Friday, March 10, 2017

தமிழகத்தைப் பாதுகாக்க நெடுவாசலில் போராட்டம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றவும் தமிழக முதல்வர் பதவியைப் பிடிக்கவும் பன்னீர்ச்செல்வம் அணியும் சசிகலா அணியும் தமது பலத்தைக் காட்டுகின்றன. இதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இரு தரப்பும் பட்டிமன்றம் நடத்துகின்றன. தமிழகம் அழிவடையாமல் பாதுகாப்பதற்காக நெடுவா சலில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகம் பாதிப்படையும் என உணர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  போராட்டம் நடத்துகின்றனர்.இருபது நாட்களுக்கு மேலாக நடைபெறும் இப் போராட்டத்தை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கண்டனம் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதென தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள்  கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியபோது அன்று தமிழக முதலமைச்சராக இருந்த பன்னீர்ச்செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்து அவசரச்சட்டமூலம் ஜல்லிக்கட்டுத் தடையை உடைத்தார். அதனால் வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.இன்று நெடுவாசலில் போராட்டம் நடைபெறும் போது தமிழக அரசியல் களம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. பன்னீர்ச்செல்வம் தூக்கி எறியப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி உள்ளார். மத்திய அரசுக்கு பிடித்தமில்லாத ஒருவர் முதலமைச்சராக இருப்பதால் மத்திய அரசு கணக்கெடுக்காமல் இருக்கிறது. தவிர ஐந்து மாநிலங்களின் தேர்தல் பரபரப்பால் தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்ப்பதற்கு மோடிக்கு நேரமில்லை. 


  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ்தான் காரணம்.  நெடுவாசலை அடையாளம் காட்டியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என தனது எதிர்க் கட்சிகளை அடையாளம் காட்டிவிட்டு பாரதீய ஜனதா அரசு கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போதுதான்  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் கால்கோள் இடப்பட்டது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு குற்றம் சுமத்துகிறது. மீதேன் வாயு தொடர்பாக ஆய்வு நடத்துவதற்குத்தான்  திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதலளித்தது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தப்பிக்கிறார். அரசியல்வாதிகள் தம்மைப் பாதுகாப்பதில் குறியாக இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளைக் கணக்கில் எடுக்காத மக்கள்  போராட்டம் நடத்துகிறார்கள். நெடுவாசலில்   மீதேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் உறுதிபடக்கூறியுள்ளனர்.

 ஹைட்ரோகார்பன்  திட்டத்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும் .விவசாய நிலங்கள் பாழடைந்து விடும். நிலத்தடி நீர் காணமல் போய்விடும் என்பதை அறிந்த தமிழக மக்கள் அதற்கு  எதிராகப் போராடுகிறார்கள். தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் வரத்து என பாரதீய ஜனதா அரசு கூறுகிறது. மத்திய அரசாங்கத்தை தமிழக மக்கள் நம்பவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றி அத் துறைசார் வல்லுனர்கள் கூறுவதைக் கேட்டால் நடுக்கம் ஏற்படுகிறது

மீதேன் வகை எரிவாயுக்கள்,எண்ணெய் ஆகியவற்றின் கூட்டுக்கலவையைத்தான் ஹைட்ரோ கார்பன் என்பார்கள். பூமியின் கீழே சுமார்  பத்தாயிரம் அடி ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கிடக்கும் வாயுவை வெளியே எடுத்து பெற்றோலியப் பொருட்களையும் எரிவாயுவையும் தனித்தனியாகப் பிரித்து எடுப்பார்கள்.மேலோட்டமாகப் பார்த்தால்  ஆபத்தில்லாத வேலை போன்று தான் தோற்றமளிக்கும். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மிக ஆபத்தானவை. உலகின் பல நாடுகள் இதற்குத் தடை விதித்துள்ளன. நெடுவாசலில் 2500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டொரு இடங்களில் துளையிடுவர்கள்  நிலத்தடி நீர், சுண்ணாம்புக்கல் ,பாறை ஆகியவற்றை ஊடுருவி  ஹைட்ரோகார்பன்  பகுதியைச்சென்றடையும். அங்கிருந்து பக்கவாட்டில் செல்லும் குழாய்கள் எரிவாயுவை வெளியே இழுத்துவரும். இந்தச்செயற்பட்டின் போது நிலத்தடி நீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும். அதனைச்செய்வதற்கு இராசயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். அக்கலவைகலவைகளால்  புற்றுநோய்,  சுவாசக்கோளாறு, சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும். நிலத்தடி நீர்  வெளியேற்றப்படுவதால் விவசாய நிலம் பாலைவனமாகும்.

நிலத்தடியின் உறங்கிக்கிடக்கும் எரிவாயுவை வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு கோடி லீற்றர் தண்ணீர் தேவைப்படும். எரிவாயுவைப் பிரித்தெடுக்க கழிவுகளை அகற்றும் நடைமுறையை   மிகப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். சயனைட் வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டதில் இருந்து இந்திய இன்னமும் மீளவில்லை நெடுவாசலில் பிரித்தெடுக்கப்படும் எரிவாயு குழாய் மூலம் 80 கி.மீ  தூரத்தில் உள்ள  கோவிக்கலப்பை என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படும்.20 வருடங்களுக்கு எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கிடைக்கும் அளவைப் பொறுத்து மேலும்  10 வருடங்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் நீடிக்கப்படலாம்.

பெற்றோலியப் பொருட்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இந்தியா  உள்ளது. 2010 ஆம் ஆண்டு மீதேன் திட்டத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். எரிபொருளின் பவனை கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற ஆய்வையும் வெளியிட்டார். அப்போது தமிழகம், புதுவை,ஆந்திரா,  ,குஜராத், அருணாசலப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் உள்ள 46  இடங்களில் எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நெடுவாசல், காரைக்கால் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதிக வளமுள்ள பகுதியாக காவிரி படுக்கை அடையாளம் காணப்பட்டது. வர்த்தக் ரீதியாக எரிவாயும் கிடைக்கும் இடம் என 2008 ஆம் ஆண்டு நெடுவாசல் உறுதி செயப்பட்டது.

காங்கிரஸ் அரசால் திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஹைட்ரோகார்பன்  திட்டத்தை பாரதீய ஜனதா அரசு   தூசு தட்டி கையில் எடுத்துள்ளது.இந்திய மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்தான் இதனை ஏலத்தில் எடுத்துள்ளார். அதனால் தான் மத்திய அரசு அவசரம் காட்டுகிறது என்ற கருத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. எரிவாயு எடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 46 இடங்களில்  31  இடங்களுக்கு மட்டுமே டெண்டர் கோரப்பட்டது.இவற்றை  4பொதுத்துறை நிறுவனங்களும்   17 தனியார் நிறுவனங்களும் ஒரு வெளிநாட்டு நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.  நெடுவாசலுக்காக ஆறு நிறுவனங்கள் போட்டியிட்டன.

நெடுவாசலில்  27 85 ஆயிரம் பரல்எண்ணெயும்   1243 மில்லியன் அடி அளவு எரிவாயுவும் எடுக்க முடியுமாம். இதனால் அரசுக்கு  ஆயிரம் கோடி ரூபா ரோயல்ரியாகவும்   9300 கோடி ரூபா பங்காகவும் கிடைக்கும். தேடுவாசலில் உள்ள விவசாய மக்களுக்கு தெருக்கோடி கூட மிஞ்சாது. மத்திய கிழக்கு நாடுகளில்  மக்கள் குடியிருப்பு  இல்லாத இடங்களில்தான் இத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், அரபிக்கடல், வங்காளவிரிகுடா ஆகிய கடல் பரப்புகளில் எராளமான எண்ணெய் வளம் உள்ளது.  ஹைட்ரோகார்பன் திட்டத்தை கடல் பகுதியில் நடைமுறைப் படுத்தினால் மக்கள் குடியிருப்பும் விவசாய நிலங்களும் வளமாகும்.
வர்மா 


No comments: