Sunday, April 25, 2010

தமிழக இளைஞர் காங்கிரஸ்கட்சியை ஒற்றுமையாக்குமா?



தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பலமான இளைஞர் காங்கிரஸ் வேண்டும் என்ற ராகுல் காந்தியின் எண்ணத்தை ஈடேற்றுவதற்காக நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் எம்.யுவராஜ் என்பவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். இளைஞர்களின் முழு மூச்சான செயற்பாடே கட்சியை வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் நடைபெற்று முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கை பலமாகச் செயற்பட்டது.
தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்கள் அதிகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கோஷ்டிகளின் தலையீடு இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிக்க ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியைத் தழுவி உள்ளது. இந்திய பொதுத் தேர்தலுக்கு இணையாக பரபரப்பாக நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஜி.கே. வாசனின் ஆதரவு பெற்றவர் வெற்றி பெற்றார்.
அமைச்சர் சிதம்பரத்தின் மகனின் ஆதரவு பெற்றவருக்கும் ஜி.கே. வாசனின் ஆதரவு பெற்ற யுவராஜுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஏனைய தலைவர்களும் தமது ஆதரவு பெற்ற ஒருவர் இளைஞர் காங்கிரஸின் தலைவராக தெரிவு செய்யப்படுவதையே விரும்பினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஜி.கே. வாசனின் செல்வாக்கை முறியடிக்க ஏனைய தலைவர்களினால் முடியவில்லை.
இளைஞர்களின் பலமான கட்டமைப்பே வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியது. வட இத்திய மாநிலங்களுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்தி அங்கு பலமான இளைஞர் அமைப்பை உருவாக்கி உள்ளார். தமிழகத்துக்கு இளைஞர்படை என்றும் புதிதல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று பலமான இளைஞர் அணியை உருவாக்கியுள்ளார்.
ஒரு கட்சியின் பலமான கட்டமைப்புக்கு இளைஞர் அணி, மகளிர் அணி போன்றவை மிக அத்தியாவசியமாகும். அந்த அணிகளில் இணைந்து கட்சியை வளர்ப்பதுடன் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.
தமிழக காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவரை ஜி.கே. வாசனின் ஆதரவாளர் என்ற குறுகிய நோக்குடன் ஏனைய தலைவர்கள் செயற்பட்டால் தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டிப் பூசலைப் போன்று இளைஞர் காங்கிரஸின் உள்ளேயும் கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துவிடும் சாத்தியம் உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர் அப்பதவியில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. ஏதோ ஒரு காரணம் காட்டி தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவி பறிக்கப்படுவதும் வேறு ஒருவர் நியமிக்கப்படுவதும் வாடிக்கையான சங்கதி. தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவி காங்கிரஸ் தலைமைப் பீடத்தின் மூலம் நியமனம் செய்யப்படுவது. காங் கிரஸ் தலைமைப்பீடம் அதை எப்போது மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைமைப் பதவி அப்படியானதல்ல. இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களின் வாக்கு மூலமே இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை மாற்றும் சக்தி தமிழக காங்கிரஸ் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. தமிழக காங்கிரஸ் இளைஞர்களின் தலைவன் என்ற உண்மையை அறிந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை இன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெறுவார். அப்படி இல்லாமல் தான் விசுவாசம் வைக்கும் ஒரு வரை திருப்திப்படுத்த முயன்றால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற பெயர் மட்டும் அவருடன் நிலைத்து நிற்கும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மகிழ்ச்சியான நேரத்தில் தமிழக அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அணியை பலமாகதாக்கி அதன் மூலம் பல சேவைகளைச் செய்த பின்னர் எதிர்க்கட்சிக ளுக்கு அவர் எச்சரிக்கை விடுப்பது பிரயோசனமாக அமையும்.
பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் கண்களைத் திறந்து விட்டுள்ளது போலுள்ளது. கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக உறவாடாத ஜெயலலிதாவின் போக்கில் அண்மைக் காலத்தில் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு சிலருடன் மட்டுமே ஆலோசனை நடத்தும் ஜெயலலிதா பென்னாகரம் இடைத் தேர்தலின் பின்னர் பலரையும் அழைத்து ஆலோசனைகளை நடத்தி உள்ளார்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணம் இழந்ததைப் பொறுக்க முடியாது தீக்குளித்த கட்சித் தொண்டனை வைத்தியசாலைக்கு சென்று சந்தித்துள்ளார். கட்சித் தொண்டர்கள் மத்தியில் இந்தச் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியும் இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைவதற்குரிய காரணங்களில் ஒன்று.
கட்சித் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் ஜெயலலிதா தற்பொழுது காட்டி வரும் நெருக்கம் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரியும். தமிழக அரசுக்கு எதிராக கடந்த வாரம் ஜெயலலிதா நடத்திய போராட்டம் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தலைமை ஏற்று ஜெயலலிதா நடத்துவதற்கு முடிவு செய்த அதேவேளை பார்வதி அம்மாவின் பிரச்சினை ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
வைத்திய சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து தமிழகம் சென்ற பார்வதி அம்மாவை நட்ட நடு நிசியில் விமான நிலைய அதிகாரிகள் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தையும் தாண்டி இந்திய நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.
விமான நிலையத்தில் இருந்து பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்பதை தமிழக அரசு பகிரங்கப்படுத்தியதால் ஜெயலலிதாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 25/04/10

No comments: