பவுண் கொடுத்து இவரை வாங்கி உள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்லும் நாடுகளின் பட்டியலில் போர்த்துக்கல் இல்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் அனைவரும் போர்த்துக்கல்லுக்கு ஆதரவளிப்பார்கள்.
லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கிடையேயான போட்டி பலமாக உள்ளது. கோல்டன் ஷý, கோல்டன் பந்து ஆகிய விருதைப் பெற இரு வீரர்களும் முனைப்பாக உள்ளனர். பீஃபா விருதைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியிலும் விருது பெறும் நோக்கில் உள்ளார். பீஃபா விருதை மெஸ்ஸியிடம் பறிகொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மெஸ்ஸியை முந்தும் முனைப்பில் உள்ளார்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைக் காண உலகில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக உள்ள வேளையில் தமது மதிப்புக்குரிய நட்சத்திர வீரர்கள் விளையாடாத கவலை பல ரசிகர்களிடம் உள்ளது.
பெக்கம் (இங்கிலாந்து), வேயன் பிரிட்ஜ் (இங்கிலாந்து), ரொனால்டோ (பிரேஸில்), ரொபின்ஹோ (பிரேஸில்), மைக்கல் பெல்லிக் (ஜேர்மனி), ஆகியோர் விளையாடாததனால் உதைபந்தாட்ட ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரமணி

மெட்ரோநியூஸ்

No comments: