Sunday, April 30, 2017

புதியதொரு விடியல் பிறக்கட்டும்

தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு  நூறு வருடம் கடந்து விட்டது. தொழிலாளர்களின் மீதான அடக்கு முறை எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கிறது. புரட்சிகர மேதினம் ஏற கோஷத்துடன் ஒரு களத்தில் மேதினம் கொண்டாடப்பட்டது. சிவப்பு உடுப்பு, சிவப்புத் தொப்பி,சிவப்புக்கொடி என்பன  மேதின ஊர்வலத்தை சிவப்புமயமக்கியது. தொழிலாளர் தினமான மேதினம் இன்று  முதலாளிதத்துவ கட்சித் தலைமைகளின் தினமாக உருமாறி விட்டது.

மேதினத்தன்று அடக்கு முறைக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய தொழிலாளர்கள் இன்று எதிர்க்கட்சிகளைக் குறைகூறும் கோஷங்களையே முன்வைக்கிறார்கள். மேதினம் இது எங்களின் தினம் என்று கருதி வீதியில் இறங்கி சந்தோசம் அடைந்த  தொழிலாளர்கள் இன்று காணாமல் போய்விட்டனர். சாப்பாடு போக்குவரத்துச்செலவு,உற்சாக பானம் கொடுத்து தொண்டர்களை அழைத்து வரும் நிலையை சில கட்சித்  தலைமைகள் உருவாக்கி விட்டன.
தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு  முதலாளிகளிடம் இருந்து நிதி உதவியை சில கட்சிகள் பெறுகின்றன. தம்மைசச் சுரண்டிப் பெற்ற பணத்தில் இருந்துதான் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்பதை  ஏமாந்த தொழிலாளர்கள் உணரவில்லை. மேதினம் என்பது வருடாந்தத் திருவிழா போல் மாறிவிட்டது. அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக மேதினத்தை ஒரு களமாகப் பயன்படுத்துகின்றன. தொழிலாளர்கள் பகடைக்காய் போன்று பல கட்சிகளில் சங்கமமாகி உள்ளனர்.

பெரிய நிறுவனங்களிலும்  தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சக்தி மிக்கனவாக இருக்கின்றன. ஒற்றுமையாகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய தொழிலாளர்கள், கட்சி  ரீதியாகப் பிளவுபட்டு  தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் பரிதாப நிலை தோன்றியுள்ளது. தாம் வேலை செய்யும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்படும் தொழிலாளர்கள். தமது நாளான  மேதினத்தை  ஒற்றுமையாகக் கொண்டாட முடியாது தவிக்கின்றனர். கட்சி அரசியல் அவர்களைப் பிரித்து வைத்துள்ளது.

சில நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தொளிலாளர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் எதையும் கொடுப்பதில்லை. ஈ.பி.எப், ஈ.ரி. எவ் போன்றவற்றைக் கட்டுவதில்லை. அப்பந்தம் எதுவுமில்லாமலே  சில தொழிலாளர்கள் வால்;ஐக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. சில இடங்களில் வர்த்தக விடுமுறை தினங்களிளும் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எட்டு மணி நேர வேலை.மேலதிகக் கொடுப்பனவு, போனஸ், சம்பள உயர்வு போன்றவை பற்றிய அறிவு இல்லாமலே சில தொழிலாளர்கள் வேலைசெய்கின்ர்த்னர்.

 தினக்கூலிகளுக்கு எந்த விதமான விடிவும் இதுவரை பிறக்கவில்லை. மழை,ஹர்த்தால்  , போராட்டம் போன்ற நடைபெற்றால் அந்தத் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. ஒருவர் வேலைக்குப் போனால்தான் அன்று  அடுப்பு எரியும் என்ற நிலையில் பல குடும்பங்கள் வாழ்கின்றன.  தொழிலாளர்களுக்கு விடிவு பிறந்து நூற்றாண்டு  கடந்த பின்னரும்  கூலித்தொழிலாளர்களுக்குக் கிடக்க வேண்டிய உரிமைகள் எவையும் கொடுக்கப்படுவதில்லை.

தொளிலரல்ர் தினம் என்பது இப்போது வருடாந்தத்  திருவிழா போல் மாற்றமடைந்துள்ளது.  மேதினத்துக்குச் செல்லவில்லை என்றால் உயர் அதிகாரியின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது என்ற பயத்தின் காரணமாகவும் சில தொழிலாளர்கள் மேதினத்துக்குச் செல்வர்கள். விலை உயர்ந்த காரில் வரும் கட்சித்தலைவர் உரத்த குரலில் பேசுவார். தொழிலாளர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பர்கள். கூட்டம் முடிந்ததும் தலைவர் காரில் தனது பங்களாவுக்குப் போய்விடுவார்..தொழிலாளி பொடி நடையாகத் தனது குடிசைக்குத் திரும்புவார்.


தொழிலாளர்களை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டிய மேதினம், அவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை காட்டுகிறது.

No comments: