Monday, June 28, 2010

இரகசியமாக நடைபெறும்கூட்டணிப் பேச்சுவார்த்தை


தமிழுக்கும் அரசியலுக்கும் அரும் பெரும் தொண்டாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. தமிழ் இலக்கியப் பாடல்களையும் சங்கத் தமிழ்ச் செய்யுள்களையும் வசன நடையில் அனைவரும் படிக்கும் வகையில் எழுதிய தனது ஆட்சிக் காலத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை என்ற பெரும் குறை இருந்தது. அறிஞர் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதலமைச்சர்களாக இருந்தபோது தமிழாராய்ச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
உலகம் போற்றும் வகையில் தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்தார். தமிழாராய்ச்சி மாநாட்டுத் தலைவர் முன்மொழிந்த சில நிபந்தனைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் பற்றிய மாநாடு ஒன்றைச் சிறப்பாகச் செய்வதற்கு விரும்பிய முதல்வர் கருணாநிதிக்கு கை கொடுத்தது செம்மொழி. மிகப் பிரமாண்டமாக நடந்த உலகச் செம்மொழி மாநாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வண.பிதா தனிநாயகம் அடிகளாரின் பெரு முயற்சியினால் உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களின் உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியினால் உலக செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றது. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு நடைபெறுமா? அது எத்தனை வருடங்களின் பின்னர் நடைபெறும் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றாலும் அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தால் அதற்கு உரிய ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானால் ஏதாவது ஒரு பெயரில் தமிழ் மாநாடு நடத்தி தனது பெருமையை வெளிப்படுத்துவார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெறும் இவ்வேளையில் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வரானால் தமிழகத்தில் தமிழில் வாதாட அனுமதி பெற்றுக் கொடுப்பேன் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். வைகோ, விஜயகாந்த் ஆகியோரும் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். இதேவேளை தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட எந்தவிதமான தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இலங்கைத் பிரச்சினையைத் தூக்கிப் பிடித்த ஜெயலலிதா மீண்டும் இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். 25 ஆயிரம் சீனச் சிறை கைதிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையில் உள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்திய நிறுவனங்களும் சீன நிறுவனங்களும் போட்டி போட்டு இலங்கையில் கடையை விரித்துள்ளன. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளனர்.
சீனத் தொழிலாளர்கள் என்ற பெயரில் சீனாவின் புலனாய்வாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவிலும் தமிழகத்திலும் எதுவிதமான கொந்தளிப் பையும் ஏற்படுத்தவில்லை. ஜெயலலிதா வின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மறுத்துரைக்க வில்லை. இலங்கையில் உள்ள சீனத் தொழி லாளர்களினால் இந்தியாவுக்கு எந்த ஆபத் தும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சீனத் தொழிலாளர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை தங்கபாலுவின் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதே வேளை, சீனக் கைதிகள் பற்றி தங்கபாலு வாய் திறக்கவில்லை. யுத்தத்தினால் சீரழிந்த இலங்கையைக் கட்டி எழுப்பும் முயற்சியில் சீனாவும் இந்தியாவும் இலங்கையில் கால் பதித்துள்ளன. இலங்கையின் நலன்களை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நலன்களே முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உலகத்துக்கு தெரியும்.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தமிழக சட்ட சபைத் தேர்தல், இந்தியப் பொதுத் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்துள்ளது.
திராவிடக் கழகங்களுக்கு மாற்றுக் கட்சியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் கட்சி தேர்தல்களில் தோல்வியடை வது அவரை நம்பி கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்த். இனியும் கூட்டணி அமைக்காது தனித்துப் போட்டியிட்டால் இதை விட கூடுதலான தோல்வியை அனுபவிக்க நேரிடும் என்பதை விஜயகாந்த்தின் கட்சியினர் உணர்ந் துள்ளனர். ஆகையினால் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படை யாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.
கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்தும் தயாராகி விட்டார். ஆனால் யாருடன் கூட்டணி சேர்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. விஜயகாந்தின் முதல் தெரிவு காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பில் இருந்து காங்கிரஸிக்குக் கூறப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலாதாரமே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அப்படி இருக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கை கழுவி விஜயகாந்த் கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. காங்கிரஸுடனான நிபந்தனை ஏற்கப்படாமையினால் அண்ணா முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக இன்னொருவர் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆகையினால் அதிகளவான தொகுதிகளைப் பெற வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெற்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்க தோழமைக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இதேபோன்ற கோரிக்கையை முன்வைக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. கூட்டணி இல்லாது ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளனர். பலமான கூட்டணி அமைக்க முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் முயற்சி செய்கின்றனர். கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடாது என்பதில் தோழமைக் கட்சிகள் உறுதியாக உள்ளன. கூட்டணிப் பேரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் கூட்டணி பற்றிய பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய பணி கட்சித் தலைவர்க ளான ஜெயலலிதாவிடமும் விஜயகாந்திட மும் உள்ளது. பலமான கூட்டணி அமைத் தால் கட்சியில் இருந்து வெளியேறுபவர் களைத் தடுத்து நிறுத்தலாம் என்பதை காலம் கடந்து இருவரும் புரிந்துகொண்டுள்ளனர்.
விஜயகாந்த் கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டியதால் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். சட்ட சபையில் தமது பலத்தை அதிகரிக்க வேண் டும். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறலாம் என்று விஜயகாந்தின் கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 30/05/10

No comments: