Monday, December 17, 2018

தினகரனை குப்புற விழுத்திய செந்தில் பாலாஜி


ஜெயலலிதா மறைந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற  சசிகலா முயற்சி செய்தார். சசிகலா சிறைக்குச் சென்றதால் தினகரன் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்தார். ஜெயலலிதாவுக்காக சசிகலாவை மன்னித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவேன் என சபதம் செய்த தினகரன் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அரசியல் நீரோட்டத்தில் குதித்தார்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்ததால் தமிழகத்தின் தலைவராவதற்கு தினகரன் முயற்சி செய்தார். எத்தகைய கடுமையாக கேள்வியானாலும் கோபப்படாமல்  சிரித்துக்க்கொண்டே பதிலளிக்கும் தினகரனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  நெருக்கடியை எதிர்கொண்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதால் தமிழகத்தின் பெரிய தலைவர் என்ற பிம்பம் உருவாகியது.  தினகரனின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் தினகரன் தரப்பு மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்களான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 18 சட்ட மன்ற  உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து 18 உறுப்பினர்களும்  நீதினம்றத்தில் முறையிட்டார்கள். தகுதி நீக்கம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தினகரனை நம்பிய 18 உறுப்பினர்கள் பதவியை இழந்தார்கள். 18 உறுப்பினர்களை பலிக்கடாவாக்கிய தினகரன் சட்டசபை உறுப்பினராகிவிட்டார். மேல் முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலைச் சந்திக்க தினகரன் தரப்பு முடிவு செய்தது. கருணாநிதி,ஏகே,போஸ் ஆகியோர் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றையும் சேர்த்து 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதிதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. அவற்றில் ஒரு தொகுதி மட்டும் ஆட்சி செய்யும் அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 17  அனைத்தும்  தினகரனின் விசுவாசிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்.  எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைத் தக்க வைக்கும். மாறாக 20 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் அது ஆட்சியைக் கைப்பற்றும். இந்த இரண்டு நூறு சதவீதம் நடக்கும் என எதிர்வு கூற முடியாது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடைபெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்ரி பெற்றவர்களையே தினகரன்  வேட்பாளர்களாக அறிவிப்பார்.தொகுதிக்குள் உள்ள தனிப்பட்ட செல்வாக்கினால் சிலர் வெற்ரி பெறுவார்கள். ஏனையவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பர்கள்.  வெற்றி பெறும் வேட்பாளர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி கட்சி மாறியதால் தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். தேர்தல் பற்ரிய அரிவிப்பு வரும் முன்னரே தினகரனின் கையை விட்டு ஒரு தொகுதி பறிபோயுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை பச்சைக்கொடி காட்டியும் தினகரனின் பின்னால் நின்ற 18 பேரும் அசையவில்லை.  நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் தினகரனைத் தவிர மற்றைய அனைவரும் வருங்கள் உங்களை மன்னிக்கிறோம் என முதலமைச்சர், துணை முதலமைச்ச்ர், அமைச்சர்கள் அனைவரும் வருந்தி அழைத்தார்கள். யாருமே இம்மியும் அசையவில்லை.

தினகரனின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லப்போகிறார் என்ற செய்தி பரவியது. தினகரனின் ஆட்கள்  அதனை மறுதலித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதவர்கள் உருவாக்கிய கட்டுக்கதை என அவர்கள் தெரிவித்தார்கள். செந்தில் பாலாஜி அமைதியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் மெளன காத்தது. ஜெயலலிதாவின் நினைவு நாளன்று நடைபெற்ற பேரணியில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.நமது எம்ஜிஆரில் வழ்மையாகக்கொடுக்கும் விளம்பரங்களை செந்தில் பாலாஜி கொடுக்கவில்லை. வருடாந்தக் கலண்டர் அடிப்பதர்கு ஒப்பந்தம் செய்யவில்லை. இவை எல்லாம் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை மீது சந்தேகத்தை எழுப்பின.

செந்தில் பாலாஜி எங்களுடன் தான் இருக்கிறார்.  சொந்தப் பிரச்சினை காரணமாக அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார் எனத் தினகரன் தரப்புத் தெரிவித்தது. ஆனால், ஒருமாத இடைவெளியில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை வெற்றி கரமாக முடித்தார் செந்தில் பாலாஜி.  தமிழகத் தலைவர்களில் தனி ஆளாகத் தன்னை முன்னிறுத்திய தினகரனுக்கு அதிர்ச்சையளித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு. செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து வேறு சிலரும் தினகரனைக் கைவிட்டுச்  செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜியை இழந்த தினகரன் தரப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அதனி வெளிக்காட்டாது அரிக்கை விடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லாமல் எமது பக்கம் வந்திருக்கலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதங்கப்படுகின்றனர். செந்தில் பாலாஜியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் செல்வமும்  தேர்தலின் போது அவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றதைப் பொறுக்க முடியாத அவரது ஆதரவாளர்கள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு திரும்பிச் சென்றனர். அவருக்கு நம்பிக்கையான சிலர் தினகரனுடன் இருக்கிறார்கள் காலப் போக்கில் அவர்கள் தன்னைத் தேடிவருவார்கள் என்ற நம்பிக்கை செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாஜாஜி 1996 ஆம் ஆண்டு 20 ஆவது வயதில் திராவிட முன்னேற்றக் கட்சியில் கவுன்சிலராக அரசியலில் அறிமுகமானார். அந்தக் காலத்தில் அவரிடம் பண வசதி இருக்கவில்லை. அங்குள்ள கே.சி.பழனிச்சாமி, நாகேந்திரன்  போன்றவர்களை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை.2000 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்தார். மணல்  கொள்ளைக்கு எதிராக ஜேபிசி இயந்திரத்தின் முன்னால் படுத்துப் போராட்டம் செய்தார். அவரின் போராட்டத்தால் உள்ளூர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பதறினார்கள்.   ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையைப் பெற்ற செந்தில் பாலாஜி படிப்படியாக பதவிகளைப் பெற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத அரசியல்வாதியானார்  போக்கு வரத்து அமைச்சரான  செந்தில் பாலாஜி ஜெயலலிதாவினதும் சசிகலாவினதும் விசுவாசத்தை ஒருங்கே  பெற்றார்.

தேர்தலின் போது வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்ததால் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் செந்தில் பாலாஜி. அம்மா போத்தல் தண்ணீர், அம்மா சொகுசு பஸ் போன்றவற்றினால் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றார். ஜெயலலிதாவின் கீழ் அமைச்சராக இருந்தவர்கள் எப்போ பதவி பறிபோகுமோ என கலக்கத்தில் இருந்தார்கள். செந்தில் பாலாஜியின் பதவியில் ஜெயலலிதா கைவைத்ததில்லை. கடைசியில் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா தூக்கி எறியும் நிலை ஏற்பட்டது. போக்கு வரத்துத் துறையில் ஏற்பட்ட நஷ்டம், ஊழல் காரணமாக செந்தில் பாலாஜி பதவி இழந்தார்.

ஜெயலலிதா இறந்தபின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டது. சசிகலாவின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி முதல்வராகலாம் என செய்தி பரவியது. அப்படிப்பட்ட ஒருவர் இன்று அணி மாறியது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் பெரிய இழப்பு. ஒன்றரை வருடங்களாக பதவி இல்லை. வழக்குக்காக 56 கோடி ரூபாவை செந்தில் பாலாஜி செலவளித்ததாக செய்தி வெளியாகியது.  20 தொகுதிகளுக்கு இடைத்தேதல் நடக்கும் போது 10 தொகுதிகளின்  செலவை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என தினகரன் வேண்டுகோள் விடுத்தகாகவும் அதனால் தான் செந்தில் பாலாஜி  கட்சி மாறியதாகவும் தெரிகிறது.

கொங்குமண்டலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரான தம்பித்துரை போன்றவர்களை ஓரம் கட்டினார் செந்தில் பாலாஜி. வி. செந்தில் குமார் என்னும் இயற் பெயரை வி.செந்தில் பாலாஜி என மாற்றியபின் யாராலும் எட்ட முடியாத இடத்துக்குச் சென்றார். 2010 ஆம் ஆண்டு நமது எம்ஜிஆரில் பிரசுரமான விளம்பரத்துக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த செந்தில் பாலாஜியை நம்பித்தான் இன்று   நமது எம்ஜிஆர் வெளியாகிறது.

கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமாக உள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கழகத்துக்கு உதவியாக இருக்கும். அங்கு செல்வாக்குச் செலுத்திய பழனிச்சாமி இப்போது நொடிந்துபோயுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரல் முன்புபோல்  சுறு சுறுப்பாக இயங்க முடியாது அந்த இடத்தை செந்தில் பாலாஜி நிரப்புவார் என திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.

தினகரனின் கூடாரத்தில் இருந்து இன்னும் பலர் வெளியேறப்போவதாக தகவல் பரவியுள்ளது. அவர்களை இழுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது. செந்தில் பாலாஜியைப் போன்ற இன்னொரு இழப்பை தினகரனால் தாங்க முடியாது. இருப்பவர்களைத் தக்கவைக்க வெண்டிய கட்டாயம் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.தினகரன் அடுத்து யாரை  யாரிடம் இழக்கப்போகிறார் என்பதை அறிய தமிழக அரசியல் ஆர்வமாக இருக்கிறது.

No comments: