Sunday, November 28, 2010

வில்லியமின் நிச்சயதார்த்தத்தில் நினைவு கூரப்பட்ட டயனா

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் மூலம் டயானா மீண்டும் நினைவு கூரப்பட்டுள்ளார். சார்ள்ஸ்டயானா திருமணம் கடந்த நூற்றாண்டில் மிகப் பிரமாண்டமான திருமணமாக அமைந்தது. பிரிட்டிஷ் மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகின் பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் டயானா. உலகின் எண்ணற்ற படப்பிடிப்பாளர்களுக்குத் தீனி போட்டவர் டயானா. பப்பராசிகளினால் துரத்தப்பட்டு கொடூரமாக உயிரை இழந்தார்.
சார்ள்ஸ் டயானா திருமணம் முறிந்த போது டயானாவின் பக்கமே அதிகமானோர் இருந்தனர். இளவரசர் சார்ள்ஸுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட டயானாடொடி என்ற கோடீஸ்வரரைக் காதலித்த போது அதிகமானோர் அக் காதலை விரும்பவில்லை. டயானாவைக் கைவிட்ட இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலாவைக் கரம் பிடித்தார். டயானாவின் இடத்தில் கமீலாவை இருத்திப் பார்க்க அதிகமானோர் விரும்பவில்லை. டயானாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கமீலாவுக்குக் கொடுக்கப்படவில்லை.
கென்யாவில் தனது திருமணம் பற்றி வில்லியம் அறிவித்த போது எவரும் ஆச்சரியப்படவில்லை. கதே மிடில்ரொன் என்னும் யுவதியை வில்லியம் காதலிப்பது உலகறிந்த விடயம். திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது தாய் டயானா அணிந்த மோதிரத்தை மிடில்ரொன் கையில் வில்லியம் அணிந்தபோது உலகமே அதிசயமாகப் பார்த்தது.
டயானா அணிந்த மோதிரத்தை தனது எதிர்கால மனைவியின் விரலில் அணிவித்து தாய் டயானாவுக்குரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் வில்லியம். நீள் வட்டமான நீல நிறமுடைய அந்த மோதிரத்தில் 14 வைரங்கள் உள்ளன.
இங்கிலாந்தின் அடுத்த இளவரசி தனது மனைவி கதே என்பதை வில்லியம் பூடகமாக அறிவித்துள்ளார். டயானாவை நேசிப்பவர்களின் பார்வை கதேயின் பக்கம் திரும்பியுள்ளது. கமீலாவை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் கதேயை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
தனது மனைவி கமீலா ராணியாவதை தான் விரும்புவதாக இளவரசர் சார்ள்ஸ் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அதிகளவான மக்கள் இதனை விரும்பவில்லை என்பது பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இளவரசர் சார்ள்ஸ், டயானாவைக் கைவிட்டதை விரும்பாத இங்கிலாந்து மக்களில் அதிகமானோர் அவர் கமீலாவைக் கரம் பிடித்ததையும் விரும்பவில்லை.
தனது தாய் டயானாவின் மோதிரத்தை கதேக்கு வழங்கியதை இங்கிலாந்து மக்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை முறிந்து போன திருமண ஞாபகார்த்த மோதிரத்தை வில்லியம் கதேக்கு வழங்கியதை சிலர் விரும்பவில்லை. ஆனால் டயானாவுக்கு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கதேக்கும் கொடுக்கப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
வில்லியம், கதே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டயானா சார்ள்ஸ் திருமணத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அத் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வில்லியம் கதே திருமணத்தைக் குறி வைத்து இப்பொழுதே வியாபாரம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வில்லியம் கதே ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. திருமண நிச்சயதார்த்தத்திலன்று விற்பனைக்கு வந்த இப் பொருட்களை பிரிட்டிஷ் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
இங்கிலாந்தில் வெளிவரும் சகல பத்திரிகைகளும் வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியை முன்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்தன. திருமணம் நடைபெறும் வரை ஊடகங்களின் பார்வை அரச குடும்பத்தின் மீதுதான் இருக்கும்.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி சார்ள்ஸைத் திருமணம் முடிப்பதற்காக தகப்பன் ஏர்ள்ஸ் பென்சரின் கரத்தைப் பிடித்தபடி டயானா நடந்து வந்தபோது அந்தத் திருமண வைபவத்தில் ஆறாவது வரிசையில் தனது சிறிய மகனுடன் அமர்ந்திருந்தார் திருமதி கமீலா பாக்கர். டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது சார்ள்ஸின் மனைவியாக இருந்தார் கமீலா.
முதலில் யாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறதோ அவருக்குத்தான் தாய் டயானாவின் மோதிரத்தை கொடுக்க வேண்டும் என்று வில்லியமும் ஹரியும் முடிவு செய்திருந்தார்கள். சார்ள்ஸும் கமீலாவும் மறக்க நினைத்த டயானாவை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார் வில்லியம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 26/12/10

No comments: