Tuesday, March 20, 2018

இலங்கையின் சுதந்திரக்கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்தியா




                   சம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இலங்கை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்,வங்காளதேஷும் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை பறித்தது.  

நாணயச்சுழற்சியில் ஜெயித்த இந்திய கப்டன் ரோகித் சர்மா முதலில் வங்காளதேஷை பேட் செய்ய அழைத்தார்.   தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (11 ) வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சிலும், தமிம் இக்பால் (15 ) யுஸ்வேந்திர சாஹலின் சுழலிலும் ஆட்டம் இழந்தனர். தமிம் இக்பால் தூக்கியடித்த பந்தை ‘லாங் ஆன் திசையில் எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்ற ஷர்துல் தாகூர் சூப்பராக பிடித்தார். சவுமியா சர்கார் (1 , விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (9 ) ஆகியோருக்கும் சாஹல் ‘செக் வைத்தார். அப்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்களுடன் (10.1 ஓவர்) பரிதவித்தது.

சுழற்பந்து வீச்சில் திணறிய வங்காளதேஷ் விரர்கள் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஓவர்களை வீசி முடித்ததும் சுறுசுறுப்படைந்தனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சில் எந்த வித நெருக்கடியும் இன்றி சவுகரியமாக அடித்து நொறுக்கினர். குறிப்பாக சபிர் ரகுமான் அதிரடி காட்டி ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். விஜய் சங்கரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இதற்கிடையே மக்முதுல்லா(21), கப்டன் ஷகிப் அல்-ஹசன் (7) ஆகியோர் ரன்-அவுட் ஆனார்கள்.


சாதுர்யமான ஷாட்டுகள் மூலம் இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி காட்டிய சபிர் ரகுமான் 77 ஓட்டங்களில் (50 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஜெய்தேவ் உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், மெஹதி ஹசன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 18 ஓட்டங்கள் அடித்து  தங்கள் அணி சவாலான ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள்கள் சேர்த்தது.

167 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. ஷிகர் தவான் (10), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் கூட்டணி அமைத்து சரிவை தடுத்து நிறுத்தினார். ரன்ரேட்டையும் துரிதப்படுத்தியதால் ‘பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

  லோகேஷ் ராகுலும் (24 ஓட்டங்கள், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்),ரோகித் சர்மாவும் (56 ஓட்டங்கள், 42 பந்து, 4 பவுண்டரி,3 சிக்சர்) சிறிய இடைவெளியில் வெளியேறியதும் இந்திய அணிக்கு நெருக்கடி உருவானது.

  மனிஷ் பாண்டேயும், ஆல்-ரவுண்டர் தமிழக வீரர் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். முக்கியமான கட்டத்தில் ஆடிய விஜய் சங்கர் பதற்றத்தில் திகைத்து போனார். கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். அவர் வீசிய முதல் 4 பந்துகளை விஜய் சங்கர் அப்படியே வீணடித்தார். 5-வது பந்தில் ‘லெக்-பைவகையில் ஒரு ஓட்டம் கிடைத்தது. கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28) கேட்ச் ஆனார். இந்த ஓவரில் ஒரே ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்ததால் இந்திய அணி கரைசேருமா? என்ற கேள்வி எழுந்தது. பாண்டேவுக்கு பிறகு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட வந்தார்.

தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கும் போது, இந்தியா 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. 12பந்துகளில் 34 ஓட்ட்டங்கள் தேவை. எதிரே இருக்கும் விஜய் சங்கர் பதற்றத்தில் பந்துகளை வீணாக்கினார். மொத்த அழுத்தமும் தனியாளாக இவர் மீது மட்டும்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவை.   ஆனால் தினேஷ் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு விக்கெட் எடுத்த டெட் ஓவர் பந்து வீச்சாளர் ருபேல் போட்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். சிக்ஸ் அடித்த அதே திசையில் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் அதோடு விடவில்லை. அடுத்த பந்தையும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில்ஓட்டம் அடிக்காமல்,அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். த்ரில் ஓவர் 19வது ஓவரின் கடைசி பந்தில் உடலை திருப்பி, ரிவர்ஸ் ஷாட் அடித்து பந்தை மீண்டும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார் தினேஷ் கார்த்திக்.

ஆனால் கடைசி ஓவர் விஜய் சங்கருக்கு கிடைத்தது. ஆல்ரவுண்டர் சௌமியா போட்ட அந்த ஓவரின் முதல் பந்து வைட் பந்தாக சென்றது. அதற்கு அடுத்த பந்தை வீணாக்கினார் விஜய். அதற்கு அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு ஸ்டிரைக் கொடுத்தார் 4 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடித்துவிட்டு ஓடினார். 3 பந்தில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார். 2 பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட சமயத்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து   கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.   ஆனால் அதற்குள் தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக் எண்டிற்கு சென்றுவிட்டார். கடைசி ஒரு பந்து ஐந்துஓட்டங்கள் அடிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் பேட்டிங். மொத்த அழுத்தமும் அவர் மீது. சௌமியா போட்ட கொஞ்சம் அகலமான பந்தை பேட்டில் வாங்கியதும் தினேஷ் முகத்தில் சிரிப்பு, பந்தை அப்படியே வளைத்து சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அசத்தல்   கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தா. மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

 கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக் நாகினி டான்ஸ் ஆடவில்லை,கத்திக் கொண்டே ஓடவில்லை,எதிரணி வீரரிடம் சென்று சண்டை போடவில்லை. ஆனால் மிக அமைதியாக பேட்டை தூக்கி மேலே காட்டினார். அதுதான், அந்த அனுபவமிக்க கொண்டாட்டம்தான் வெற்றிக்கு பின்பாக தேவை. வெற்றிக்கு தகுதியாக இருக்கும் போதுஅந்த பக்குவம் தானாக வந்து சேரும் 

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. வியப்புக்குரிய வகையில் ஆடிய தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கும் தொடர் நாயகன் விருது  வாஷிங்டன் சுந்தருக்கும் வழங்கப்பட்ட்டது

ரி20 வரலாற்றில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற ஐந்தாவது போட்டி இதுவாகும்.2010 இல் இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் கபுகெதரவும் 2012 இல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் இயன் மாட்கலும் 2013 இல் மேற்கி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் பாபரும் 2014 இல் நெதர்லந்துக்கு எதிராக் ஸிம்பாப்வே வீரர் சிபாண்டும் முன்னதாக கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இலங்கையில் 50 ஆவது ஆண்டு சுதந்திரக் கிண்ணத்தையும் 70 ஆவது ஆண்டு சுதந்திரக்கிண்ணத்தையும் இந்தியா தட்டிச்சென்றது.

No comments: