Saturday, March 29, 2014

ஜீவநதி



கலை இலக்கிய மாத சஞ்சிகையான ''ஜீவநதி' பங்குனிமாத இதழ் திருகோணமலை மாவட்ட சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ஜீவநதியின் 11ஆவது சிறப்பிதழ் இது. மலையகச் சிறப்பிதழ் வெளியிட்டு மூன்று மாத இடை வெளியில் திருகோணமலை மாவட்ட  சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் வெளியிடுவதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுகின்றன. கலை, இலக்கியம் பற்றிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள்  சிறப்பிதழ் மூலம் ஆவணப் படுத்தப்படுகிறது. திருகோணமலை பற்றிய பல புதிய தகவல்களை இச்சிறப்பிதழின் மூலம் அறிய முடிகின்றது.

''திருகோணமலை சில இலக்கியக் குறிப்புகள்' எனும் கட்டுரையின் மூலம் இராஜ தர்ம ராஜா நீண்டதொரு பட்டியலைத் தந்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என அவரது பார்வைப் பரந்து விரிகின்றது. திருகோணமலை என்றாலே  மனதில் தோன்றுவது திருக்கோணேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றி தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழி களில் வெளிவந்த நூல்கள் பற்றியும் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிப் பாடியவர்களின்  விபரங்களையும் தந்துள்ளார்.
''திருகோணமலை தேசிய இலக்கிய சமபோக்கு' எனும் கட்டுரையை திருமலை நவம்  எழுதியுள்ளார். திருகோணமலை அடையாளங்கள், புராணங்கள், நவீன வரவுகள், நவீன தமிழ்க்கவிதைகள், திருகோணமலை சிறுகதை முன்னேற்றம் நாடக மரபு, திருமலை மெல்லிசை, முற்போக்குச் சிந்தனை, வறட்சிக் காலம், 2000ஆம் ஆண்டுக்குப்பின் ஆகிய உபதலைப்புகளில் பல தகவல்களைத் தந்துள்ளார்.
நிலம் பிரிந்தவனின் (சுஜந்தனின்) கவிதைகள் ஒரு வாசக நிலைக்குறிப்பு இதனை எழுதியவர் ய. சிந்திரா. இன்று வெளிவரும் கவிதைத் தொகுப்புகள் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்துகிறார் ய.சீ.சீந்திரா.

 நிலம் பிரிதலின் சோகம் என்பது பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அனுபவித்த  அனுபவித்துக் கொண்டிருக்கிற சோகம். இதனை பல கவிஞர்களும் காலத்துக்குக் காலம் பதிவுசெய்தே  வருகின்றனர். சுகந்தன் சம்பூர் கிராமத்தியில் பிறந்து வாழ்ந்து தற்போது  அங்கு வாழும் உரிமை இழந்து நிற்கும் ஒருவர். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தனது சொந்த நிலத்திலிருந்து பிரித்தெறியப்பட்ட அனுபவங்களின் வரிசையாகவே இருக்கின்றன என  கவிஞரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

காலனித்துவ திருகோணமலை ஆக்கிரமிப்பாளர்கள் பதிவுகளுக்கூடாக வேர்களைத் தேடும் முயற்சி என்ற தலைப்பில் கனகசபாபதி சரவணபவனின் காலனித்துவ  தலைப்பில் திருகோணமலை எனும் நூல் பற்றி வி. கௌரிபாலன் எழுதிய கட்டுரை ஜீவநதியில் உள்ளது.
எழுத்தாளர் தாபி. சுப்பிரமணியத்தின் நேர்காணல் பிரசுரமாகியுள்ளது. செ.ஞான ராசா இவரைப் பேட்டிக்கண்டுள்ளார்.
கே.எம்.எம்.இக்பால், வீ.என்.சந்திரகாந்தி, ஏ.எஸ்.உபைத்துல்லா, கிண்ணியா சபருள்ளா, ஷெல்லிதாசன் மூதூர் முஹமட் ராபி, திருமலை சுந்தா  சூசை எட்வேட் ஏ.எம்.எம்.அலி ஆகியோர் எழுதிய சிறுகதைகள் ஜீவநதியை அலங்கரிக்கின்றன.
செ.. ஞானராசா, தாமரைத்தீவான், மு.யாழவன், அ.கௌரிதாசன், எஸ். பாயிஷா அலி, கேணிப் புத்திரன், மூதூர் முகைதீன், சா, மீரா, தி.பவித்திரன், மூதூர்கலை மேகம் ஆகியோர் எழுதிய  கவிதைகள் இச்சிறப்பிதழில் உள்ளன.
ஊர்மிளா

 சுட‌ர் ஒளி 23/03/14


1 comment:

சிகரம் பாரதி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி. என் தளத்தில்:
கந்தசாமியும் சுந்தரமும் - 02
http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html