Monday, June 27, 2011

காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிறது தி.மு.க.

அரசியலில் பல தடைகளையும், சோதனைகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்து வீறு கொண்டெழுந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி, வேதனை போன்றவற்றினால் துவண்டு போகாத கருணாநிதி தன்மகள் கனிமொழி சிறையில் இருப்பதைத் தாங்க முடியாது துவண்டு போயுள்ளார்.
வலுவான ஆதாரம் இல்லாது சி.பி.ஐ. குற்றவாளி என சந்தேகப்படுபவரை நெருங்காது. சி.பி.ஐ. ஒருவரைச் சந்தேகத்தில் கைது செய்தால் அவர் பிணையில் வெளிவருவதற்கான சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. சிறப்பு நீதிமன்றத்தின் விதிமுறைகள் சி.பி.ஐ. க்கு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்யக் கூடாது என்று சி.பி.ஐ. கூறியுள்ளது. அவர்கள் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்று சி.பி.ஐ. கூறுகிறது. அரசியலிலும், சமூகத்திலும் செல்வாக்குமிக்கவர்கள்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. ஸ்பெக்ட்ரம் மெகா தொடர் போன்று நீண்டு கொண்டே போகின்றது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னாள் அமைச்சர் ராசாவும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் பொறுப்பு. அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்பது போல் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் சுமத்தி விட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலேதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. ஆகையினால் இப்பிரச்சினைக்குப் பதில் கூற வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. ஆபத்தான வேளையில் கைவிடுவது நட்புக்கு அழகல்ல என்று இடித்துரைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
கனிமொழியின் பிணை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததனால் மகளைப் பார்ப்பதற்காக டில்லிக்குச் சென்றார் கருணாநிதி. டில்லியில் அவருக்குக் கொடுக்கவேண்டிய மதிப்பையும், மரியாதையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்பார். அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு மரியாதை நிமித்தமாகச் சென்று சில பிரமுகர்கள் சந்திப்பார்கள். அந்த நடைமுறை இம்முறை கைவிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் டில்லிக்குச் சென்றபோது தடல்புடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லையே தவிர அவர்களுக்கு நெருக்கமானவர்கள்தான் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் கருணாநிதியை மதிக்காததும் திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டில்லியில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஒருவரான கருணாநிதி அப்போது டெல்லியில் இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவரான அவர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை. டி.ஆர். பாலு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்றினார். லோக் பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னை ஹசாரே போன்றவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர முடியாது. பிரதமரை எவரும் விசாரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இதே நிலைப்பாட்டில்தான் கூட்டணிக் கட்சிகளும் உள்ளன.
லோக்பால் விசாரணை வரையறைக்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர். பாலு தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் எதிர்க்கட்சிகளும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுத்தது காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்பால் மசோதா பற்றிய கருத்துகளை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. லோக்பால் மசோதா பற்றிய கருத்துகளை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார். டி.ஆர். பாலுவின் கருத்துகளால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டது. அதே விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சிக்க வைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் வியூகம் வகுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் பி. சிதம்பரம், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ஆகியோரையும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து சற்றுத் தள்ளியே நிற்பதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. இந்த நிலையில் டி.ஆர். பாலுவின் கருத்து காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. இளங்கோவன், யுவராஜ் போன்றவர்கள் அறிக்கைப் போர் விடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுமையைச் சாதிக்கிறார்கள். கருணாநிதியும் சளைக்காது பதிலறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் பிரியக் கூடாது என்று சில தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தொண்டர்களின் மனநிலை இதற்கு எதிர்மாறாக உள்ளது. தொண்டர்களின் விருப்பத்தைத் தலைவர்கள் நிறைவேற்றும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு26/06/11

No comments: